Wednesday 28 November 2018

தமிழகத்தில் 'கஜா'ப்புயலின் பேயாட்டம்

தமிழகத்தில் 'கஜா'ப் புயலின் பேயாட்டம்

ஆண்டவா!  அந்த  நாளில்
    அரும்பெரும்  குமரிக்  கண்டம்,
நீண்டநற்  புகழ்சேர்  செல்வப்
    பூம்புகார்ப்  பதியாம்,  மேலும்
பாண்டிய  நாட்டோர்  போற்றும்
    பதிதனுஷ்  கோடி  யெல்லாம்
மீண்டிடா  வகையில்  முந்நீர்
   விழுங்கிடச்  செய்தாய்; ஐயோ!

ஈண்டிது  நல்ல  தாமோ?
  இத்தகு  கொடுமை,  துன்பம்
வேண்டவே  வேண்டா;  தேவா!
  மேற்கொண்டு  தாள  மாட்டோம்;
ஆண்டுதோ  றும்இக்  காலம்
  அடைமழை  பெய்த  போதும்
சீண்டிய  தில்லை;  இன்று
  சிதைத்ததே  சூறைக்  காற்று.

ஆழ்கடல்  சூழும்  இந்த
  அவனியை  ஆளும்  அப்பா!
ஏழ்மைசேர்  எங்கள்  நாட்டுக்(கு)
   ஏற்பட்ட  பெருத்த  சேதம்
ஊழ்வினை  கொணர்ந்த  தா?உன்
   உறுசினம்  கொணர்ந்த  தா?சொல்;
பாழ்வெளி  யாயிற்(று)  ஐயா!
  பசுமைசேர்  டெல்டா  வெல்லாம்.

ஒப்பிலா  இறைவ!  உன்றன்
  உறுசினத்  தாலே  இங்கே
இப்பெரும்  சேதம்  வந்தால்
  இழைத்திட்ட  பிழைதான்  என்ன?
செப்பரும்  வளம்சேர்  டெல்டா
  சீரழி(வு)  அடைந்த  காட்சி
எப்பெரும்  கல்நெஞ்  சையும்
  இளகிடச்  செய்யும்; உண்மை.

பிள்ளைபோல்  வளர்த்த  தென்னை
  பெரும்எண்ணிக்  கையில்  வீழ
உள்ளமே  நொந்த(து)  ஐயா!
  உடன்பிற  மரமும்  வீழ்ந்து
சள்ளையைத்  தந்த(து)  அப்பா!
  தங்கிடும் குடிலும்  வீடும்
பள்ளிகள் தாமும் காற்றில்
  பறந்துபோய்  வீழக்  கண்டோம்.

கானடை(கால்நடை)  உயிர்கள் எல்லாம்
  காற்றினால்  அலைக்கப்  பட்டு
வானுல(கு)  அடையக்  கண்டு
  வருத்தமே  எய்தி  னோமே;
மீனவர்  பட(கு)இ  ழந்தார்;
  வீதியில்  மின்கம்  பங்கள்
கூனலாய்  வளைந்து  சாய்ந்து
  கும்மிருள்  சூழ்ந்த  தம்மா!

காவிரி  பாய்ந்த  டெல்டா
  கலக்கமுற்(று)  அழுது  நிற்கும்;
பூவிரி  பசுமைச்  சோலை
  பொட்டலாய்  மாறித்  தோன்றும்;
ஆவியை  நிகர்த்த  தென்னை
  ஆடு,மா(டு)  எல்லாம்  மாய்ந்து
பேய்விளை  யாடும்  பூமி
  பிறந்த(து)என்  றெண்ணத்  தோன்றும்.

இத்தனை  சேதம்  கண்டும்
  இறைவ!நீ  இரங்கா  விட்டால்
பித்தரைப்  போலே  நாங்கள்
  பிதற்றுதல்  இயல்பு  தானே.
செத்தவர்  குடும்பத்  திற்கும்
  செத்துக்கொண்(டு)  இருப்போ  ருக்கும்
மெத்தநல்  இழப்பீ  டைத்தான்
  மேன்மையாய்  நல்கச்  செய்வாய்.

மத்திய  அரசே!  உங்கள்
  மனத்தினுக்(கு)  இசைந்த  வாறே
ஒத்ததாம்  கருத்துக்  கொண்ட
 ஒண்தமிழ்  அரசைச்  சேர்த்தே
உத்தம  மாகச்  சிந்தித்(து)
  உடனடி  நிதியைத் தாரீர்!
எத்தனை  தடைவந்  தாலும்
  இப்பெரும்  துன்பம்  தீர்ப்பீர்.

ஆட்சிசெய்  வோரை  மட்டும்
   அண்டியே  இருத்தல்  வேண்டா;
மாட்சிமை  தாங்கும்  வள்ளல்,
    மற்றுளார், யாவ  ரும்மிவ்
மீட்சிசெய்  பணியில் பங்கு
    மேற்கொண்டு  டெல்டா  காப்பீர்.
காட்சிகள்  மாறும்  வண்ணம்
     காரியம்  ஆற்று  வீரே!

நடுவண  அரசே!  நாங்கள்
  நாடிய  நிதியை  நல்கி
கொடும்'கஜா'ப்  புயலால்  நேர்ந்த
  குறையெலாம்  உடனே தீர்ப்பீர்;
படுமந்த  மாக  நீவிர்
  பணம்தரத்  தாம  தித்தால்
ஒடுங்கிய  மக்கள்  தாமே
   உயிரற்ற  பிணமாய்  ஆவர்.

உலகெலாம்  வாழும்  எங்கள்
  ஒண்தமிழ்  மக்காள்!  நீவிர்
தொலைவினில்  வாழு  கின்றீர்;
  சோழநன்  னாடு  வீழத்,
தலைவிதி  என்று  நொந்து
  சாம்பிட  வேண்டா; இந்த
நிலைதனை  மாற்ற  ஏலும்
  நிதியினை  நல்கு  வீரே!

தண்தமிழ்  நாட்டில்  வாழும்
  சால்புடை  மக்காள்  நீவிர்
பண்டைய  சிறப்பை  டெல்டா
  பகுதியில்  காக்க  வேண்டித்
தொண்டுகள்  செய்தும்  உம்மால்
  இயன்றிடும்  நிதியைத்  தந்தும்
அண்டைமா  நிலத்தார்  போற்ற
  அனைத்தையும்  மீட்க  வாரீர்!

அருஞ்சொற் பொருள்:
முந்நீர்---கடல்;   அவனி---உலகம்
சள்ளை---துன்பம்;  மாட்சிமை---பெருமை
சாம்புதல்--வருந்துதல்;  சால்பு---மேன்மை




Sunday 25 November 2018

சங்க காலத் தமிழ்ச் சான்றோர் கபிலர்.

