Monday 27 May 2019

நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

கலித்தொகை--குறிஞ்சிக்கலி--பாடல் எண்:51--கபிலர்
"சுடர்த்தொடீஇ  கேளாய், தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை  பரிந்து, வரிப்பந்து  கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்(கு) அன்னை
'அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணுநீர்  ஊட்டிவா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்றென்னை
வளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்(டு),
'அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்,
'உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்(று) என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தானக்  கள்வன்  மகன்."
அருஞ்சொற் பொருள்:
சுடரத்தொடீஇ!--சுடரும் வளையல் அணிந்தவளே!; அடைச்
சுதல்--மலர் சூட்டுதல்; பட்டி--பசுக் கொட்டில்; தெருமந்திட்டு--
மனம் தடுமாறி; கோதை பரிந்து--மாலை அறுத்து
கருத்துரை:
மணலினால் சிற்றில் கட்டி  மறுகினில் ஆடும் போதில்
இணக்கமில் குறும்பன் இந்த இல்லத்தைச் சிதைத்தான் முன்னாள்;
வணங்கிடா வம்புக் காரன் மாலையைப் பறித்தான்; நாங்கள்
சிணுங்கிடப் பந்தைக் கௌவித் தெருவினில் ஓடி னானே!
(மறுகு----தெரு).

பட்டியில் வாசம் செய்யும் பகடினை நிகர்த்த அன்னான்
வெட்டியாய்த் தெருவைச் சுற்றும் விடலைபோல் வளர்ந்து விட்டான்;
கட்டிய மனையில் யானும் கனிவுடைத் தாயும் ஓர்நாள்
மட்டிலா ஓய்வில் சற்றே மகிழ்ந்திடும் வேளை வந்தான்.
(பகடு---எருது)

'அளவிலாத் தாகம் 'என்றான்; அருந்திடத் தண்ணீர் கேட்டான்;
தளர்வினைக்  கண்ட அன்னை  தக்கபொற் பாத்தி ரத்தில்
இளகிய மனத்தால் நீரை எடுத்துவந் தனளே; அஃதைக்
"களங்கமில் விருந்தி  னர்க்குக்  கைகளில் தருவாய்" என்றாள்.

பாத்திரம் தனையான்  நீட்டப், பாதகன் வளையல் பூண்ட
பூத்திறம்  போலும் கையைப் பொசுக்கெனப் பற்றி னானே;
ஆத்திரம், மருட்சி பற்ற, அன்னையே  இவனின் செய்கை
பார்த்திடாய் என்றேன்; தாயும் பதற்றமாய் அலறி வந்தாள்

விரைவினில் மருட்சி நீங்கி, "விக்கலால் துன்பம் உற்றான்;
அரைநொடி அச்சம் கொண்டேன்; ஆதலால் அழைத்தேன்" என்றேன்;
உரைத்திடேன் நிகழ்ந்த சேதி; உண்மையை அறியா அன்னை
துரையவன் பிடரி நீவித் "துன்பமே நீங்கிற்(று)" என்றாள்.

இத்தனை நிகழ்வும் நோக்கி எத்தன்தன் ஓரக் கண்ணால்
வித்தக மாகப் பார்த்து மெல்லிய முறுவல் பூத்தான்;
சித்தமே இழந்த நானும் சிறியதோர் நகையைக் காட்டிப்
பித்தனைக் கள்வன் தன்னைப் "பிரிந்துநீ செல்வாய்" என்றேன்.

விளக்கவுரை:
தலைவி தோழியிடம் கூறுகிறாள்:
சிறு வயதில் நாம் தெருவில் விளையாடும் பொழுது, மணலால்
சிற்றில் கட்டி மகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கம் . ஒருநாள்
இதுபோல விளையாடிக் கொண்டிருந்த  பொழுது அங்கு வந்த
ஒருவன் தன் கால்களால் சிற்றிலைச் சிதைத்தான். நாம் சூடி
யிருந்த மலர்களைப் பறித்துப் பிய்த்தெறிந்தான். நாம் விளை
யாடும் பந்துகளை எடுத்துக் கொண்டு தெருவழியே ஓடினான்.
இப்படியாக நம்மை நோகச் செய்தான்  பட்டிக் காளை போன்றவன்.
ஒருநாள், அன்னையும் யானும் எங்கள் இல்லத்தில் இருந்த
பொழுது ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து "தாகமாக உள்ளது.
அருந்துவதற்குத் தண்ணீர் தருக!" என்றுரைத்தான். அவன்
வேறு யாரும் அல்லன்; நமக்கு ஏற்கெனவே துன்பம் தந்து
நம்மை நோகச் செய்தவன்தான். அன்னை உள்ளே சென்று
பொற்கலத்தில் தண்ணீர் கொண்டுவந்து "நீ இந்த நீரை
அவனுக்குப் பருகக் கொடு" என்று கூறினள். நானும் நீர்
நிரம்பிய பொற்கலத்தை அவனிடம் நீட்டினேன். அவன்
பழைய குறும்புக் காரன் என்று அப்பொழுது அறியேன்.
அவன் வளையல் அணிந்த என் கரங்களைப் பற்றிக்
கொண்டான். அவன் பிடி வலுவாக இருந்தமையாலும்,
மனம் தடுமாறியமையாலும் "அன்னையே! இவன் செய்த
செயலைப் பார்ப்பாய்"  என்றேன். அன்னையவள் மனம்
பதறியபடி அலறிக் கொண்டு வந்தாள். எனக்கு என்ன
நேர்ந்ததோ? உடனேஅவளிடம் உண்மையைக் கூறா
மல், "இவன் நீர் அருந்தும் பொழுது  விக்கினான். என்ன
வோ துயர் இவனை வாட்டுகிறது என்று எண்ணி உனை
அழைத்தேன்" என நவின்றேன்.அன்னை
இவன் பிடரியை நீவிவிட்டுச் சரியாகியது என்றாள். நான் உண்மையைச்
சொல்லாமல் பொய் பேசியதைக் கேட்ட அந்தக் குறும்பன்
என்னை ஓரக் கண்ணால் நோக்கி மெல்ல நகைத்தான்.
இவன் சிறந்த கள்வனின் மகன்; காதல் கள்வன். என்னை
என்னவென்று அழைப்பது? நானும் ஒருவகையில் கள்ளி
யே என நினைத்துப் புன்முறுவல் பூத்தேன்.








