கூடலான் கூடாயினான்.
கூடலான் என்னும் சொல் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற
பாண்டிய வேந்தனைக் குறிக்கும். ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியனும்
சேரன் செங்குட்டுவனும் சமகாலத்தில் வாழந்தவர்கள். கூடலான் ஏன்
கூடாயினான்? கோவலனை அநியாயமாகக் கொல்ல ஆணையிட்ட
காரணத்தால் கோவலன் மனைவி கண்ணகி நீதிகேட்டுத் தலைவிரி
கோலத்தோடு தோன்றியதைக் கண்டு "நான் நீதிநெறி தவறித் தீர்ப்பு
அளித்துவிட்டேனோ?" என்று எண்ணி நெஞ்சம் பதைபதைத்துப் பாதி
உயிர் நீங்கிக் கூடாயினான்.
ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் மாவீரனாகத் திகழ்ந்தவன்.
செங்கோல் வளையாமல் சிறந்த முறையில் ஆட்சி செலுத்தியவன்.
அவன் கி.பி.142 அளவில் ஆட்சி நடத்தியிருக்கலாம் என்று வரலாற்று
அறிஞர்கள் கூறுகின்றனர். அவன் நல்ல தமிழ்ப் புலமையும் கொண்டு
விளங்கினான். அவன் இயற்றிய பாடல் புறநானூற்றில் உள்ளது. கல்வி
யின் சிறப்பைக் கூறும் பாடல் அது. "உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்--பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"(பாடல் எண்:183).
கோவலன் யார்? நெடுஞ்செழியன் அவனுக்குக் கொலைத் தண்டனை
விதிக்கக் காரணம் என்ன? சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தில்
சிறப்புடன் வாழ்ந்த வணிகன் மாசாத்துவான் மகன் கோவலன். காவிரிப்பூம்
பட்டினத்தில் சோழவேந்தனுக்குச் சமமான செல்வந்தராகப் பல வணிகர்கள்
வாழ்ந்துவந்தனர். அவர்கள் செல்வநிலைப்படி மூன்று வகையினராக
அறியப்பட்டனர். இப்பர், கவிப்பர் மற்றும் பெருங்குடியர் என்ற மூன்றுவகைப்
பிரிவினர் சோழநாட்டில் வணிகத்தில் கோலோச்சினர். கோவலன் தந்தை
மாசாத்துவானும் கண்ணகியின் தந்தை மாநாய்கனும் பெருங்குடியர் என்ற
உயர்நிலை வணிகர்கள். கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்விக்க
உறவினர்கள் முன்னிலையில் தீர்மானித்து நல்லநாளில் நடத்திமுடித்தார்கள்.
திருமணம் முடித்த கையோடு மணமக்களுக்கு வேறுவைத்தல்(தனிக்குடித்தனம்)
நிகழ்ச்சியையும் முறையாகச் செய்தனர். திருமணம் நடைபெறும் பொழுது
கோவலனுக்குப் பதினாறு ஆண்டுகளும், கண்ணகிக்குப் பன்னிரண்டு ஆண்டுகளும்
நிறைவடைந்திருந்தன. கோவலனும் கண்ணகியும் சில ஆண்டுகள் தொலையாத
இன்பமெலாம் துய்த்தார்கள்.
யார்கண் பட்டதோ? மாதவி என்னும் கணிகையர் குலப் பெண்ணைக் கோவலன் சந்திக்க
நேர்ந்தது. அவள் இசை, நடனம் என்னும் கலைகளில் தேர்ந்தவள். பேரழகு வாய்த்தவள்.
கலையுள்ளம் கொண்ட கோவலன் மாதவியை மணந்து அவளுடன் வாழந்துவந்தான்.
கண்ணகியை அறவே மறந்துவிட்டான். இடையில் மாதவி ஒரு பெண் குழந்தையைப்
பெற்றெடுத்தாள். கோவலன் தன் குலதெய்வமாகிய மணிமேகலையின் பெயரைத் தன்
மகளுக்குச் சூட்டினான். ஊழ்வினையால் கோவலனுக்கும் மாதவிக்கும் ஊடல் நேர்ந்து
கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியை நாடி வந்தான்.