சங்க  காலப்  புலவர் கபிலர்

கபிலரின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பக்
காலமாகும். இவர் தன்னை அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்
என்று கூறுகிறார். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என
மாறோக்கத்து நப்பசலையார் என்னும் சமகாலப் புலவர்
தெரிவிக்கிறார். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சங்கப்
பாடல்கள் 2381.  இதில் பத்தில் ஒருபங்குப் பாடல்கள் கபிலர்
பாடியவைதாம். சங்க இலக்கியங்களில் அதிகப் பாடல்கள்
பாடியவர் கபிலர்.  இவர் பாடல்களிலேயே மிகச் சிறப்பானது
பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும்.  இதில் குறிஞ்சி
நிலத்தில்  பூத்துக் கிடந்த 99 பூக்களைப் பற்றியும் 12 ஆண்டுக்கு
ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவைப் பற்றியும் கூறியுளார்.
கபிலர் பாடிய மொத்தப் பாடல்கள் 235.  அவற்றைப் பற்றிக்
கீழே  காண்போம்:
புறப்பொருள் பற்றியவை:
புறநானூறு --- 28                 
பதிற்றுப்பத்து10                 
மொத்தம்.         38

அகப்போருள் பற்றியவை:
அகநானூறு----18
குறுந்தொகை 29
நற்றிணை        20
கலித்தொகை  29
ஐங்குறுநூறு   100
குறிஞ்சிப்பாட்டு 1
மொத்தம்           197       
                                           
                                             
                                         
                                                 
ஆக மொத்தமாக 235 பாடல்கள் கபிலர் பாடியுளார்.
பெயர் தெரிந்த சங்கப் புலவர்கள் 475 பேரில் கபிலர்
அதிகப் பாடல்கள் பாடியவராக முன்னிற்கிறார்.

கபிலரால் பாடப்பட்ட பெருமக்கள்:
அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன்,
சேரமான் மாந்தரஞ்  சேரல்  இரும்பொறை, ஓரி, நள்ளி,
மலையமான்  திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன்,
வையாவிக் கோப்பெரும் பேகன், வேள்பாரி. இவர்களில்
செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப் பத்தில்
புகழ்ந்து பாடி நூறாயிரம் காணமும், நன்றா என்னும்
மலையில் நின்று கண்ணுக்கெட்டிய நிலத்தையும் பரிசு
ஆகப் பெற்றார். வேள் பாரியுடன் மிகமிக நெருக்கமான
நட்புப் பாராட்டியவர். புறநானூற்றில் உள்ள இவர்தம்
பாடல்கள் 28இல் பெரும்பான்மையான பாடல்கள் பாரி
யைப் பற்றிப் பாடியவைதாம். கபிலர் குறிஞ்சித்திணை
பற்றிப் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.

குறிஞ்சிப் பாட்டு:
சங்க காலத்தில் நிலவிய களவு ஒழுக்கம் பற்றி ஆரிய
அரசன் பிரகத்தன் என்பவனுக்குச் சரியான புரிதல்
இல்லாமையால் களவு ஒழுக்க நெறியைக் குறை
கூறினன்.  அவனுக்கு விளக்கும் பொருட்டு இந்தப்
பாட்டைக் கபிலர் இயற்றி இந்நூலில் களவு ஒழுக்கம்
வெகு விரைவில் கற்பொழுக்கமாக மாறும் என்றும்
இதற்கிடையே காதலர்க்குள் இயற்கைப் புணர்ச்சி
நிகழ்ந்தாலும் நெறி முறைகளுக்கு உட்பட்டே நடக்
கும் என்றும் தெளிவித்தார். களவு ஒழுக்கம் வடக்கே
நிலவிய காந்தர்வ மணத்துக்குச் சமம் என்பதைச்
சுட்டி விளக்கினார். இந்தக் குறிஞ்சிப் பாட்டில் தலைவி
தன் தோழிமாருடன் கூடித் தொண்ணூற்றொன்பது
வகையான பூக்களைச் சேகரித்து அவற்றை மழை
பொழிந்து கழுவிய பாறைமீது குவித்து விளையாடிய
தாகச்சொல்லப்பட்டுள்ளது..  99 வகைப் பூக்களின்
பெயர்களும் அழகுறத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காதலர் தாமே கூடிப் பின் மணந்து கொள்ளும் தமிழ்
நெறியைக் குறைத்துப் பேசிய ஆரிய அரசனுக்குத்தமிழ்
நெறி மிகவும் சிறந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக
உணர்த்தவே இந்தப் பாட்டு இயற்றப்பட்டது.  களவு
ஒழுக்கத்தை எவ்வளவு விரைவில் கற்பு ஒழுக்கமாக
மாற்றமுடியும் என்பதில் தோழி, தாய்மார்(பெற்ற தாய்
மற்றும் செவிலித் தாய்) தீவிரமாகச் சிந்திப்பார்கள்.
இல்லாவிட்டால் ஊரார் அலர்(பழிச்சொல்) தூற்றத்
தொடங்கிடுவர். அதனால் தோழி தலைவியைச் சந்திக்க
வரும் தலைவனிடம் வரைவு கடாதல் பற்றி வலியுறுத்து
வாள். வரைவு கடாதல் என்பது திருமணம் பேசி முடிப்பது.
இப்பாட்டில் 99 வகைப் பூக்களின் பெயர்களைத் தெரிவித்
துக் கபிலர் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.  இதனால் தான்
குறிஞ்சிப் பாட்டு மிகமிகச் சிறப்புப் பெற்றது. மற்றபடி
ஏனைய அகத்திணைப் பாடல்களைப் போலவே தலைவன்,
தலைவி செயல்பாடுகளை விவரித்துச் சொல்லும்.

பதிற்றுப் பத்தில் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும்
சேர வேந்தனைப்  பாடிப் பரிசு வென்றார். ஒருமுறை சேர
வேந்தன் கபிலரின் கை மென்மையாக உள்ளதைச் சுட்டி
வியந்தனன். உடனே கபிலர் "போர்க்களத்தில்யானையை
முன்னே செலுத்திப் பின்னர் தோட்டி(அங்குசத்தால்) யால்
அதனை நிறுத்தி வைப்பதும், குதிரையைச் செலுத்தி  அது
அகழியில் விழுந்துவிடாமல் அதன் சேணத்தை யிழுத்து
நிறுத்தி வைப்பதும், வில்லின் நாணை இழுத்துப் பகைவர்
மேல் அம்பு தொடுப்பதும், புலவர், பாணர், விறலியர்
முதலானோர்க்குப் பரிசு வழங்குவதும் ஆகிய செயல்களைச்
செய்வதனால் உமது  கை கரடு முரடாக வன்மையாக
உள்ளது; புலவனாகிய நான் ஊன்துவை கறிச்சோறுண்டு
வேறு யாதொரு பணியும் செய்யாமல் இருத்தலால் எமது
கை மென்மையாகவுள்ளது" என்று விடையிறுத்தார்.
"வலிய ஆகும்நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ; ஊன்துவை
கறிச்சோ றுண்டு வருந்துதொழில்  அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும தாமே! நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய்நின் பாடுநர் கையே!"
புறம்:14.

