புதிர் புகலும் அறநெறி.
விவேக சிந்தாமணி என்றொரு நூல் உள்ளது. நல்ல நீதி
நெறிமுறைகள், வாழ்வியல் நெறிகள், காதல், ஆடவர்
இயல்பு, ஆடவர் கடமைகள், மகளிர் இயல்பு, மகளிர் கடமைகள்,
போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூலாகும். படைக்கப்
பட்ட காலம் இதுவெனக் குறிப்பிட இயலவில்லை. 15 அல்லது
16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் படைக்கப்பட்டிருக்கலாம்.
ஏனெனில் நிறைய வடமொழிக் கலப்பு உள்ளது. இயற்றிய
ஆசிரியரையும் இன்னாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.
சில பாடல்கள் மிக அருமையாக உள்ளன. சில பாடல்கள் சுமாராக
உள்ளன. பாடல் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன.
சில பதிப்புகளில் 135 பாடல்களும் வேறு சிலவற்றில் அந்த எண்ணிக்
கையை விடக் கூடக் குறைய உள்ளன. பெரும்பகுதிப் பாடல்கள்
பஞ்ச தந்திரக் கதைகளைப் போல் உள்ளன. சரி, விவேக சிந்தாமணிப்
பாடல் கூறும் ஒரு புதிர் கலந்த அறநெறியைப் பற்றிப் பார்ப்போம்.
கீழ்வரும் பாடல் மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்குத் தொண்டு
செய்ய அறிவுறுத்துகிறது. புதிர்(விடுகதை) கலந்த பாடல் இது:
"பண்புளருக்(கு) ஓர் பறவை; பாவத்திற்(கு) ஓர் இலக்கம்;
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி---திண்புவியை
ஆள்வார் மதுரை அழகியசொக் கர்க்(கு)அரவம்
நீள்வா கனம்நன் னிலம்".
பண்புளருக்கு ஓர்பறவை---ஈ: ஈதலைக் குறிப்பிடுகிறது.
பாவத்திற்கு ஓர் இலக்கம்--5: அஞ்சுதலைக் குறிக்கிறது.
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி: நாற்காலி நான்கு
கால்களையுடைய விலங்கைக் குறிக்கிறது.
திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்(கு) அரவம்:பாம்பு--பாம்புக்குப்
பணியெனவும் பெயர் உள்ளது.
நீள்வாகனம்: இடபம்(ரிஷபம்)--விடை எனத் தூய தமிழில் சொல்வர்.(மாடு)
நன்னிலம்: நிலம்--செய்(நன்செய்/புன்செய்)
இனி பாடலில் கூறப்படும் செய்தியைப் பார்ப்போம்:
பண்புளருக்கு ஓர் பறவை= பண்புளவர்க்குக் கொடு.
பாவத்திற்கு ஓரிலக்கம் = பாவம் புரிய அஞ்சு.
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி=நல்லவர் அல்லாதாரை விட்டு விலங்கு=நீங்கு.
திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு
அரவம் நீள்வாகனம் நன்னிலம்=
பணி விடை செய்
விளக்கவுரை:
பண்புள்ளவர்க்குக் கொடு; பாவம் புரிய அஞ்சு; நல்லவர் அல்லாதாரை விட்டு
நீங்கு; உலகத்தை ஆளும் மதுரை அழகிய சொக்கர்க்குப் பணிவிடை செய்.
பார்வை:
விவேக சிந்தாமணி, வர்த்தமானன் பதிப்பகம்
உரையெழுதியவர் தேவார உரைமாமணி திரு வ.த.இராமசுப்பிரமணியம், M.A.