Tuesday 7 January 2020

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்,

நாட்டுப் புறப்பாடலின் தொன்மை.

சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியாக மக்கள் நாவில்
நாட்டுப் புறப் பாடல்கள் தவழ்ந்திருத்தல் வேண்டும். அப் பாடல்
க்ளே மேலும் மேலும் திருத்தமடைந்து இலக்கியங்களாக மலர்ந்
திருக்க வேண்டும். இலக்கியம் செம்மையுற்ற பிறகு இலக்கணம்
உருவாக்கப் பட்டிருத்தல் வேண்டும்.

மதுரையின் வளத்தை விவரிக்கும் அழகிய நாட்டுப்புறப்பாடல்
பின்வருமாறு:
"கட்டுக் கலங்காணும்; கதிர்உழக்கு நெற்காணும்;
அரிதாள் அரிந்து வர மறுதாள் பயிராகும்;
அரிதாளின் கீழாக ஐங்கலத்தேன் கூடுகட்டும்;
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெலென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை".
இந்த அழகிய நாட்டுப்புறப் பாடலில் ஏதோ சில வரிகள் விடு
பட்டுப் போனதாக நினைவு. என் சின்ன வயதில் இதைவிடப்
பெரியதாக இருந்த பாடல் காலப் போக்கில் நினைவாற்றல்
குறைவால் சுருங்கிக் போய்விட்டதாகத் தோன்றுகிறது.இந்த
வயல் வளம் அல்லி அரசாணி மாலை என்னும் இலக்கியத்தில்
எவ்வாறு விவரிக்கப் பட்டுள்ளது என்று பார்ப்போம்:
"வண்ணலும் இஞ்சியும் மஞ்சளும் மாமரமும்
கன்னலும் செந்நெலும் கதித்து விளைவாகிக்
கருத்த பயிர்தனிலே களையெடுக்கும் பள்ளிகளும்
அறுப்பு விடுவாரும்  அரிகூட்டி நிற்பாரும்
ஆனை அடிமறைய அடிராசி நெல்விடுவார்
ஆனவிரு மூன்றுபங்கில் அரண்மனைக்குப் பங்கொன்றுபோம்
கட்டுக் கலங்காணும் கதிர்உழக்கு நெற்காணும் ......
(அல்லி அரசாணி மாலை வரிகள்:525--531)
கொடைச் சிறப்பைச் சொல்லும் வரிகள் (535, 536):
"கொடுப்பாரே யல்லாமல் கொள்வார் ஒருவரில்லை;
எடுப்பார்கள் தானம் ஏற்பார் ஒருவரில்லை"

காதலன் காதலியிடம் தன் காதல் ஆழத்தை விவரிக்கும் பாடல்:
"செத்து மடிந்தாலும் செலவழிந்து போனாலும்
செத்த இடத்தனிலே செங்கழுநீர்ப் பூபூப்பேன்;
மாண்டு மடிந்தாலும் வைகுந்தம் சேர்ந்தாலும்
மாண்ட இடந்தனிலே மல்லிகைப் பூபூப்பேன்;
பஞ்சணை மெத்தையிலே படுக்கைமலர் ஆவேன்யான்;
கொண்டைக்குப் பூவாவேன்; கொசவத்திற் பையாவேன்;
நெற்றிக்குப் பொட்டாவேன்; நீலவிழி மையாவேன்;
முந்தானைத் தொங்கலிலே முள்ளாகி ஓட்டுவேன் யான்,;
காலுக்கு மெட்டியாவேன்; கைவளையல் தானாவேன்".

கல்யாணப் பந்தல் பற்றிக் காதலி விவரிக்கும் பாடல்:
"முத்தைப் பிளந்தார்கள்; மூன்றாங்கால் இட்டார்கள்;
பவளம் பிளந்தார்கள்; பந்தற்கால் நட்டார்கள்;
வெள்ளியால் கால்நிறுத்தி வெற்றிலையாற் பந்தலிட்டார்;
கரும்பாலே கால்நிறுத்தி அரும்பாலே பந்தலிட்டார்;
ஈர்க்குப் பிளந்தார்கள் இருகாதம் பந்தலிட்டார்;
மூங்கில் பிளந்தார்கள், முக்காதம் பந்தலிட்டார்;
நாணல் பிளந்தார்கள், நாற்காதம் பந்தலிட்டார்".
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அம்மையார் பாடும்
பாடலைப் பார்ப்போம்:
"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம்வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்".

மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றிக் கனாக்கண்டேன் தோழீநான்".

இனி உணவைப் பற்றியொரு நாட்டுப்புறப் பாடலை
நோக்குவோம்:
"பாண்டத்தைக் கழுவிப் பனிநீர் உலைவார்த்து
முத்துப்போற் சோறு வடித்தாள் இளங்கொடியாள்;
அத்தி விறகொடித்துத் தித்திக்கும் பால்காய்ச்சிப்
புத்துருக்கு நல்லநெய்யும் பொன்போல் பருப்புகளும்
அதிரசமும் தேன்குழலும் அறுசுவைப் பண்டங்களும்
பத்துவிதக் கறியும் பதினெட்டுப் பச்சடியும்
எட்டு விதக் கறியும் இயல்பான பலகுழம்பும்
முப்பழமும் சர்க்கரையும் அப்பளமும் தான்படைத்து
ஆயாசந் தீரவே பாயாசந் தான் கொடுத்தாள்".

விருந்தைப் பற்றிப் புலவர் ஒருவர் படைத்த இலக்கியம்:
"பொன்னம் பருப்பனமேல் போடுபருப் பைக்கணடு
இன்னும் பருப்போமென் றெண்ணிநிற்க--உன்னதமாய்
வைத்த ரசம்உண்டோர் வானத் தமுதரசம்
கைத்தரசம் என்றே கருதுவர்--சத்தியமாய்
பாயாசம் கொஞ்சம் பருகினா லும்போதும்
ஆயாசம் எல்லாம் அகன்றோடும்---காயாம்,மா
ஊறுகாய் ஒன்றே உலகை விலைகொள்ளும்,
வேறுகாய் வர்க்கங்கள் வேண்டாவே....

நாட்டுப்புறப்பாடல் நாடோடிகள் பாடல்,  வாய்மொழி இலக்கியம்,
ஏட்டில் எழுதாக் கவிதைகள் காற்றில் வந்த கவிதைகள், மக்கள்
பாடல்கள், மரபுவழிப்பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப்
பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பல்வகைப் பெயர்களால்
அழைக்கப்படுகின்றன. கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஒருமுறை
வயல் வழியே நடந்து சென்றபோது மூன்று மனிதர்கள் ஏற்றம்
இறைத்துக் கொண்டு ஏற்றப் பாடலை இனிமையாகப் பாடிக்
கொண்டிருந்தனர். முதல் மனிதர் "மூங்கில் இலை மேலே"
என்று தொடங்கினார். இவர் மாட்டை ஓட்டுபவர். இரண்டாமவர்
ஏற்றத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கிணற்றிலிருந்து நீரை
இறைப்பவர். இவர் "தூங்கும் பனிநீரே" என்று பாடினார். அதற்குள்
அவர்கள் தாயார் "பொழுது சாய்ந்து விட்டது; நீர் பாய்ச்சியது
போதும் "என்று கூறவும் மாட்டை அவிழ்த்து வீட்டை நோக்கி
விர்ட்டிவிட்டுத் தாங்களும் இல்லத்துக்கு ஏகினர். கம்பர் அடுத்த
அடி என்ன என்று அறிய ஆவலாயிருந்தார். மறுநாள் அதிகாலை
யிலேயே வந்து காத்திருந்தார்.ஏற்றம் இறைக்கத் தொடங்கினர்.
முதலிரண்டு அடிகள் பாடிய பிற்பாடு மூன்றாவது அடியைப்
பாடுபவர் "தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" என்று முடித்
தார். கம்பர் பெருமானையே கவர்ந்திழுத்த நாட்டுப்புறப் பாடல்
நம்மை ஈர்க்காமல் விட்டுவிடுமா?







..