;

Friday 17 May 2019

மாதவியின் கானல் பாணி கனகர்--விசயர் முடித்தலை நெரித்தது.

மாதவி மடந்தை கானல் பாணி கனக,விசயர் தம்
முடித்தலை நெரித்தது.
(சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்; நீர்ப்படைக் காதை)
Ui
சிலப்பதிகாரத்தின் மிகச் சுவையாக வடிவமைக்கப்
பட்ட பகுதி புகார்க் காண்டத்தில் பயின்று வரும் கானல்
வரிப் பகுதி. தித்திக்கும் தீந்தமிழ்ப் பாடல்களைக் கொண்ட
பகுதி. சிலப்பதிகாரக் கதையையே நகர்த்திச் செல்லும்
பகுதி என்று இளங்கோவடிகள் கருதியதால்தான் வஞ்சிக்
காண்டத்தில் மாடலன் என்ற அந்தணன் சேரவேந்தன் செங்
குட்டுவனைச் சந்தித்த பொழுது "மாதவிப் பெண் பாடிய
கானல்வரிப் பாட்டு, வடநாட்டு அரசர்கள் கனகர் மற்றும் விசயர்
பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்குத்
தேவையான கல்லைத்தலையில் சுமக்கும்படி நேரிட்டது"
என்று அம்மறையவன்  கூறியதாக இளங்கோ தெரிவிக்கின்றார்.
அடிகளின் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்ற சிந்தனை
கானல்வரிப் பாட்டால் வலுப்பெறுகிறது.

கானல் என்பது கடற்கரைச் சோலையைக் குறிக்கும். வரி என்பது
இசை, இசைப்பாட்டு, கூத்து வடிவம் ஆகியவற்றைக் குறிக்கும்.
கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப் பாடல்  வரிப்பாடல் எனப்
படும். வரிப்பாடல்களில் பலவகைகள் உள்ளன. அவை வருமாறு:
1.ஆற்றை வருணிப்பது---ஆற்றுவரி
2.தலைவனின்  ஊர் மற்றும் பெயர் குறிப்பிட்டு வருணித்துப்
பாடுவது சார்த்துவரி அல்லது சாற்றுவரி.
3.யாப்புப் பாடலால் ஆகிய வரி மயங்கிசை கொச்சகக் கலிப்பா

4.பாடும் முறையால் பெயர் பெற்றவரி---முரிவரி; யாழ்முரிவரி;
வாய்முரிவரி.
5.கானலை வருணிப்பது கானல்வரி.
6.தலைவன் மற்றும் தலைவியின் உள்ள நிலையை(காதல்)
வருணிப்பது திணை நிலைவரி.
இன்னும் பலவகையான வரிப்பாடல்கள் உள்ளன.

கோவலனும் மாதவியும் இந்திரவிழா நிறைவு நாளன்று
காவிரிப்பூம்பட்டினத்து மக்களோடு கடலாடிவிட்டு ஒரு
கடற்கரைச் சோலையில்(கானலில்) இளைப்பாறிக்
கொண்டிருக்கும் பொழுது யாழை மீட்டிக் கோவலன்
கையில் கொடுத்த மாதவி அவனைப் பாடுமாறு குறிப்புக்
காட்டினாள். கோவலன் நல்ல கலையுள்ளம் கொண்டவன்.
வித்தை தெரிந்தவன். எனவே, உற்சாகமாகப் பாடத் தொடங்
கினான்.
"மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச்  செங்கோல் அதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய்  வாழி!  காவேரி!
கன்னி தன்னைப்  புணர்ந்தாலும்
         புலவா தொழிதல் கயற்கண்ணாய்!
மன்னும் மாதர் பெருங்கற்பென்(று)
         அறிந்தேன் வாழி! காவேரி!
பொருள்:வளையாத செங்கோல் ஆட்சி செலுத்தும்
சோழன் தெற்கே கன்னியாகுமரிவரை படைநடத்திச்
சென்று குமரியோடு சேர்ந்தாலும் அவனைவிட்டு நீங்காத
நினைவுடைய  காவிரியே! நீ வாழ்க! சோழன் குமரியோடு
சேர்ந்தாலும் அவனை விட்டு நீங்காமல் இருப்பதற்குக்
காரணம் உன் கற்புநிலை தவறாமையே ஆகும் என்பதை
அறிந்துகொண்டேன். காவிரியே, நீ வாழ்க.(காவிரியும்
குமரியும் பெண்களாக உருவகப் படுத்தப்பட்டு இப்பாடலில்
வருணிக்கப்பட்டன). இது ஆற்றுவரியாகும். வரிப்பாடல்கள்
ஒருபொருள குறித்து மூன்றடுக்கி வருவன.

