Monday 16 December 2019

திரைப்படப் பாடல்களில் தென்படும் இலக்கியச் சாயல்கள்.

திரையிசைப் பாடல்களில் சில இலக்கியக் கூறுகள்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்களில் எனக்குத்
தென்பட்ட சில இலக்கியக் கூறுகளை எடுத்தியம்ப விழைகிறேன்.
இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையன்று. மேலும் கவிஞரின் அனைத்துத்
திரைப் பாடல்களையும் நான் படித்திலேன். நான் படித்த மற்றும்
கேட்டு இரசித்த சிற்சில பாடல்களில் எனக்குத் தென்பட்ட இலக்கியத்
தன்மைகளைத் தெரிவித்துள்ளேன்.

தொன்மைமிகு தமிழ்மொழி  மிகப் பெரிய அளவில் இலக்கிய வளம்
படைத்தது. எத்தனையோ புலவர்கள் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.
அவ்வப்பொழுது தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளனர். எத்தனையோ
விதமான கற்பனைகள், உவமை, உருவகம் ,சொல்லணி,  பொருளணி
நயங்களைக் கையாண்டு இலக்கியம் படைத்துள்ளனர். இவர்களுக்குப் பின்
வரும் அடுத்த தலைமுறையினர் இலக்கியம் படைக்கும் போது முன் தலை
முறையினர் கையாண்ட வழிமுறைகளை ஆங்காங்கே எடுத்தாள்வது மிக
இயல்பானதே. இதைத் தவிர்க்கவே இயலாது. எடுத்துக் காட்டாகக்  கம்பர் தம்
இராமாயணத்தில்  தமக்கு முன்பிருந்த சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்
தக்கதேவரின் கற்பனை, சொல்லாடல்கள், உவமை உருவக நயங்கள் முத
லியவைகளில் சிலவற்றை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார். இதைப் போல
வே கம்பருக்குப் பின்வந்த இலக்கியவாதிகள் கம்பரின் வழிமுறைகளை
எடுத்தாண்டுள்ளனர். இதைப் போலவே கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப்
பாடல்களிலும் முந்திய தலைமுறைப் புலவர்களின் கற்பனைநயம், சொல்நயம்
முதலானவை ஆங்காங்கே தென்படுகின்றன. ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.

தனிப்பாடல் திரட்டு நூலில் இடைக்காலப் புலவர் ஒருவர் பாடிய பாடல் தென்படுகிறது:
"மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
காவுறங்கின இன்னம்என்மகள் கண்ணுறங்கிலள்" என்னும்
வரிகளையும், தாயுமானவர் பாடிய
"மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே" என்னும்
வரிகளும், கம்பர் இயற்றிய
"நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்"
பாடலில் பயின்று வரும் வரிகளும் கவிஞர் கண்ணதாசனின்
"காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது"
என்னும் பாடலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது நன்கு
தெரிகின்றது.(படம்: மாலையிட்ட மங்கை).

மற்றொரு எடுத்துக்காட்டாகக் கம்பர் இயற்றிய கீழ்க்கண்ட
பாடலைப் பார்ப்போம்:
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ண லேநின்
கைவண்ணம்  அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன் ".
விசுவாமித்திரர் இராமனைப் புகழ்ந்து கூறியவை: "தாடகைக்கு எதி
ரான போரில் இராமா! உன் கைவண்ணத்தைக் கண்டேன். தற்பொழுது
உன் பாதம் பட்டவுடன் கல்லாக உருமாறியிருந்த அகலிகை மீண்டும்
பெண்ணுருவம் அடைந்ததன் வாயிலாக உன் கால்வண்ணத்தைக்
கண்டேன்" என்றார். இப்பாடலில் 'வண்ணம்' என்ற சொல் எட்டுமுறை
பயின்றுவந்துள்ளது. இந்தப் பாடலின் சாயல் கண்ணதாசனின் பாசம்
என்ற திரைப் படத்தில் வரும் கீழ்க்கண்ட பாட்டில் தென்படுகிறது:
"பால்வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு
மால்வண்ணம் நான்கண்டு வாடுகிறேன் " எனக் கதாநாயகன்
பாடக் கதாநாயகி பதிலிறுக்கும் விதமாகக் கீழ்க்கண்டவாறு
பாடுகிறாள்.
"கண்வண்ணம் அங்கே கண்டேன்; கைவண்ணம் இங்கே கண்டேன்;
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்". இந்தப் பாடலில்
இன்னும் பல வரிகள் உள்ளன. மொத்தமாகப் பன்னிரண்டு முறை
வண்ணம் என்ற சொல் பயின்றுவந்துள்ளது.

