வருந்தாதோ திருமேனி? இடை நோகாதோ? மணிச் சிலம்பு புலம்பாதோ?
வளை ஏங்காதோ?
ஒரு மலைநாட்டில் காதலனும் காதலியும் இரவு நேரத்தில் சந்தித்துக்
கொள்ளத் திட்டம் வகுத்து அதன்படி முன்கூட்டியே காதலன் வந்து தன்
காதலிக்காகக் காத்திருக்கின்றான். ஒரு நொடி ஒரு யுகம் போலக் கழி
கின்றது. ஒருவாறு நள்ளிரவு நேரம் நெருங்கிவிட்டது. மெதுவாகக்
காதலி நடந்துவரும் அரவம் கேட்கிறது. காதலி வருவாளோ? வரமாட்டாளோ?
என்ற ஏக்கத்தில் காத்திருந்த காதலனுக்குத் தெம்பும் மனவெழுச்சியும்
பீறிடுகின்றன. தன் காதலியை நோக்கி மெல்லிய குரலில் பாடத் தொடங்கு
கின்றான். " கொள்பவர் உள்ளம் நிறையும் வண்ணம் பொருளைச் சொரிந்து
நல்கும் வள்ளல் இராமராசத் துன்முகிராசனுக்கு உரித்தான இம்மலையில்
வாழ்ந்துவரும் மயில் போன்றவளே! நின்னைக் கண்ணை இமைகாப்பதுபோல்
காத்துப் புரந்துவரும் நற்றாயும் செவிலித்தாயும் அறியாவண்ணம் இந்த
நள்ளிரவு வேளையில் நினது தாமரை போன்ற இல்லக் கதவைத் திறந்து
தன்னந் தனியாக வந்துள்ளாய். உன்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருந்தேன் என்பது மெய்தான். ஆனால் ஊரெல்லாம் உறங்குகின்ற
இவ்வேளையில் துயில் துறந்து வந்த நின் திருமேனி வருத்தம் அடையாதோ?
உன் சிற்றிடை நோவு கொள்ளாதோ? மாணிக்கப் பரல்கள் பதிக்கப்பட்ட
காற்சிலம்புகள் ஒலியெழுப்பாவோ? கைவளையல்கள் ஓசைசெய்யாவோ?
மழைபோலும் நின் கருங்கூந்தலிற் சூடியுள்ள மணம்பரப்பும் முல்லை
மலர்கள் கீழே சிந்தாவோ? ஏனென்றால், இவையெல்லாம் நீ இங்கு வந்த
தையும் நாம் சந்தித்துக் கொண்டதையும் காட்டிக் கொடுக்கும் வாய்ப்புள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நின் தாமரைப் பாதங்கள் பரற்கற்கள் நிரம்பிய
பாதையில் நடந்துவந்தமையால் கன்றிப் போயுள்ளனவா? என் மனம் நிலை
கொள்ளாமல் தவிக்கின்றது. இச் செய்தியை நவிலும் பாட்டைப் பார்ப்போம்:
சங்கப் பாடல் அன்று; பிற்காலப் பாடல்; திணை: குறிஞ்சி;
துறை: இரவுக்குறிச் சந்திப்பு.
காதலன் கூற்று:
"சொரிந்தாரப் பொருள்வழங்கும் இராம ராசத்
துன்முகிரா சன்வரையில் தோகை யன்னீர்!
தருந்தாயர் அறியாமல் பாதி நேரம்
தாமரைக்கோ யிலைத்திறந்து தனியே வந்தீர்;
வருந்தாதோ திருமேனி? இடைநோ காதோ?
மணிச்சிலம்பு புலம்பாதோ? வளையேங் காதோ?
கருந்தாரை அளகநறு மலர்சிந் தாதோ?
கன்றாதோ நும்பாத கமலந் தாமே?"
அருஞ்சொற் பொருள்:
சொரிதல்=கொடை கொடுத்தல்;
இராசராசத் துன்முகிராசன்=ஒரு சிற்றரசன்.
தருந்தாயர் =பெற்ற தாய் மற்றும் செவலித் தாய்.