வேள்பாரியுடன் கபிலர் கொண்டிருந்த நட்பு மிகமிக
நெருக்கமானது.  புறநானூற்றில் 105ஆம் பாடல்
முதல் 120 ஆம் பாடல் முடிய 16 பாடல்கள் பாரியைப்
பற்றியும் அவனது பறம்பு பலையைப் பற்றியும்
பாடியுள்ளார்.
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே".(புறம்:107)
செந்நாப் புலவர் பாரி பாரி என்று ஒருவனையே
புகழ்கின்றனர்.  வழங்குவது பாரி மட்டும் தானா?
உலகம் காப்பதற்கு மாரி(மழை)யும் இங்கே உள்ளது
அல்லவா? இதுபோலப் பாரியின் கொடைத்தன்மை
பற்றியும் அவனது பறம்பு மலையின் வளம்பற்றி
யும் புகழ்ந்து பாடியுள்ளார். பாரியின் வீரத்தையும்
அவன் படைவீரர்களின் நெஞ்சுறுதியையும்
விசுவாசத்தையும் பாராட்டியுள்ளார். மூவேந்தராலும்
போரிட்டு வெல்ல முடியாது. இரவலர் போலவந்து
இரந்து கேட்டால் பறம்பு மலையை அடையலாம்
என்றெல்லாம் புகழ்ந்துரைத்தார்.

ஆனால் மூவேந்தர்கள் அவனை வெல்லச் சமயம்
பார்த்திருந்தனர். ஏற்கெனவே பாரி தன் மகளிரை
மகட்கொடை(பெண்கொடுக்க மறுப்பது) மறுத்த
அவமானத்தால் நொந்திருந்த மூவேந்தர்கள் சதி
வேலை புரிந்து பாரியைக் கொன்றுவிட்டனர்.
புறம் 113:
"பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும்; வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே."
ஐயகோ!இப்பொழுது பாரி இறந்து விட்டான்.
அவன் பெண்மக்களுக்கு உரிய கணவரைத்
தேடி நான் எங்கோ செல்கின்றேன். பெருமை
பெற்ற பறம்பு மலையே! கலங்கிச் செயல்
இழந்தவனாகக் கண்ணீர் மல்க உன்னைத்
தொழுது வாழ்த்திச் செல்கின்றேன்.

பறம்பில் வாழ்ந்த மக்களும் பாரியின் மறைவுக்
குப்பின் வெளியேறிவிட்டனர்.  பாரியின் பெண்
மக்களோடு கபிலர் விச்சிக்கோன் என்ற மன்னன்
ஊருக்குச் சென்று அவனிடம் பாரி மகளிரை
மணம் செய்துகொள்ளுமாறு கோரினார். ஆனால்
மூவேந்தரின் பகைவருமோ என்ற அச்சத்தில்
அவன் மறுத்துவிட்டான்.(புறம்:200).  பிற்பாடு
இருங்கோவேள் என்ற அரசனை நாடிச் சென்றார்.
அவ்வரசனும் மணம்புரிய மறுத்துவிட்டான்.
புறம்:201, 202.

இந்நிகழ்வுகளால் கபிலர் நொந்துபோனார்.
மேலும் பாரியின் பிரிவையும் அவரால் தாங்க
இயலவில்லை.தக்கவர்களிடம் பாதுகாப்பாகப்
பாரிமகளிரை அடைக்கலமாக ஒப்படைத்து
விட்டபிறகு வடக்கிருந்து உயிர்துறக்க முடிவு
செய்தார்.(புறம்:236)
"பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒவ்வாது
ஒருங்குவரல் விடாது ஒழிக எனக்கூறி
இனயை ஆதலின் நினக்கு மற்றியான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே!"
"பெருமை தங்கிய சிறந்த நட்பிற்கு ஒவ்வாமல்,
நீ இறந்த போது நின்னுடன் என்னையும் வர
விடாது இங்கேயே தவிர்க எனச் சொல்லிச்
சென்றுவிட்டாய். உனக்கு நான் பொருத்தமான
நண்பன் இல்லையா? இருப்பினும் இங்கிருந்தது
போலவே அங்கும் இடைவிடாது உன்னுடன்
இருந்து உன்னைக் கண்டு வாழும் நிலையை,
இனியாகிலும் எனக்குத் தருவாயாக." என்று
புலம்பி வடக்கிருந்து உயிர்நீத்தார். உயர்ந்த
நட்புக்குக் கபிலர்--பாரி எடுத்துக்காட்டாக
வாழ்ந்து மடிந்தனர் என்றால் மிகையன்று.









Sunday 18 November 2018

புறநானூற்றில் சொல்லப்பட்ட மகட்பாற் காஞ்சி

 புறநானூற்றில்  சொல்லப்பட்ட மகட்பாற் காஞ்சி

மகட்பாற் காஞ்சியாவது, நின் மகளைத் தருக  எனக்
கோரும் அரசனோடு மாறுபட்டு நிற்றலாகும்.  இற்றை
நாளிலும்  இந்த வீம்பு மிக்க பழக்கம் நிலவி வருகிறது.
அத்தை மகள் அம்மான்(மாமன்) மகன்  என்ற நெருங்கிய
உறவினர்க்குள்ளும் பெண் கொடுத்தல் அல்லது பெண்
எடுத்தல் நிகழாமல் சில தலைமுறைகள் கடந்துள்ளன.
காரணம், அவர்களுக்குள் மனக்கசப்பு, சொத்துத் தகராறு
நிகழ்ந்திருக்கலாம். இதன் விளைவாக யாதொரு தொடர்
பும் இன்றி ஆண்டுகள் கடந்திருக்கலாம். சாதாரண, சுமுக
மான பேச்சு வார்த்தையே நடைபெறாத பொழுது, பெண்
கொடுத்தல் அல்லது பெண் எடுத்தல் நிகழ வாய்ப்பேயில்லை.
தப்பித் தவறி ஏதாவது ஒரு குடும்பம் பெண் எடுக்க முயன்று
அதற்காகச் சில நடுநிலை உறவினர் மற்றும் நண்பரைத் தூது
அனுப்பி னால் பெண்ணின் தந்தை சினத்தை வெளிப் படுத்திப்
பெண்கேட்டு வந்தவர்களை இழிவுசெய்தும், தமது குடும்ப
நிலையை உயர்வாகப் பேசியும் பெண்கொடுக்க மறுப்பைத்
தெரிவிப்பார். இது இன்று நேற்று உதித்த பழக்கம் அன்று.
சங்க இலக்கியமாம் புறநானூற்றில் விரிவாகச் சொல்லப்
பட்டுள்ள மிகப் பழைய பழக்கம்.  மகட்பாற் காஞ்சி என்னும்
துறையில் அற்றை நாளில் மக்கள்/மன்னர்கள் நடந்துகொண்ட
முறையை எடுத்தியம்பியுள்ளனர்.