இனி, வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப் போனான்--பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து".
தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.
பெண் ஒருத்தியின் கூற்று:
மாத்தத்தன் சோழநாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசன்.
அவன் தன் பகுதியிலுள்ள தெருக்களில் உலா வரும்போது
அவன் சிறப்பையறிந்த மக்கள் அவனை வாழ்த்தி வரவேற்
கின்றனர். அக் கூட்டத்திலேயுள்ள கன்னிப் பெண்கள் அவன்
பால் மனத்தைப் பறிகொடுத்துக்  கைவளையல்களை நெகிழ
விட்டனர். இது மன்னர்களையும் சிற்றரசர்களையும் அகப்
பொருள் துறையில் புகழ்ந்து பாடுவதற்காக உலா என்னும்
சிற்றிலக்கியம் படைக்கப் புலவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை.
வழக்கம் போலக் கம்பனைப் பெரிதும் பின்பற்றும் கவிஞர்
கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
"சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு"
என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு
இயற்றியுள்ளார்.

இனி, அனைவரும் நன்கு அறிந்த பட்டினத்தார் பாடல்:
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத் தழும்மைந் தரும்சுடு காடுமட்டே;
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே".
இந்தப் பாடலின் சாயல் பாத காணிக்கை என்னும்
படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
"வீடுவரை உறவு; வீதிவரை மனைவி;
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?"
என்ற திரைப் பாடலில் தென்படுகின்றது.

புறநானூற்றையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை.
"அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே".
பாரிமகளிர் பாடிய இப்பாட்டில் "கடந்த திங்களில்
வெண்ணிலவு காய்ந்த பொழுது எம் தந்தை எம்
முடன் இருந்தார். எங்கள் குன்றும்(பறம்பு மலை)
எம்வசம் இருந்தது. இந்த மாதத்தில் வெண்ணிலவு
காயும் பொழுது எம் தந்தை எம்முடன் இலர்(மூவேந்
தர்களால் கொல்லப்பட்டார்). எம் குன்றும் எம்வசம்
இல்லை(எம் குன்றைக் கைப்பற்றிக் கொண்டனர்).
இப் பாடலிலுள்ள வரிகளின் சாயல் நாடோடி படத்தில்
கவிஞர் இயற்றிய
"அன்றொருநாள் அதே நிலவில் அவர்இருந்தார் என்
அருகே; நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை;
நீ அறிவாயே வெண்ணிலவே" என்றதிரையிசைப்
பாடலில்  தென்படுகின்றது.

இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல்
மிகப் புகழ்பெற்றது:
"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான்  கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான்  ஐயோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான்  பண்ணி  னானே."
இந்தப் பாடலால் கவரப்பட்ட கவிஞர் கண்ணதாசன்
பாவமன்னிப்பு என்ற படத்தில் " அத்தான், என்னத்தான்,
அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி" என்ற
திரைப்படப் பாடலை இயற்றினார்.

இனி, திருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல்
எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்".(குறள்:1094). இப்பாடலின்
கருத்தை வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்
அவர் இயற்றிய "நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
உன்னைநான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே;
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே."
என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப்
பட்டிருக்கும்.

இன்னும் ஆராய்ந்தால் பாடல்கள் கிடைக்கும். ஏன்
என்றால் நம் இலக்கியம் மிக  மிகச் செழுமையானது.
திரையிசைப் பாடல்  இயற்றும் கவிஞர்கள் அனைவருமே
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். கவிஞர் கண்ண
தாசன் தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்தவர்.. அதிலும்
குறிப்பாகக் கம்பர் மீது மிகுந்த  ஈடுபாடுடையவர். எனவே
திரையிசைப் பாடல்களில் இலக்கியக் கூறுகள்தென்
படுவதில் வியப்பேதும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு
மேலான இலக்கியத் தொன்மை கொண்ட நம் மொழியில் கூறப்
படாத கருத்தோ கற்பனையோ இல்லை. அதனால் எவர் கவிதை
படைத்தாலும் முந்திய இலக்கியக் கூறுபாடுகள் தென்படுவதில்
தவறேதும் இல்லை. எந்தக் கவிஞரையும் குறை சொல்லவே
இயலாது.









Sunday 8 December 2019

கரும்புக்கு வேம்பிலே கண்.

கரும்புக்கு வேம்பிலே கண்.

