Sunday 25 September 2022

அம்பிகாபதிக் கோவை.

 அம்பிகாபதிக் கோவை அல்லது பல துறைக் காரிகை.


அம்பிகாபதி கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகனென்றும்

 அவர் முதலாம் குலோத்துங்க சோழரின் மகள் அமராவதியைக்

காதலித்ததாகவும் அம்பிகாபதிக்குப் பெண் கொடுக்க விரும்பாத

குலோத்துங்கர் ஒரு நிபந்தனை விதித்ததாகவும் அந்நிபந்தனைப்

படி நடந்துகொள்ளத் தவறியதால் அம்பிகாபதி மரணதண்டனைக்கு

ஆளானதாகவும் நாட்டுமக்களிடம் கதை உலவுகிறது. அவருக்கு

விதிக்கப்பட்ட நிபந்தனை: அரண்மனையில் அரசர், அமைச்சர் முதலான

பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அம்பிகாபதி

சிற்றின்பம் கலவாமல் நூறு பாடல்கள் பாடுதல் வேண்டும். தவறினால்

தலை வெட்டப்பட்டு உயிரிழக்க நேரிடும். நடுவராகப் புலவர் ஒட்டக்

கூத்தர் நியமிக்கப்பட்டார். அம்பிகாபதி நிபந்தனைப்படி நூறு பாடல்களைப்

பாடி முடித்துவிட்டார். ஆனால் மரபுப்படி முதல் பாடல் கடவுள் வாழ்த்தாகும்.

அதனைக் கணக்கில் கொள்ளக் கூடாது.  ஆனால் விதியின் விளையாட்

டால் கடவுள் வாழ்த்துப் பாடலையும் கணக்கில் சேர்த்தெண்ணிய அரசிளங்

குமரி கழிபேருவகையுடன் அரண்மனை மேல்மாடத்திலிருந்து எட்டிப் பார்த்து

நூறு பாடல்கள் நிறைவுற்றதாகச் சமிக்ஞை செய்ததனால் அம்பிகாபதி

அரசிளங்குமரி மீது காதல் பாடலைப் பாடிவிட்டார். ஒட்டக் கூத்தர் நிபந்தனையில்

அம்பிகாபதி தோற்றுவிட்டதாகத் தீர்ப்பளித்தார். விளைவு  அம்பிகாபதி யின் தலை

வெட்டுண்டது. தன்னால் தான் அம்பிகாபதி நிபந்தனையில் தோற்கநேர்ந்தாகக்

குற்ற உணர்வுடன் அமராவதி உயிர்துறந்தார். பொதுமக்கள் நடுவில் இப்படியான

கதை உலவினாலும்  அறிஞர் பெருமக்கள் இந்த மாதிரி நிகழ்வு நேர்ந்திருக்காது.

சோழ மன்னர்கள் தமிழ்ப் புலவர்களிடம் மிகுந்த மரியாதையும் அன்பும் காட்டியவர்கள்.

மிகுந்த மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த கம்பருக்கு இத்தகைய பெருந்துன்பத்தை

இழைத்திருக்க மாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றனர். அம்பிகாபதி கம்பர்

மகன் அல்லர்; தண்டி அலங்காரம் என்ற நூலை இயற்றிய புலவர் தண்டியின் மகன்

என்று கூறுபவர்களும் உள்ளனர். எனவே இது ஆதாரமில்லாத கதை என்ற முடிவுக்கு

வருவதே நல்லது. ஏனென்றால் பெரிய புராணம் நூலை இயற்றிய சேக்கிழாருக்குக்

குலோத்துங்க சோழர் பட்டத்து யானை மீது அமரச் செய்து தாமே கவரி வீசியதாகப்

பேச்சு உண்டு. மேலும் கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாரை மிகமிகப்

போற்றினார் குலோத்துங்க சோழர். புலவர் ஒட்டக் கூத்தருக்கும் மிகுந்த மதிப்பளிக்கப்

பட்டது. 


அம்பிகாபதி இயற்றியதாகக் கூறப்படும் அம்பிகாபதிக் கோவை என்ற பல துறைக்

காரிகையில் சில உள்ளங்கவரும் பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றை இங்கே

காண்போம:

"உருகி உடல்கருகி உள்ளீரல் பற்றி

எரிவ(து) அவியா(து) என் செய்வேன்?--வரியரவ

நஞ்சிலே தோய்ந்த நளினவிழிப் பெண்பெருமாள்

நெஞ்சிலே  இட்ட  நெருப்பு".

உரை: பாம்பின் நஞ்சில் தோய்ந்த, தாமரை மலர் போன்ற விழிகளை யுடைய மாதரசி

என் நெஞ்சத்திலே மூட்டிவிட்ட காதல் நெருப்பானது மனமுருகி உடல் கரிந்து உள்ளிருக்கும்

ஈரல் மூண்டெரிவது போல் ஆறாமல் துன்பம் தருகிறது. என் செய்வேன்?


