Saturday 4 April 2020

நாணின்மை செய்தேன், நறுநுதால்!

"நாணின்மை செய்தேன், நறுநுதால்!"

நூல்:கலித்தொகை; பாடல் எண்:37; புலவர்: கபிலர்;
திணை: குறிஞ்சி.

மலைநாட்டில் ஒரு தலைவி தன் தோழியிடம் கூறினாள்:
"குளத்தில் மலர்ந்திருக்கின்ற குவளை மலர் போன்ற மை
தடவிய கண்ணையுடைய தோழியே! இதனை நோக்குவாய்.
ஒரு நாள் வில்லேந்திய வீரன் ஒருவன் அவனால் விரட்டப்பட்ட
வலிமையான விலங்கின் காலடித்தடத்தை ஆராய்பவன் போல
இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு வந்தான். சிறப்புப் பொருந்
திய மாலையை அணிந்திருந்தான். என்னை உற்று நோக்கினான்.
என் எழிலால் கவரப்பட்டான்.அதனைப்பற்றி வெளிப்படையாகத்
தெரிவிக்காமல் நகர்ந்து சென்றுவிட்டான். பலநாட்கள் இதைப்
போலவே என்னை உற்று நோக்கிவிட்டுத் தன் மனக் கிளர்ச்சியைப்
பற்றி யாதொன்றும் சொல்லாமல் சென்றுவிடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தான்.

எனக்கும் அவன்பால் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் ஆணாகப்
பிறந்த அவனே தன் உள்ளக் கிளர்ச்சியைத் சொல்லத் தயங்கிய
பொழுது, பெண்ணாகிய நான் சொல்வது முறையாகாது அன்றோ?
இதனால்  என் உறக்கம் பாதிக்கப் பட்டது. அவனின் உள்ளக் கிளர்ச்சிக்
குப் பெயர் காதலா? நான் அறியேன். எனக்கு அவன்பால் ஏற்பட்ட மனக்
கிளர்ச்சி எத்தகையது? அதுவும் புரியவில்லை. இப்படியே வருவதும்,
என்னை நோக்குவதும் பின் யாதொன்றும் சொல்லாமல் நகர்வது மாக
அவன் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அவனைக் கண்ணால் காண
இயலாது போய்விடும். இதைப் பற்றியே சிந்தித்துச் சிந்தித்து நான்
சோர்வடைந்துவிட்டேன். என் தோள்கள் இனம் புரியாத துயரால் மெலிந்து
விட்டன.

ஒருநாள் இந்த இனம் புரியாத துயரம் மிகவும் வாட்டியதால்  எங்கிருந்தோ
துணிச்சல் கிளம்பி அதன் விளைவாகப் பெண்களுக்கே உரித்தான நாணத்
தைத் துறந்து ஒரு செயலைச் செய்தேன். நறுமணம் மிக்க நெற்றியை யுடையதோழியே!
தினைக்கதிர்கள் விளைந்து முற்றிச் செழித்திருந்த தினைப்புனத்தில் கிளிகள்
பயிரைக் கொத்திப் பாழாக்காமல் பாதுகாக்கும் பணி செய்யுங் காலத்தில் அருகில்
தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் அவ்வப்பொழுது ஆடுவது வழக்கம். அதுபோல
ஒருநாள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பொழுது அவன் வந்தான். உடனே நான்
அவனிடம் "ஐயா! இந்த ஊஞ்சலைக்  கொஞ்சநேரம் ஆட்டிவிடும்" என்றேன். உடனே
அவன் "பெண்ணே! நன்று, நன்று" என்று கூறி அவன்ஊஞ்சலை ஆட்டிவிடலானான்.
அச்சமயத்தில் ஊஞ்சலைப் பிடித்திருந்த என் கை நெகிழ்ந்தது போல நடித்து அவன்
மார்பில் வீழ்ந்து மயங்கியது போலக் கிடந்தேன். அவன் பதறிப் போய் என்னைப்
பூப்போல எடுத்து அணைத்துக் கொண்டான். நானும் மயக்கத்தில் இருப்பது போல
வே அவன்மேல் விழுந்து கிடந்தேன். மயக்கம் தெளிந்தது போல எழுவேனாயின்,
"ஒளிரும் நகையணிந்த மங்கையே! நீ செல்க" என்று கூறி அவன் அவ்விடத்தை விட்டு
அகல்வான். அத்தகைய பண்பும் இரக்கமும் உடையவன்." என்று இயம்பினாள். இந்த
நிகழ்வுக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் காதல அரும்பியிருக்கும். ஏனென்றால்
அவனுக்கு அவள் பால் ஈர்ப்பு இருந்தது. வெளிப்படையாகச் சொல்ல‌ வெட்கப்பட்டான்.
அவளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் காதல் விரைவாகத் தழைத்து
மலர்ந்திருக்கும். இனி, பாடலை நோக்குவோம்:
"கயமலர் உண்கண்ணாய்! காணாய், ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன், வருமென்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தானுற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல்நாளும்;
பாயல் பெறேஎன், படர்கூரந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயருழப்பேன்; ஆயிடைக்
கண்நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்;
பெண்ணன்(று)  உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்'(டு)என்(று) ஒருநாளென்
தோள்நெகிழ்(பு) உற்ற துயரால் துணிதந்தோர்
நாணின்மை செய்தேன்; நறுநுதால்! ஏனல்
இனக்கிளி யாம்கடிந்(து) ஓம்பும் புனத்தயல்,
ஊசல் ஊர்ந்தாட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிதென்னை ஊக்கி' எனக்கூற,
'தையால்! நன்(று)'என்(று) அவன்ஊக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன்மார்பின்; வாயாச்செத்(து)
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்;மேல்
மெய்யறியா தேன் போல் கிடந்தேன்; மன்; ஆயிடை
மெய்யறிந்(து) ஏற்றெழு வேனாயின், மற்றொய்யென்,
'ஒண்குழாய்! செல்கெனக் கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.
அருஞ்சொற் பொருள்:
கயமலர்=குளத்து மலர்; உண்கண்ணாய்=மை எழுதிய கண்ணாய்;
வயமான்=வலிமையான விலங்கு; மாண்ட தொடை=சிறந்த மாலை.
நோக்குபு=நோக்கி; பெயரும்=செல்வான்; பாயல் பெறேஎன்=உறக்கம்
கொள்ளேன்; படர்=துயரம்; நாண்இன்மை=வெட்கம் இல்லாமை;
நறு நுதால்=நறுமணம் மிக்க நெற்றியை உடையவள்; ஏனல்=தினைப்
புனம்; வாயாச் செத்து=பதறியடித்துக் கொண்டு;ஒண் குழாய்=ஒளிரும்
அணிகலன் அணிந்தவளே.
 அங்கண்=இரக்கம்.
ஒரு சிறந்த நாடகம் போலப் பாடல் அமைந்துள்ளது. படித்து இன்புறுவோம்.