புகார் நகரைப் பற்றிய வரிப்பாடல்:
"காதலர் ஆகிக்  கழிக்கானல்
     கையுறைகொண்(டு) எம்பின் வந்தார்;
ஏதிலர் தாமாகி யாமிரப்ப
     நிற்பதை யாங்(கு) அறிகோம் ஐய!
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
     இணைகொண்டு  மலர்ந்த  நீலப்
போதும் அறியாது வண்டூசல்
     ஆடும் புகாரே எம் ஊர்".
பொருள்:எம்மேல் காதல்கொண்டு கானலுக்கு எம்பின்னே
வந்தவர் இன்று அயலார் போலாகிவிட்டார். அவர் அன்பை
இரந்துகேட்கும் நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். இப்படிச்
செய்வார் என்று எப்படி நாங்கள் அறிவோம்? மடந்தையரின்
கண்களையும் நிலவைக் கண்டு மலர்ந்த குவளை மலர்களை
யும் நோக்கும் மக்கள் எது கண்? எது குவளை? எனக் குழம்பும்
பூம்புகார் நகரம் எங்கள் ஊராகும்.

"நிணம்கொள் புலால் உணங்கல் நின்றுபுள்
ஓப்புதல் தலைக்கீ  டாக
கணம்கொள் வண்டார்த்(து) உலாம்கன்னி
நறு ஞாழல் கையிலேந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னி
        மற்(று) ஆண்டோர்
அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ!
பொருள்: கடற்கரையில் காயப்போட்டிருக்கும் கருவாட்டி
னைத் தின்னவரும் பறவைகளை ஓட்டுவதற்காக ஒரு
பூங்கொத்தைக் கையில்கொண்டு பெண் ஒருத்தி நிற்கின்
றாள். இப்படி மணம் வீசும் கானலில் ஆளைக் கொல்லும்
தெய்வ அணங்கு இருக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கு
போயிருப்பேனா? அவள் காதலில் வீழ்ந்திருப்பேனா?

"ஓடும் திமில்கொண்  டுயிர்கொள்வர்  நின்ஐயர்;
கோடும் புருவத்(து)  உயிர்கொல்வை மன்நீயும்;
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்கு இழவல் கண்டாய்!
பொருள்:உன்னைப் பெற்ற பரதவர் மீன் பிடி படகு
களைக் கொண்டு கடல்மீது உயிர்கொல்வர்.ஆனால்
நீயோ வளைந்த உன் புருவ வில்கொண்டே பார்ப்பவர்
உயிரைக் கவர்கிறாய். இதனால் பிறர்படும் துயரை
நீ எண்ணுவதில்லை.உன் பெருமையையும் உணர்வ
தில்லை.உன் மார்பின் சுமையாலே துன்பப்படும் உன்
சிற்றிடையை இழந்துவிடாதே.
"கயல்எழுதி வில்எழுதிக் காரெழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்;
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்(து) அரவஞ்சி வாழ்வதுவே."
பொருள்:கண்ணுக்காக மீனையும், புருவத்துக்காக வில்
லையும்  கூந்தலுக்காக மேகத்தையும் எழுதிய  இவள்
காமனின் (காதலில் ஈடுபட்டோரைக் கொல்லும்) கொலைத்
தொழிலையும் சேர்த்து எழுதிய இவள் முகம் முழு நிலவோ?
வானத்தில் இருந்தால் இராகு, கேது எனும்கோள்களால்
விழுங்கப்படலாம்என்று அஞ்சிப் பூமிக்கு வந்து வாழும் முழு
நிலவு தானோ?

கோவலன் பாடிய பாடல்கள் காதல் சுவை சொட்டச் சொட்ட
தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளை போலத் தித்தித்தன.
ஆனால் அவன் வேறு ஒரு பெண்மேல் நாட்டமுடையவன்
போன்ற கருத்துத் தோன்றுமாறு பாடினமையால் அவன்
மீது ஐயம் கொண்ட மாதவி எதிர்வினையாற்ற எண்ணினாள்.
மனம், வாக்கு, காயத்தால் பரிசுத்தமானவள் என்ற போதும்,
ஊழ்வினை பிடர்பிடித்து உந்தியதன் விளைவாகத் தானும்
வேறு ஒரு  ஆடவன்மேல் காதல் கொண்டவள் போன்ற குறிப்புத்
தோன்று மாறு காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறை
சார்ந்த காமச்சுவை சொட்டும் எதிர்ப்பாடல்களைப் பாடலானாள்.