ஏகம்பவாணன் என்பவன் இடைக்காலத்திலே தமிழ்நாட்டில்
விளங்கிய வாணர்குலத் தலைவர்களுள் ஒருவன். வாணர்கள்
அக்காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் இருந்திருக்
கின்றனர். தென்பெண்ணை யாற்றங் கரையில் திருக்கோவ
லூர் நாட்டிலுள்ள ஆற்றூரில் இந்த ஏகம்பவாணன் சிறப்புற்
றிருந்தான். இதே காலத்தில் பாண்டிய நாட்டில் சிறீவல்லப
மாறன் ஆட்சிபுரிந்து வந்தான். இவர்கள் காலம் 15ஆம் நூற்றாண்
டின் பிற்பகுதிக் காலமாகும். ஆற்றூர் ஆறையெனவும் அழைக்கப
படும்.

முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் செல்வாக்கு
இழந்து குறுநில மன்னர்களாக வாழ்ந்த காலக்கட்டம். இவர்களைக்
காட்டிலும் ஏகம்பவாணன்  செல்வாக்கோடு திகழ்ந்தான். ஓருமுறை
ஏகம்பவாணன் கழனிகளைப் பார்க்கச் சென்றிருந்த பொழுது சேர,
சோழ, பாண்டிய அரசர்களும் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது
பேச்சுவாக்கில் ஏகம்பவாணனை இழிவாகப் பேசிவிட்டனர். இதனால்
சினமடைந்த ஏகம்பவாணன் தன்னிடமிருக்கும் பூதத்தை ஏவி மூவரை
யும் சிறைப்பிடிக்க ஆணையிட்டான்.(தமிழ் நாவலர் சரிதையில் பூதம்
என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. நம்பத் தயங்குபவர்கள் முரட்டு
அடியாள் என்று பொருள்கொள்க.) பூதம் சேரனையும், சோழனையும்
சிறைப்பிடித்தது. பாண்டியன் வேப்பம்பூ மாலை அணிந்திருந்த கார
ணத்தால் அவனை நெருங்க அஞ்சிப் பின்வாங்கிவிட்டது.

இதனையறிந்த ஏகம்பவாணன் பாண்டியனின் வேப்பம்பூ மாலை
யைப் பறித்துவிட்டால் அவனையும் சிறைப்படுத்தி விடலாம் என்று
நினைத்து நான்கு தாதியரை(அழகான பணிப் பெண்டிர்) பாண்டிய
னிடம் அனுப்பிவைத்து வேப்பம்பூ மாலையை எப்பாடுபட்டாவது
பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்கள் பாண்டியனைச் சந்தித்து
வேப்பம்பூ மாலையைப் பரிசாகத் தருமாறு கோரிப் பாடல்களைப்
பாட ஆரம்பித்தார்கள். முதலாவது தாதி கீழ்க்கண்ட பாடலைப்
பாடினாள்:
"தென்னவா! மீனவா! சீவலமா றா!மதுரை
மன்னவா!  பாண்டி வரராமா!--முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா!
கரும்புக்கு வேம்பிலே கண்."
சுரும்பு= வண்டு; வண்டு உண்பதற்கு மாலையளித்த (மாலையி
லுள்ள பூக்களில் நிறைந்திருக்கும் தேனையுண்ண) மன்னவா!
கரும்பு போன்ற இனிமையான இப்பெண்ணுக்கு(எனக்கு=தாதிக்கு)
உன் வேப்பம்பூ மாலை மீது கண்ணாக வுள்ளது. ஆகவே, அதனைப்
பரிசாகத்தா என்று பாடினாள். தன் இனத்துக்குரிய அடையாள மாலை
யைக் கொடுக்க மனமில்லாத பாண்டியன் வேறு சில பரிசுகளை ஈந்தான்.

தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறாததால் இரண்டாவது தாதி பாடத்
தொடங்கினாள்:
"மாப்பைந்தார்க் கல்ல, முத்து  வண்ணத்தார்க்  கல்ல, வஞ்சி
வேப்பந்தார்க்  காசைகொண்டு  விட்டாளே---பூப்பைந்தார்
சேர்ந்திருக்கும் நெல்வேலிச் சீவலமா  றா!தமிழை
ஆய்ந்திருக்கும் வீரமா றா!"
இந்த வஞ்சிக் கொடிபோன்றபெண்(நான்) முத்துமாலை மீதோ வேறு
மரகத மாலை மீதோ ஆசை கொள்ளவில்லை. திருநேல்வேலிப் பதியை
ஆளும் சிறீவல்லப மாறா! சங்கம் வைத்துத் தமிழை ஆய்ந்து வளர்த்த,
வீரத்திலும் குறைவில்லாத மாறனே! நீயணிந்திருக்கும் வேப்பமாலைக்கு
ஆசைகொண்டுளேன் என்று பாட இதற்கும் பாண்டியன் மசியவில்லை.

