நற்றிணையில் குறிப்பிடப்படும் திருமாவுண்ணியும்
சிலப்பதிகாரக் கண்ணகியும் ஒருவரா?
சிலப்பதிகாரம் குறிப்பிடும் கண்ணகியை நாம் அறிவோம்.
சிலப்பதிகாரம் சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூலன்று. கி.பி.
ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
சிலர் கி.பி.எட்டாம் நூற்றாண்டு என்று கருத்துரைக்கின்றனர்.
ஆனால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் சங்க காலத்
தில் நடந்தவை என்று எண்ணுகின்றனர். சங்க காலம் என்பது கி.மு.
மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை
கணக்கிடப்படுகிறது. சிலப்பதிகாரக் கதை அது இயற்றப்பட்ட காலத்
திற்கும் முந்திய காலத்தைச் சேர்ந்தது. ஏனெனில் அதில் குறிப்பிடப்
படும் பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் முதலான
வர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள். இளங்கோவடிகள் தாம் செங்
குட்டுவன் தம்பி எனக் கூறியுள்ளார். அவர் ஐந்தாம் நூற்றாண்டில்
வாழ்ந்தவராக இருக்க வாய்ப்புண்டு. ஒரே பெயரில் பலவேறு அரசர்கள்,
புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்ளனர் என்பது
தமிழக வரலாறு காட்டும் உண்மை. ஔவையார், நக்கீரர் முதலிய பெயர்
கொண்டவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.
சிலப்பதிகாரக் கதை சங்க காலத்தில் நிகழ்ந்தது. சஙககால மக்களுட்
பெரும்பாலோர் கண்ணகி கோவலன் கதையைப் பற்றித் தெரிந்து
வைத்திருந்தனர்.நற்றிணை 216ஆம் பாடலில் வரும் வரிகள் வருமாறு:
"எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகார் கழனியின் இதணத்(து) ஆங்கண்
ஏதி லாளன் கவலை கவற்ற
ஒருமுலை யறுத்த திருமா வுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும்
வேட்டோர் அல்லது பிறர்இன் னாரே!"
பொருள்:
வேங்கை மரத்தில் உறையும் முருகக் கடவுள் காக்கின்ற கட்டுப்
பரணாகிய இடத்திலே அயலான் ஒருவன் உண்டாக்கிய கவலை
உள்ளத்தை வருத்துதலால் தன் ஒரு முலையை அறுத்துக் கொண்ட
திருமாவுண்ணியின் கதையைக் கேட்டோரும் அத்தன்மையதாகவே
நம்மைக் கைவிட்டனராயினும் நம்மால் விரும்பப்பட்ட தலைவரை
யன்றிப் பிறர்யாவராயினும் நமக்கு இன்னாதாரேயாவர்.
இப் பாடல் மருதத் திணையில் பரத்தையின் கூற்றாக வரும் பாடல்.
நமக்கு அது முக்கியம் அன்று. பாடலுக்குள் சொல்லப்பட்ட திருமா
வுண்ணியைப் பற்றிய செய்திதான் நமக்கு வேண்டியது. திருமா
வுண்ணி என்பதற்குப் பொருள் அழகில் திருவை(இலக்குமி) வென்றவள்.
சிலப்பதிகாரம் முதல் காதையில் "போதில் ஆர் திருவினாள் புகழுடைய வடிவு"
என்று போற்றப் பட்டாள். அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவைப்
போன்றவள் என்பது பொருள். திருமாவுண்ணி வேங்கை மரத்தின்கீழ்க் கவலை
யுடன் நின்றனள் என்று சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது.
"பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ் ஓர்
தீத்தொழில் ஆட்டியேன் யான் என் றேங்கி"
கண்ணகி நின்றதாகச் சிலம்பு குறிப்பிடும். மலைவளம் காண வந்த சேரன்
செங்குட்டுவனிடம் மலைவாழ் மக்கள் கூறியது:
"ஏழ்பிறப்பும் அடியேம்; வாழ்க நின் கொற்றம்;
கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை யிழந்து தனித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்"
(வஞ்சிக் காண்டம்; 24. குன்றக் குரவை காதை)
சங்க காலத்தில் ஒரு விநோதமான பழக்கம் பெண்களிடையே நிலவியதாக
அறிகிறோம் அதாவது எல்லையற்ற சினத்துக்கோ, துன்பத்துக்கோ ஆளாகும்
பொழுது ஒரு முலையை அறுத்து எறிவதை மேற்கொண்டனர். புறநானூற்றில்
ஒரு தாய் தன் மகன் போரில் புறமுதுகிட்டுத் தப்பித்தான் என்ற செய்தியைக்
கேட்டவுடன் ஆவேசம் கொண்டு " இந்தச் செய்தி உண்மையானால் அவனுக்குப்
பாலூட்டிய என்முலையை அறுத்தெறிவேன்" என்று கூறியதாகப் பாடல் 278இல்
நச்செள்ளையார் என்ற புலவர் கூறுகிறார்.
"படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டவென்
முலையறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெருதுவந் தனளே!"
இதே போன்று முலையை அறுத்தெறியும் பழக்கம் குஜராத் மாநிலத்தில் வாழ்ந்த
பாட், சாரின் ஆகிய பழங்குடி மக்கள் வாழ்க்கையில் நிலவியதாகவும் எதிரியை
அழிக்க முலையை அறுத்து வீசிப் பின்னர் பகுச்சாரா என்னும் பெண் தெய்வமாக
அழைக்கப் பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எல்லையற்ற ஆத்திரத்தில் ஒருமுலையை அறுத்தெறிந்த செயலும், வேங்கை மரத்
தடியில் தனித்துத் துயரத்துடன் நின்ற செயலும் நற்றிணையிலும் சிலப்பதிகாரத்
திலும் கூறப்படுகின்றன. இந்த ஒற்றுமையை வைத்தே திருமாவுண்ணியும்(நற்றிணை
யில் குறிப்பிடப் படுபவள்) சிலப்பதிகாரக் கண்ணகியும் ஒரே நபர்தான் என்று கூறு
கிறோம்.
ஆனால் சில அறிஞர் பெருமக்கள் நற்றிணை சுட்டும் திருமாவுண்ணி வேறு;
சிலப்பதிகாரம் சுட்டும் கண்ணகி வேறு என உரைக்கின்றனர். அவர்கள்
சொல்லும் காரணம் நற்றிணையில் பயின்றுவரும் கீழ்க்கண்ட வரிகள்
திருமாவுண்ணியின் காதலன் ஏதிலாளன் போல் நடந்து கொண்டதால் தன்
காதலின் உண்மைத் தன்மையை நிரூபிக்கத் தன் ஒரு முலையை அறுத்து
எறிந்து வழக்காடு மன்றத்தில் உள்ளவர்க்கு மெய்ப்பித்தாள். ஏனெனில்
அந்தக் காலத்தில் ஒரு சில கயவர்கள் பெண்களோடு களவுக் காதல் கொண்டு
விட்டுப் பின்னர் அதனை மறுத்திருப்பர். அம் மாதிரி கயவன் ஒருவன்தான்
திருமாவுண்ணியை ஏமாற்ற முனைந்திருப்பானோ?. அவள் வழக்காடு மன்றத்தைக்
கூட்டித் தன் காதலை மெய்ப்பித்து விட்டாள். கபிலர் பாடிய குறுந்தொகை 25ஆம்
பாடல் " யாரும் இல்லைத் தானே கள்வன்; தானது பொய்ப்பின் யானெவன்
செய்கோ?" என்ற பாடல் மூலம் அக்காலத்திலும் கயவர்கள் ஒருசிலர் இருந்தனர்
என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறு
நபர்கள் என்று கூறினர்.
ஆனால், ஒரு முலையை அறுத்த செய்தியும், வேங்கை மரத்தடியில் தனித்துச் சோக
மாக நின்றதாகக் குறிப்பிடப்படும் செய்தியும் இருவரும் ஒரே நபர் தான் என்ற
முடிவுக்கு வரத் தூண்டுகின்றன. நற்றிணைப் பாடலில் குறிப்பிடப்படும் "ஏதிலாளன்"
என்ற சொல் பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் என்பர் அறிஞர்கள்.
அவனைக் கண்ணகி முன்பின் பார்த்ததில்லை. அவளுக்கு அவன் ஏதிலாளன் தானே.
அதனால்தான் அவளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு(கோவலன் கொலை) ஏற்பட்டது.
