புனவேழம் மேல்வந்த போது.
சொற்களால் உருவாக்கப்படுவது கவிதை, பாடல், பனுவல் என் அழைக்கப்
படுகிறது. அக்கவிதை சொல்லப்படும் முறையில் ஒரு நயம் அல்லது அழகு
இருத்தல் இன்றியமையாதது. அப்படியிருந்தால் தான் அக்கவிதை படிப்போர்க்கு
இன்பம் நல்கும். கவிதை சொல்லப்படும் முறையில் தென்படும் நயத்தை அல்லது
அழகை 'அணி' எனப் புலவர்கள் கூறுவர். அணிகள் பலப்பல. அவற்றை விவரிக்கும்
நூல்களும் பலப்பல. எடுத்துக்காட்டாக, தண்டியலங்காரம், மாறன் அலங்காரம்
முதலானவை. தண்டியலங்காரம் என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ள 'சுவையணி'
என்பதனைப் பார்ப்போம்.
உள்ளத்தில் தோன்றும் பலவித உணர்வுகளை மெய்ப்பாடு என்னும் பெயரில் பிறருக்குத்
தெரிவிக்கின்றோம். இந்த மெய்ப்பாடு எட்டு வகைப்பட்டவை. வீரம், அச்சம், இழிவு, வியப்பு,
காமம், அவலம், சினம், நகை(சிரிப்பு) ஆகிய எட்டு உணர்வுகளும் மெய்ப்பாடு எனஅழைக்
கப்படும். அச்சம் என்னும் மெய்ப்பாட்டைப் புலப்படுத்தும் ஒரு பாடலைப் பார்ப்போம்.
" கைநெறித்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய்பனிப்ப
மையரிக்கண் நீர்ததும்ப வாய்புலர்ந்தாள்--தையல்
சினவேல் விடலையாற் கையிழந்த செங்கண்
புனவேழம் மேல்வந்த போது".
பொருள்:
மிகுந்த சினங்கொண்ட வீரன் ஒருவன் காட்டுப் பகுதியில் சுற்றி வரும்பொழுது காட்டு
யானை ஒன்றை எதிர்கொண்டான். அந்த யானை சீற்றத்துடன் அவனைத் தாக்க
முயன்ற வேளையில் அவன் தன் கைவசம் இருந்த வேலை அதன் மீது எறிந்தான்.
அவ்வேல் யானையின் தும்பிக்கையைத் துண்டித்துக் கீழே விழுந்தது. வீரன் "இனிமேலும்
இங்கிருத்தல் தகாது" என்று எண்ணித் தப்பித்து ஓடிவிட்டான். தும்பிக்கையிழந்த யானை
மிகுந்த ஆவேசத்துடன் காட்டில் அலைந்து திரிந்தது. அந்த இக்கட்டான நேரத்தில்
சுள்ளி(சிறு விறகு) பொறுக்கவந்த பெண் ஒருத்தி தொலைவில் யானை ஆவேசத்துடன்
வந்துகொண்டிருப்பதைக் கண்டு தன் கைகளை நெரித்துக் கொண்டு, பெருமூச்சு உண்டாக,
கால்கள் தளர்ந்து தள்ளாட, உடலெல்லாம் பதறி நடுங்க, மைதீட்டப்பட்ட செவ்வரி பொருந்திய
கண்களில் கண்ணீர் ததும்ப, வாய் உலர்ந்து போகச் செய்வதறியாது திகைத்து
நின்றிருந்தாள். (பிற்பாடு சுதாரித்து ஓடிப்போய்த் தப்பித்திருப்பாள்; பாடலில் அதுசொல்லப் படவில்லை.)
அருஞ்சொற் பொருள்:
வெய்துயிர்த்தல்=பெருமூச்செறிதல்; பனித்தல்=நடுங்குதல்; செவ்வரி= சிவந்த இரேகை;
புலர்தல்=உலர்தல்; விடலை= வீரன்; புனம்=காடு; வேழம்=யானை.
அச்சம் என்னும் மெய்ப்பாட்டை விவரிக்கும் மற்றொரு பாடல்:
"ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்துவட நாடர்
அருவர் அருவரென அஞ்சி---வெருவந்து
தீத்தீத்தீ யென்(று)அயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்கம் மீதெழுந்த போது".
பொருள்:சோழனுடைய படைவீரர் கலிங்க நாட்டின்(இன்றைய ஒடிசா) மீது படையெடுத்த
போது அவ்வடநாடர் ஒருவர்மேல் ஒருவர் வீழ்ந்து "அருவாளர் வந்துள்ளனர்; (தொண்டை
நாடு முற்காலத்தில் அருவா நாடு, அருவா வடதலை நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த
நாட்டு மக்கள் அருவாளர் எனப்பட்டனர். அவர்கள் கொச்சைத்தமிழ் பேசியமையால்
அப்பகுதி கொடுந்தமிழ் நாடு எனச் சொல்லப்பட்டது. காஞ்சிபுரம் அந்நாட்டின் தலைநகரம்.
தமிழரல்லாத வடவர் எல்லாத் தமிழரையும் அருவாளர் என்றே அழைத்தனர். எனவே
சோழப்படையினரை அருவாளர் என்றே கருதினர்)அருவாளர் வந்துள்ளனர் என்று கூவினர்.
அவர்கள் எரியூட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் "தீத்தீத்தீ" என்று கூக்குரல் இட்டனர். இந்த
இடத்தில் கலிங்கத்துப்பரணி 452ஆம் கண்ணியை நினைவுகூர்தல் தகும்.
"ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்;
உடலின் நிழலினை ஓட அஞ்சினர்;
அருவர் அருவர் எனாஇ றைஞ்சினர்;
அபயம் அபயம் எனாந டுங்கியே."
கலிங்கத்துப் போர்க்களத்தில் சோழப்படையைக் கண்டு நடுங்கிய வடவர்நிலை மிகப்
பரிதாபமாக இருந்தது.
(சென்னி=சோழன்).