உடனே மூன்றாமவள் பாட ஆரம்பித்தாள்:
"வேம்பா கிலுமினிய சொல்லிக்கு நீமிலைந்த
வேம்பா கிலுமுதவ வேண்டாவோ?--தேம்பாயும்
வேலையிலே  வேலைவைத்த  மீனவா! நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாள் மான்."
கரும்பைச் சாறு பிழிந்து அடுப்பில் பாகாகக் காய்ச்சும் பொழுது இனிய
நறுமணம் கமழும். அத்தகைய சூடான பாகைவிட இனிமையான சொற்களைப்
பேசுபவளுக்கு நீயணிந்த வேம்பாகிலும் பரிசாகத் தர வேண்டாவா? கடலில்
வேலைவைத்த மீனக் கொடியுடைய அரசனே!(சிவபெருமான் கடலிலே நிகழ்த்
திய திருவிளையாடலை மதுரைப் பாண்டியனுக்கு ஏற்றிச் சொல்லிப் புகழ்தல்)
தேன்சொரியும் உன் வேப்பம்பூ மாலையிலே இந்த மான்போன்ற பெண் மயக்
கம் வைத்துவிட்டாள். அதனால் அதைப் பரிசாகத் தந்து இவள் மயக்கத்தைத்
தெளிவிப்பாய் என்று பாடினாள். இதற்கும் பாண்டியன் மனமிளகவில்லை.

உடனே நாலாமவள் பாண்டியனின் தன்மானத்தைச் சீண்டுவதுபோல் பாடல்
பாடி மாலையைப் பறிக்கத் திட்டமிட்டுப் பாடத் தொடங்கினாள்:
"இலகு   புகழாறை. ஏகம்ப  வாணன்
அலகை  வரும்வரும்என்  றஞ்சி--உலகறிய
வானவர்கோன்  சென்னியின்மேல் வண்ண  வளையெறிந்த
மீனவர்கோன்  கைவிடான்  வேம்பு".
அய்யகோ, பரிதாபம்;  ஆற்றூர்(ஆறை) எனும் ஊர்க்குரியவனான ஏகம்ப
வாணனின் பூதத்துக்கு(அலகை) அஞ்சி இந்திரன் முடிமேல் வளையெறிந்த
வீரம்செறிந்த பாண்டிய வழியில் வந்த இவன் வேப்பம்பூ மாலையைக் கை
விடத் தயங்குகிறான். பூதத்துக்கு அஞ்சாவிட்டால் இவன் வேப்பம்பூ
மாலையை இந்நேரம் பரிசாகத் தந்திருப்பானே எனப் பாடிச் சீண்டினாள்.
இவ்வாறு பாண்டியனின் வீரத்தைப் பழித்துப் பாடியவுடன் பாண்டியன்
வெகுசினத்துடன் வேப்பம்பூ மாலையைக் கழற்றித் தாதியிடம்
பரிசளித்தான். வேப்பமாலை நீங்கியதை யறிந்த பூதம் பாண்டியனைச்
சிறைசெய்தது. ஏகம்பவாணன் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டான்.

இந்தக் கதையை நம்புகிறோமோ இல்லையோ இந்தப் பாடல்களில் மிளி
ரும் இலக்கியச் சுவையைப் புறந்தள்ள இயலாது.



சோற்றுக்கு அரிசிதரச் சொன்னால் களிக்கு மாவைத் தந்தான்.

ஏகம்பவாணன் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில
மன்னன். அவன் காலக்கட்டத்தில் முடியுடை மூவேந்தர்களும்
குறுநில மன்னர்களாகவே வாழும்படி நேர்ந்துவிட்டது. அடுத்
தடுத்து நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகளால் தமிழகத்தைக்
காலம் காலமாக ஆண்டவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஏகம்பவாணன் சிறந்த ஆட்சியாளன் மட்டுமன்று; உயர்ந்த வள்ள
லும் கூட. அவனை நாடிப் புலவர்கள், பாணர்கள் முதலிய கலை
ஞர்கள் அடிக்கடி வருவதும், தத்தம் திறமைக்கு ஏற்பப் பரிசில்
பெற்றுச் செல்வதும் வழக்கம்.

