Thursday 12 September 2019

சீதை நகைகளைக் கண்டெடுத்த குரங்கினம் போல

சீதையின் நகைகளைக் கண்டெடுத்த குரங்கினம்  போல.......

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் புறநானூற்றில் சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் வேந்தனின் கொடைக்
குணத்தைப் போற்றிப் பாடிய  பாடல் மிகவும் நல்ல இலக்கியச் சுவையும்,
நகைச்சுவையுணர்வும் ததும்பும் தரமான செய்யுளாகும். அதைப் பற்றி
விரிவாகப் பார்ப்போம்.
புறநானூறு  பாடல் எண: 378; திணை:பாடாண்; துறை:இயன்மொழி.
ஊன்பொதி பசுங்குடையார் வேந்தனைப் புகழ்ந்து பாடிப் பெரும் பரிசில்
பெற்றார். புலவர் இதற்குமுன் கண்ணாலும் பார்த்திராத நிறைய அணி
கலன்களை வேந்தன் புலவர்க்கு நல்கினான். புலவர் திணறிப் போனார்.
வேந்தனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பிய புலவர்
அந்நகைகளைத் தன் சுற்றத்தாரிடம் காண்பிக்க அவர்கள் பிரமித்துப்
போயினர். விரலில் அணிய வேண்டிய நகையைக் காதிலும், காதில் அணிய
வேண்டிய நகையை விரலிலும், இடையில் அணிய வேண்டிய நகையைக்
கழுத்திலும், கழுத்தில் ஆணிய வேண்டிய நகையை இடையிலும்  இடம்
மாற்றி அணிந்து அழகு பார்த்தனராம். சீதாப் பிராட்டியை இராவணன்
இலந்கைக்குப் புட்பக விமானத்தில் கடத்திச் சென்ற பொழுது அவர் தம் நகை
களக் கழற்றி ஒரு துணியில் சுற்றி அம்மூட்டையை எறிய, அது கிட்கிந்தை
நகரில் விழ, அதனைக் கண்ட குரங்கினம்  இனம் புரியாத ஆர்வத்தொடு
அம் மூட்டையைப் பிரித்து அதிலிருந்த நகைகளைத் தாறுமாறாக இடம்
மாற்றி அணிந்து கொண்டு அழகுபார்த்த நிகழ்வை  ஒத்திருந்தது தம் சுற்றத்
தார் செய்கை என்று புலவர் நகைச்சுவை ததும்பக் குறிப்பிடுகின்றார். இனி,
தொடர்புடைய பாடலைப் பார்ப்போம்:


"தென் பரதவர் மிடல் சாய,
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்(று)என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு,
இலம்பாடு உழந்தவென் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
மிடற்றமை மரபின அரைக்குயாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை  எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே!
பொருளுரை:
தெற்குத் திசையிலுள்ள பரதவரின் வலிமை அடங்கி ஒடுங்கவும்,
வடக்குத் திசையிலுள்ள வடுகரின்  வாள்வன்மையால் தமிழகத்
துக்கு நேர்ந்த கேடுகள் நீங்கவும் முனைப்புடன் வீரங்காட்டி அவற்றைத்
தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டவன் சோழன் செருப்பாழி
எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் வேந்தனாவான். இச் சோழனது
அரணமனையின் வெண்சுதை மாடத்திலே முற்றத்திலே நின்று
என்னுடைய கிணையை இயக்கிக் குறையாத வீர மரபையுடைய சோழ
னின் வஞ்சிச் சிறப்பை(பகைவர் நாட்டைக் கைக்கொள்ள வஞ்சிப் பூச்
சூடிச் செல்லுதல) வியந்து போற்றிப் பாடினேன்.

நான் பாடிய பாட்டைக் கேட்ட சோழ வேந்தன், எமக்காகச் செய்யப் படாத
அரசகுலத்தவர்க்கே உரிய நல்ல நல்ல அணிகலன்கள் பலவற்றையும்
ஏராளமாக எனக்கு நல்கினான். அவற்றை எடுத்துக் கொண்டு என் ஊர்க்
குத் திரும்பிய நான் அவற்றை என் கேளிரிடம் காட்டினேன். அவர்கள்
அவற்றைப் பார்த்துத் திகைப்பில் மூழ்கினர். இந் நகைகளை அவர்கள்
இதற்குமுன்னர் கண்டதேயில்லை. எனவே, விரலில் அணிய வேண்டிய
தைக் காதிலும், காதில் அணிய வேண்டியதை விரலிலும், இடுப்பில் அணிய
வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டியதை இடுப்பிலுமாக
இடம் மாற்றி அணிந்து பார்த்தனர். இக் காட்சி 'சீதையின் அணிகளைக்
கண்டெடுத்த குரங்கினம் அணிந்து பார்த்த' இராமாயணக் காட்சியினை
ஒத்திருந்தது. என் குடும்பத்தார் மற்றும் சுற்றத்தார் இதுகாறும் அனுபவித்த
கொடிய வறுமையும் தொலைந்து போனது; இதன் விளைவாக அவர்களது
முகங்களிலே இளநகை அரும்பியது.

அருஞ்சொற் பொருள்:
மிடல்: வலிமை
கிணை: ஒருவகைப் பறை
வெறுக்கை: செல்வம்
இலம்பாடு: துன்பம்
ஒக்கல்:சுற்றத்தார்
தெறல்: கோபித்தல்
மதர்:செருக்கு, மகிழ்ச்சி
எவ்வம்:துயரம்.