அம்பிகாபதிக் கோவை அல்லது பல துறைக் காரிகை.
அம்பிகாபதி கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகனென்றும்
அவர் முதலாம் குலோத்துங்க சோழரின் மகள் அமராவதியைக்
காதலித்ததாகவும் அம்பிகாபதிக்குப் பெண் கொடுக்க விரும்பாத
குலோத்துங்கர் ஒரு நிபந்தனை விதித்ததாகவும் அந்நிபந்தனைப்
படி நடந்துகொள்ளத் தவறியதால் அம்பிகாபதி மரணதண்டனைக்கு
ஆளானதாகவும் நாட்டுமக்களிடம் கதை உலவுகிறது. அவருக்கு
விதிக்கப்பட்ட நிபந்தனை: அரண்மனையில் அரசர், அமைச்சர் முதலான
பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அம்பிகாபதி
சிற்றின்பம் கலவாமல் நூறு பாடல்கள் பாடுதல் வேண்டும். தவறினால்
தலை வெட்டப்பட்டு உயிரிழக்க நேரிடும். நடுவராகப் புலவர் ஒட்டக்
கூத்தர் நியமிக்கப்பட்டார். அம்பிகாபதி நிபந்தனைப்படி நூறு பாடல்களைப்
பாடி முடித்துவிட்டார். ஆனால் மரபுப்படி முதல் பாடல் கடவுள் வாழ்த்தாகும்.
அதனைக் கணக்கில் கொள்ளக் கூடாது. ஆனால் விதியின் விளையாட்
டால் கடவுள் வாழ்த்துப் பாடலையும் கணக்கில் சேர்த்தெண்ணிய அரசிளங்
குமரி கழிபேருவகையுடன் அரண்மனை மேல்மாடத்திலிருந்து எட்டிப் பார்த்து
நூறு பாடல்கள் நிறைவுற்றதாகச் சமிக்ஞை செய்ததனால் அம்பிகாபதி
அரசிளங்குமரி மீது காதல் பாடலைப் பாடிவிட்டார். ஒட்டக் கூத்தர் நிபந்தனையில்
அம்பிகாபதி தோற்றுவிட்டதாகத் தீர்ப்பளித்தார். விளைவு அம்பிகாபதி யின் தலை
வெட்டுண்டது. தன்னால் தான் அம்பிகாபதி நிபந்தனையில் தோற்கநேர்ந்தாகக்
குற்ற உணர்வுடன் அமராவதி உயிர்துறந்தார். பொதுமக்கள் நடுவில் இப்படியான
கதை உலவினாலும் அறிஞர் பெருமக்கள் இந்த மாதிரி நிகழ்வு நேர்ந்திருக்காது.
சோழ மன்னர்கள் தமிழ்ப் புலவர்களிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் காட்டியவர்கள்.
மிகுந்த மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த கம்பருக்கு இத்தகைய பெருந்துன்பத்தை
இழைத்திருக்க மாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றனர். அம்பிகாபதி கம்பர்
மகன் அல்லர்; தண்டி அலங்காரம் என்ற நூலை இயற்றிய புலவர் தண்டியின் மகன்
என்று கூறுபவர்களும் உள்ளனர். எனவே இது ஆதாரமில்லாத கதை என்ற முடிவுக்கு
வருவதே நல்லது. ஏனென்றால் பெரிய புராணம் நூலை இயற்றிய சேக்கிழாருக்குக்
குலோத்துங்க சோழர் பட்டத்து யானை மீது அமரச் செய்து தாமே கவரி வீசியதாகப்
பேச்சு உண்டு. மேலும் கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாரை மிகமிகப்
போற்றினார் குலோத்துங்க சோழர். புலவர் ஒட்டக் கூத்தருக்கும் மிகுந்த மதிப்பளிக்கப்
பட்டது.
அம்பிகாபதி இயற்றியதாகக் கூறப்படும் அம்பிகாபதிக் கோவை என்ற பல துறைக்
காரிகையில் சில உள்ளங்கவரும் பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே
காண்போம:
"உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி
எரிவ(து) அவியா(து) என் செய்வேன்?--வரியரவ
நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்
நெஞ்சிலே இட்ட நெருப்பு".
உரை: பாம்பின் நஞ்சில் தோய்ந்த, தாமரை மலர் போன்ற விழிகளை யுடைய மாதரசி
என் நெஞ்சத்திலே மூட்டிவிட்ட காதல் நெருப்பானது மனமுருகி உடல் கரிந்து உள்ளிருக்கும்
ஈரல் மூண்டெரிவது போல் ஆறாமல் துன்பம் தருகிறது. என் செய்வேன்?
"மையிட்ட கூந்தலும் மானிட்ட கண்ணும் மதிமுகமும்
கையிட்ட கிள்ளையும் வாரிட்ட கொங்கையும் காதினிற்பொன்
செய்திட்ட ஓலையும் சிற்றடி யிட்ட செழுஞ்சிலம்பும்
கைதிட்ட மாக வருபவ ளேயென்னைக் காண்கிலையே".