ஒருமுறை வறுமையில் வாடிய புலவர் ஒருவர் அவனைச் சந்தித்
துப் பாடல்களைப் பாடி அவனை மகிழ்வித்தார். புலவரின் திறமை
யைக் கண்டு கழிபேருவகையடைந்த ஏகம்பவாணன் புலவருக்குத்
தக்க பரிசளித்து மரியாதை செய்தான். என்ன பரிசளித்தான் என்று
அவரது பாடல் வாயிலாகக் காண்போம்:
சேற்றுக் கமலவயல் தென்னாறை  வாணனையான்
சோற்றுக்(கு) அரிசிதரச் சொன்னக்கால்----வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான்; கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா(று) எவ்வா(று) அவன்?.
பொருள்:
வறுமையில் வாடும் யான் சோறுபொங்க அரிசி தருமாறு கேட்டேன்;
ஆனால் வாணனோ களிக்கிண்ட மாவைத் தந்தான். அரிசிக்குப்
பதிலாகக் களிமாவைத் தருபவன் கற்றவர்க்குப் பரிசாகச் செம்பொன்
அள்ளித் தருதல் எவ்வாறு இயலும?  இவ்வாறு வாணனைப் பழிப்பது
 போலப் புகழ்ந்து பாடியுள்ளமை புலவரின் கவித்திறனை
வெளிப்படுத்துகின்றது. களி என்னும் சொல் களி என்ற உணவை
யும், செருக்கு, மதம் போன்ற உணர்ச்சிகளையும் குறிக்கும். அது
போலவே, மா என்ற சொல்லும் உணவைச் சமைக்கப் பயன்படும்
மாவையும்  யானையையும் குறிக்கும். இவ்வாறாகப் புலவர் பாடலில்
பயின்றுவந்த "களிக்கு மா" என்ற சொல் செருக்கு மிகுந்த யானை
என்ற பொருளைத் தரும். ஏற்கெனவே வறுமையில் உழல்பவருக்கு
யானையைப் பரிசாகத் தருவது நியாயமா? என்று கேட்கத் தோன்றும்
யானையை மட்டுமன்றி அதனைக் கட்டித் தீனிபோடுவதற்குத்  தேவை
யான பொருளையும் சேர்த்துக் கொடுப்பது வழக்கம். சங்க காலத்தில்
இருந்தே புலவர்களும் பாணர்களும் யானைப்  பரிசில் பெற்றுச் செல்
வது வழக்கமான நடைமுறைதான்.

இதே ஏகம்பவாணன் தொடர்பூடைய மற்றொரு பாடலைப் பார்ப்போம்.
அரண்மனையில் பணிபுரிந்துவந்த தாதி ஒருத்தி பிழை செய்தனள்.
ஏகம்பவாணன். அவள்மீது கடுங்கோபங் கொண்டு ஏனைய  பிற தாதி
யரிடம் ' கைவிலங்கு கொண்டு வருக' என்று கட்டளையிட்டான். தவறு
செய்த தாதி என்னாகுமோ, ஏதாகுமோ என்று அஞ்சி நடுங்கினாள்.
அவள் மேனி நடுங்கியது; அச்சத்தில் வியர்த்துக் கொட்டியது. தன் நடுக்
கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாணனை நோக்கிப் பேசலானாள்.
"ஐயா, விலங்கைக் கொண்டு வருமாறு பணித்துள்ளீர்;  சேர, சோழ, பாண்
டிய மன்னர்களில் யாருக்காக விலங்கைக் கொண்டுவரச் சொன்னீர்?
யாருக்கு விலங்கை மாட்ட எண்ணியுள்ளீர்? இவாவாறு பேசியதன் மூலம்
தான் செய்த பிழையை மன்னித்துவிடுமாறும், தனக்கு விலங்கு மாட்டத்
தேவையில்லையென்றும் மறைமுகமாகக் கோரிக்கை வைத்தனள். அவளின்
திறமையான பேச்சை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவளுக்கிருக்கும்
தமிழ்ப் புலமையைக் கொண்டு அவள்  சொல்லிய  நயமிக்க பாடலைக்
கீழே பார்ப்போம்:
அலங்கல் மணிமார்பன், ஆறையர்கோன்  வாணன்
விலங்கு கொடுவருக வென்றான்---இலங்கிழையீர்!
சேரற்கோ, சோழற்கோ  தென்பாண்டி நாடாளும்
வீரற்கோ  யார்க்கோ விலங்கு.
ஆறை=ஆற்றூர்; சேரற்கோ, சோழற்கோ, வீரற்கோ--சேரனுக்கோ,
சோழனுக்கோ, வீரனுக்கோ.