"மையிட்ட  கூந்தலும்  மானிட்ட  கண்ணும்  மதிமுகமும்

கையிட்ட  கிள்ளையும் வாரிட்ட  கொங்கையும் காதினிற்பொன்

செய்திட்ட  ஓலையும் சிற்றடி யிட்ட செழுஞ்சிலம்பும்

கைதிட்ட மாக வருபவ  ளேயென்னைக் காண்கிலையே".

உரை: மேகத்தை ஒத்த கூந்தலும், மானை நிகர்த்த கண்களும், பிறைநிலவை ஒத்த

நெற்றியும், முழுநிலவை ஒத்த முகமும், கையினிற் பிடித்த கிளியும், கச்சணிந்த

முன் அழகும், காதில் அணிந்த பொன்னால் செய்திட்ட ஓலையும், சிறிய பாதங்களில்

அணிந்த செழுஞ்சிலம்பும் இவையனைத்தையும்  முறையாக அணிந்து வருபவளே!

என்னைப் பார்க்கவில்லையே.


"கைத்தலம் தன்னிற் பசும்பொன் வளையல் கலகலென

சத்தம் எழுந்திட நூபுர பாதச் சதங்கைகொஞ்சத்

தத்திமி யென்று நடனம்செய் சம்பீசர் சன்னதிப்பெண்

செத்த குரங்கைத் தலைமேல்  சுமந்து திரிந்தனளே."

உரை: கைகளில் பொன்னால் செய்த கங்கணங்கள்

கலகலவென ஓசையெழுப்ப, பாதச் சிலம்பும் கிண்கிணியும்

சிறு ஒலிசெய்ய, தத்திமியென்று நாட்டியம் செய்கின்ற

சம்பீசரது சன்னதிப் பெண், செத்த குரங்கைத் தலைமேல்

சுமந்து திரிந்தாள். இங்கே ஒரு இலக்கிய நயம் காணக்

கிடைக்கிறது. சன்னதிப் பெண் சாமந்திப் பூவைத் தலைமேல்

சூடியிருந்தாள். அதனை மறைமுகமாகச் செத்த குரங்கைச்

(சா மந்தி= செத்த குரங்கு) சூடித் திரிந்தாள் என்று புலவர்

கூறுகிறார்.


"ஞாயிறு போய்விழத் திங்கள்வந்  தெய்திட   நண்ணியசெவ்

வாயனல் தூவப்  புதனம்பு   காய்நல் வியாழம்வர

மேயரு வெள்ளிக் கலைசோர நானுனை மேவுதற்குத்

தாய்சனி யாயின ளோரகு நாத தளசிங்கமே"

உரை: கதிரவன் மேற்குக் கடலில் போய் விழ,, நிலவு வந்து

ஒளிவீச, செவ்வாய் அனலைவீசப், புதன் அம்பு போலச் சுட,

நல்ல வியாழன் வரப், பெரிய வெள்ளியினால் ஆடை நெகிழ,

நான் உம்மோடு சேருவதற்கு என் தாய் சனிபோலத் தடையாய்

இருக்கின்றாள் ரகுநாத தளவாயாகிய சிங்கமே!

ஏழு கிழமைகளின் பெயர்களும் பயின்று வந்துள்ள பாடல். தன்

தாயைச் சனியென்று குறிப்பிட்டது  காம மிகுதியால் நேர்ந்ததோ?


"மாலாக்கி யென்னைப் பெருவய தாக்கியென் மார்பின்முலை

பாலாக்கி யங்கம் பசுநரம் பாக்கியப் பாவையரை

மேலாக்கிச் சிக்கு விளக்கெண்ணெ யாக்கியென் மேனியெங்கும்

தோலாக்க வோமக னேபிள்ளை யாகிநீ தோன்றினையே".

உரை: பிள்ளைப் பாசத்தால் பைத்தியமாய் என்னையாக்கி, இளமை

ததும்ப நின்ற என்னை வயதில் மூத்தவள் போல் தோற்றம் பெறச் செய்து,

என் மார்பகத்தில் பாலை ஊறச்செய்து, என் உறுப்புகளில் பச்சை

நரம்பு தோன்றும் அளவு என்னைத் தளரச் செய்து, என் வயதுப்

பெண்கள் சிலர் இன்னும் பிள்ளை பெறாமல் என்னைவிட அழகுத்

தோற்றம் காட்ட, நான் சிக்குப் பிடித்த கூந்தலோடு விளக்கெண்ணெய்

வழிய முகம் வாடித் தோன்ற, மேனி முழுவதும் எலும்பும் தோலுமாய்

இளைத்துத்  தோன்றுமாறு செய்த மகனே! உன்னைப் பெற்றதனால்

நான் அடைந்த துன்பங்கள் அநேகம். இவ்வளவு துன்பங்களும்

தருவதற்காகவா எனக்குப் பிள்ளையாகப் பிறந்தாய்? சொல் மகனே!