புறநானூற்றில் பரணர் பாடிய பாடலைப் பார்ப்போம்.(புறம்:
336) பெண்கேட்டு வந்த  வேந்தனும் மிகுந்த சினத்தையுடை
யவன்; இப் பெண்ணின் தநதையோ காலாகாலத்தில் செய்ய
வேண்டியதைச் செய்யாது செயல்மறந்து  தற்சமயம் சினத்தைக்
காட்டி நின்றனன். களிறுகள் கடிமரத்திலே அமையாது சீறி
நின்றன. மறவரும் சினந்து இதழ் மடித்தனர். இவ்வாறு இவள்
தந்தையும் இவளைப் பெண் கேட்டுவந்த அவனும் போருக்கு
எழுந்தனர். தன்மகளை வளர்த்துப் பருவம் ஆக்கியது மட்டும்
அல்லாமல் கூடவே பகையையும் வளர்த்த தாயானவள் பண்பும்
அறனும் இல்லாதவளாவாள்.(பெண்ணின் பேரழகே இத்தனை
சிக்கலுக்கும் காரணமாகும் என்ற கருத்தை உள்ளடக்கியது). இனி.
பாடலைப் பார்ப்போம்.:
"வேட்ட வேந்தனும்  வெஞ்சினத்  தனனே;
கடவன கழிப்பிவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத் தேந்திய  வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும்  அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடிமூதூர்;
அறனிலள் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப் பேந்திய முற்றா இளமுலைத்
தகவளர்த் தெடுத்த நகையொடு,
பகைவளர்த் திருந்தவிப் பண்பில் தாயே!".
மகட்பாற் காஞ்சியாவது, நின்மகளைத் தருக
என்னும் அரசனோடு மாறுபட்டு நிற்றலாகும்.
பிற்காலத்தில் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய
நூல்களில்  மகட்பாற் காஞ்சி "மறம்" என்னும் ஒரு
உறுப்பாகச் சேர்க்கப்பட்டு வளமான கற்பனை நயங்
களையும் சொல் ஓவியங்களையும் வளர்த்தெடுத்தது.

புறம் 337. பாடியவர் கபிலர். பறம்பு நாட்டின் மன்னன்
பாரியும் தன்னிடம்  பெண்கேட்டு வந்த சோழ அரசனிடம்
 மறுப்புத் தெரிவித்து அவனைத் திருப்பி அனுப்பினன்.
பாரியின்நண்பரான கபிலர் "யாராகுவர்கொல் இப்
பெண்டிரை மணப்பவர்?" என்று புலம்பிப் பாடினார்.
"வருத  லானார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்;
மற்றிவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா  குவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல்சுணங் கணிந்த
மருப்பிள வனமுலை ஞெமுக்கு வோரே?"
சோழ வேந்தனிடம் பெண்கொடுக்க மறுத்துச்
செய்தி சொல்லித் திருப்பி அனுப்பியபின்
அவன் தன்நாட்டுக்குத் திரும்பாமல் பாரியின்
பறம்பு மலையிலேயே தங்கித் தன்  போர்யானை
களைக் கவளம் ஊட்டிப் பேண ஆரம்பித்தனன்.
போருக்கு ஆயத்தம் செய்ததால் மீண்டும் பெண்
கேட்டு வந்திலன்.  பெண்ணுக்குத் தமையன்
மாரோ பொருசமம் பலகடந்த வெற்றி வேலைத்
தாங்கிப் பகைவரின் குருதி தோய்ந்த தலைகளைக்
கையிலே நாளும் கொண்டவராயினர். என்னே
இவர் வீரம் இருந்தவாறு!  இவ்வாறு பெண்கேட்டு
வருபவரோடெல்லாம் மறுத்துப் போர்செய்தால்  இப்
பெண்ணை அணைந்து  வாழவரும் மணவாளர்தாம்
யாவரோ? தெளிவாகக் கூறுக எனக் கபிலர் புலம்பினார்.

புறம் 338ஆம் பாடலில்  குன்றூர் கிழார் மகனார் தம் பாட
லில் ஓரெயில் மன்னன்தன்  ஒருமடமகளை மணம் கேட்டு
வந்த பலரும் சம்மதம் பெறாது வீணே திரும்பியதை விவ
ரிக்கின்றார். மூவேந்தரே பெண்கேட்டு வரினும், தன் தகுதிக்
கேற்ப  வணங்கிக் கேட்டாலன்றித் தன் மகளை யார்க்கும்
தரமாட்டேன் என்று முழங்கினான். மூவேந்தர்க்கே பெண்ணைக்
கொடுக்க மறுப்பவன் சாதாரண அரசனுக்குப் பெண் கொடுப்
பானா என்ன?

புறம்339ஆம் பாடலும் ஒரு பெண்ணைப் பலரும் விரும்பிப்
பெண்கேட்டு நிறைவேறாது வறிதே திரும்பிய செய்தியை
எடுத்துரைக்கினாறது. புறம் 340ஆம் பாடலில் ஒரு பெண்ணை
ஒரு மன்னனுக்கு வரைவு(நிச்சயம்) செய்தும் அவளுக்கு மணம்
முடியாதிருக்கும் செய்தியைச் சொல்கிறது.

புறம் 341ஆம் பாடலில் ஓர்அரசன் பெண்கேட்டு வந்ததாகவும்,
பெண்ணின் தந்தை பெண்கொடுக்க மறுத்துப் போர்க்கு எழச்
சொன்னதாகவும் மறுநாள் நிகழவிருக்கும் போரில் என்ன
நடக்கும் என்று தெரியாது என்று பெண்கேட்டவன் சொன்னதாகவும்
இயற்றப்பட்டுள்ளது. புறம் 342ஆம் பாடலில் ஓர்அரச கன்னியை
வரும்பிய இளைஞனிடம் அப்பெண் ஆபத்தானவள் என்றும்
அவளை விழைவதைத் தவிர்ப்பதே நல்லதென்றும் இயற்றிய
புலவர் கூறியதாகப் பாடல் இயம்புகிறது.

புறம் 343 ஆம் பாடலில் பெண்ணின் தந்தை மகட்கொடை மறுத்
ததைத் தொடர்ந்து பெண்கேட்டு வந்தவன் ஊரை முற்றுகையிட
ஏணிகளைச் சார்த்தி வைத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. புறம்
344 ஆம் பாடலில் மிகுந்த செல்வத்தைப்பெண்ணின் தந்தை
யிடம் அளித்துப் பணிவாகப் பெண்தருமாறு கேட்பது அல்லது
பகைத்துப் போர்புரிவது என்னும் இரண்டில் எது நல்லதோ
அதைச் சிந்தித்துச் செயல்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

புறம் 345ஆம் பாடலில் நிரல் அல்லார்க்குத் தரல் இல்லை
எனப் பெண்ணின் தந்தை கூறியதால் இரு தரப்பினர்க்கும்
போர் மூண்டால் என்ன நேருமோ? என்று அஞ்சுவதாகப்
புலவர் தெரிவித்துள்ளார். புறம் 346 ஆம் பாடலில் ஊரில்
உள்ளார் அனைவரது அழிவுக்கும் இப்பெண்ணின் எழில்
காரணமாகிவிடுமோ? என்று புலவர் அச்சம் தெரிவிக்கி
றார்.

