தமிழகத்தில் 'கஜா'ப் புயலின் பேயாட்டம்
ஆண்டவா! அந்த நாளில்
அரும்பெரும் குமரிக் கண்டம்,
நீண்டநற் புகழ்சேர் செல்வப்
பூம்புகார்ப் பதியாம், மேலும்
பாண்டிய நாட்டோர் போற்றும்
பதிதனுஷ் கோடி யெல்லாம்
மீண்டிடா வகையில் முந்நீர்
விழுங்கிடச் செய்தாய்; ஐயோ!
ஈண்டிது நல்ல தாமோ?
இத்தகு கொடுமை, துன்பம்
வேண்டவே வேண்டா; தேவா!
மேற்கொண்டு தாள மாட்டோம்;
ஆண்டுதோ றும்இக் காலம்
அடைமழை பெய்த போதும்
சீண்டிய தில்லை; இன்று
சிதைத்ததே சூறைக் காற்று.
ஆழ்கடல் சூழும் இந்த
அவனியை ஆளும் அப்பா!
ஏழ்மைசேர் எங்கள் நாட்டுக்(கு)
ஏற்பட்ட பெருத்த சேதம்
ஊழ்வினை கொணர்ந்த தா?உன்
உறுசினம் கொணர்ந்த தா?சொல்;
பாழ்வெளி யாயிற்(று) ஐயா!
பசுமைசேர் டெல்டா வெல்லாம்.
ஒப்பிலா இறைவ! உன்றன்
உறுசினத் தாலே இங்கே
இப்பெரும் சேதம் வந்தால்
இழைத்திட்ட பிழைதான் என்ன?
செப்பரும் வளம்சேர் டெல்டா
சீரழி(வு) அடைந்த காட்சி
எப்பெரும் கல்நெஞ் சையும்
இளகிடச் செய்யும்; உண்மை.
பிள்ளைபோல் வளர்த்த தென்னை
பெரும்எண்ணிக் கையில் வீழ
உள்ளமே நொந்த(து) ஐயா!
உடன்பிற மரமும் வீழ்ந்து
சள்ளையைத் தந்த(து) அப்பா!
தங்கிடும் குடிலும் வீடும்
பள்ளிகள் தாமும் காற்றில்
பறந்துபோய் வீழக் கண்டோம்.
கானடை(கால்நடை) உயிர்கள் எல்லாம்
காற்றினால் அலைக்கப் பட்டு
வானுல(கு) அடையக் கண்டு
வருத்தமே எய்தி னோமே;
மீனவர் பட(கு)இ ழந்தார்;
வீதியில் மின்கம் பங்கள்
கூனலாய் வளைந்து சாய்ந்து
கும்மிருள் சூழ்ந்த தம்மா!
காவிரி பாய்ந்த டெல்டா
கலக்கமுற்(று) அழுது நிற்கும்;
பூவிரி பசுமைச் சோலை
பொட்டலாய் மாறித் தோன்றும்;
ஆவியை நிகர்த்த தென்னை
ஆடு,மா(டு) எல்லாம் மாய்ந்து
பேய்விளை யாடும் பூமி
பிறந்த(து)என் றெண்ணத் தோன்றும்.
இத்தனை சேதம் கண்டும்
இறைவ!நீ இரங்கா விட்டால்
பித்தரைப் போலே நாங்கள்
பிதற்றுதல் இயல்பு தானே.
செத்தவர் குடும்பத் திற்கும்
செத்துக்கொண்(டு) இருப்போ ருக்கும்
மெத்தநல் இழப்பீ டைத்தான்
மேன்மையாய் நல்கச் செய்வாய்.
மத்திய அரசே! உங்கள்
மனத்தினுக்(கு) இசைந்த வாறே
ஒத்ததாம் கருத்துக் கொண்ட
ஒண்தமிழ் அரசைச் சேர்த்தே
உத்தம மாகச் சிந்தித்(து)
உடனடி நிதியைத் தாரீர்!