கோவலன் கண்ணகியிடம் தான் செய்த பிழையை எண்ணிப் புலம்பினான்.
"சலம்புணர் கொள்கைச் சலதியோ(டு) ஆடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும்" என்று கண்ணகியிடம் உரைத்தான். அதாவது, மாதவியொடு
வாழந்து குல முதல்வர்கள் தேடித்தந்த செல்வத்தையெல்லாம் அவளிடம் இழந்து
வறியனாகிவிட்டதாக வருந்தினான். உடனே, கண்ணகி "நகைகேழ் முறுவல் நகைமுகம்
காட்டிச் சிலம்புள கொண்ம்" என்றாள்.. "நாம் மதுரைக்குச் சென்று இச் சிலம்பை விற்றுக்
கிடைக்கும் பொருளை முதலாகக் கொண்டு வணிகம் செய்து பிழைப்பைத் தொடர்வோம்"
என்றான்.
பூம்புகாரை விட்டு அதிகாலையிலேயே இருவரும் கிளம்பி ஒரு காவதத் தொலைவு கடந்து
(பத்து மைல்) அங்கு தென்பட்ட சோலைக்குட் புகுந்து ஓய்வெடுத்தனர். கண்ணகி செல்வச்
சீமான் மகள். துன்பம் என்பதையே அறியாதவள். அவளது 'வண்ணச் சீறடி'யை மண்மகள்
அறிந்திலள்'. அவள் கொஞ்சுமொழியில் "மதுரை மூதூர் யாங்குளது?" என்று கணவனிடம்
வினவினாள். அவன் சாமரத்தியமாக "ஆறு, ஐந்து காவதத் தொலைவில் உள்ளது" என்றான்.
பூம்புகாரிலிருந்து முப்பது காவதத் தொலைவில்(முந்நூறு மைல்) மதுரை உள்ளது என்று
அறிந்தால் அவள் மலைத்துப் போய்விடுவாள் என்று 'ஆறைங்காவதம்' என்றான். பின்னர்
பக்கத்திலுள்ள வேறொரு சோலைக்குள் நுழைந்து அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியைக் கண்டு வணங்கினர். அவர் அவ் இரு
வரைப் பற்றிய அனைத்துச் செய்தியையும் அறிந்து "இப் பெண் இவ்வேனில் பருவத்தில்
எப்படி நடந்துவருவாள்?" என்று புலம்பினார். " நாளொன்றுக்கு ஒரு காவதம் நடந்தால்
போதும்; இடையிடையே சோலைகளில் தங்கி ஓய்வெடுத்துச் செல்வோம்" என்று
முடிவுசெய்தனர். இப்படியாக, திருவரங்கம், உறையூர், கொடும்பாளூர் முதலிய ஊர்களைக்
கடந்திருந்தனர். பின்பு "பகற்பொழுதில் சோலைகளில் ஓய்வெடுத்துவிட்டு இரவில்
நிலவொளியில் பயணத்தைத் தொடரலாம்" என்று தீர்மானித்தனர்.
இந்த முடிவுப் படியே பகல் முழுவதும் சோலைகளில் உள்ள மண்டபங்களில் தங்கி ஓய்வு
எடுத்தபின்னர் நிலவு ஒளியில் மூவரும் மதுரைப் பதியை நோக்கி நடக்கத் தொடங்கி
விடியுமட்டும் தமக்குள் பல்வேறு செய்திகளைக் குறித்துப் பேசியபடியே பயணம் செய்
தனர். ஒருநாள் சுகமான தென்றல் தீண்டிய வேளையில் கவுந்தியடிகள் "மதுரைத் தென்றல்
வீசுகிறது; நாம் மதுரையை நெருங்கிவிட்டோம்" என்றுரைத்தார். அவர் கூற்றுப்படியே
விடியும் வேளையில் வைகையாற்றின் வடகரையை அடைந்தனர். சிறிதுநேர ஓய்வுக்குப்
பின்னர் ஓடம் ஒன்றில் ஏறிப் பயணம் செய்து தென்கரையை அடைந்தனர்.
