Saturday 29 October 2022

வலிப்பு நோய் நீக்கிய கலம் செய் கோ.

 வலிப்பு நோய் நீக்கிய கலம் செய் கோ.

(கொங்கு மண்டல சதகம் குறிப்பிடும் கொங்கக் குயவர்).


கொங்கு மண்டல சதகம் ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடு

கின்றது. கரிகாலச் சோழர் மகளுக்கு  ஏற்பட்ட பெரிய வலிப்பு

நோயைக்  கொங்கு நாட்டைச் சேர்ந்த ஒரு குயவர் மண்ணால் ஒரு

பாவை செய்து குறிபார்த்துச் சுட(நோயாளியை அல்ல--அந்த

மண்பாவையை) அவ்வலிப்பு நோய் விலகியது என்று சதகப் பாடல்

(பாடல் எண்: 89) தெரிவிக்கிறது. தொடர்புடைய பாடல் பின்வருமாறு:

"கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பும்

எரியாம் உடலை மயக்கமண் கோவன் இறைமகளைப்

பரிபா லனஞ்செய மண்பானை யிற்குறி பார்த்துச்சுட

மரியாமல் அவ்வலி ஏகிய துங்கொங்கு மண்டலமே".


விளக்கம்:

கரிகாலர் என்னும் சோழர் மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.

எத்தனையோ மருத்துவர்கள் தங்களால் இயன்ற மருத்துவம் செய்தும்

சிறிதேனும் நோய் குணமாகவில்லை. அப்பொழுது கொங்கு நாட்டுக்

குயவர் ஒருவர் இந்நோயை உறுதியாகவும் வெகு விரைவாகவும்

நீக்குவார் என்று பலபேர் சொல்லக் கேட்ட வேந்தர் கரிகாலர் அக் குயவரைத்

தம் நாட்டுக்கு அழைத்துவர ஆணையிட்டார். அரச கட்டளைப்படி குயவர்

சோழநாட்டுக்கு வந்து சேர்ந்து வேந்தர் முன் வணங்கி நின்றார்.

வேந்தர் குயவரைப் பார்த்துப் பேசத்தொடங்கினார். "ஐயா! நீர் வலிப்பு நோயைக்

குணப்படுத்துவதாகச் சொல்லுகின்றனர். நீர் என்ன மருத்துவம் செய்ய எண்ணியுள்ளீர்?"

குயவர்: "வேந்தே! வலிப்பு நோய் ஏற்படும் உடல் உறுப்புக்குச் சூடு போடுவது மூலம்

குணப்படுத்துவேன்."

கரிகாலர்: "குயவரே! என் மகள் இளங் குழந்தை; சூட்டைப் பொறுக்க மாட்டாமல் துடிதுடித்து விடுவாள்".

குயவர்:"எம் அண்ணலே! அரசிளங் குமரியின் உடலிற் படாமல் சூடு போட்டு நோயை

விரட்டிடுவேன்".

கரிகாலர்:: ",அப்படியானால்  உம் பணியைத் தொடங்குக".

உடனே குயவர் மண்ணால் அரசிளங்குமரி போல் ஒரு பாவையைச் செய்தார். அக் குழந்

கைக்கு வலிப்பு எந்த இடத்தில் ஏற்படும் என்று கேட்டறிந்து  மண்பாவையில் அந்தப் 

பாகத்தைக் குறிபார்த்து நெருப்பில் புரட்டியெடுக்கப்பட்ட இரும்புக் கோலால் சூடு போட்டார்.

அந்நோய் அடியோடு நீங்கியது.