எத்தனை தடைவந் தாலும்
இப்பெரும் துன்பம் தீர்ப்பீர்.
ஆட்சிசெய் வோரை மட்டும்
அண்டியே இருத்தல் வேண்டா;
மாட்சிமை தாங்கும் வள்ளல்,
மற்றுளார், யாவ ரும்மிவ்
மீட்சிசெய் பணியில் பங்கு
மேற்கொண்டு டெல்டா காப்பீர்.
காட்சிகள் மாறும் வண்ணம்
காரியம் ஆற்று வீரே!
நடுவண அரசே! நாங்கள்
நாடிய நிதியை நல்கி
கொடும்'கஜா'ப் புயலால் நேர்ந்த
குறையெலாம் உடனே தீர்ப்பீர்;
படுமந்த மாக நீவிர்
பணம்தரத் தாம தித்தால்
ஒடுங்கிய மக்கள் தாமே
உயிரற்ற பிணமாய் ஆவர்.
உலகெலாம் வாழும் எங்கள்
ஒண்தமிழ் மக்காள்! நீவிர்
தொலைவினில் வாழு கின்றீர்;
சோழநன் னாடு வீழத்,
தலைவிதி என்று நொந்து
சாம்பிட வேண்டா; இந்த
நிலைதனை மாற்ற ஏலும்
நிதியினை நல்கு வீரே!
தண்தமிழ் நாட்டில் வாழும்
சால்புடை மக்காள் நீவிர்
பண்டைய சிறப்பை டெல்டா
பகுதியில் காக்க வேண்டித்
தொண்டுகள் செய்தும் உம்மால்
இயன்றிடும் நிதியைத் தந்தும்
அண்டைமா நிலத்தார் போற்ற
அனைத்தையும் மீட்க வாரீர்!
அருஞ்சொற் பொருள்:
முந்நீர்---கடல்; அவனி---உலகம்
சள்ளை---துன்பம்; மாட்சிமை---பெருமை
சாம்புதல்--வருந்துதல்; சால்பு---மேன்மை
ஆண்டவா! அந்த நாளில்
அரும்பெரும் குமரிக் கண்டம்,
நீண்டநற் புகழ்சேர் செல்வப்
பூம்புகார்ப் பதியாம், மேலும்
பாண்டிய நாட்டோர் போற்றும்
பதிதனுஷ் கோடி யெல்லாம்
மீண்டிடா வகையில் முந்நீர்
விழுங்கிடச் செய்தாய்; ஐயோ!
ஈண்டிது நல்ல தாமோ?
இத்தகு கொடுமை, துன்பம்
வேண்டவே வேண்டா; தேவா!
மேற்கொண்டு தாள மாட்டோம்;
ஆண்டுதோ றும்இக் காலம்
அடைமழை பெய்த போதும்
சீண்டிய தில்லை; இன்று
சிதைத்ததே சூறைக் காற்று.
ஆழ்கடல் சூழும் இந்த
அவனியை ஆளும் அப்பா!
ஏழ்மைசேர் எங்கள் நாட்டுக்(கு)
ஏற்பட்ட பெருத்த சேதம்
ஊழ்வினை கொணர்ந்த தா?உன்
உறுசினம் கொணர்ந்த தா?சொல்;
பாழ்வெளி யாயிற்(று) ஐயா!
பசுமைசேர் டெல்டா வெல்லாம்.
ஒப்பிலா இறைவ! உன்றன்
உறுசினத் தாலே இங்கே
இப்பெரும் சேதம் வந்தால்
இழைத்திட்ட பிழைதான் என்ன?
செப்பரும் வளம்சேர் டெல்டா
சீரழி(வு) அடைந்த காட்சி
எப்பெரும் கல்நெஞ் சையும்
இளகிடச் செய்யும்; உண்மை.
பிள்ளைபோல் வளர்த்த தென்னை
பெரும்எண்ணிக் கையில் வீழ
உள்ளமே நொந்த(து) ஐயா!
