Tuesday 24 January 2023

செம்புலப் பெயல்நீர் போல்....

 செம்புலப்  பெயல்நீர் போல அன்புடை  நெஞ்சம்...


குறுந்தொகை  இலக்கியத்தில் பயின்றுவரும் ஒரு சொல்லோவியத்

தைக் காண்போம்.  விதியின்  வலிமையால் ஒரு தலைவனும்

ஒரு தலைவியும்  சந்தித்துத்  தம் இதயங்களைப் பரிமாறிக்

கொள்கின்றனர். இந்த இயற்கைப் புணர்ச்சி(தலைவனும்

தலைவியும்  முதன்முதலில்  சந்தித்து அளவளாவுதல் இயற்

கைப் புணர்ச்சி எனச் சொல்லப்பட்டுள்ளது) நிகழ்வுக்குப்

பின்னர் தலைவன்  தன்னைப்  பிரிந்து சென்று விடுவான்

என அஞ்சிய  தலைவி குறிப்பு வேறுபாட்டை(எண்ணத்தின்

வேறுபாட்டை) வெளிப்படுத்தினாள். அதனைக் கண்ட

தலைவன் கூறியது:

புலவர்:செம்புலப் பெயல்நீரார்(இவரது உண்மைப் பெயர்

இலக்கியத்தில் குறிப்பிடப் படவில்லை. அதனால்அவரது

பாடலில்  பயிலும் ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ

அவர் பெயராகக் குறிப்பது சங்க இலக்கிய வழக்கம்)

"யாயும்  ஞாயும்  யாரா  கியரோ?

எந்தையும்  நுந்தையும்  எம்முறைக்  கேளிர்?

யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்?

செம்புலப்  பெயல்நீர்  போல

அன்புடை  நெஞ்சம்  தாம்கலந்  தனவே!"

பொருள்:(இக் கவிதை என்னால் இயற்றப் பட்டது)

உன்தாயும்  என்தாயும்  உறவினர்கள்  அல்லர்;

  உன்தந்தை  என்தந்தை  எவ்வகையில்  கேளிர்?

உன்தனையான்  என்தனைநீ  எவ்விதத்தில்  அறிவோம்?

  ஊழ்தானே  நமையொன்றாய்  இணைத்ததென ஓர்வோம்;

பன்னரும்நல்  செம்மண்சேர் நிலத்தனிலே பெய்த

  பாங்கான  மழைநீர்போல் நம்மனங்கள்  அன்பால்

ஒன்றிணைந்தே  ஐக்கியமாய்  ஆனதிதை  யாரும்

  ஒருபோதும்  பிரித்திடவே  இயலாது, மெய்யே!


தெளிவுரை:

என்னுடைய  தாயும், உன் தாயும் ஒருவருக்கொருவர்

உறவினர் அல்லர்; என் தந்தையும் உன் தந்தையும்

எந்த வகையில் உறவினர் ஆவர்?  உறவினர் அல்லர்;

இப்போது  விதியால் சந்தித்துச் சேர்ந்திருக்கும்

யானும்  நீயும்இதற்கு முன்பு  அறிமுகமானவர் அல்லர்;

இவ்வாறு நாம் இருவரும்  ஒருவரையொருவர் அறியாத

நிலையில் , செம்மண் நிலத்தின் மீது  பொழிந்த மழை

நீர் அம்மண்ணோடு  இரண்டறக் கலந்து அதன் நிறத்தை

அடைவது. போல,  அன்புடைய  நம் இருவரது நெஞ்சங்

களும் தாமாகவே ஒன்றுபட்டுப் பிரிக்க முடியாதபடி

கலந்து விட்டன.  (இனி யாராலும் நம்மைப் பிரிக்கவே

இயலாது என்னும் குறிப்புத் தோன்றப் பாடப்பட்டுள்ளது.)

புலவரின்  உவமைநயம்  பாராட்டுக் குரியது.

Thursday 5 January 2023

சிலமந்தி அலமந்து முகில் பார்க்கும்.

 சிலமந்தி அலமந்து முகில்பாரக்கும்.


இயற்கைப் பேரிடரை எதிர்கொள்வது மனித குலத்துக்கே மிகவும்

அறைகூவல் விடுக்கும் விடயமாகும்.  ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள்

அஞ்சுவது இயல்புதானே. 'இடியேறுண்ட நாகம் போல' என்பது பழமொழி.

பேரிடியைக் கேட்டால் நாகம் அஞ்சும் என்பது இலக்கியச் செய்தி. ஆனால்

நாகத்துக்குக் காது என்ற புலனேயில்லை; அதனால் கேட்க இயலாது

என்பது அறிவியல் கூறும் செய்தி. அதனால்தான் இலக்கியத்தில் பாம்பைக்

'கட்செவி' என்று குறிப்பிடுவார்கள்(கண் என்னும் புலன் செவி என்னும்

புலனின் பணியையும் கவனித்துக் கொள்ளும் என்பது இலக்கிய நம்பிக்கை).

இயற்கைச் சீற்றத்தைக் கண்டு அஞ்சாத உயிரினமேயில்லை  என்பதுதான்

நினைவலிருத்திக் கொள்ள வேண்டிய செய்தி.


பக்தி இலக்கியத்தில் கூட இயற்கை வருணனை அழகாகக் குறிப்பிடப்படுகிறது.

திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் திருவையாற்றுப்  பதிகத்தில்

ஒரு காட்சியை விவரிக்கிறார். அது பின்வருமாறு:

ஐந்து புலன்களின் இயக்கங்களும் முடங்கி அறிவு மங்கிக் கோழை உருவாகி

மேல்நோக்கி வந்து மூச்சுத் திணறவைக்கும் பொழுதில் என்ன செய்வது என்று

தடுமாறும் நேரத்தில் " அஞ்சல் வேண்டா" என்று கூறி அருள்புரியும் கடவுள்(சிவன்)

வீற்றிருக்கும் கோவில் அமைந்திருக்கும் திருவையாற்றில் சிவன்கோவிலில்

நடனமாடும் மங்கையர்கள் முழவு என்னும் இசைக் கருவியின் முழக்கத்துக்கேற்ப

நடனமாடுகின்றனர். அம்முழவோசை இடியோசை போல் அதிர்கின்றது. இந்த

அதிர்வினால் திருவையாற்றில் வாழும் சில மந்திகள் இடி இடிக்கிறது; மழைவரும்

என்று அஞ்சி அருகிலுள்ள மரங்களில் ஏறி முகிலை(மேகத்தை) உற்று நோக்கு

கின்றன. கருத்த உச்சிமேகம் இரண்டு அல்லது மூன்று நாழிகையளவு மழையைப்

பொழியும்.  வெளுப்பான மேகம் அதிக மழையைப் மொழியாது. மழையின்

அளவைப் பொருத்துத்  தங்குமிடத்தைத் தேர்வுசெய்து ஓய்வெடுக்கலாம் என்ற

எண்ணம் தோன்றியிருக்கலாம். இந்த இடத்தில் திருஞான சம்பந்தர் 'சில மந்திகள்'

என்று ஏன் குறிப்பிட்டார்? புதிதாகத் திருவையாற்றுக்கு வந்த மந்திகள் இதுபோன்ற

கோவில் நடன நிகழ்வையும் அதனால் எழும்பும் முழவோசையையும் கேட்டிருக்க

மாட்டா. பழைய மந்திகள் "இது இயல்பான நிகழ்வு" என்று பழக்க வழக்கத்தினால்

தெளிவு பெற்று இது குறித்து அஞ்சமாட்டா. இவ்வளவு செய்தியையும் உள்ளடக்கிய

பாடல் பின்வருமாறு:

"புலனைந்தும்  பொறிகலங்கி  நெறிமயங்கி  அறிவழிந்திட்(டு)

         ஐம்மேல்  உந்தி

அலமந்த  போதாக  அஞ்சலென்(று)  அருள்செய்வான்

         அமருங்  கோவில்

வலம்வந்த  மடவார்கள்  நடமாட  முழவதிர

         மழையென்(று)   அஞ்சிச்

சிலமந்தி  யலமந்து  மரமேறி  முகில்பார்க்கும்

         திருவை  யாறே"

(ஐ=கோழை; அலமருதல்=அஞ்சுதல், வருந்துதல்; முகில்=மேகம்)

மந்திகள் இயல்பாக மரத்தில் ஏறி விளையாடுவதைப் பார்த்துத் தம் கருத்தை ஏற்றி

மிக அழகாக விவரித்துள்ளார் திருஞான சம்பந்தர். இதனைத் தற்குறிப்பேற்ற அணி

என்பர் புலவர் பெருமக்கள்.


இதனைப் போன்ற ஒரு காட்சியைப் படைத்துள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.

அவர் இயற்றிய பாடல் பின்வருமாறு:

"கிளையினிற் பாம்பு தொங்க, விழுதெனக் குரங்கு தொட்டு

விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்த தைப்போல்

கிளைதொறும் குதித்துக் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம்

ஒளிப்பாம்பாய் எண்ணி யெண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்".

பொருள்:

ஓர் ஊரில் ஆலமரமொன்று பரந்து விரிந்து பற்பல விழுதுகளைத்

தொங்க விட்டுக்கொண்டு கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தோற்றம்

அளித்தது. ஒரு விழுதில் பாம்பொன்று சுற்றிக் கொண்டு ஓய்வெடுத்

தாற்போல்  அமைதியாக இருந்தது. அவ்வழியே வந்த ஒரு குரங்கு

விழுதில் பாம்பு சுற்றிக் கொண்டிருந்தைக் கவனிக்காமல் விழுதைப்

பிடித்து விளையாட நினைத்தது. குரங்கு விழுதைத் தொட்டவுடனே

பாம்பு சீறிக்கொண்டு தலையைத் தூக்க, அதனைக் கண்ட குரங்கு

அலமந்து விழுதிலிருந்து கையை விடுவித்து அருகிலுள்ள கிளைக்குத்

தாவி அங்கிருந்து அடுத்தடுத்த கிளைகளுக்குத் தாவி  ஒரு நொடியில்

உச்சியை அடைந்து பாம்பினால் ஏற்பட்ட பீதியடங்காமல் தன்வாலை உற்று

உற்றுப் பார்த்துத் தன்வால்தான், பாம்பன்று, என்று உறுதிப் படுத்திக்

கொண்டு அமைதியடைந்தது. "பாம்பென்றால் படையும் நடுங்கும்" அல்லவா?

ஒரு விழுதில் பாம்பைக் கண்டு பீதியடைந்த குரங்கு பிற விழுதுகளையெல்லாம்

அச்சத்துடனேயே உற்று நோக்கிக் கிளைகளிலே தாவியேறி மர உச்சிக்குப்

போன பின்னும் பீதியடங்காமல் தன்வாலைக்கூடப் பாம்பு தானோ என்று

அச்சத்துடனேயே உற்று உற்றுப் பார்த்துத் தன்வால்தான், பாம்பன்று என

உறுதிசெய்த பின்னரே நிம்மதியடைந்தது. அருமையான கற்பனையன்றோ?