கொடி பறக்கிறது..
அற்றைநாள் தொட்டு இற்றை நாள் வரையும் கொடியின்
பயன்பாட்டையும் பெருமையையும் குறைத்துச் சொல்ல
இயலாது. ஆளும் வேந்தரானாலும்(தற்காலத்தில் அமைச்சர்
முதலான அரசியல் தலைவரானாலும்) சாதாரண எளிய குடிமகன்
ஆனாலும் கொடியின் இன்றியமையாமையை அறியாதார் இலர்.
தேசியக் கொடிமுதல் தெருக்கோடியில் கடையிலோ, நிறுவனத்திலோ
பறக்கும் கொடிவரை அனைவர்க்கும் தெரிந்த செய்தியே. இத்தகைய
கொடியைப் பற்றி இலக்கியம் இயம்பும் செய்திகளையும் நாட்டு
நடப்பு வாயிலாக அறியும் செய்திகளையும் நோக்குவோம்.
மதுரைக் காஞ்சி தெரிவிக்கும் செய்திகள்:
மதுரை நியமங்கள்(கடைத்தெருக்கள்/வீதிகள்) வரையப்பட்ட ஓவியம்
போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. விழாக் கொண்டாட்டத்தைக் குறிக்கும்
பல்வேறு உருவம் பொறித்த கொடிகள் அந்த நியமங்களில் பறந்து கொண்டி
ருந்தன. முருகனுக்குச் சேவற்கொடி, பெருமாளுக்குக் கருடன் கொடி, சிவ
பெருமானுக்குக் காளைக்கொடி, பராசக்திக்குச் சிம்மக்கொடி என்று அந்தந்தக்
கோவில்களில் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.. வென்ற நாடுகளின்
அடையாளமாக அந்நாடுகளிலிருந்து கொண்டு வரப்படடு ஏற்றப்பட்ட கொடிகள்,
கள்ளுக்கடைகளில் இங்கு கள் விற்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கும்
கொடிகள், பல்வேறு குடிமக்களின் வாழ்விடங்களை அடையாளம் காட்டும்
கொடிகள் இன்னும் பலவிதமான கொடிகள் மலையினின்று விழுந்து குதித்
தாடும் அருவி போல ஆடிப் பறந்து கொண்டிருந்தன.
"ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்துச்
சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி
வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள
நாள்தோ றெடுத்த நலம்பெறு புனைகொடி
நீர்ஒலித் தன்ன நிலவுவேல் தானையொடு
புலவுப்படக் கொன்று மிடைதோ லோட்டிப்
புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி
கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க"
(வரிகள் 365 முதல் 374 முடிய)
இனி, பட்டினப்பாலை கூறும் செய்திகளைக் காண்போம்:
தெய்வக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.
"மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலரணி வாயில் பலர்தொழு கொடியும்"(வரி 160).
அற-மறச் சாலைகளில் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
வெள்ளைவெளேரென்ற வெண்மை நிறத்தில் சோறு படைக்கும்
அறச்சாலை மாடத்தில் கொடி கட்டப்பட்டிருந்தது. கம்பத்தின்
ஓரத்தில் வேல் நடப்பட்டுக் கேடயம் மாட்டப்பட்டிருந்தது.
இங்கும் கொடி பறந்தது. இவை படைவீரர்களுக்கும் காவல்
தொழில் புரிவோர்க்கும் சோறு வழங்கும் அறச்சாலை
என அடையாளம் காட்டும் கொடிகள்.
பட்டி மன்றக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.
"பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்(171ஆம் வரி)
காவிரிப்பூம் பட்டினம் கடற்பகுதியாதலால் அங்கே நிறுத்தப்
பட்டிருந்த நாவாய்களின் உச்சியில் கொடிகள் பறக்கவிடப்
பட்டிருந்தன. மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம் என
அடையாளம் காட்டும் கொடிகளும் பறந்தன. இந்தக் கொடிகள்
மட்டுமன்றிப் பிறபிற கொடிகளும் பல்வேறு உருவங்களில்
பறந்து வெயில் நுழையாத நிழலை உண்டாக்கியது.
