Sunday 12 February 2023

அகவன் மகளே! அகவன் மகளே!

 அகவன்மகளே! அகவன்மகளே!


குறுந்தொகையில் பயின்றுவரும் ஒரு பாடல் காட்சியைக்

காண்போம். களவொழுக்கத்தில்  ஈடுபட்ட ஒரு தலைவி

தன் தலைவனை நினைத்து அந்த ஏக்கத்தில் இயல்பான

வாழ்க்கையை  மறந்து அயர்வோடும் சோர்வோடும் நட

மாடிவந்தாள்..  சரியாக உண்ணாமல், உறங்காமல்  பித்துப்

பிடித்தவள் போல அலையும் மகளது துயரம் கண்ட தாய்மார்

(பெற்ற தாய் மற்றும் செவிலித்தாய்) யாது காரணத்தால்

இத்துயரம் விளைந்தது? என்று அறிய எண்ணி அகவல்

மகளை(கட்டுவிச்சி--குறி சொல்பவள்) அழைத்து வந்து

கட்டுப் பார்க்கச்  சொன்னார்கள்.  களவொழுக்கம் என்பது,

குடும்பத்தார்க்குத் தெரியாமல் நடைபெறும் நிகழ்வு தானே!

எனவே, மகளது  தளர்ச்சிக்குக் காரணத்தை யறியத் தாயர்

பதறித் துடித்துக் கட்டுப் பார்க்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு

செய்தனர்.


கட்டுப் பார்த்தல் என்பது நெல்லைக் குவித்து வைத்துக்

கொண்டு முருகன் முதலான தெய்வங்களை வணங்கி

அந்நெல் மணிகளை எண்ணிப் பார்த்து, அங்கு அப்போது

நிகழும் நிமித்தங்களையும் கணக்கில் கொண்டு குறி

பார்ப்பது. அச்சமயம் கட்டுவிச்சி தெய்வங்களைப் பற்றியும்

மலைவளத்தைப் பற்றியும் பாடுவது வழக்கம். நெல்மணி

களை எண்ணி ஒற்றைப் படையில் வந்தால் ஒருவித பலனை

யும் இரட்டைப் படையில் வந்தால் வேறுவிதப் பலனையும்

சொல்வது வழக்கம்.

இந்நிகழ்ச்சி நடைபெறும் பொழுது, தலைவியின் தோழியான

வள் இதுதான் தக்க தருணம், தலைவியின் காதலை வெளிப்

படுத்தி விடலாம் என்று முடிவுசெய்து  "கட்டுவிச்சியே! பாடு;

நன்றாகப் பாடு; அவருடைய(தலைவன்) நல்ல, நெடிய  குன்றைப்

பற்றிப் பாடினாயே, அந்தப் பாட்டை மீண்டும் பாடு" என்று

மறைமுகமாக(சாடையாக)த் தாய்மார் அறிந்து கொள்ளும்

வகையில்  பாடலை அரங்கேற்றினாள். அப் பாடல் பின்வருமாறு:

"அகவன் மகளே!  அகவன் மகளே!

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே!  பாடுக  பாட்டே;

இன்னும் பாடுக பாட்டே, அவர்

நன்னெடுங்  குன்றம்  பாடிய  பாட்டே."

(மனவுக் கோப்பன்ன--சங்குமணியினால் ஆகிய கோவையைப்

போன்ற வெண்மை நிறத்தையுடைய ; நன்னெடுங் கூந்தல்--நல்ல

நீண்ட கூந்தலையுடைய;  கட்டுவிச்சி வயது முதிர்ந்த மூதாட்டி

என்று தெரிவிக்கப் பட்டுள்ளது)

இந்தப் பாடல் மூலமாகத் தலைவி ஒரு தலைவனோடு களவு

ஒழுக்கத்தில் ஈடுபட்டுள்ள செய்தியினைத். தாய்மாருக்கு  வெளிப்

படுத்திவிட்டாள் தோழி. இதன்மூலம் தோழி அறத்தொடு நின்றாள்.

ஏனென்றால் களவொழுக்கம் வெளிப்பட்ட பிறகு கற்பொழுக்கம்

ஆரம்பம் ஆகிவிடும்.  தாய்மார் தந்தையிடம் தெரிவித்து, அவர்

மூலமாக ஊராருக்குத் தெரிவித்து வரைவு(திருமணம்)க்கான

பணிகள் மளமளவென்று நடைபெறும். ஒரு தலைவனுக்கும்

தலைவிக்கும்  இடையே  பிறர் அறியாதவாறு  நிகழும் காதல்

நிகழ்வை  அனைவரும் அறிய வெளிப்படுத்துதல் அறத்தொடு

நிற்றல் எனப்படும்.

பாடலின் பொருள்:(யான் இயற்றியது)

அருமைமிகும்  சுவையான  உணவை  வேண்டாள்;

ஆழ்ந்தநல்ல  சுகமான  உறக்கம்  வேண்டாள்;

பருவமகள்  செயல்பாட்டில்  தளர்ச்சி  கண்டு

        பதறியதாய்  குறிசொல்வாள்  உதவி  நாடத்

திருமுருகன்  தனைவணங்கி  முறத்தில்  நெல்லைச்

       சிறப்புறவே  கொட்டி,யவள்  பாட  லானாள்;

அருகிருந்த  தோழி,குறி  சொல்லும்  பெண்ணை

       அவர்நெடிய  குன்றுபற்றிப்  பாடச் 

சொன்னாள்.


இன்னும் இதுபோன்ற பல பாடல்கள் குறுந்தொகையில்

உள்ளன. ஐந்தே வரிகளில் ஒரு நாடகத்தையே அரங்கேற்

றிய புலவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

(குறுந்தொகை எண்: 23; புலவர் ஔவையார்)