புறம் 347ஆம் பாடலில் இப்பெண்ணின் அழகை விரும்பி
வேந்தர் பலர் பெண்கேட்க, அப் பெண்ணின் தந்தை மறுத்
ததைத் தொடர்ந்து வேந்தர்கள் அவ்வூரிலேயே தங்கிப்
பாடி எடுத்தனர்(போருக்கான சகல ஆயத்தமும் செய்தனர்)
யானைகளை மரங்களில் பிணித்ததால் மரங்களின் வேர்
கள் வெளிக் கிளம்பின. ஊர் என்னாகுமோ? என்று புலவர்
கிலேசம் அடைந்தார். புறம் 348ஆம் பாடலில் இப் பெண்
பிறவாமல் இருந்திருக்கலாம் என்றும் இவளால் ஊர்க்கு
ஏகப்பட்ட இடர்கள் நேர்ந்துவிட்டன என்றும் புலவர் புலம்
பினார். புறம் 349ஆம் பாடலில் இப்பெண் இவ்வூர்க்கு
அணங்கு(வருத்தும் மோகினி) ஆயினள் எனப் புலவர்
வருந்தினார். புறம் 350 ஆம் பாடலில் ஏற்கெனவே போருக்
கான ஆயத்தம் செய்ததில் அகழி. தூர்ந்து விட்டது. மதிற்
சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நிகழுமோ?
எனப் புலவர் கவலைப் பட்டார். புறம் 351ஆம் பாடலில்
வளமிக்க மருத நிலம் இந்தப் போரால் என்னாகுமோ?
என்று கவலையுற்றார். புறம் 352 ஆம் பாடலில் இவளை
யார்தாம் மணப்பரோ? என்று புலவர் வினவினார். புறம்
353 மற்றும் 354ஆம் பாடல்களில் இவள் அழகால் இந்த
ஊருக்கு என்ன ஆபத்து நேருமோ? என்று கவலையுற்
றார். ஆக இந்த விடயத்தில் இரு தரப்பினரும் வீம்பு
காட்டியும் வறட்டு கௌரவம் காட்டியும் ஊரிலுள்ள மக்களை
அச்சத்தில் ஆழ்த்தினார்கள் என்றால் மிகையன்று.

சங்க காலத்தில் நிலவிய இப்பழக்கம் இன்றுவரை வேரூன்
றிவிட்டது. இடைக்காலத்தில் சிற்றிலக்கியத்தில் நுழைந்து
ஆழமாகக் கால் பதித்து விட்டது. சிற்றிலக்கியங்களில்
மறம் என்ற உறுப்பாகப் புகுந்துவிட்டது. கலம்பகம் என்னும்
சிற்றிலக்கியங்களில் புலவர் பெருமக்கள்  அவரவர் கற்பனைத்
திறனுக்கேற்பச் சுவையான பாடல்களை இயற்றியுள்ளனர்.
எடுத்துக் காட்டாக மூத்த கலம்பகமான நந்திக்கலம்பகத்தில்
"அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன்
அசைந்தேன் என்றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார்
மன்னர் தூதர்;
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதம்
        சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும் நெடுவளையும்
குனிந்து பாரே!
எனும் பாடல் பயின்று வருகிறது.
பொருள்:
பெண்ணின் தந்தை தூதுவனிடம் கூறியது:
மன்னன் அனுப்பிய தூதனே! என்வில் ஒடிந்துள்ளது.
அதன் பூட்டுக் கயிறு அறுந்துள்ளது. நான் மூப்பு
எய்திவிட்டேன் என்று எண்ணியா உன் மன்னன்
உன்னை இங்கு அனுப்பினான்? நறுமணம் மிக்க
கூந்தலையுடையவள் என் மகள். இவளைப் பெண்
கேட்டு உன்னை அனுப்பியுள்ளான் உன் மன்னன்.
என் இந்தச் சின்னஞ் சிறிய குடிலைப் பார். இதில்
சிறிய தூண்களும் நீண்ட வளைச்சட்டங்களும்
உள்ளன. அவை எவற்றால் ஆனவை என்று தெரி
யுமா? நந்திவர்மனாகிய என் வேந்தன் தெள்ளாற்
றுப் போரில் பகை அரசர்களின் யானைப் படையை
அழித்தான். அந்த யானைகளின் கொம்புகளே
இந்தத் தூண்கள்; நெடிய வளைச் சட்டங்கள். ஐயம்
இருந்தால் நீ இக்குடிசையில் குனிந்து பார்.

இன்னும் கச்சிக் கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், புள்ளிருக்கு
வேளூர்க் கலம்பகம், கண்ணப்பர் கலம்பகம், அழகர் கலம்பகம்,
திருப் பேரூர்க் கலம்பகம், மதுரைக் கலம்பகம், திருவரங்கக்
கலம்பகம், திருவருணைக் கலம்பகம் என எண்ணிலடங்காக்
கலம்பக நூல்கள் உள்ளன. புலவர் பெருமக்கள் தம் புலமை
யை வெளிப் படுத்தும் விதமாக எத்தனையோ சுவையான
பாடல்களை 'மறம்' என்னும் துறையில் இயற்றியுள்ளனர்.
அவை படித்து இன்புறத் தக்கவை.



.












Sunday 11 November 2018

நந்திக் கலம்பகத்தின் நயம் பாராட்டல்

நந்திக் கலம்பகத்தின் நயம் பாராட்டல்

நந்திக் கலம்பகம் தமிழில் உருவான முதல்  கலம்பக நூல் ஆகும்.
பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது
பாடப்பட்டதாகும். அவரின் ஆட்சிக் காலம் கி.பி.825---850.
இந்நூலை இயற்றிய ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
ஆனால், வழக்கம்போல  அப்புலவரைப் பற்றிய கதைகள்
ஏராளமாக உலா வருகின்றன.  திறமையான புலவர்கள் அனை
வர்க்கும் ஒருவிதமான சாபக் கேடு உண்டு. வள்ளுவப் பெருந்
தகை, ஔவைப் பிராட்டியார், நந்திக்கலம்பக  ஆசிரியர்,
கவிச் சக்கரவர்த்தி கம்பர், கவிராட்சசன் ஒட்டக்கூத்தர், காள
மேகப்புலவர், அருணகிரிநாதர்  இன்னும் இவர்போன்ற எண்
ணற்ற புலவர்களின் வரலாறு நம்பும் படியாக இல்லை. இல்லாத
தையும் பொல்லாததையும் சொல்லி அப்புலவர் பெருமக்களைச்
சிறுமைப் படுத்தி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்
றால் சுமாராகக் கவிபாடும் புலவர்கள் தம் கற்பனைக் கதைக்கு
ஆதாரமாகச் சில பல தனிப்பாடல்கள் பாடி ஒப்பற்ற காவியங்
களின் ஊடே இடைச் செருகல் செய்து சேர்த்து விடுவார்கள்.
பெரும் புலவர்கள் இடைச்செருகலைக் கண்டுபிடித்து விடுவார்
கள்.  ஏனையோர் கண்டுபிடிக்க இயலாமல் திணறிடுவர்.

இம்மாதிரியே நந்திக்கலம்பகம் பாடிய புலவர் மங்கலமற்ற
சொற்களை இடையிடையே சேர்த்து நந்திவர்மன் மரணம்
அடையுமாறு செய்தார் என்ற நம்ப முடியாத கட்டுக் கதையைப்
பரப்பி விட்டுள்ளனர். எவ்வளவு பெரிய புலவரானாலும்
சொற்களால் மரணத்தை வரவழைக்க முடியும் என்பது  இயற்
கையை மீறிய செயலாகும். இதனைத்தான் "அறம்பாடுதல்"
என்று இலக்கியத்தில் கூறுவர். அதிகபட்சம், மனிதர்கள்
தவறு செய்பவர்களச் சபிக்கலாம்.  அச்சாபம் காலப் போக்கில்
பலிக்கலாம். ஆனால் உடனடியாக யாரும் யார்க்கும்  அறம்
பாடிக் கெடுதி விளைவித்து விட இயலாது.