ஏறத்தாழ முப்பது நாட்களுக்குமேல் கடந்துவிட்டன. மென்மையான பாதங்கள் கன்றிச்
சிவக்கப் பரல்கற்களும் மேடுபள்ளங்களும் நிரம்பிய பாதையில் கடந்த ஒரு திங்களுக்கு
மேல் நடைப்பயணம் மேற்கொண்ட கண்ணகி மிகவும் சோர்ந்திருந்தாள். கவுந்தியடிகள்
தமது சமணமதத் துறவிகளைச் சந்திக்க வேண்டியிருந்ததால் தாம் விடைபெற்றுப் பிரிய
எண்ணினார். அவ்வேளையில் மாதரி என்னும் ஆயர்குல மூதாட்டி கவுந்தியடிகளைக்
கண்டவுடன் வணங்கினாள். அவளிடம் கோவலன்-கண்ணகி இணையரை அடைக்கலமாக
ஒப்படைத்துவிட்டுப் பிரிந்து. சென்றார். மாதரி இருவரையும் புறஞ்சேரியில் உள்ள ஆயர்
பாடிக்கு அழைத்துச் சென்றாள். செம்மண் பூசிய புதிய சிற்றில் ஒன்றில் அவர்களைத்
தங்கச்செய்து சமையலுக்கு வேண்டிய பண்டபாத்திரங்களையும் கொடுத்துதவினாள்.
செல்வத்தில் திளைத்திருந்த கண்ணகிக்குச் சமைக்கத் தெரியவில்லை. மாதரிமகள்
ஐயை என்பாளின் துணையோடு ஒருவிதமாகச் சமையலை முடித்துக் கோவலனுக்கு
உணவு பரிமாறினாள். தாம்பூலம் மடித்துக் கொடுத்தாள். கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டு
களுக்குப்பின் நடைபெறும் நிகழ்வு. கோவலன் கண்கள் பனித்தன. "நாம் பிரிந்திருந்த
பொழுது எப்படிச் சமாளித்தாய்?" என்று வினவினான். "போற்றா ஒழுக்கம் புரிந்தீர்;
இருப்பினும் உம் தாய் தந்தை மனம் நோகாமலிருப்பதற்காகப் பிரிவுத் துயரைக்
காட்டிக்கொள்ளாமல் போலியான புன்முறுவல் செய்து ஏமாற்றினேன்" என்றாள்.
உடனே கோவலன் மதுரைஅகநகருக்குச் சென்று சிலம்பை விற்றுவரத் தீர்மானித்துக்
கிளம்பினான். "சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்(டு) யான்போய்--மாறி வருவன்
மயங்காதொழிக" என்றுகூறி விடைபெற்றான்.
புறஞ்சேரியைக் கடந்து மதுரை அகநகருக்குள் நுழைந்து தேரோடும் தெருவில் நடந்து
செல்லும் பொழுது எதிரே பாண்டியன் தேவியின் காற்சிலம்பைத் திருடிய தலைமைப்
பொற்கொல்லன் நூறு பொற்கொல்லர்கள் பின்தொடர வந்துகொண்டிருந்தான்.
அவனிடம் "அரசி அணியும் தகுதிகொண்ட காற்சிலம்பு ஒன்றுள்ளது. அதற்குரிய
விலைமதிப்பிட உம்மால் இயலுமோ?" என்று கோவலன் வினவினான். உடனே,
பொற்கொல்லன் "விலை மதிப்பிட எனக்குத் தெரியாது. ஆனால் அரச குடும்பத்துக்
குரிய அணிகலன்களை உருவாக்கித்தரும் பணி தெரியும்" என்று விடையளித்தான்.
கோவலன் தான் கொண்டுவந்திருந்த பொதியை அவிழ்த்துச் சித்திர வேலைப்பாடு
மிக்க கண்ணகி சிலம்பைக் காட்டினான். சிலம்பைப் பார்த்துப் பிரமித்துப் போனான்.
