தமிழறியும் பெருமாள்.
(பேயொன்று ஔவையாரை அச்சுறுத்த
முயன்று அவரால் நற்கதி அடைந்த கதை)
அளகாபுரி அரசை அளகேசுவரன் என்ற மன்னன் திறம்பட
ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கொரு புதல்வி யிருந்தாள்.
அவள் பெயர் ஏலங்குழலி. பன்னிரண்டு அகவையுடைய
அப்பெண் பேரழகியாக மிளிர்ந்தாள்.அவள் பேரழகு அந்த
நாட்டிலுள்ள மக்கள் யாவரையும் தன்பால் ஈர்த்தது.
ஒருநாள் மாலை நேரத்தில் அரசகுமாரி தன் உப்பரிகையில்
நின்று தேரோடும் வீதியில் நடமாடும் பொதுமக்களை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவ்வீதிவழியே
பாடலிபுரம் இளவரசன் ஒருவன் சரிவரக் கல்வி கற்காத காரணத்தால்
தன் தந்தையிடம் கருத்து வேறுபாடு கொண்டு தன் நாட்டைவிட்டு
நீங்கி அளகாபுரி நாட்டில் சிறிது காலம் கழிக்க எண்ணி நிதானமாக
வலம்வந்து கொண்டிருந்தான். அவன் தோற்றப் பொலிவால் கவரப்பட்ட
ஏலங்குழலி அவன்பால் காதல் கொண்டாள்.
கண்டதும் காதல் என்பது இதுதான் போலும். உடனே தன் விருப்
பத்தை அவனிடம் தெரிவிக்க எண்ணித் தன் காதோலையில் கைநகத்தால்
"அன்பரே! உம்மைக் கண்டவுடன் காதல் கொண்டுவிட்டேன். பக்கத்
திலுள்ள மண்டபத்தில் இரவில் முதல் சாமத்தில் உம்மைச் சந்திக்க
விழைகின்றேன்; தவறாது வருக" என்று எழுதித் தன் கையொப்பம்
இட்டுத் தன் தோழிமூலம் கொடுத்தனுப்பிவிட்டுத் தன் அரண்மனைக்
குள் சென்றுவிட்டாள். தோழியும் அரசகுமாரி கொடுத்தனுப்பிய ஓலை
யை உரிய நபரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டாள்.
ஆனால் என்ன கொடுமை! அந்தக் கட்டழகு இளைஞனுக்கு எழுதப் படிக்
கத் தெரியாது. அந்த இளைஞன் வீதியில் எவரேனும் உள்ளனரா?
என்று சுற்றுமுற்றும் நோக்கினான். வீதியோரத்தில் தொழுநோயாளி
ஒருவர் இருந்ததைக் கண்டு அவரிடம் சென்று "ஐயா! தங்களுக்குப்
படிக்கத் தெரியுமா? தெரிந்தால் இவ்வோலையைப் படித்து அதிலுள்ள
செய்தியைத் தெரிவிக்கவும்" என்றான். அந்த மனிதன் ஒரு கபடக்காரன்.
பேரழகு மிளிரும் அரசகுமாரி பாடலிபுரத்து இளவரசன் மேல் காதல்கொண்டதை
அறிந்து கொண்டான்; தானே அவளை அடைய எண்ணிக் கட்டழகு இளை
ஞனிடம் உண்மையைக் கூறாமல் "உனக்கு ஒரு எச்சரிக்கை வந்துள்ளது.
'உடனே இந்த ஊரைவிட்டு ஓடிப் போய்விடல் வேண்டும். இல்லாவிட்டால்
நீ கொல்லப் படுவாய்' என்று மிரட்டி யாரோ இந்த ஓலையை அனுப்பியுள்
ளனர். நன்றாகச் சிந்தித்துச் செயல்படு" எனச் சொன்னான். அந்தக் கட்டழகு
இளைஞன் தொழுநோயாளி சொன்னதை உண்மையென்று நம்பி ஊரை
விட்டே ஓடிப் போனான். தொழுநோயாளி குளித்துமுடித்து நன்கு அலங்கரித்துக்
கொண்டு அரசகுமாரி குறிப்பிட்ட மண்டபத்தை அடைந்தான். அங்கே
அழகெலாம் ஒருங்கே கொண்ட தேவதை போல நின்று கொண்டிருந்த
அரசகுமாரியைக் கண்டதும் கண்களில் காமம் மிளிர அவளை நெருங்
கினான். தொழுநோயாளியைக் கண்டதும் அரசகுமாரி துணுக்குற்றாள்.