இந்த மருத்துவ முறை நம்ப முடியாததாக இருப்பினும் ஒட்டியம்-சல்லியம் என்னும் மந்திர

சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாகக் கொங்கு மண்டல சதகம் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட

பொருளில்(மண்ணால்) பாவை செய்து அப்பாவையின் உறுப்பில் ஊசி முதலியவற்றைக்

குத்துதல், சூடு போடுதல் போன்ற செய்கைகளால், இருக்கின்ற நோயை நீக்குதல், இல்லாத

நோயைப் புதிதாக உருவாக்கல் முதலான ஜால வித்தைகள் செய்வது ஒட்டியம்-சல்லியம்

என்னும் மந்திரவகையில் அடங்கும். நான் அறிந்தவரை குயவர் பெருமக்கள் 'அக்கி' என்

னும் நோய்க்குச் செம்மண்ணைக் கரைத்துக் குழம்பாக்கி"அக்கி  எழுதுதல் " என்ற

மருத்துவம் இன்றைய நாள் வரையில் செய்துவருகின்றனர். வலிப்பு நோய்க்கான இந்தச்

சூடு போடும்(மனிதருக்கு அல்ல--மண்பாவைக்கு) மருத்துவம்/ஜால வைத்தியம் செய்கின்

றார்களா? என்பது ஐயமே.


கொங்கு மண்டல சதகத்தில் வேறொரு குறிப்பும் காணப்படுகிறது:

வலிப்பு நோய் ஏற்பட்டுப் பிற்பாடு நீங்கியது சங்ககாலக் கரிகாலர் மகளுக்கல்ல என்றும்,

அது இடைக்கால விக்கிரம சோழர் மகளுக்கு ஏற்பட்டு நீங்கியது என்றும், பொன்கலூர் 

நாட்டு வானவன்சேரி என்னும் ஊரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றதென்றும், குறும்பி நாட்டுக்

கற்றாங்காணி ஊரிலுள்ள ஒரு கொங்குக் குயவர் அங்கு வந்து குறிசுட்டார் என்றும்

குயவர் பெருமக்கள் பாதுகாத்து வைத்துள்ள பழைய ஓலைச் சுவடியொன்றில் குறிப்

பிடப்பட்டுளது.இவ்வாறான குறிப்பு சதக நூலில் காணப்படுகிறது.

Saturday 15 October 2022

பகையரசர் மீது வெகுண்டு பாய்ந்த பாண்டியன் யானை.

 பகையரசர் மீது பாண்டியன் யானை காட்டிய ஆவேசம்.


முத்தொள்ளாயிரம் காட்டும் ஒரு சுவையான காட்சி. பாண்டியன்

அவ்வப்போது தலைநகருக்குள் உலாப் போவது வழக்கம். வழக்கப்படி

அன்றைய நாளில் உலாப் போவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாண்டியன் தன் குதிரை மீதேறி உலாப் போக ஆயத்தமாக இருந்தான்.

பாதுகாப்புக்காகப் படைவீரர்கள் நூறு பேர் வேலேந்தி அணிவகுத்து

நின்றுகொண்டிருந்தனர். அனைத்துப் பரிவாரங்களும் உலாவுக்கு

ஆயத்தமாகி வேந்தனின் சைகைக்காகக் காத்து நின்றனர். பாண்டியன்

தன்னுடைய  மனத்துக்கு உகந்த களிற்று யானைக்காகக் காத்திருந்தான்.

எதிர்த்திசையிலிருந்த குளத்துக்கு நீராடச் சென்ற யானை நீராடி முகபடாம்

முதலான அணிகலன்களை அணிந்து செம்மாந்த நடை நடந்து வந்து கொண்டிருந்தது.


பாதுகாப்புப் படை வீரர்களுக்கு முன்பாகப் பாண்டியனை ஆதரித்து வரும்

சிற்றரசர்கள், ஒருகாலத்தில் பாண்டியனுக்குப் பகையரசர்களாக விளங்கிப் போரில்

தோற்கடிக்கப்பட்டுச் சரணடைந்து  மன்னிப்பு மூலமாகத் தம் நாடுகளை மீட்டுக்

கொண்ட நட்பு நாட்டு மன்னர்கள் தம் மகுடம் மிளிர அணிவகுத்து நின்றனர்.

