Monday 3 February 2020

தேரோடு நின்று தெருவோடலைகிற செய்தி/பணத்தட்டு எவ்விடம்?

தமிழுக்குத் தொண்டு செய்த ஊற்றுமலை ப் பாளையக்காரர்கள்.

மதுரை மன்னர் விசுவநாத நாயக்கர் காலத்தில் நிருவாக வசதிக்
காகப் பிரிக்கப்பட்ட  72 பாளையங்களில் ஊற்றுமலைப் பாளையம்
மிகப் பெரிதாகத் நிகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்கீழ் 148 சிற்றூர்கள்
இருந்தன. இது போதாதென்று சுரணடை ஜமீனையும் ஏலம் எடுத்துத்
தமது ஜமீனோடு சேர்த்துக் கொண்டது. பாளையம் அல்லது ‌பாளையப்
பட்டு என்பது பண்டைய சிற்றறரசுப் பகுதிக்குச் சமமாகும். ஆங்கிலேயர்
காலத்தில் பாளையப் பட்டு முறை ஒழிக்கப்பட்டு ஜமீன்தாரி முறைமை
நடைமுறைப் படுத்தப்பட்டது.

உருவான காலத்திலிருந்தே ஊற்றுமலைப் பாளையக் காரர்கள் தாமே கவிதை
புனைந்தும், தமிழ்ப்புலவர்களை ஆதரித்து அவர்களைக் கவிதை புனையுச் செய்தும்
அவற்றைப் படித்து இரசித்தும், ஓலைச் சுவடிகளை ச்சேகரித்தும் அளப்பரிய
தமிழ்த் தொண்டு செய்தனர். ஒரு காலக் கட்டத்தில் 38 தமிழ்ப் புலவர்கள் அரசவையில்
தொண்டு செய்தனர்.தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்கள், வேம்பத்தூர்ச் சிலேடைப்புலி
பிச்சுவையர், காவடிச் சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் முதலான
பெரும் புலவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஊற்று மலைப் பாளையப்பட்டின் தமிழ்த் கொண்டுதான் நிலைகுலைந்து போகவிருந்த,
சின்னாபின்னமாகிச் சீரழியவிருந்த ஊற்றுமலையைக் காப்பாற்றியது. என்றால் அது
நூற்றுக்கு நூறு உண்மை. அதாவது, வடகரை என்னும் சொக்கம்
பட்டியில் பெரியசாமி சின்னணஞ்சாத் தேவர் தலை
மை வகித்த காலத்தில் ஊற்றுமலைப் பாளையக்காரர் தென்மலை என்னும் சிவகிரி யிலி
ருந்தவர்க்கு  உதவி புரிந்துவந்தார். வடகரைப் பாளையக்காரரும் ஊற்றும லைப் பாளையக்
காரரும் உறவினர்கள்.
வடகரைப் பாளையக்காரருக்குச் சேற்றூர்ப் பாளையக்காரர் நண்பர். ஊற்று மலைப் பாளை
யக் காரருக்குத தென்மலைப் பானளையக்காரர் நண்பர். சேற்றூர்ப் பாளையக் காரருக்குத்
தென்மலைப் பாளையக் காரர் ஊற்றுமலையார் உதவியோடு தொல்லை கொடுத்தார். வட
கரைப் பாளையக் காரர் தமது நண்பர் சேற்றூர்ப் பாளையக் காரருக்காகக் களத்தில்
இறங்கித் தமது உறவினரான ஊற்றுமலையாரையும்,  தமது நண்பரின் பகைவரான
தென்மலையாரையும் ஒருங்கே ஒடுக்கப் படைகளை அனுப்பிவைத்தார். வடகரைப் பாளை
யத்தின் தலைமை நிருவாகி பொன்னம்பலம் பிள்ளை தலைமையில் கடும் போர் செய்து
தென்மலையையும்   ஊற்றுமலையையும் ஒடுக்கின. இப்போரில் ஊற்றுமலைப் பாளை
யக்காரர் பகைவர்கையில் அகப்பட்டு உயிரிழந்தார்.

ஊற்று மலைப் பாளையக்காரர் போகூழ் உடையவர்(துரதிர்ஷ்டசாலி) போலும்.அவருக்கும்
வடகரைப் பாளையத்துக்கும் யாதொரு பகையும் இல்லை. மேலும் இரு பாளையக்காரரும்
உறவினர்கள். அப்படியிருந்தும் இந்தத் தகாத நிகழ்வு நேர்ந்து அதன் விளைவாக ஊற்று
மலைப் பாளையம் நிலைதடுமாறிப் போனது. சின்னா பின்னமாகிச் சீர்குலைந்து போனது.
ஊற்றுமலையாரின் துணைவியார் பூசைத்தாயார் பாதுகாப்புக்காகத் தென்காசி நகருக்குள்
வந்து தங்கினார். அவரோடு அவரின் பிள்ளைகள் இருவரும்(மூத்தவர் மருதப்பத் தேவர்,
இளையவர் சீவலவத் தேவர்) தங்கியிருந்தனர்.