உரை: மேகத்தை ஒத்த கூந்தலும், மானை நிகர்த்த கண்களும், பிறைநிலவை ஒத்த
நெற்றியும், முழுநிலவை ஒத்த முகமும், கையினிற் பிடித்த கிளியும், கச்சணிந்த
முன் அழகும், காதில் அணிந்த பொன்னால் செய்திட்ட ஓலையும், சிறிய பாதங்களில்
அணிந்த செழுஞ்சிலம்பும் இவையனைத்தையும் முறையாக அணிந்து வருபவளே!
என்னைப் பார்க்கவில்லையே.
"கைத்தலம் தன்னிற் பசும்பொன் வளையல் கலகலென
சத்தம் எழுந்திட நூபுர பாதச் சதங்கைகொஞ்சத்
தத்திமி யென்று நடனம்செய் சம்பீசர் சன்னதிப்பெண்
செத்த குரங்கைத் தலைமேல் சுமந்து திரிந்தனளே."
உரை: கைகளில் பொன்னால் செய்த கங்கணங்கள்
கலகலவென ஓசையெழுப்ப, பாதச் சிலம்பும் கிண்கிணியும்
சிறு ஒலிசெய்ய, தத்திமியென்று நாட்டியம் செய்கின்ற
சம்பீசரது சன்னதிப் பெண், செத்த குரங்கைத் தலைமேல்
சுமந்து திரிந்தாள். இங்கே ஒரு இலக்கிய நயம் காணக்
கிடைக்கிறது. சன்னதிப் பெண் சாமந்திப் பூவைத் தலைமேல்
சூடியிருந்தாள். அதனை மறைமுகமாகச் செத்த குரங்கைச்
(சா மந்தி= செத்த குரங்கு) சூடித் திரிந்தாள் என்று புலவர்
கூறுகிறார்.
"ஞாயிறு போய்விழத் திங்கள்வந் தெய்திட நண்ணியசெவ்
வாயனல் தூவப் புதனம்பு காய்நல் வியாழம்வர
மேயரு வெள்ளிக் கலைசோர நானுனை மேவுதற்குத்
தாய்சனி யாயின ளோரகு நாத தளசிங்கமே"
உரை: கதிரவன் மேற்குக் கடலில் போய் விழ,, நிலவு வந்து
ஒளிவீச, செவ்வாய் அனலைவீசப், புதன் அம்பு போலச் சுட,
நல்ல வியாழன் வரப், பெரிய வெள்ளியினால் ஆடை நெகிழ,
நான் உம்மோடு சேருவதற்கு என் தாய் சனிபோலத் தடையாய்
இருக்கின்றாள் ரகுநாத தளவாயாகிய சிங்கமே!
ஏழு கிழமைகளின் பெயர்களும் பயின்று வந்துள்ள பாடல். தன்
தாயைச் சனியென்று குறிப்பிட்டது காம மிகுதியால் நேர்ந்ததோ?
"மாலாக்கி யென்னைப் பெருவய தாக்கியென் மார்பின்முலை
பாலாக்கி யங்கம் பசுநரம் பாக்கியப் பாவையரை
மேலாக்கிச் சிக்கு விளக்கெண்ணெ யாக்கியென் மேனியெங்கும்
தோலாக்க வோமக னேபிள்ளை யாகிநீ தோன்றினையே".
உரை: பிள்ளைப் பாசத்தால் பைத்தியமாய் என்னையாக்கி, இளமை
ததும்ப நின்ற என்னை வயதில் மூத்தவள் போல் தோற்றம் பெறச் செய்து,
என் மார்பகத்தில் பாலை ஊறச்செய்து, என் உறுப்புகளில் பச்சை
நரம்பு தோன்றும் அளவு என்னைத் தளரச் செய்து, என் வயதுப்
பெண்கள் சிலர் இன்னும் பிள்ளை பெறாமல் என்னைவிட அழகுத்
தோற்றம் காட்ட, நான் சிக்குப் பிடித்த கூந்தலோடு விளக்கெண்ணெய்
வழிய முகம் வாடித் தோன்ற, மேனி முழுவதும் எலும்பும் தோலுமாய்
இளைத்துத் தோன்றுமாறு செய்த மகனே! உன்னைப் பெற்றதனால்
நான் அடைந்த துன்பங்கள் அநேகம். இவ்வளவு துன்பங்களும்
தருவதற்காகவா எனக்குப் பிள்ளையாகப் பிறந்தாய்? சொல் மகனே!
ஆழ்மனத்தில் கடல் போல் பிள்ளைப் பாசத்தை வைத்துக்கொண்டு வெளியே
வெறுப்பது போல் நடித்துப் பேசும் திறம். பார்வை:அம்பிகாபதிக் கோவை என்ற
பல துறைக் காரிகை. உரை: திரு வடிவேல்.