ஆழ்மனத்தில் கடல் போல் பிள்ளைப் பாசத்தை வைத்துக்கொண்டு வெளியே

 வெறுப்பது போல் நடித்துப் பேசும்  திறம். பார்வை:அம்பிகாபதிக் கோவை என்ற

பல துறைக் காரிகை. உரை: திரு வடிவேல்.









Thursday 8 September 2022

கொங்கு நாட்டுப் பாணபத்திரர்.

 கொங்கு நாட்டில் நிகழ்ந்த ஏமநாத பாகவதர்- பாணபத்திரர்  மாதிரிக் கதை.


மதுரையில்  சிவபெருமான் நடத்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில்

ஒன்று ஏமநாத பாகவதரின் செருக்கடக்கித் தன் பக்தன் பாணபத்திரரை உய்வித்தது.

இதே போன்று கொங்கு நாட்டுப் பூந்துறைப் பகுதியில்(திருச்செங்கோட்டில்) நிகழ்ந்த

தாகக் கொங்கு மண்டல சதகம் ஒரு கதையைக் குறிப்பிடுகிறது. அது மதுரையில்

நிகழ்ந்ததாகச் சொல்லப்படும்  பாணபத்திரர்- ஏமநாதர் கதை போலவே உள்ளது.

அக்கதை:

பாண்டிய நாட்டில் திருக்குருகூரில் பிரதிவாதி பயங்கரன் என்ற பண்டிதன் வாழ்ந்து

வந்தான். அவன் பல கலைகளில் வல்லவானாகத் திகழ்ந்தான். அண்மையிலுள்ள

நாடுகளுக்குச் சென்று அங்கு வாழ்ந்துவரும் புலவர்களுடன் வாதம் செய்து அவர்களை

வென்று அவர்களிடமிருக்கும் பொருட்களையும் நூல்களையும் அபகரித்து அவர்களை

இழிவுபடுத்துவதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்தான். ஒருமுறை கொங்கு

நாட்டுப் பூந்துறைப் பகுதியான திருச்செங்கோட்டு எல்லையில் வந்து தங்கிக்கொண்டு

திருச்செங்கோட்டு நகரத்தில் வாழ்ந்துவந்த குணசீலன் என்னும் புலவனுக்கு ஓலை

விடுத்தான். அதில் தான் திருச்செங்கோட்டு எல்லையில் தங்கியுள்ளதாகவும் மறுநாள்

தன்னோடு வாதப்போர் புரிதல் வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தான்.


பிரதிவாதி பயங்கரன் அனுப்பிய ஓலையைப் பெற்றுப் படித்த குணசீலன் மிகவும் அதிர்ச்சி

அடைந்தான். பிரதிவாதி பயங்கரனைத் தன்னால் வாதப் போரில் வெல்ல இயலுமா? 

ஒருவேளை, வாதத்தில் தான் தோற்க நேர்ந்தால் தனக்கும் தன் பூந்துறை நாட்டுக்கும் தீராப்

பழியும் இழிவும் வந்துசேருமே என்ற கவலையால் குமைந்து போனான்.. வெகுநேரம் இந்தச்

சிந்தனையில் மூழ்கியிருந்த குணசீலன் ஒருவழியாக மனந்தேறித் திருச்செங்கோட்டு

வேலவன் திருத்தாளைச் சரணடைவதே உத்தமம் என்ற எண்ணத்தில் செங்கோட்டு வேல

வனைச் சிந்தையில் இருத்தித் தொழுதுகொண்டே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டான்.. அவன்

கனவில் வேலவன் தோன்றி "அன்பனே! அஞ்சாதே; பிரதிவாதி பயங்கரனை அச்சுறுத்தி

இவ்வூரைவிட்டே ஓட்டி விடுகிறேன்" என்று சொன்னதாக மறுநாள் தமக்கு நெருக்கமான

நண்பர்களிடமும் ஊரிலுள்ள முதன்மையான நபர்களிடமும் தெரிவித்தான்.