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
       மணிப்பூ  வாடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண்  விழித்தொல்கி
       நடந்தாய்  வாழி, காவேரி!
கருங்க யற்கண்  விழித்தொல்கி
நடந்த வெல்லாம்  நின்கணவன்
திருந்து  செங்கோல்  வளையாமை
அறிந்தேன் வாழி, காவேரி!
பொருள்: ஆற்றின் இருகரையிலும்  பூக்களில் மொய்த்
துள்ள வண்டுகள் இன்னிசை பாட அழகிய பூக்களாகிய
ஆடையைப் போர்த்துக்  கொண்டு  மீன்போலும் அழகிய
கண்கள் விழித்தபடி ஓடித்திரிகின்ற  காவிரிப் பெண்ணே!
நீ இப்படி விழித்த விழி திறந்தபடி அசைந்தாடிப் பாய்வது,
உன்தலைவனாகிய சோழ வேந்தனின் நீதிதவறாத செங்
கோல் ஆட்சியினால்தான் என்பதை நான் அறிவேன்.
காவிரிப் பெண்ணே! நீ வாழ்க.  கோவலன்  பாடிய பாட்டில்
காவிரியோடு கங்கை, கன்னியாகுமரி முதலியவற்றையும்
சோழன் சேர்த்துக்  கொண்டாலும்  காவிரிப் பெண்ணே! நீ ஊடல்
கொள்ளமாட்டாய். ஏனென்றால் அதுவே நின் கற்புநிலை
தவறாமைக்குச் சான்றாகும், என்ற கருத்து வெளிப்பட்டது.
இதற்கு நேர்மாறாக மாதவி பாடிய பாட்டில் சோழமன்னன்
நீதி நெறி தவற மாட்டான் என்ற கருத்து வெளிப்பட்டது.
கோவலன் ஆடவர் எத்தனை பெண்டிரை மணந்தாலும்,
பெண்டிர் இச்செய்கையைப் பொறுத்துக்கொள்ளல் வேண்
டும் என்ற கருத்தைவலியுறுத்தினான். மாறாக, மாதவி
சோழமன்னன் நீதி, நெறி தவற மாட்டான் என்று உறுதிபடத்
தெரிவித்தாள்.

"மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்(கு)
   அறிகோம் ஐய?
நிறைமதியும்  மீனும் என அன்னம் நீள்புன்னை அரும்பிப்
    பூத்த
பொறைமலி பூங்கொம் பேற வண்(டு) ஆம்பல் ஊதும்
    புகாரே எம்ஊர்."
பொருள்: வலிமைமிகு பரதர்கள் பிறர் அறியாமல் களவு
முறையில் கூடிய, பாக்கத்தில் உள்ள வளமிகு  பெண்டிரின்
அழகியகை வளையல்கள் கழன்று விழுந்து அவர்களின் களவு
ஒழுக்கத்தை ஊர் அறியச் செய்துவிடுவதை ஏழைகளாகிய
நாங்கள் எப்படி அறியாதிருப்போம்? அறிவோம்! அன்னப் பறவை
நீண்ட புன்னை மரக்கிளையிலே ஏறியிருக்க அன்னத்தையும்,
புன்னை மரத்தில் பூத்த பூக்களையும், வெண்மதியும் விண்மீனும்
என நினைத்து ஆம்பல் பூ மலரும்; அதனை வண்டுகள் மொய்க்கும்
புகார் எங்கள் ஊராகும்.

"தம்முடைய  தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ? விட்டகல்க;
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்."
பொருள்: என்னை நினைக்காமல் தனது இயல்பான அன்பு உளத்
தையும் தனது குதிரை பூட்டிய தேரையும் கூட அவர் விட்டுவிட்டுப்
போய்விட்டாரோ? இவைகளை விட்டுவிட்டார் என்றால் அவர் எம்
மையும் விட்டுவிட்டுப்  போகட்டும்!  அழகிய மெல்லிய பூங்கொத்து
களே! அன்னப் பறவைகளே! அவர் நம்மை மறந்தாலும்,  நாம்
அவரை மறக்க மாட்டோமே!
"வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரை உலாவு கடல்சேர்ப்ப!
மாரிப் பீரத்(து) அலர்வண்ணம் மடவாள் கொள்ளக்
   கடவுள்வரைந்(து)
ஆரிக் கொடுமை செய்தார்என்  றன்னை அறியின்
   என்செய்கோ?
பொருள்: வீடுகளின் முன்பாக வலைகள் காயப் போட்டிருப
பர். கடல்முத்து நகையோடு செம்பவள வாய்திறந்து பேசும்
பரதவர் வாழும் சேரிக் குடியிருப்புகள் மிகவுடைய கடற்
கரையின் நெய்தல் நிலத் தலைவனே! என்மேனியானது
கார்காலத்தில் மலர்கின்ற பீர்க்கம்பூ நிறம் கொண்டால்
(பசலை நிறம்) ஐயோ! யாரால் வந்ததித் தீமை என்று ஊரில்
உள்ள கடவுளரை யெல்லாம் என் அன்னைவேண்டி வருந்து
வாள். என் அன்னைக்குத் தெரிந்தால் ஊர் முழுக்கத் தெரியத்
தொடங்கும். கட்டுவிச்சி மூலம் கட்டுப் பார்ப்பாள்(குறி
சொல்பவளிடம் குறி கேட்பாள்;) முருகனுக்கு ஆட்டையோ
கோழியையோ பலி கொடுப்பாள். என் களவு ஒழுக்கம் தெரிந்து
விட்டால் இற்செறித்து விரைவில் வரைவு கடாவ வழி மேற்
கொள்வாள். நான் என்ன செய்வேன்?