பூசைத் தாயார் நல்ல தமிழ்ப் புலமை சான்றவர். நடக்கக் கூடாததெல்லாம் நடந்து விட்டதை
நினைத்து வருந்தினார். பிள்ளைகளுக்குக் கல்வி அவசியம் என்று உறுதி யாக எண்ணி
அவர்களை ஒரு பள்ளிக்கு அனுப்பி வந்தார். ஒருநாள் இளையவர் பள்ளிக்குச் செல்லாமல்
தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட மூத்தவர் இளையவரைக் கன்னத்தில்
அறைந்து விட்டார்.  இச்செயலை த்  தன்மானக் குறைவாகக் கருதிய இளையவர் பள்ளி
யிலிருந்து திரும்பியதும் அன்னையிடம் சொல்லி அழுது புலம்பினார். உடனே பூசைத்
தாயார் இருவர் மீதும் தவறில்லை என்று கருதிக் கண்ணீர் உகுத்தார். கீழீக்கண்ட
பாடலைப் பாடினார்:
"தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண் டாலிந்தத் தீவினைகள்
வாராவ டாதம்பி சீவல  ராய மருதப்பனே!".
 என்று பாடி விட்டுக் கேவிக் கேவி அழுதார்.  தாயாரின்
அழுகைக்குத் தான் காரணமாகிவிட்டதை  உணர்ந்த
இளையவர் தாயிடம்" நடந்தது என்ன? விரிவாக எடுத்துச்
சொல்லுக" என்றார். அன்னை ஆதியோடந்தமாக நடந்த
நிகழ்வுகளை விளக்கினார். இளையவர் உடனே" நான்
வடகரைப்  பாளையக் காரைச் சந்தித்து உதவி கோரட்டு
மா?"  என்றார்.

"பாளையக் காரரைப் பார்ப்பது இயலாத செயல். நீ உடனே
பொன்னம்பலம் பிள்ளையைப் போய்ப் பார்.அவர் நல்ல
தமிழறிஞர்; அவர் உதவிசெய்வார்" என்றியம்பினார் பூசைத்
தாயார். அதன்படியே இளையவர் பொன்னம்பலம் பிள்ளை
யைப் பார்த்துக் கல்லும் கரையும் வண்ணம் துன்பங்களை
எடுத்துச் சொன்னார். பொன்னம்பலம் பிள்ளை பூசைத்
தாயாரின் தமிழ்ப் புலமைக்குப் பரம இரசிகர். எனவே,
வடகரைப் பாளையக்காரரைச் சந்தித்து "ஐயா! உங்களுக்கும்
ஊற்றுமலையாருக்கும் யாதொரு நேரடிப் பகையும் இல்லை;
மேலும் உங்களுக்குள் உறவுமுறை யுண்டு.  நாம் அநியாயமாக
ஊற்று மலைப் பாளையக் காரர்களைத் துன்புறுத்தி
விட்டோமோ? என்று என் மனச் சாட்சி என்னைக் குத்துகின்றது.
இப் பிழையைச் சரிசெய்து அவர்களைப் பழை‌ய உயர்நிலைக்
குக் கொண்டுவர அனுமதி தருக" என்றார். பாளையக் காரரும்
அனுமதி அளித்தார்.

மளமளவென்றே பணிகள் நடந்தேறின. ஊற்றுமலை அரண்
மனை செப்பனிடப் பட்டது. பூசைத் தாயார் தென்காசி நகரி
லிருந்து ஊற்று மலைக்குப் பல்லக்கில் அழைத்துவரப்
பட்டார். பழையபடி அவர்கள் வாழ்வில் தென்றல் வீசியது.
இத்தனைக்கும் காரணம் ஊற்றுமலைக் காரர்களின் தமிழ்ப்
புலமையும் தொண்டும் ஆகும்.

பணத்தட்டு எவ்விடம்?

பழனி நகரத்தில் 1836ஆம் ஆண்டு தோன்றியவர் பழனிச்சாமி.
தனது மூன்றாவது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுக்
கடவுள் அருளால் உயிர்தப்பினார். இருந்த போதிலும் கண் பார்
வையைப் பறிகொடுத்தார். மனந்தளராமல்  தமிழ், வடமொழி,
இசை முதலானவற்றைத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் முறைப்
படி கற்றுச் சீரிய புலமையடைந்தார்.

அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்
கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்
கியவர்கள் இராமநாதபுரத்தை யாண்ட முத்துராமலிங்க சேதுபதி
யும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர். இவர்கள்
அவையில் தம் புலமையைக் காட்டிக் 'கவிச்சிங்கம்' என்ற பட்டம்
பெற்றார்  பழனிச்சாமி என்ற மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.மாம்பழம்
என்னும் பட்டம் அவர்க்கு முந்திய தலைமுறையினர் திருமலை மன்
னரிடம் பெற்றதாகும்.