எனவே, இந்நூலைப் பற்றியும் இதன் ஆசிரியரைப்  பற்றியும்
உலாவரும் கதைகளைத் தூக்கி யெறிந்துவிட்டு இந்நூலின்
நயங்களை மட்டுமே நாம் பார்க்கவுள்ளோம். இந்நூல் தமிழில்
இயற்றப்பட்ட முதல் கலம்பக நூல். நூல் இயற்றப்பட்ட காலக் கட்டத்தில்
வருணாஸ்ரம தருமத்தின்படி கீழ்க்கண்ட பாக்களின் வரையறை
வகுக்கப் பட்டது.
கடவுளர்க்கு --100; முனிவர்க்கு-- 95; அரசர்க்கு--90;
அமைச்சர்க்கு-/70;  வணிகர்க்கு--50;வேளாளர்க்கு--30
என்ற வரையறை சொல்லப்பட்டது.  ஆனால் எந்தப் புலவரும்
இந்த வரையறைக்குள் இயற்றவில்லை. இந்த நியதியை
உருவாக்கியவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால்
இந்த நியதியை எந்தப் புலவரும் பின்பற்றியதாகத் தெரிய
வில்லை. நந்திக் கலம்பகத்தைப்பொருத்து, சில சுவடிகளில்
144 பாடல்களும், சிலவற்றில் 110 அல்லது 113பாடல்களும்
காணப்படுகின்றன.

கலம்பகம் என்னும் சொல்லைப் பிரித்தால்  கலம்+பகம் என
வரும். கலம் என்றால் பன்னிரண்டு உறுப்புகளையும், பகம்
என்றால் அதிற் பாதி ஆறு உறுப்புகளையும் சுட்டும்.  ஆக,
கலம்பகம் நூல் பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதாக
விளங்கும். தோள், வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம்,
சம்பிரதம், கார், தூது, தவம், மடக்கு, மறம், பாண்,  களி,
சித்து, இரங்கல், கைக்கிளை, ஊர், வண்டு,தழை, ஊசல்
முதலிய உறுப்புகளோடு பிற்காலத்தில் பிச்சியார்,
கொற்றியார்,இடைச்சியார், வலைச்சியார் முதலிய. உறுப்
புகளும் விரவி வருமாறு நூல் பாடப்படும்.  ஆனால், முதல்
கலம்பக நூலாகிய நந்திக் கலம்பகத்தில் புயவகுப்பு, தூது,
இரங்கல்,மறம், பாண், மடல், ஊசல், காலம், மடக்கு, வெறி
விலக்கு, சம்பிரதம், கையுறை, மதங்கியார் முதலான 13
உறுப்புகள்தாம் உள்ளன. பிற்காலங்களில் மேலும் பல
விதமான உறுப்புகள் சேர்ந்திருக்கலாம்.

கலம்பகத்தைக் கலப்பு + அகம் எனப் பிரித்துப்  பலவகைக்
கருத்துக்களும் (அகம், புறம் என்ற பிரிவுகள்) பலவகைப்
பாக்களும் பாவினங்களும்  கலந்து அந்தாதித் தொடையால்
பாட வழிவகுத்தனர். பெரும்பாணாற்றுப் படைஎன்னும்
சங்க நூலில் "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" என்னும்
சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல பூக்களினால்
தொடுக்கப் பட்ட கதம்ப மாலையையே  குறிக்கும்.  கதம்பகம்
என்ற சொல்லே கலம்பகம் என மருவியிருக்க வாய்ப்புண்டு.

இந்நூல் மூன்றாம் நந்திவர்மனின் தெள்ளாறு, கொற்றவாயில்
முற்றம், வெறியலூர், வெள்ளாறு போன்ற போர்க்கள நிகழ்வு
களை ஆங்காங்கே சுட்டிச் செல்வதோடு அகப்பொருள் சிந்த
னைகளையும் இடையிடையே இயம்புகிறது.  சொல் நயமும்,
பொருள் நயமும், கற்பனை நயமும்  கொண்டு விளங்குவ
தோடு சிறந்த நம்பகமான வரலாற்றையும் எடுத்து இயம்
புகிறது. அக்காலக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்
காணப்படும் செய்திகள் இந்நூலின் பாடல்கள் கூறும்
செய்திகளோடு ஒத்துள்ளன.  நந்திக் கலம்பகம் வளமான
இலக்கியம் மட்டுமன்று; நம்பகமான வரலாற்று நூலும்
ஆகும். இனி, இந்நூலிற் பயின்றுவரும் சில நயமான பாடல்
களைப் பார்ப்போம்.

"வாடை நோக வீசு மால மாரன் வாளி தூவுமா
லாட லோத மார்க்கு மாலே னாவி காக்க வல்லனோ?
வேடு லாவு மாலை சேதி ராசன் மல்லை நந்திதோள்
கூடி னால லர்வ ராது கொங்கு விம்மு கோதையே."
பொருள்: நந்திவர்மன் மீது ஒருதலையாய்க் காதல்
கொண்ட பெண்" வாடைக்காற்று வீசும் மாலை நேரத்
தில் மன்மதன் அம்பு எய்து துன்புறுத்துகின்றான்.
நந்தியின் தோளைக் கூடினால் பழிச்சொல் வாராது
என்று கூறுகின்றாள்."!

"பதிதொரு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி
பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி
        வளநாடா
நிதிதரு கவிகையு நிலமகள் உரிமையு மிவையிவை
        யுடைநந்தி
மதியிலி யரசன்நின் மலரடி பணிகிலர்; வானகம்
        ஆள்வாரே."
நிதிதரு விருப்பமும் நிலமகள் உரிமையும் உடைய
நந்திவர்மன் மலரடியைப் பணிந்து திறை
செலுத்தத் தவறிய அரசர்கள் போர்க்களத்
தில்கொல்லப்பட்டு வானகத்தை யாள்வர்.

"வீர தீரநல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச்
   செருவென்றோன்
ஆர்வ மாவுள நின்றவர் அன்றிமற் றவன்பெருங்
   கடைநின்ற
சேர சோழருந் தென்னரும் வடபுலத் தரசருந்
  திறைதந்த
வீர மாமதக் கரியிவை பரியிவை இரவலர்
  கவர்வாரே."
வெறியலூர்ப் போரில்வென்றவனாகிய
நந்திவர்மன், தன் குறுநில மன்னர்கள் மட்டும்
அன்றித் தன் பகைவராகிய சேரர், சோழர், பாண்டியர்
மற்றும் வடபுலத்தை யரசாள்பவர்கள் எல்லோரும்
தன் வாசற் கதவருகில் நின்று கப்பமாகச் செலுத்திய
யானை, குதிரை போன்றவற்றைத் தன்னிடம் யாசகம்
வாங்க வந்தவர்கள் எடுத்துக் கொள்ள அனுமதித்தான்.

"ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்;
    உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்;
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்;
     அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்;
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
     கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
  காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்."
"பகைவர்களுக்குத் தெள்ளாற்றுப் போரில்
மரணத்தைப் பரிசளித்த நந்திவர்மன், மார்த்
தாண்டன், காடவர்க்கு முன்தோன்றியவன்
கையில் தவழும் வேலைப்பாடிக் காஞ்சி
நகரின் பெருமையையும் பாடி ஊஞ்சல்
ஆடுவோம்" என்று மங்ககையர் மகிழ்ந்து
கூறினர்.

"இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்
அந்தக் குமுதமே யல்லவோ?---நந்தி
தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி
யடங்கப்பூ பாலரா னார்."
இந்த உலகில் இரவலர் என்று சொன்னால் அந்த
அல்லிதான் அல்லவா? ஏனென்றால் அது தான்
இரவில் அலருகின்றது.(இரவு +அலர்= இரவலர்)
மற்றைப் பகைவர்கள் நந்திவர்மன் மீது கோவை
(அகப் பொருளில் ஒரு பிரிவு--துறை) பாடிப் புவி
யரசராக விளங்குகின்றனர்.


ஈட்டு புகழ்நந்தி பாணநீ யெங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும்---காட்டிலழும்
பேயென்றாள் அன்னை; பிறர்நரியென்
றார்தோழி
நாயென்றாள்; நீயென்றேன் நான்.

நந்திவர்மன் நாட்டில் பரத்தையிடம் சென்று வந்த தலைவன் ஒருவன் தலைவியிடம் பாணன் ஒருவனைத்
 தூதாக அனுப்பினான். ஆனால் தலைவி
அந்தப்பாணனை வெறுத்தாள்.அன்றி
ரவில் பெண்ணின் வீட்டில்  பாணன் பாடிய பாட்டைக் கேட்டு அப்
பெண்ணின் தாய் பேயழுகின்றதென்றாள்; பிறர்
நரி ஊளையிடுகின்றதென்றனர்; தோழி நாய்
குரைக்கின்றதென்றாள். அப்பெண்ணோ
பாணன்தான் குரல் எழுப்புகின்றான் எனச்
சொன்னாள்.

"செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்--பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகந் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய்."
பைந்தமிழை ஆராய்ச்சி செய்து போற்றும்
நந்திவர்மன் மார்பைத் தழுவாமல் என் மேனி
தீப்பிழம்பைச் சாறுபிழிந்து சந்தனம் என்று
சொல்லித் தடவியது போல்  வெந்து
எரிகின்றது. ஒருதலைக் காதல்கொண்ட பெண்
இவ்வாறு கூறினாள்.

"ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வெறுங்
கூடு வருகுதென்று கூறுங்கள்--நாடியே
நந்திச்சீ ராமனுடை நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகில் தான்."
"ஓடும் மேகங்களே! ஓடாத (விரைவாகச் செல்லாத)தேரில் உயிரற்ற என்
உடல்(கூடு) வருகின்றதென்று நந்திவர்மனின்
நன்னகராகிய காஞ்சிபுரத்தில் எனைப்பற்றியே எண்ணி
உருகும்  எனைப்பிரிந்திருக்கும் காதலியைச் சந்தித்தீர்
என்றால்  சொல்லுங்கள்."  காதலியைப்
பிரிந்து சென்ற காதலன் ஊருக்குத் திரும்பும் போது மேகங்களைத் தூது
அனுப்பிச் சொன்னதாகப் பாடியது.


"மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டிற்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே."
ஒருதலைக் காதல் கொண்ட பெண் புலம்புகின்
றாள்:
இந்தப் பூமி உய்திபெற மழை உதவுவது போல
மக்களுக்கு வழங்கும் கரத்தையுடைய தமிழ்
மீது தணியாத பற்றுக் கொண்ட நந்திவர்மனின்
நல்ல நாட்டில் பெண்ணே இல்லாத ஊரில்
தான் மட்டுமே பெண் என்பது போல இந்த
வெண்ணிலா வேக வேகமாக ஏன் வந்தது?
ஒருதலைக் காதலர்க்கு வெண்ணிலவைக்
கண்டால் துயரம் கூடுவது இயல்பு தானே!

நந்திக் கலம்பகத்திலுள்ள பாடல்கள் அத்தனை
யும் தேனில் ஊறவைத்த பலாச்சுளை போலத்
தித்திக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


Sunday 4 November 2018

சங்க இலக்கியம் குறிப்பிடும் வலசை போதல்

சங்க இலக்கியம் குறிப்பிடும்  வலசைபோதல்

பறவைகளின்  இடப்பெயர்ச்சியே  வலசைபோதல் எனச்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுங்குளிர்
மாதங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ர
வரி, மார்ச்சு ஆகிய காலங்களில் துருவப்பகுதியான
சைபீரியா ,ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மங்கோலியா, சீனா
முதலான பகுதிகளில் பனி உறைந்து  உயிரினங்களின்
இயக்கம்  முடக்கப்பட்டுவிடும். மனிதர்கள் எப்படியோ
சமாளித்து விடுவார்கள். ஏனென்றால் பாதுகாப்பான
உணவு, உறைவிடம் மற்றும் உடுக்கை முதலிய தேவை
களை நாமே உருவாக்கிக் கொள்வோம். ஆனால் மற்ற
உயிரினங்கள் இந்தக் காலங்களில்  தொல்லைகளுக்கு
ஆளாகின்றன. எனவே அவை கடுங்குளிர்ப்  பகுதிகளி
லிருந்து பாதுகாப்பான வெப்பமான இடங்களை  நோக்கி
நகர்கின்றன. உணவுத் தேவையும் ஒரு முக்கியமான
காரணமாகும்.  சில உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்
காகவும் இடப்பெயர்ச்சி செய்கின்றன. பறவைகள் புரியும்
இடப்பெயர்ச்சியை  வலசை போதல் என்று  தமிழ்இலக்
கியத்தில் குறிப்பிட்டனர்.  அதிலும், சங்க காலப் புலவர்
பெருமக்கள் இயற்கையை மிகவும் நேசித்து அதனுடன்
ஒன்றியே வாழ்க்கை நடத்தினர். இயற்கையை இரசித்து
ஊன்றிக் கவனித்தனர். அதனால் தான் பறவைகளின்
வலசைபோதலைப் பற்றிக் குறிப்பிட முடிந்தது. பறவை
களின் சிற்றினங்களுக்குள் ஏற்படும்  உணவு, எல்லை,
கூடுகட்டுமிடம் முதலியவற்றை முன்னிட்டு ஏற்படும்
போட்டி,சூழல் மாற்றம், காற்றின் திசைமாற்றம் ஆகிய
வைகளும் வலசைபோதலுக்கான காரணங்களாகும்.

சங்கப் புலவர்களில் ஒருவரான பிசிராந்தையார் தமது
காலத்தில் வலசைபோன அன்னச்சேவலைப்பார்த்துப்
பாடியதாகச் சொல்லப்படும்(புறம் 67ஆம் பாடல்)பாடலில்
தென்திசைக் குமரிக்கடலில் அயிரைமீனை யுண்டு
வடதிசை நோக்கி வலசை போனதாகத் தெரிவித்துள்ளார்.
"குமரியம்  பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழநன் னாட்டுப் படினே, கோழி
உயர்நிலை மாடத்துக்  குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை  அடியுறை எனினே மாண்டநின்
இன்புறு பேடை அணியத்தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே."
தென்திசைக் குமரியிலிருந்து வடதிசை மலையை
நோக்கிப் பயணம் சென்று கொண்டிருந்த அன்னச்  சேவலை
இடையில் உறையூரில் இறங்கிக் கோப்பெருஞ் சோழ
வேந்தனைச் சந்தித்துத் தன்பெயரைச் சொன்னால்  பரிசு
கிடைக்கும் என்று சொன்னதாகப் பாடியுள்ளார்.