"கதிரவன் மறைந்தனனே; காரிருள் பரந்ததுவே;
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர்  உகுத்தனவே;
புதுமதி புரைமுகத்தாய்! போனார்நாட் டுளதாம்கொல்?
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தவிம் மருள்மாலை"
பொரூள்:பகலவன் மறைந்துவிட்டான். காரிருளும்
வந்து விட்டது. குவளைமலர் போலும் கண்கள் வருந்திக்
கண்ணீர்  சிந்தியபடி யுள்ளன.முழுநிலாப் போலும்
முகமுடைய பெண்ணே!  முழு நிலவை வெளியே
அனுப்பிவிட்டுப் பகலவனை விழுங்கும் இந்த மயக்
கும் மாலைப் பொழுது நமைப் பிரிந்து போன தலை
வர் நாட்டிலும் இருக்கும் அல்லவா?

"அடையல் குருகே! அடையலெம்  கானல்;
அடையல் குருகே! அடையலெம் கானல்;
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்(கு) உறுநோய் உரையாய்;
அடையல் குருகே! அடையலெம் கானல்".
பொருள்: செங்கால் நாராய்! செங்கால் நூராய்! இனி
எங்களது குளிர்மரச்  சோலையில்வந்து தங்காதே.
சிதறிவிழும் அலைகடல் தவழும் நெய்தல்நிலத்
தலைவனாகிய என் காதலனிடம் போய், நான் படும்
துயரம், அவரால் வந்த பிரிவுத் துன்பம் என்னும் நோயை
எடுத்துச் சொல்ல முடியாத நீ இங்கெதற்கு வருகிறாய்?
நாரையே! இங்கு நீ இனி வர வேண்டா."

இப்படியாகக் காமம் மிக்க கழிபடர் கிளவியைப் பாடிய
மாதவி கோவலனுக்குச் சந்தேகத்தைக் கிளப்பும்
வகையில் கானல்வரி எதிர்ப்பாட்டுகளைப் பாடி முடித்
தாள். வினை விளையும் காலம் நெருங்கிய  தாலும்,
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டியதாலும், கோவலன்
"கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்" என்று
சொல்லித் தன் பணியாட்களோடு அவ்விடத்தை விட்டு
அகன்றான். இதனைத் தொடர்ந்து பல நிகழ்வுகள்
நடந்தன. கண்ணகியை அடைந்து அவளோடு மது
ரைக்குச் சென்றான். தன் மனைவியின் சிலம்பை
விற்க முயலும்போது களவுக் குற்றம் சுமத்தப்பட்டுத்
தண்டிக்கப்  பட்டான். கணவன் கொலையுண்ட பிறகு
கண்ணகி பாண்டியனோடு வாதாடித்தன் கணவன்
கள்வன் அல்லன் என நிரூபித்தாள். பின்னர் மதுரை
நகரத்தை எரியூட்டினாள். நடைப் பிணம் போல வைகைக்
கரையோரமாக நடந்தே சென்று திருச்செங்குன்றம்
மலையுச்சியை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம்
சென்றாள் என இளங்கோவடிகள் தெரிவிக்கின்றார்.

சேரவேந்தன் கண்ணகிக்குச் சிலை எழுப்ப முடிவு
செய்து வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்
றான். ஆங்குள்ள ஆரிய மன்னர்களை வென்று
கனகர் மற்றும் விசயர் தலைமீது கண்ணகி சிலைக்
கான கல்லை ஏற்றிக் கொண்டுவந்தான். கண்ணகிக்கு
கோட்டம் எழுப்பி அதனுள்ளே இமயமலையிலிருந்து
எடுத்து வந்த கல்லால் வடித்த கண்ணகி சிலையை
நாட்டினான். இவ்வாறாக மாதவி பாடிய கானல்வரிப்
பாடல் கனக விசயர் முடித்தலை நெரித்தது. வாழ்க
கண்ணகி புகழ்! வளர்க சிலப்பதிகாரப் பெருமை!











"





.




Saturday 4 May 2019

"பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்".

குன்றக் குரவையும், பத்தினிக் கோட்டமும்.