பாதி நேரம்=நள்ளிரவு நேரம்; தாரை=மழை;அளகம்=கூந்தல்;
இப்பாடல் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடான தனிப்பாடல் திரட்டு(முதற்
பாகம்) நூலில் உள்ளது. இயற்றியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
நாணிக் கவிழ்ந்து நகைத்தநகை நானோ மறக்க வல்லேனே!
களவியலில் பழகிவரும் தலைவனும் தலைவியும் திருமணம்
புரிந்து கற்பியல் வாழ்வைத் தொடங்க முடிவு செய்கின்றனர்.
திருமணத்துக்கு வேண்டிய பொருளீட்டுவதற்காகத் தலைவன்
தலைவியைப் பிரிய நேரிடுகிறது. இதனை 'வரைவிடை வைத்துப்
பொருள்வயின் பிரிதல்' என்று அகப்பொருள் இலக்கணம்
இயம்பும். இப்பிரிவு இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது
என்பது அகப்பொருள் மரபு.
தலைவன் பொருளீட்டுவதற்காக வேற்றூர் செல்லக் கிளம்புகின்றான்.
அப்பொழுது தோழி தலைவனை நோக்கி "நீர் எம் தலைவியை மறவேல்"
என்று நவிலுகின்றாள். உடனே தலைவன் விடையிறுக்கின்றான்:
"பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடைய சிவபெருமான் தன் சடைமுடியை
விரித்தாடும் புலியூர் போன்ற வளத்தையுடைய எழில் மங்கையரே!
(மரியாதை நிமித்தமாகப் பெண்ணைப் பன்மை விளியில் அழைப்பது
சங்ககால மரபு.) உம் தலைவி இயற்கைப் புணர்ச்சிக்கண் நாணத்தால் கண்
புதைத்த பொழுது அவரின் நகையணிந்த மார்புகளும் வில்போன்று வளைந்து
தோன்றிய புருவங்களும் என்னைக் கிறங்கடித்தன. அவைகளை யான்
மறவேன். ஒருவேளை அவைகளை மறக்க நேரிட்டாலும், எங்கள் களியாட்டத்
தின் போது குலைந்திருந்த ஆணிப்பொன் பொதிந்த மெல்லிய எழில்மிக்க
ஆடையினை நெகிழ்த்து மீண்டும் சரியாக உடுத்த முனையும் வேளையில்
அவர் நாணத்தினால் தலையைக் கவிழ்த்து நகைத்த முறுவலை மறக்க
வல்லேன் அல்லேன்.(என்னதான் யான் அவரை மணக்கவிருக்கும் தலைவன்
என்றாலும் ஆடையை நெகிழ்த்தி மீண்டும் உடுத்துதல் அவர்க்குக் கூச்சத்தை
உருவாக்குதல் இயல்பு தானே.) இந்தச் செய்தி பயின்று வரும் தனிப்பாடல்
பின்வருமாறு:
"வேணிப் பவளம் விரித்தாடும் விமலர் புலிசைத் திருவனையீர்!
பூணிற் சிறந்த வண்முலையும் புருவச் சிலையும் மறந்தாலும்
ஆணிக் கனகம் அழுந்தியபூ ஆடை நெகிழ்க்கும் வேளைதனில்
நாணிக் கவிழ்ந்து நகைத்தநகை நானோ மறக்க வல்லேனே!"
அருஞ்சொற் போருள்:
வேணி=சடைமுடி; விமலர்=சிவபெருமான்; புலிசை=புலியூர்;
புருவச் சிலை=புருவமாகிய வில்; ஆணிக் கனகம்=ஆணிப்பொன்;
இத்தருணத்தில் கம்பராமாயணத்தில் பயின்று வரும் பாடலை
நினைவுகூர்தல் தகும்.
"இந்திர நீலமொத்(து) இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணிவரைத் தோளு மேயல
முந்தியென் உயிரையம் முறுவல் உண்டதே!"
என்று சீதைப் பிராட்டி இராமனைப் புகழ்ந்து கூறியது நினைக்கற்
பாலது. இராமனின் மற்ற அழகுக் கூறுகளை விடவும் அவன் முறுவல்
தன்னைக் கிறங்கடித்ததாகச் சீதைப் பிராட்டி நவில்கின்றாள்.
சரசுவதி மகால் வெளியீடான தனிப்பாடல் திரட்டு(முதல் பாகம்) நூலில்
இந்தத் தனிப்பாடல் உள்ளது.