சற்றுத் தொலைவில் தென்பட்ட தன் இல்லத்தைச் சுட்டி அங்குச் சற்று நேரம் தங்கி
யிருக்குமாறு கேட்டுக்கொண்டான். சிலம்பு டன் அரண்மனைக்கு விரைந்த தலைமைப்
பொற்கொல்லன் அரசனிருக்குமிடம் பற்றிக் கேட்டான். அரசன் அந்தப்புரம் நோக்கிச்
செல்வதாக அறிந்து "இதுவே தக்க தருணம்; தன்னால் திருடப்பட்ட அரசியின்
சிலம்பைத் தான் கண்டுபிடித்து விட்டதாகவும், கள்வனைத் தனது வீட்டில் தங்க
வைத்துள்ளதாகவும் பொய்யுரைததுத் திருட்டுக் குற்றத்திலிருந்து தப்பிடலாம்"
எனத் தனக்குள் கூறிக்கொண்டு அந்தப்புரம் சென்று வேந்தனின் திருவடிகளில்
விழுந்து வணங்கி மேற்கண்டவாறு கூறினான்.
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்ட வேந்தன் ஆராய்ந்து பாராமல் பொற்கொல்லன்
கூறியதை நம்பி ஊர்க்காவலரைக் கூவியழைத்து "நீவிர் பொற்கொல்லனுடன்
சென்று இவன் அடையாளம் காட்டும் கள்வன்வசம் பாண்டிமா தேவியின் சிலம்பு
இருக்குமாயின் அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை அரண்மனையில் ஒப்படைப்
பீர்" என்று ஆணையிட்டான். பொற்கொல்லன் தான் திட்டமிட்டபடியே அனைத்தும்
நடைபெறுவது குறித்துக் கழிபேருவகை யடைந்தான். ஊர்க்காவலரை அழைத்துக்
கொண்டு தன் வீட்டையடைந்த பொற்கொல்லன் கோவலனைச் சுட்டிக் காட்டி
"இவனே கள்வன். இவனைக் கொன்று சிலம்பை மீட்டு அரண்மனையில் ஒப்படைப்
பீர்" என்றான். ஊர்க்காவலர்களில் ஒருவனத் தவிர ஏனையோர் " இவனைப்
பார்த்தால் கள்வனைப் போலத் தோன்றவில்லை; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாக
இருக்கலாம்" என்று கூறிக் கொலை செய்யத் தயங்கினர். பொற்கொல்லன்
மேலும் மேலும் பொய்யுரைகளைக் கூறி அவர்களைக் குழப்பினான். இதற்கிடையில்
ஒரு கல்லாக் களிமகன் தன் வாளால் கோவலனை வெட்டிவீழ்த்திவிட்டான்.
இந்தச் செய்தி புறஞ்சேரியில் வாழ்ந்த ஆயர்களுக்கு எட்டியது. அவர்கள் மூலமாக
மூதாட்டி மாதரிக்கும் அவள்மகள் ஐயைக்கும் தெரியவர, ஐயை மூலமாகக் கண்ணகி
யறிந்து நிலைகுலைந்தாள். அதுவரை மென்மையானவளாகவும், அதிர்ந்து பேசத்
தெரியாதவளாகவும் பலபேர் முன்னிலையில் நிற்கக் கூசியவளாகவும் கணிக்கப்பட்ட
கண்ணகி பெருங்குரலெடுத்துப் பேசினாள். "மதுரைவாழ் பெருமக்களே! உங்கள்
பாண்டிய வேந்தன் ஒரு குற்றமும் புரியாத என் அன்புக் கணவனைக் கள்வன் என்று
குற்றம் சாற்றிக் கொலைத் தண்டனையை நிறைவேற்றியுள்ளான். நான் அரண்மனைக்
குச் சென்று பாண்டியனிடம் வாதாடி என் கணவன் கள்வன் அல்லன் என நிரூபிப்பேன்.
இப்பொழுது உங்கள் முன் நிரூபிக்கிறேன்" எனக் கூறிக் "காய்கதிர்ச் செல்வனே!
என் கணவன் கள்வனா?" என்று வினவ வானில் ஒரு குரல் கேட்டது. "உன் கணவன்
கள்வன் அல்லன். அவனைக் கள்வன் என்று குற்றம் சாற்றிய இவ்வூரை எரியுண்ணும்"
என்ற செய்தி அறிவிக்கப்பட்டது.