குற்றமற்ற கோவலன்  அநியாயமாகத் திருட்டுக்
குற்றம் சுமத்தப்பட்டுத் தண்டனையாகக்  கொலை
செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற கண்ணகி மிகுந்த
சினத்தோடு பாண்டியன்  நெடுஞ்செழியனின் அர
சவைக்குச் சென்று  வேந்தனிடம் வழக்காடித் தன்
கணவன் கோவலன் குற்றமற்றவன்  என நிலைநாட்
டினாள்.  தான் தவறு செய்துவிட்டதை  யுணர்ந்த
பாண்டிய வேந்தன் குற்ற உணர்ச்சியால் உயிர்
துறந்தான். கணவன் இறந்ததை யறிந்த கோப்பெருந்
தேவியும் அவன் காலடியில் உயிர்நீத்தாள். சினத்தின்
உச்சத்தில் இருந்த கண்ணகி, மதுரை நகரை எரியூட்டி
னாள். பின்னர் கால்போன போக்கில்  இரவு பகல் பாராது
கண்ணீர் சிந்தியபடியே வைகையாற்றின் கரையை
அடைந்து மேடென்றும் பள்ளமென்றும் பாராமல் நடந்து
நடந்து திருச்செங்குன்றம் மலையை அடைந்து அதன்
மீது ஏறினாள். மலைமீது பூத்துக் குலுங்கும் ஒரு வேங்கை
மர நிழலின் கீழ்வந்து நின்றாள். கண்ணீர் உகுத்தபடியே
பதினான்கு நாட்களைக் கழித்தாள். பதினான்காம் நாள்
தன் கணவனின் நினைவைப்  போற்றித் தொழுதாள். அப்
பொழுது வான் உலகத்தினர் அங்கு தோன்றிக் கண்ணகி
மீது மலர் மாரி பொழிந்தனர். பின்னர் தங்களுடன் வந்த
கோவலனையும் கண்ணகியையும் ஒருசேர அழைத்துக்
கொண்டு வானுலகுக்குத் திரும்பிச்  சென்றனர்.

இந்த வியத்தகு காட்சியைக் கண்ட மலைவாழ் மக்கள் அப்
பொழுது அப்பகுதிக்கு மலைவளம் காண வந்த சேரவேந்தன்
செங்குட்டுவனிடம்  விரிவாக எடுத்துரைத்தனர். அவ்வமயம்
உடனிருந்து இந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித்துக் கொண்
டிருந்த தண்டமிழ்ப் புலவர் சீத்தலைச் சாத்தனார் இது தொடர்
பான எல்லாச்  செய்திகளையும்  விளக்கமாகக் கூறினார்.

உடனே, சேரவேந்தன் செங்குட்டுவன் தன்னுடன் வந்த  தன்
மனைவி இருங்கோ வேண்மாளை நோக்கி
"உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தஇச்  சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?"
என வினவ, உடனே இருங்கோ வேண்மாள்
"காதலன் துன்பம் காணாது  கழிந்த
மாதரோ பெருந்திரு  உறுக; வானகத்(து)
அத்திறம் நிற்க;நம்  அகல்நா(டு)  அடைந்தவிப்
பத்தினிக்  கடவுளைப்  பரசல்  வேண்டும்"
என்று மொழிந்தாள். (பரசல்--வணங்கி வழிபடல்).
அரசி இவ்வாறு கூறியவுடன் செங்குட்டுவனும், அமைச்சரும்,
மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து ஆலோசித்துக் கண்ணகிக்குக்
கோட்டம் எழுப்ப முடிவு செய்தனர். கண்ணகி கோட்டத்துக்குச்
சிலை செய்யத் தோவையான கல்லை  இமயத்திலிருந்து எடுத்து
வரத் தீர்மானித்தனர். அதன்படி செங்குட்டுவன் வடதிசைநோக்கிப்
படையெடுத்துச் சென்றான். வழியில் எதிர்த்துப் போரிட்ட மன்னர்
களைத் தோற்கடித்து இமயமலையிலிருந்து பொருத்தமான கல்லைத்
தேர்ந்தெடுத்து அதனைக் கங்கை நீரில் நீராட்டித் தன்னிடம் தோல்வி
யடைந்த கனக விசயர் என்ற இரு ஆரிய மன்னர்கள் தலையில் ஏற்றிக்
கொண்டுவந்தான். வஞ்சி நகரம் திரும்பிய  செங்குட்டுவன் உடனே
கண்ணகி கோட்டத்தைக் கட்டுவித்தான். அதற்குள்  இமயத்திலிருந்து
கொண்டுவநத கல்லினால்  சிலை வடித்து அதனை நிறுவச்செய்தான்.