தான் விரும்பிய கட்டழகு இளைஞன் என்னவானான் என விசாரித்தாள்.
அந்தப் படிப்பறிவற்ற இளவரசன் ஏதோ காரணத்தால் ஊரைவிட்டே
ஓடிப் போனதாகத் தெரிவித்துவிட்டுத் தகாத எண்ணத்துடன் அரசகுமாரி
யருகில் வந்தான். அந்தோ பரிதாபம்; அரசகுமாரி அவனைத் தடுக்கப்
பார்த்தாள். அவன் அவள் கைகளைத் தட்டிவிட்டு அவளைத் தன்னருகே
இழுத்தான். நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த அரசகுமாரி தன்
குறு வாளால் தன் வயிற்றில் குத்திக் கொண்டு மாண்டு போனாள்.
அன்றிலிருந்து அவள் ஆவியாய் அந்த மண்டபத்தில் அலைவதாகவும்
மண்டபத்துக்கு இரவில் வருபவர்களைத் துன்புறுத்துவதாகவும் பேச்சு
அடிபட்டது.
ஒருநாள் அந்தி வேளையில் அவ்வூருக்கு வந்த ஔவையார் அந்த மண்டபம்
இரவில் தங்க வசதியான மண்டபம் என்று எண்ணி அதனுள் நுழைந்தார்.
அவ்வழியே வந்த சில வழிப்போக்கர்கள் "அம்மையே! இம்மண்டபத்தில்
பேய் நடமாட்டம் உண்டு. இரவில் யாரையும் இங்கே தங்கவிடாது" என்றனர்.
உடனே ஔவையார் "பேயைப் பேய் துன்புறுத்துமா?" என்று வினவித்
தம்மைப்போல் மனவுறுதி கொண்டவர்களைப் பேயால் துன்புறுத்தல் இயலாதென்றார்.
தாம் கொண்டுவந்திருந்த உணவை உண்டுவிட்டு உண்ட களைப்பால்
உடனே உறங்கத் தொடங்கினார்.
தமிழ்நாடு முழுக்கத் தனியாகவே சுற்றிவந்த அவருக்கு அச்சம் என்பதே
துளியும் கிடையாது. எனவே எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆழ்ந்த
உறக்கத்தில் திளைத்திருந்தார். முதல் சாம நேரம் வந்தது.(ஒரு சாமம்
ஏழரை நாழிகை நேரத்தைக் குறிக்கும். இரவு முழுவதும் நான்கு சாம நேரம்
உண்டு.) ஆழ்துயிலில் இருந்த ஔவையார் தம்மை யாரோ எழுப்பியது
போல உணர்ந்தார். "சரிதான்; பேய் வந்துவிட்டது போலும்" என்று முணுமுணுத்தார்.
அவர் உடனே பாடத் தொடங்கினார்:
"வெண்பா இருகாலிற் கல்லானை, வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப்---பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளென்(று)
எற்றோமற்(று) எற்றோமற்(று) எற்று".
பொருள்:வெண்பாவை இரண்டு முறை படித்தவுடனேயே
கற்க முடியாதவனை, வெள்ளோலையில் எழுத முடியாதவனைப்
பெற்றவள், பிறர் நகைக்கும் வண்ணம் கேலிப் பொருளாகி
விட்டாள். அந்தப் பெண்பாவியைப் போய்த் தாக்கு, அடி, உதை;
என்னைத் தொல்லைசெய்யாதே என்பது பொருளாகும்.