மறுநாள் பொழுது புலர்ந்தது. துயில் நீங்கி விழித்தெழுந்த குணசீலன் குளியல் முதலான

கடன்களை முடித்து ஒருவிதமான பதற்ற உணர்வுடன் பிரதிவாதி பயங்கரனிடமிருந்து

ஏதாவது தகவல் வருமோ என்று மனத்தை அலைபாய விட்டுக்கொண்டிருந்தான்.. இதற்

கிடையே எல்லையில் தங்கியிருந்த பிரதிவாதி பயங்கரன் சுறுசுறுப்பாகத் துயிலெழுந்து

காலைக் கடன்களை முடித்துவிட்டுக் குணசீலனோடு வாதப் போர் நிகழ்த்தப் பல்லக்கில்

கிளம்பி  ஊருக்குள்ளே நுழைந்தான். பல்லக்கில் இருந்தவாறே செங்கோட்டுக் கோவில்

அமைந்திருக்கும் நாகமலையைப் பார்த்துக் கொண்டே " இது நாகமலை யானால், இந்த

நாகம் படத்தை விரித்து ஆடாமலிருக்கும் காரணமென்ன?" என்னும் பொருள்படப் பாடத்

தொடங்கினான்:

"சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமென

அமரிற் படம்விரித் தாடாத தென்னை?"

என்று பாடியவன் இரண்டாம் அடியை முடிக்கச் சிறிதுநேரம் தடுமாறினான். அந்நேரம்

அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் அவன் பாடலைக் கேட்டுக்கொண்

டிருந்ததாகக் கூறி இரண்டாம் அடியை நிறைவு செய்தது மட்டுமல்லாமல் மேலிரண்டு

அடிகளையும் பாடிப் பாடலை நிறைவுசெய்தான்.

"................................................................அஃ(து) ஆய்ந்திலையோ,

நமரின் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த

குமரன் திருமரு கன்மயில் வாகனம் கொத்துமென்றே". எனப் பாடி முடித்தான்.


இது நாகமலை யானால்,  படம் விரித்து ஆடாததற்கு என்ன காரணம்? என்று பிரதிவாதி

பயங்கரன் எழுப்பிய வினாவுக்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், முருகனின் வாகனம்

ஆகிய மயில் கொத்துமென்ற அச்சத்தால் நாகம் படமெடுத் தாடவில்லை" என்று விடை

யிறுத்தவிதம் பிரதிவாதி பயங்கரனைக் குழப்பியது. சரி, விசாரிப்போம் என்று நினைத்து

மாடு மேய்ப்பவனிடம் " ஐயா! நீரோ மாடு மேய்க்கும் தொழில் செய்பவர்; யான் பாடியது

கட்டளைக் கலித்துறை எனப்படும் கடுமையான யாப்பாகும். நீர் யாப்பறிந்தவரா? கூறும்."

என்றார். உடனே, அவர் " ஐயா! நான் தொடக்கத்தில் சிலகாலம் குணசீலரிடம் கல்வி

கற்றேன். என்னால் மற்ற மாணவர்களுக்கு இணையாகப் பின்தொடர இயலவில்லை.

அவர் கற்பித்தவற்றைப் புரிந்துகொள்ள இயலாமல் விழித்ததனைக் கவனித்த அவர்

"இனி மேற்கொண்டு கற்பதற்கு வர வேண்டா" என்று கூறிவிட்டார். ஏதோ, நான் கற்ற

அளவில் தாங்கள் கேட்ட வினாவுக்கு விடையளித்துவிட்டேன். மேற்கொண்டு ஏதாவது

விளக்கம் தேவைப்பட்டால் மற்ற மாணவர்களை அணுகுங்கள் என்று கூறி முடித்தான்..


பிரதிவாதி பயங்கரன் சிந்திக்கத் தொடங்கினான். ஏதோ கொஞ்சம் கல்விகற்ற மாடு

மேய்ப்பவரே இவ்வளவு சரியாக யாப்பிலக்கண முறைப்படி விரைந்து கவிதை பாட

இயலுமென்றால்,  முற்றாகக் கல்வி கற்ற குணசீலரோடு மோதுவது சரியாகுமா?

என்றெண்ணி ஊரைவிட்டே ஓடியதாகக் கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.

பாடல் பின்வருமாறு:(50)

"பெருமை மிகும்அர வச்சிலம் பாமெனிற் பெட்புறுமவ்

வரவு படம்விரித் தாடாத தென்னென் றகத்துனுமோர்

கருவி வெருக்கொள ஆமேய்ப் பவனாக் கனிந்து திரு

மருகன் மயில்கொத்தும் என்றெனச் சொல்கொங்கு மண்டலமே".

மாடு மேய்ப்பவராக வந்தவர் முருகக் கடவுளே என்பது மக்கள் நம்பிக்கை.

முருகனுக்கும் கொங்கு மக்களுக்கும் நெருங்கிய பக்திப் பிணைப்பு காலம்காலமாக  

நிலவி வருகிறது. "குக்குடத்தான் கோயிலொடு குழைக்காதன் கோயில்கொளும்

கொங்கு நாடு" என்று திரு.வி.க. பாடியுள்ளார்.(குக்குடத்தான்=சேவற்கொடியோன்=

முருகன்).