உடனே கண்ணகி தனது மற்றொரு சிலம்பைக் கையில் ஏந்தியவாறு மதுரை
அகநகருக்குள் நுழைந்து அரண்மனைக்குள் சென்றாள். வாயிற் காவலனிடம்
"வாயில்காப்பவனே! அடியோடு அறிவு கெட்டுப்போன, நீதிநெறியுணர்வு நெஞ்சில்
சிறிதேனும் இல்லாத, அரச நீதி தவறிய மன்னவன் அரண்மனை வாயில்காப்போனே!
ஒற்றைச் சிலம்பேந்தியவளாய்க் கணவனைப் பறிகொடுத்துவிட்டுக் கதிகலங்கி நிற்கும்
பெண் அரண்மனை வாயிலில் வந்து நிற்பதாகப் போய்ச் சொல்" என்று முழங்கினாள்.
கண்ணகி சொன்னதையும் தான் பார்த்ததையும் வாயிற் காவலன் அரசனிடம் சொன்
னான். வேந்தன் கண்ணகியை அழைத்துவரச் சொன்னான்.
"காவி உகுநீரும் கையில் தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும்----பாவியேன்
காடெல்லாம். சூழ்ந்த கருங்குழலும். கண்(டு)அஞ்சிக்
கூடலான் கூடாயி னான்."
குவளை மலர் போலும் கண்களில் கண்ணீரும் கையில் ஒற்றைச் சிலம்பும் உயிர் பிரிந்து
போனது போன்ற வாடிய மெல்லுடலும் காடுபோல் மேனியில் புரளும் கரிய கூந்தலும்
உடைய கண்ணகியைக் காணப் பயந்து கூடல் நகருக்கு அரசன்(பாண்டியன்) உயிரிழந்த
வெறும் கூடாயினான். (கவிக் கூற்று) ஆனால் பாவியாகிய நானிதைக் காண்கிறேனே.
வழக்குரைகாதை நிகழ்வுகளையும் அவற்றைத் தொடர்ந்து நிறைவேறிய நிகழ்ச்சிகளையும்
அனைவரும் அறிவோம். கோவலன் கள்வன் அல்லன் என்பதனைக் கண்ணகி நிரூபித்தாள்.
தான் தவறு செய்துவிட்டதையறிந்த பாண்டியன் "பொன்செய் கொல்லன் தன் சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்" என்று கூறி உடனே உயிர்துறந்தான். அவன் மனைவி
கோப்பெருந்தேவியும் கணவன் மீது விழுந்து உயிர்நீத்தாள். கண்ணகி மதுரையை
எரியுண்ணச் செய்தாள்.(தீத்திறத்தார் பக்கமே சேர்க! எனக் கண்ணகி தீக்கடவுளுக்கு
ஆணையிட்ட தாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது.) மிகுந்த மனத்துயருடன் வைகையில்
தென்கரை வழியாகவே பதினான்கு நாட்கள் நடந்து நெடுவேள் குன்றம் அடைந்த
கண்ணகி மலையுச்சியில் ஏறி வேங்கை மரத்தின் கீழ் நின்றிருந்த பொழுது கோவலன்
வானிலிருந்து தேவர்களுடன் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றதாக நம்பிக்கை.
மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனிடம் மலைவாழ் மக்கள் விவரிக்க அவன்
இமயத்தில் கல்லெடுத்து வந்து கண்ணகிக்குக் கோட்டம் எழுப்பியதாகச் சிலப்பதிகாரம்
இயம்புகிறது. தெய்வமாகிய கண்ணகி "தென்னவன் தீதிலன்; யான் அவன் மகளா
வேன்" என்று கூறியதாக இளங்கோவடிகள் நவில்கின்றார். சேரன் செங்குட்டுவன் "வல்வினை
வளைத்த கோலை மன்னவன் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது" என்று
குறிப்பிட்டுள்ளான்.
"மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்---வையைக்கோன்
கண்டளவே தோற்றான்;அக் காரிகை தன் சொல்,செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்".