அரசகுமாரியால் காதலிக்கப் பட்டவன் எழுதப் படிக்கத் தெரியா
தவன் என்று கேள்விப் பட்டதனால் அதனைப் பற்றியே எடுத்துச்
சொன்னார். உண்மையை உணர்ந்துகொண்ட பேய் அவ்விடத்தை
விட்டு நீங்கியது.
பேய்க்குணம் மாறுமா? பேய் இரண்டாம் சாம நேரத்திலும் வந்து
அம்மையைத் தொல்லைசெய்தது. அவர் மறுபடியும் பாடினார்.
"கருங்குளவி சூரைத்தூற் றீச்சங் கனிபோல்
வருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை--அரும்பகலே
இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வரே,
எற்றோமற் றெற்றோமற் றெற்று."
பொருள்:
கருங்குளவி சூழ்ந்திருக்கும் இடத்தில் கிடைக்கும் ஈச்சங்கனி
போலச் செல்வம் பயனற்றுப் போகாமல், துன்பப் படுபவர்க்குத்
தரப்படுதல் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராமல் உயிருக்கு
இடையூறு நேர்ந்து அரும்பாடுபட்டுச் சேர்த்த பணம் பங்காளி
களால் கவரப்படும். அத்தகைய கஞ்சத்தனம் மிக்க மக்களைச்சென்று
தாக்குக.
மூன்றாம் சாமநேரம் வந்தது. பேயும் வந்தது. ஔவையாரைத்
தொல்லைசெய்ய அவர் மீண்டும் ஒரு பாடலைப் பாடினார்:
"வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்
தானம் உளதால் தயையுளதால்---ஆனபொழு
தெய்த்தோம் இளைத்தோமென் றேமாந் திருப்போரை
எற்றோமற் றெற்றோமற் றெற்று."
பொருள்:
உலகத்தில் வானம் உள்ளது. வானத்தின் கருணையினால்
தேவையான மழையுள்ளது. மனிதர்களிடம் உழைப்பு(சிரம
தானம்) உள்ளது. பிறர் மேல் அன்பும் இரக்கமும் உள்ளன.
இவ்வளவும் இருக்கும் போது உழைக்காமல் "யாம் களைத்துப்
போய்விட்டோம்" என்றெண்ணிப் பிறரையும் ஏமாற்றித் தாமும்
ஏமாந்திருப்போரைத் தாக்குக, தாக்குக.
நான்காம் சாம நேரம் வந்தது. பேய் அம்மையைத் துன்புறுத்த
எண்ணி அவர் தூக்கத்தைக் கெடுத்தது. விழித்தெழுந்த அவர்
தம்மை எழுப்பியது பேய்தான் என்று உணர்ந்து பாடலானார்:
"எண்ணா யிரத்தாண்டு நீரிற் கிடந்தாலும்
உண்ணீரம் பற்றாக் கிடையேபோல்--பெண்ணாவாய்
பொற்றொடி மாதர் புணர்முலைமேற் சாராரை
எற்றோமற்(று) எற்றோமற்(று) எற்று".