உடன்பிற மரமும் வீழ்ந்து
சள்ளையைத் தந்த(து) அப்பா!
தங்கிடும் குடிலும் வீடும்
பள்ளிகள் தாமும் காற்றில்
பறந்துபோய் வீழக் கண்டோம்.
கானடை(கால்நடை) உயிர்கள் எல்லாம்
காற்றினால் அலைக்கப் பட்டு
வானுல(கு) அடையக் கண்டு
வருத்தமே எய்தி னோமே;
மீனவர் பட(கு)இ ழந்தார்;
வீதியில் மின்கம் பங்கள்
கூனலாய் வளைந்து சாய்ந்து
கும்மிருள் சூழ்ந்த தம்மா!
காவிரி பாய்ந்த டெல்டா
கலக்கமுற்(று) அழுது நிற்கும்;
பூவிரி பசுமைச் சோலை
பொட்டலாய் மாறித் தோன்றும்;
ஆவியை நிகர்த்த தென்னை
ஆடு,மா(டு) எல்லாம் மாய்ந்து
பேய்விளை யாடும் பூமி
பிறந்த(து)என் றெண்ணத் தோன்றும்.
இத்தனை சேதம் கண்டும்
இறைவ!நீ இரங்கா விட்டால்
பித்தரைப் போலே நாங்கள்
பிதற்றுதல் இயல்பு தானே.
செத்தவர் குடும்பத் திற்கும்
செத்துக்கொண்(டு) இருப்போ ருக்கும்
மெத்தநல் இழப்பீ டைத்தான்
மேன்மையாய் நல்கச் செய்வாய்.
மத்திய அரசே! உங்கள்
மனத்தினுக்(கு) இசைந்த வாறே
ஒத்ததாம் கருத்துக் கொண்ட
ஒண்தமிழ் அரசைச் சேர்த்தே
உத்தம மாகச் சிந்தித்(து)
உடனடி நிதியைத் தாரீர்!
எத்தனை தடைவந் தாலும்
இப்பெரும் துன்பம் தீர்ப்பீர்.
ஆட்சிசெய் வோரை மட்டும்
அண்டியே இருத்தல் வேண்டா;
மாட்சிமை தாங்கும் வள்ளல்,
மற்றுளார், யாவ ரும்மிவ்
மீட்சிசெய் பணியில் பங்கு
மேற்கொண்டு டெல்டா காப்பீர்.
காட்சிகள் மாறும் வண்ணம்
காரியம் ஆற்று வீரே!
நடுவண அரசே! நாங்கள்
நாடிய நிதியை நல்கி
கொடும்'கஜா'ப் புயலால் நேர்ந்த
குறையெலாம் உடனே தீர்ப்பீர்;
படுமந்த மாக நீவிர்
பணம்தரத் தாம தித்தால்
ஒடுங்கிய மக்கள் தாமே
உயிரற்ற பிணமாய் ஆவர்.
உலகெலாம் வாழும் எங்கள்
ஒண்தமிழ் மக்காள்! நீவிர்
தொலைவினில் வாழு கின்றீர்;
சோழநன் னாடு வீழத்,
தலைவிதி என்று நொந்து
சாம்பிட வேண்டா; இந்த
நிலைதனை மாற்ற ஏலும்
நிதியினை நல்கு வீரே!
தண்தமிழ் நாட்டில் வாழும்
சால்புடை மக்காள் நீவிர்
பண்டைய சிறப்பை டெல்டா
பகுதியில் காக்க வேண்டித்
தொண்டுகள் செய்தும் உம்மால்
இயன்றிடும் நிதியைத் தந்தும்
அண்டைமா நிலத்தார் போற்ற
அனைத்தையும் மீட்க வாரீர்!
அருஞ்சொற் பொருள்:
முந்நீர்---கடல்; அவனி---உலகம்
சள்ளை---துன்பம்; மாட்சிமை---பெருமை
சாம்புதல்--வருந்துதல்; சால்பு---மேன்மை