இனி சிலப்பதிகாரம் சுட்டும் ஒரு செய்தியைப் பார்ப்போம்:
கோவலனும் கண்ணகியும் சிலம்புகளை விற்று அதனால்
கிடைக்கும் தொகையைக் கொண்டு வாணிகம் புரிய மதுரைக்
குள் நுழைகின்றனர். போர்வெற்றிக் கொடி பறக்கும் மதுரை
நகரின் நெடிய மதிற்சுவரில் பட்டொளி வீசிப் பறக்கும் நீண்ட
கொடிகள் காற்றில் அசைந்தாடின. இதனை இளங்கோவடிகள்
குறிப்பிடும் பொழுது தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டு
அக்கொடிகள் கோவலன் கண்ணகி இருவரையும் மதுரைக்கு
வராதீர்கள் என்று கைநீட்டித் தடுப்பது போல் அசைந்தாடின
என்று குறித்துள்ளார்.
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"
(மதுரைக் காண்டம்--புறஞ்சேரி இறுத்த காதை--189&190).
ஒருவேளை, கோவலன் மதுரையில் களவுக் குற்றம் சாட்டப்
பட்டுக் கொலைசெய்யப்படுவான் என்றும். கண்ணகி கணவனைப்
பிரிந்து ஆறாத் துயருறுவாள் என்றும் அக்கொடிகள் அறிந்திருந்
தனவோ?
இதற்கு நேர்மாறான காட்சியைக் கம்பராமாயணத்தில் காண்கிறோம்.
விசுவாமித்திர முனிவரும் இராமனும் இலக்குவனும் நுழைந்தபொழுது மிதிலை நகரம் "யான் செய்த பெருந்தவத்தின்
விளைவாகத் தாயார் இலக்குமிதேவி இங்கு அவதரித்து உறைகின்றாள்.
அவளை மணம்புரிவதற்காகத் திருமால் வருகின்றார். அவரையும்
அவருடன் வருபவர்களையும் அழகிய மணிகள் கட்டப்பட்ட கொடிகளாகிய
கைகளை நீட்டி விரைவினில் வருக என்று வரவேற்று அழைப்பது சாலவும்
நன்று" என்று எண்ணிக் கொடிகளை அசைத்ததாகக் கம்பர் தற்குறிப்பேற்ற
அணியில் குறிப்பிடுகின்றார்.
"மையறு மலரின் நீங்கி, யான்செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று செழுமணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடிநர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா!"
அந்நாளில் நம் மூவேந்தர்களும் அவரவர்க்குரிய கொடியையும் காவல்மரத்
தையும் முரசுகட்டிலையும் இன்னும் இவைபோன்ற பிற சின்னங்களையும்
பேணிப் பாதுகாத்தனர். ஏனெனில் அவைகளைத் தமது அடையாளங்களாகக்
கருதினர்.சிறப்பாக ஆளுதல் என்பதைக் குறிக்கக் கொடிகட்டி ஆளுதல் என்ற
சொற்றொடரைப் பயன்படுத்துகின்றோம். அதாவது அரசனது ஆட்சியில் எல்லாக்
குடிமக்களும் வளத்தோடும் மகிழ்வோடும் பாதுகாப்போடும் வாழ்கிறார்கள்
என்னும் செய்தி வெளிப்படும். பாண்டியர்க்குரிய மீனக் கொடியும், சோழர்க்குரிய
புலிக்கொடியும், சேரர்க்குரிய விற்கொடியும் பட்டொளி வீசிப் பறந்தன. தற்பொழுது
இந்தியாவின் மூவர்ணக் கொடி(சிவப்பு, வெள்ளை, பச்சை நடுவில் அசோகச்
சக்கரம்) கம்பீரமாகப் பறக்கின்றது.
கொடிகளுக்கு இவ்வளவு சிறப்பும் கவனிப்பும் ஏன் கொடுக்கப்படுகின்றன?
ஏனெனில் பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு மனிதக்குழுவும் தத்தம் அடை
யாளத்தைப் பறைசாற்றவும், தக்கவைக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது.
அடையாளச் சின்னங்கள் எத்தனையோ உலவுகின்ற போதிலும் கொடியே முதன்மை
இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தில்
பாண்டிய மன்னனுக்குக் குளியல் சுண்ணம்(நறுமணப் பொடி) இடிக்கும் அந்தப்புர
மகளிர் அவனது கொடிபற்றியும், தேர்பற்றியும், மணிமுடி பற்றியும், முத்தாரம் பற்றியும்
போற்றிப் பாடிக் கொண்டே உலக்கையால் சுண்ணம் இடித்ததாக ஒரு பாடல் இயம்புகிறது.
"கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித்----தொடிஉலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவேனோ? யானுமோர்
அம்மனைக் காவல் உளேன்."
இதில் கொடிதான் முதன்மையாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.