பொருள்: எண்ணாயிரம் ஆண்டுகள் நீருக்குள் கிடந்தா
லும் உள்ளே ஈரம் பற்றாத கிடைப்பூண்டு(தக்கை) போலப் பற்றில்
லாமல் வாழும் பெண்ணாக உருவாகுவாய்.(இதுவரை
பாடிய மூன்று பாடல்களிலும் ஔவையார் பேயைப்
பார்த்துப் பெண்ணே என அழைக்கவில்லை. ஏனென்றால்
உருவமற்ற ஆவிதான் தொல்லைதந்தது. நான்காம் பாட
லில் பேயைப் பெண்ணே என அழைத்துக் "கற்புடைய
மனைவியுடன் வாழாத அறம் பிறழ்ந்தோரையும் பரத்தை
யரிடம் செல்லும் தகாத ஒழுக்கம் பின்பற்றுவோரையும்
தாக்குக, தாக்குக, தாக்குகவே "என்றார். ஔவையார் பெண்ணே
என்று அழைத்தவுடன் இதுவரை உருவமற்ற ஆவியாக வந்த
பேய் பெண்ணுருவில் அம்மைமுன் தோன்றியது. ஔவையார்
அந்தப் பேயிடம் "உன் கதை முழுதும் எனக்குத் தெரியும். நீ யாருக்கு
ஓலை கொடுத்தனுப்பினாயோ அந்த இளவரசன் படிப்பறிவற்ற
காரணத்தால் தொழுநோயாளியிடம் காட்டினான். அதனைப் படித்த
தொழுநோயாளி சதிவேலை புரிந்து இளவரசனை அச்சுறுத்தி ஊரை
விட்டு ஓடச் செய்தான். அண்மையில் அவன் இவ்வூருக்குத் திரும்பிவந்து
நீ தற்கொலை செய்து கொண்டதை யறிந்து மனமுடைந்து தானும்
நஞ்சுண்டு மாண்டு போனான். அவனும் பேயாக இம் மண்டபத்தில்
அலைந்து வருகின்றான்." என்று ஔவையார் உரைத்ததும், ஆண்
பேயும் தன் இயல்பான உருவத்துடன் அம்மைமுன் தோன்றியது.
ஔவையார் அவர்களிடம் " ஏலங்குழலி நீ உறையூரில் மரகதவடிவு
என்ற பெண்ணின் மகளாகத் தோன்றி நல்ல தமிழ்ப்புலமையடைந்து
'தமிழறியும் பெருமாள்' என்ற பெயரில் சிறக்க வாழ்ந்துவருவாய்;
இளவரசனும் அதே ஊரில் ஒரு விறகுதலையன் மகனாகத் தோன்றி
வாழ்ந்து வருவான். உரிய பருவத்தில் நக்கீரர் உன் புலமைச் செருக்கை
அடக்கி இளவரசனுக்கு மணம் முடித்து வைப்பார். நீங்கள் இருவீரும்
எல்லையற்ற இன்பம் அனுபவித்து மகிழ்ச்சியோடு வாழ்வீர்" என்று
வாழ்த்தினார். அவர் வாக்கு பலித்திருக்கும் என்றே தோன்றுகிறது..
ஏனென்றால் ஔவையார் அவ்வூரை விட்டு நீங்கிய பிறகு அந்த
மண்டபத்தில் தங்குபவர்களுக்குப் பேயினால் யாதொரு துன்பமும்
நேரவில்லை.
ஔவையாரின் இந்த நான்கு பாடல்களுக்கு ஆதாரமாக இந்தப்
பேய்க்கதைதான்எல்லாத் தனிப்பாடல் திரட்டு நூல்களிலும்
காணப்படுகிறது. பேய் உள்ளதா? இல்லையா? என்பது பெரிய
விவாதப் பொருள். ஆனால் நம் இலக்கியங்களில் பேய் உண்டு
என்னும் அடிப்படையிலான கவிதைகள் உள்ளன. நம்புவதும்
நம்பாததும் அவரவர் விருப்பம். புறநானூற்றில் பேய்மகள்
இளவெயினியார் பாடியதாகப் பாடல் உள்ளது. பேயுருவத்
.தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ
வைப் பாடியதாகப் பாடல் மூலம் அறிய முடிகிறது. ஒருவேளை
பேய் போல உருவத்தோடு ஒப்பனை ஏதுமின்றி அலைந்தவரைப்
பேயாகத் திரிந்தவர் என்று சொன்னார்களோ, என்னவோ?
நாம் இந்த ஆராய்ச்சிக்குள் செல்ல வேண்டா. பேய் உண்டோ?
இல்லையோ? ஔவையார் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் உடையவர்
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பின்குறிப்பு:
இந்தக்கதை 'தமிழறியும் பெருமாள்' என்ற பெயரிலேயே
1942 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. ஒரு நாழிகை
காலக் கணக்கில் 24 நிமிட நேரத்தைக் குறிக்கும். ஒரு நாளுக்கு
60 நாழிகை என்பது கணக்கு. 8 சாம நேரம் என்றும் கூறலாம்.