ஒருமுறை  பொன்னுச்சாமித்தேவர்  மாம்பழக் கவிச்சிங்கத்துக்குப்
பரிசு அளிக்கும்போதில் ஓர் அழகிய வெள்ளித்தட்டில் வைத்துக்
கொடுத்தார். புலவருக்குத்  துணையாய் வந்த சிறுவன் வெள்ளித்
தட்டின் அழகைப் பற்றி விவரித்துச் சொன்னான். உடனே புலவருக்குத்
தட்டின் மீது பெருவிருப்பம் உண்டாயிற்று. நேரடியாகத் தேவரிடம் தமக்குத்
தேவை என்று சொல்வதற்கும்  கூச்சமாக இருந்தது. எனவே, '"பணத்தட்டு
எவ்விடம்?"  என்று வினவினார். பணத்தட்டு என்பதற்குப் பணத்தையுடைய
தட்டு என்றும் பணத்துக்குத் தட்டு(தட்டுப்பாடு) என்றும் பொருள்படும். இக்
கேள்வியை எதிர்பாராத தேவர் சமஸ்தானத்துக்குப் பணத் தட்டுப்பாடு
வந்தால்(ஏற்பட்டால்) பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவர்;
புலவருக்குப் பணத்தட்டு வந்தால்  அவர் சமாளித்துக் கொள்வார்(புலமை
யும் வறுமையும் சேர்ந்தே இருப்பது தானே) என்று எண்ணிப் "பணத்தட்டு
அவ்விடத்துக்கே" என்று விடையிறுத்தார். புலவரும்  ஆசைப்பட்ட படியே
வெள்ளித் தட்டையும் பரிசையும்  எடுத்துச் சென்றார்.

ஒருமுறை வாயிற் காவலர் ஒருவர்  வேறு காவல் பணியிலிருந்து  இந்தப்
பணிக்கு மாற்றப் பட்டிருந்தார். மாம்பழக் கவிச்சிங்கம்  பழனியிலிருந்து
வந்தவர் ஆதலாலும் காவலர் இதற்குமுன் அவரைப் பார்த்ததில்லை
ஆதலாலும்  கவிச் சிங்கத்துக்கு அரசவைக்குள்  நுழைய அனுமதி
மறுத்துவிட்டார். இதற்குள் வேறு ஒரு காவலர் வந்து புலவரைப்பற்றி
எடுத்துச் சொல்லி உள்ளே அனுமதிக்கச்  செய்தார்.  கவிச்சிங்கம் சிறிது
தாமதமாக அரசவைக்குள்நுழைந்த காரணம் பற்றிப் பொன்னுச்சாமித்
தேவர் வினவ, அவர் நடந்த நிகழ்வை ஒரு பாடலில் கூறினார். பாடல் வருமாறு:
"தருமகுண மிகுமுனது சமுகமுறார் வறுமையெனச்
   சலிக்கக் காய்ந்து
வருமிரவி வெயிலதனால் மயங்கியின்று யானிங்கு
   வந்த போழ்தில்
அருமை தவிர் பாராச்சே வகர்தமது பெயர்ப்பொருளை
    அறியக் காட்டிக்
கருவமொடு தடு ப்பதென்னே காமர்பொன்னுச் சாமியெனும்
    கருணை மாலே!"
பொருள்:
அழகிய பொன்னுச்சாமி என்னும் பெயருடைய கருணை மிக்க
திருமாலின் அம்சமானவரே!  தருமகுணம் மிகும் உமது சமுகத்தை
அடையார் வறுமையால் சலித்து வாடுவர். நான் தங்களை நாடி
ஏறு வெயிலில் வரும்போது வெயில் கொடுமையால் மயக்க
நிலையை அடைவதுபோல் இருந்தேன். வாயில் காக்கும் பாராச்
சேவகர் என்னை நுழைய விடாமல் தடுத்தார்.(இருந்தாலும் வேறு
காவலர் ஒருவர் வந்து விளக்கிச்  சொல்லியதன் பேரில் என்னை
அனுமதித்தார்.). மன்னர் தவறு செய்த காவலரை அழைத்து வர
உத்தரவிட்டார். உடனே கவிச்சிங்கம்   "ஐயா! அவர் இதற்குமுன்
என்னைப் பாராச் சேவகர்(பார்த்திராத சேவகர்) தானே; எனவே,
பாராச் சேவகர் பணியில் கடுமையாக நடந்து கொண்டார். அவர்
தம் கடமையைச் சரியாகச் செய்தார். எனவே அவர்க்கு யாதொரு
தண்டனையும் தேவையில்லை"என்றார். பாரா என்னும் சொல்
தமிழ்ச் சொல் அன்று. ஆனால் அதன் பொருள் காவல் என்னும்
பொருளில் கையாளப் பட்டுள்ளது. பாராச் சேவகன்=என்னை
இதற்குமுன் பார்த்திராத சேவகர்;  பாராச்  சேவகன்=காவல் காக்கும்
சேவகன் என்று இருபொருள்படப் புலவர் கையாண்டுள்ளார்.