மலைவாழ் மக்கள் கண்ணகியைக் கோவலன் வானத்துக்கு அழைத்துச் சென்றதாகக்
கூறவே வேந்தன் சேரன் செங்குட்டுவன் பத்தினிக்குக் கோவில் எழுப்ப முடிவு செய்தான்.
இமயம் வரை படையெடுத்துச் சென்று சிலைவடிக்கத் தேவையான கல்லைக் கொணர்ந்து
கோவில் கட்டி முடித்தான். பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்துக்குரிய பதிகப் பாடலில்
குறிப்பிடப் படுவதாவது:
"வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்
கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கான்நவில் கானம் கணையின் போகி
ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை
இன்பல் அருவிக் கங்கை மண்ணி"
இமயத்திலிருந்து கல்கொண்டுவந்து கண்ணகிக்குக் கோவில் கட்டினான் என்று பரணர்
பாடியுள்ளார்.
இப்படியாகப் பத்தினி வழிபாட்டைத் தொடங்கிவைத்த சேரன் செங்குட்டுவன் கண்ணகி
புகழைத் தன் ஆட்சிப் பகுதி முழுவதும் பரப்பினான். கண்ணகியின் புகழ் தமிழ்நாடு
முழுவதும் பரவியது. பின்னர் அண்டை நாடான இலங்கைக்கும் பரவியது. சேரநாடு
கேரளாவாக மாறியபிறகு கண்ணகி பகவதியானாள். ஆனால் அடிப்படைக் கதைகள்
சிலப்பதிகாரச் செய்திகளை ஒட்டியே அமைந்தன. கொடுங்கோளூர் பகவதியம்மன்
ஒற்றை முலைச்சி என்று அழைக்கப் படுகிறாள். சிலப்பதிகாரக்கதை வில்லுப் பாட்டா
கவும் அம்மானைப் பாட்டாகவும் பாடப்படுகின்றன.ஆற்றுக்கால் பகவதியம்மன் ஆலயத்
தில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடு
கின்றனர். ஆனாலும் சேரநாடு கேரளாவாக மாறியதால் அப்பகுதிமக்கள் கண்ணகி
என்னும் பெயரையே அடியோடு மறந்து விட்டுப் பகவதியம்மன் என்னும் பெயரையே
விரும்பிக் கொண்டாடுகின்றனர்.
இலங்கையிலும் கண்ணகி வழிபாட்டில் சிக்கல் உருவாகிவிட்டது. தொடக்கத்தில்
கண்ணகை என்று கொண்டாடப்பட்ட கண்ணகி பிற்பாடு பௌத்தமத வெறி
யாளர்களால் புறக்கணிக்கப் பட்டாள். கண்ணகி வழிபாடு பௌத்தம் சார்ந்த பத்தினிக்
கடவுள் வழிபாடாக மாற்றப்பட்டுள்ளது. பௌத்த மதப் பத்தினி வழிபாடு கண்ணகி
வழிபாட்டுக்கும் காலத்தால் முந்தியது என்று கூறிக் கொள்கின்றனர். ஆறுமுக
நாவலர் என்ற பெரும் புலவர் சமணர் போற்றும் கண்ணகிக்குச் சைவர்களாகிய
நாம் வழிபாடியற்றுவதா? என்று கூறித் தடுத்ததாக அறிஞர் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் கண்ணகி கொண்டாடப் பட்டாலும் மக்கள் ஒருவித அச்ச உணர்வுடன்
தான் கொண்டாடுகின்றனர். போட்டிக்குத் திரௌபதியம்மன் வழிபாடு குறுக்கிடு
கிறது. இடையில் அமங்கலமாக இருப்பதாகவும் அபசகுனமாக இருப்பதாகவும்
சென்னை மெரீனாவில் கடற்கரைச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. மக்கள்
பெரிய அளவில் எதிர்க்கவில்லை. நல்லவேளை பழையபடி அச்சிலை மெரீனாவில்
கடற்கரையில் நிறுவப் பட்டுள்ளது.
இப்படியாகச் சேரன் செங்குட்டுவன் தொடங்கிய கண்ணகி வழிபாடு ஏதோ நடை
பெறுகிறது என்றுதான் சொல்லல் வேண்டும்.
பார்வை: முனைவர் சிலம்பு நா.செல்வராசு, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு
ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி அவர்களின் ஆய்வுக் கட்டுரை.