இது போலவே சத்திமுத்தம் என்னும் ஊரைச் சார்ந்த புலவர்
"நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!
நீயும்நின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீர் ஆயின் எம்மூர்ச்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி......."
என்று பாடியுள்ளார். இந்தப் பாடலில் புலவர் வலசை
போன பறவையை மட்டுமன்றித் தமது வறுமையைப்
பற்றியும் பாடியுள்ளார்.
"கையது கொண்டு மெய்யது போர்த்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை  யாளனைக் கண்டனம் எனுமே"
என்று தாம் வறுமையால் படும் துன்பத்தை உருக்க
மாக விவரித்துள்ளார்.

நற்றிணை 70ஆம் பாடலில் வெள்ளிவீதியார்
"சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி யன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்  குருகே!
எம்மூர் வந்தெம் உண்துறைத்  துழைஇ
சினைக்கெளிற் றார்கையை அவர்ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெருமறவி யையோ
ஆங்கண் தீம்புனல், ஈங்கண் பரக்கும்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே!"
என்று வலசை போய்க் கொண்டிருக்கும் சிறுவெள்
ளாங் குருகை அழைத்துத் தலைவி தன் தலைவனி
டம் தனது துன்பத்தைச் சொல்லக் கூறியதாக
எழுதப்பட்டுள்ளது.

நற்றிணை 356ஆம் பாடலில் புலவர் பரணர்
"நிலம்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த
விலங்கு மென்தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட் டிமயத்  துச்சி
வான்அர மகளிர்க்கு மேவல் ஆகும்;
வளராப் பார்ப்பிற்(கு) அல்குஇரை ஒய்யும்;
அசைவில் நோன்பறை போலச் செலவர
வருந்தினை  வாழிஎன் னுள்ளம்  ஒருநாள்
காதலி உழைய ளாகக்
குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்குமார்
வருமே".
இப்பாடலில் மெல்லிய சிறகுடைய செங்கால்
அன்னம் தென்திசைக் கடலில் தன் இரையை
மேய்ந்துவிட்டு இமயத்தின் உச்சியை நோக்கி
வலசைபோவதாகப் பாடியுள்ளார்.

அகநானூறு 208 ஆம் பாடலில் பரணர் வெளியன்
வேண்மான் ஆஅய் எயினன் பாழிப் பறந்தலை
என்னும் இடத்தில் கோசர் குடியைச் சேர்ந்த மிஞிலி
என்பவனோடு புரிந்த போரில் நண்பகல்வேளையில்
கடுமையான காயமடைந்து மரணத்தை நெருங்கிக்
கொண்டிருந்த பொழுது பறவைகளின் வலசை
நிகழ்ந்ததாகவும் பறவைகள் கூட்டமாகச் சிறகுகளை
விரித்துப்பறந்த விதம் ஆஅய் எயினனுக்கு நிழல்
தருவது போல இருந்ததாகவும் பாடியுள்ளார்.
"வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கி ஞாயிற்று
ஒண்கதிர் தெறிமை சிறகரிற் கோலி
நிழல்செய்து....."
பறவைகள் இயல்பாக வலசை செல்கையில்
கூட்டமாகப் பறந்ததனால் நிழல் உண்டாயிற்றா,
ஆஅய்எயினன் பறவைகளிடம் நட்பு பாராட்டிய
தால் அவை நிழல் கொடுத்தனவா என்பது நமக்கு
விளங்கவில்லை. ஆனால் புலவர் பரணர் அகநா
னூறு 148 மற்றும் 181ஆம் பாடல்களில் பறவைகள்
நிழல்கொடுத்ததாகவே பாடியுள்ளார்.

அகம். 273 ஆம் பாடலில் புலவர் ஔவையார்
"விசும்பு விசைத்தெறிந்த கூதளங் கோதையிற்
பசுங்கால் வெண்குருகு வரப்பறை வளைஇ
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப"
வெள்ளாங்குருகு வலசை போனதைப் பற்றிப்
பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் புறம்.
20ஆம் பாடலில்
"புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்"
என்று பாடியுள்ளார்.

கல்லாடனார் அகம்.113உம் பாடலில்
"அலங்கல் அம்சினைக் குடம்பைப் புல்லெனப்
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு"
என்று பறவைகள் புலம்பெயர்தலைப் பாடி
யுள்ளார்.

மேலும் அகம் 100ஆம் பாடலில்
"வம்ப நாரை இனைஒலித் தன்ன" என்றும்
"வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு" என்றும்
(அகம்180), "வம்ப நாரை இரிய"(அகம் 189)
என்றும் இலக்கியங்களில் பாடப்பட்டுளது.
பழைய பறவை வலசை போவதும் புதிய
பறவை வலசை வருவதும் இயல்பாகவே
நடந்துள்ளன. இடப்பெயர்ச்சி செய்யாத,
அதாவது, வலசைபோகாத பறவைகளும்
இருந்துள்ளன. அவற்றை வதிகுரு என்று
அழைத்தனர். குறுந்தொகை 5ஆம்பாடலில்
"வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை"
என்று கூறப்பட்டுள்ளது.

இதுகாறும் பார்த்தவற்றால் பல்வேறு காரணங்
களை முன்னிட்டுப் பறவைகள் வலசை போவதையும்,
சில பறவையினஙகள் வலசை போவதில்லையென்
றும் அறிகிறோம். பறவைகளால் பல நன்மைகள்
மனித இனத்துக்குக் கிடைக்கின்றன. பறவைகள்
மூலம் தாவர வர்க்கம் பல்கிப்பெருகுகிறது. கொசு
போன்ற சிறிய பூச்சிகளை உணவாகக் கொள்வதனால்
சுற்றுச் சூழல் மேன்மையடைகிறது. பறவைகளின்
கழிவுகளால் இயற்கை உரங்கள் கிடைக்கின்றன.

எனவேதான் பறவைகளுக்கான சரணாலயங்கள்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் உள்ளன. உதாரணமாக,
வேடந்தாங்கல், கோடியக்கரை, கூத்தன்குளம் முத
லான இடங்களில் அமைக்கப் பட்டவை. நாம் இந்த
இடங்களில் மாசில்லாத சுற்றுச் சூழலை உருவாக்
கல் வேண்டும். பட்டாசு முதலானவை இவ்விடங்
களில் கொளுத்தத் தடைவிதித்தல் வேண்டும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."(குறள்)
இந்தப் பரந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்
சொந்தமன்று.மனிதரல்லாத ஏனைய உயிர்
களுக்கும் சொந்தமானதுதான். எல்லா உயிரி
னங்களையும் இயன்றவரை பேணிப் பாது
காத்திடுவோம்.