இதற்கிடையே, கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த துயரங்களைக்
கேள்விப்பட்ட கோவலன் தந்தைமாசாத்துவான் தன் சொத்தையெல்லாம்
தான  தர்மம் செய்துவிட்டுத் துறவு மேற்கொண்டான். கோவலனுக்குத்
தாய் அதிர்ச்சியில் உயிர்நீத்தாள்.  இந்த நிகழ்வையெல்லாம் கண்டும்
கேட்டும் வருந்திய கண்ணகியின் செவிலித் தாயும், தோழியும், கடவுட்
சாத்தனை மணந்து வாழ்ந்துவரும் தேவந்தி என்பவளும் ஆகிய மூவரும்
ஒன்று கூடிக் கண்ணகியைக் காண மதுரைக்கு வந்தனர். அங்கே அடைக்
கலம் கொடுத்த ஆயர்குலப் பெண் மாதரி துக்க மிகுதியால்  தீக்குளித்து
இறந்த செய்தியை அறிந்து மாதரி மகள் ஐயை என்பவளை அழைத்துக்
கொண்டு திருச்செங்குன்றம் மலைக்கு வந்தனர்.கண்ணகி கோட்டத்துக்
குள் நுழைந்து செங்குட்டுவனிடம் நிகழ்வனைத்தையும் விவரித்தனர்.
"முடிமன்னர் மூவரும் காத்தோம்பும்  தெய்வ
வடபேர்  இமய  மலையிற்  பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த
தொடிவளைத்  தோளிக்குத்  தோழிநான் கண்டீர்;
  சோணாட்டார்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை
மூவேந்தரும்  காத்து வளர்த்த கண்ணகிக்குத் தோழி
நான். சோழவளநாட்டில் பிறந்த பெண்பாவை கண்
ணகிக்குத் தோழி ஐயா, நான் தோழி என அறிக.
இவ்வாறு தோழி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

"மடம்படு  சாயலாள் மாதவி  தன்னைக்
கடம்படாள் காதல் கணவன்  கைப்பற்றிக்
குடம்புகாக் கூவல்  கொடும்கானம்  போந்த
தடம்பெரும் கண்ணிக்குத்  தாயார்நான் கண்டீர்;
  தண்புகார்ப் பாவைக்குத் தாயார்நான் கண்டீர்". 
பொருள்: மாதவிமேல் பொறாமை, சினம் எதுவும்
கொள்ளாமல் கொண்ட கணவனோடு குடம் நுழை
யாத(நீர் எடுப்பார் இன்றிப் பாழடைந்த) கிணறு
கள் இருக்கும் காட்டு வழியில் நடந்து வந்த கண்
ணகிக்குச் செவிலித் தாய் நான் கண்டீர்; செவிலித்
தாய் ஐயா, இதை அறிவீர்.

"தற்பயந்தாட்(கு) இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும்  எனக்கும் ஓர்சொல் இல்லை;
கற்புக் கடம்பூண்டு  காதலன் பின்போந்த
பொற்றொடி  நங்கைக்குத் தோழிநான் கண்டீர்;
   பூம்புகார்ப்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:தன்னைப் பெற்ற தாய்க்கும் எதுவும்
கூறாமல், தன்னை வளர்த்துக் காத்த என்தாய்க்கும்
எனக்கும்  எதுவும் கூறாமல், கற்பையே அணிகலன்
என மதித்துக் கணவன் பின்னே புறப்பட்டு வந்த
கண்ணகிக்குத் தோழி நான்; பூம்புகார்ப் பாவைக்
குத் தோழி ஐயா, இதனை யறிக.

இவ்வாறாகச் செவிலித் தாயும், அவள் மகளும்(கண்
ணகிக்குத் தோழி) புலம்பி அரற்றினர். உடனே,
தேவந்தி என்பவள் உரைக்கலானாள்.
"செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த  உணரா(து)  இருந்தேன்;மற் றென்செய்தேன்?
மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ? தோழி,
    அம்மாமி  தன்வீவும் கேட்டாயோ? தோழி".
பொருள்: நற்றவம் புரியாத பாவி நான். அன்றொரு
நாள் தீக்கனாக் கண்டதாக நீ சொன்ன பொழுதே
அதனைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்காமல் விட்டு
விட்டேனே. துயர் மிகுதியாலும் சினத்தாலும்  நீ
உன் ஒரு முலையைத்  திருகி எறிந்து மதுரையை எரி
யூட்டிய செய்தி கேட்டவுடன்  உனக்குத் தாயும்,
பிற்பாடு மாமியாரும் இறந்த செய்தியையும் நீ கேள்விப்
பட்டாயோ? தோழி, கேள்விப் பட்டாயோ? மேலும்,
"மாசாத்து வான்துறவும் கேட்டாயோ? அன்னை,
மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ? அன்னை".
"மாதவி தன்துறவும் கேட்டாயோ?  தோழீ,
மணிமே  கலைதுறவும்  கேட்டாயோ? தோழீ".
"வையெயிற்(று) ஐயையைக் கண்டாயோ? தோழீ,
மாமி மடமகளைக் கண்டாயோ? தோழீ".