பாண்டியனின் யானை வந்து சேர்ந்தது. யானைக்கு மற்ற விலங்குகளைக் காட்டிலும்

அறிவுக் கூர்மை, மோப்ப சக்தி, நினைவாற்றல் அதிகம் என்றாலும் கூர்மையான

கண்பார்வை கிடையாது.. கிட்டப் பார்வைக் கோளாறு கொண்டது. தொலைவிலிருக்கும்

பொருட்கள் தெளிவாகத் தெரியாது. கிட்டத்தில் வந்தவுடன் முன் வரிசையில் நின்றிருந்த

பழைய பகையரசர்களை அவர்களிடமுள்ள கொடி,குடை, முடி முதலானவற்றை வைத்து

இனங்கண்டு அவர்களை நோக்கி ஆவேசமாகப் பிளிறியது. யானைக்குத் தெரியுமா

அவர்கள் பாண்டியனிடம் சரணடைந்து மன்னிப்புப் பெற்றவர்கள் என்ற உண்மை.தன்னுடைய

நினைவாற்றல் மூலம் இந்த மன்னர்கள் பகையரசர்களாய் இருந்தபோது தனக்குச் செய்த

கொடுமைகள், தான் அவர்களின் படைவீரர்களைப் பந்தாடியது போன்ற பழைய நினைவுகளால்

சினத்தோடு பிளிறிக் கொண்டு அவர்கள் மீது பாயத் துடித்தது. யானைப் பாகன் அதன் கழுத்தில்

கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுத்து அதனைக் கட்டுக்குள் கொண்டுவரப் பெருமுயற்சி

செய்கிறான். கயிற்றை இழுத்ததில் கழுத்தில் கட்டிய கயிறு அறுந்து போகிற நிலைதான் 

ஏற்பட்டது. யானையின் சினத்தைக் கட்டுப்படுத்தப் பாகனால் இயலவில்லை.


பழைய பகையரசர்கள்(மன்னிப்புப் பெற்றதால், தற்போது நண்பர்கள்)  ஆவேசமடைந்த 

யானை என்னென்ன கொடுமை இழைக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால்

அணிவகுப்பில் நின்றிருந்த அவர்கள் திடுக்கிட்டுப் பின்வாங்கினர். அப்பொழுது அவர்கள்

சற்றே நிலைகுலைய, அவர்களின் மணிமுடிகள் அவர்களுக்கு  முன்புறத்தில் தரையில்

விழுந்தன.  பாண்டியன் ஏறிவந்த குதிரை அப்படி விழுந்த பொன்முடிகளை உதைத்து

உதைத்துப் பெருமிதத்தோடு முன்னேறி நடந்து வந்தது. குதிரையின் குளம்பானது

மணிமுடியில்  இருக்கும் பொன்னின் மாற்றை உரைத்துப் பார்க்கும் "உரைகல்" போல்

விளங்கிற்று. பாடலைப் பார்ப்போம்:(பாடல் எண்: 57)

"நிரைகதிர்வேல் மாறன்தன்  நேரார்க்கண்(டு) ஆனை

புரைசை அறநிமிர்ந்து பொங்க----அரசர்தம்

முன்முன்னா வீழ்ந்த  முடிகள்  உதைத்தமாப்

பொன்னுரை கற்போல் குளம்பு".

அருஞ்சொற் பொருள்:

நிரைகதிர்வேல் மாறன்=வரிசை வரிசை யாகக் கூரிய வேலேந்திய படைக்குரிய

பாண்டியன்;

நேரார்க்கண்டு= பகையரசர்களை அவர்கள் கைக்கொண்டிருக்கும் கொடி, குடை, முடி

முதலியவற்றால் இனங்கண்டு;

புரைசை அற நிமிர்ந்த= கழுத்தில் கட்டியிருந்த கயிறு அறுந்து போகும்படி ஆங்காரத்

துடன் பொங்கி முன்னேற;

பொன்னுரை கற்போல் குளம்பு=கீழே விழுந்த மணிமுடி களைப் பாண்டியன் குதிரை

உதைத்து உதைத்து நடந்து முன்னேறியதால் அதன் குளம்பு மணிமுடியிலிருந்த

பொன்படிந்து பொன்னின் மாற்றை உரைத்துப் பார்க்கும் கல்போல் மிளிர்ந்தது.


பார்வை: முத்தொள்ளாயிரம், உரைக் குறிப்பு எழுதியவர் இரசிகமணி

                  டி.கே.சிதம்பரநாதனார்.