இவ்வாறெல்லாம் பாடிப் புலம்பி அரற்றித் தீர்த்த
வுடன் வானிலே ஒரு பெண் உருவம் தோன்றியது.
சேர வேந்தன் செங்குட்டுவன் உடனே அதிசயப்
பட்டான்."பொன்னாலான சிலம்பையும் இன்னும் பல
அணிகலன்களையும் சூடிய மின்னல் கொடி போல
ஒரு பெண்ணுருவம் விண்ணில் தெரிகிறதே என்று
வியந்து கூறினான். கண்ணகித் தெய்வம் பேசினாள்:
"தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன்கோவில்
நல்விருந்(து) ஆயினான்; நானவன் தன்மகள்;
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்".
கண்ணகி தன்னைப் பாண்டியன் மகளென்று கூறிக்
கொண்டதால் பாண்டியன் மீதிருந்த அவளது சினம்
தணிந்து விட்டதை யறிந்த செங்குட்டுவன் உடபட
அங்கேயிருந்த அனைவரும் கண்ணகியையும் பாண்
டியனையும் வாழ்த்திப் பாடினார்கள். பின்னர் சோழ
வேந்தனையும் சேர வேந்தனையும் ஏற்ற முறையில்
வாழ்த்திப் பாடினர்.
"வீங்குநீர் உலகாண்ட விண்ணவர் கோன்தன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை;
ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த  சோழன்காண் அம்மானை;
 சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை".
பொருள்:கடலே எல்லையாக உடைய இந்த நிலவுலகை
ஆட்சிசெய்த, வானவர் தலைவன் இந்திரனது கோட்டை
மதிலைக்காத்த கொற்றவன் யார்?  வானில் வலம்
வந்த மூன்று கோட்டைகளையும் அழித்த(தூங்கெயில்
எறிந்த தொடித்தோள் செம்பியன் என்னும்) சோழமன்
னன் அவன். அவனது புகார் நகரை வாழ்த்திப் பாடி
அம்மானை விளையாட்டை ஆடுவாய் பெண்ணே!
"பொன்னி லங்கு பூங்கொடி பொலம்செய் கோதை
வில்லிட
மன்னி லங்கு மேகலை கள்ஆர்ப்ப  ஆர்ப்ப  எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த
டித்துமே;
தேவர் ஆர  மார்பன் வாழ்க வென்று  பந்த
     டித்துமே".
பொருள்:பொற்கொடி போன்ற அழகுடையவளே! பொன்
னாலான மாலைகள் ஒளிவீச, மேகலைகள் ஒலியெழுப்ப,
ஞாலமெங்கும் தென்னவன் பாண்டியன் வாழ்க என்று
வாழ்த்திப் பந்தடிப்போம். இந்திரன் அளித்த பூணாரம்
தவழும் மார்பன் வாழ்க என்று பந்தடிப்போம், வா.

"ஓரைவர் ஈரைம்  பதின்மர் உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு  போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்;
 கடம்பெறிந்த  வாபாடி  ஆடாமோ  ஊசல்."
பொருள்: பாண்டவர் ஐவரும்  கௌரவர் நூற்று
வரும்  உக்கிரமாகப் போர்புரிந்த பொழுது இரண்டு
பக்கத்துப் படைகளுக்கும் அளவின்றிப் பெருஞ்சோறு
படைத்த சேரன்-பொறையன்-மலையன் புகழ்பாடிக்
கருங்கூந்தல் விரிந்தாட ஊஞ்சல் ஆடுவோம்; கடலிற்
கடம்பை அழிந்த கொற்றவன் புகழ்பாடி ஊஞ்சல் ஆடு
வோம்.

கண்ணகிக்குக் கோவில் கட்டுவித்த செங்குட்டுவன்,
கோவிலில் அன்றாடம் பூசை மற்றும் விழா நடக்க
இறையிலியாக நிலம் வழங்கி நாடோறும் விழாச்
சிறப்பு விளங்கல் வேண்டும் என்ற ஆணை பிறப்
பித்தான். பூவும் அகில் புகையும் நறுமணப் பொருள்
களும் கொண்டு கண்ணகி தெய்வத்துக்குப் பூசை
செய்க என்று தேவந்திகைக்குக் கட்டளையிட்டான்.
கண்ணகி கோட்டத்தை வலமாக மூன்று முறை சுற்றி
வந்து தேவியை வணங்கிப் பணிந்து நின்றான். அங்கு
குழுமியிருந்த சிறையிலிருந்து விழாவை முன்னிட்டு
விடுவிக்கப்பட்ட மன்னர்களும், குடகு நாட்டவரும்,மாளுவ
மன்னனும், இலங்கையரசன் கயவாகுவும் "எங்கள் நாட்
டில் செங்குட்டுவன் பிறந்தநாள் விழா எடுக்கும் போது,
கண்ணகித் தெய்வமே! நீ தவறாமல் காட்சி தந்து அருளல்
வேண்டும்" என்று வணங்கி வேண்டினர். அப்பொழுது,
"நீங்கள் கேட்ட வரம் தந்தேன்" என்று வானில் ஒரு குரல்
ஒலித்தது. இப்படியாகக் கண்ணகி வழிபாடு பல இடங்
களுக்கும் பரவியது. மதுரையை எரியூட்டிய கண்ணகி
கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். பிற்பாடு கணவனுடன்
விண்ணுலகம் சென்ற நாளிலிருந்து சினந்தணிந்து அன்பும்,
அமைதியும் கொண்டவளாக மாறினாள். தன்னை நாடிவரும்
பக்தர்களுக்கு வேண்டியவரம் நல்கும் தெய்வமாக மாறிவிட்
டாள். கண்ணகி தெய்வத்தின் புகழ் ஓங்குக! பத்தினிக்
கோட்டத்தைப்  போற்றிடுவோம்.