நாணிக்கண் புதைத்தல் (இடையூறு கிளத்தல்).
அகப்பொருள் இலக்கியத்தில் தலைவன் தலைவி சந்தித்துக்
கொள்ளும் பொழுது தலைவி நாணத்தால் தன் கண்களை
மூடிக் கொள்ளும் நிகழ்வை இடையூறு கிளத்தல் என்று புலவர்கள்
குறிப்பிடுவர். ஏனெனில் தலைவியின் முக அழகை முழுதாகப்
பார்த்து மகிழத் தலைவன் விரும்புவான். ஆனால், பெண்மைக்கே
உரிய இயற்கை நாணத்தினால் தலைவி தன் கண்களை மூடிக்கொண்டால்
(கண் புதைத்தால்) தலைவனுக்குத் துன்பம் ஏற்படுவது இயல்பு அன்றோ?
அதனால்தான் இத்துறைக்கு இடையூறு கிளத்தல் என்று புலவர்கள் பெயர்
சூட்டியுள்ளனர். இது மிகவும் நுணுக்கமான உணர்வு. தலைவியின் முக
அழகைக் கண்டுகளிக்கத்தான் தலைவன் தலைவி பின்னால் சுற்றிச்சுற்றி
வந்தான். தற்பொழுது முகத்துக்கு அழகு தரும் கண்களைத் தலைவி கைகளால்
மூடிக் கொண்டால் தலைவன் திண்டாடித்தான் போவான். அகப்பொருள்
நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறும் கோவை இலக்கியத்தில் நாணிக்கண்
புதைக்கும் நிகழ்வை ஒவ்வொரு புலவரும் தம் திறமையை யெல்லாம்
ஒருங்கு திரட்டிக் கற்பனையைச் சிறகடித்துப் பறக்கவிட்டுக் கவி படைப்பர்.
சிறந்த கோவை இலக்கியமான தஞ்சைவாணன் கோவையில் புலவர் பொய்யா
மொழிப்புலவர் இந்நிகழ்வை எவ்வாறு படைத்துள்ளார் என்று பார்ப்போம்.
தலைவன் தலைவியிடம் கூறுகின்றான்:
கேடில்லாத தாமரைத் திருமாளிகை சிறந்ததென்று என் இதயத் தாமரையில்
வீற்றிருப்பவரே! இரண்டு கொம்புகளையும்(தந்தம்) ஒரு நீண்ட தும்பிக்கையையும்
கொண்ட மதயானையின் மீது வீற்றிருந்து தஞ்சையை(சிவகங்கை மாவட்டத்தில்
உள்ள தஞ்சாக்கூர்) வலம்வரும் வாணனின் வையை நாட்டில் வாழ்கின்ற மக்கள்
தாம் உழைத்து ஈட்டும் தனத்தை(பணத்தை)ப் புதைத்துவைக்கமாட்டார் என்று
சொல்லப்படுவது சரிதான் என்று மெய்ப்பிப்பதுபோல் நீர் உம் தனத்தை(முன்னழகை)
மறைக்காமல் மதர்த்த வேல்போன்ற கண்களைப் புதைக்கின்றீர். இச்செயல் எனக்குத்
துன்பம் தருகின்றது. (வையை சூழும் நாட்டு மக்கள் பணத்தைப் புதைத்து வைக்காமல்
தானம், தர்மம் செய்துவிடுவது வழக்கம்). பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட
மானிடரை ஔவையார் கண்டித்துள்ளார். அது தொடர்பான பாடல் பின்வருமாறு:
"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்
பாவிகாள்! அந்தப் பணம்".
தஞ்சைவாணன் கோவைப் பாடல்:
" சிதையா முளரித் திருமா ளிகையிற் சிறந்ததென்றன்
இதயார விந்தத் தினிதிருப் பீரிரு கோட்டொருகை
மதயானை வாணன் வரும் தஞ்சை சூழ்வையை நாட்டுறைவோர்
புதையார் தனமென்ப தோ?மதர் வேற்கண் புதைத்ததுவே".
(தனம்=பணம்; பெண்களின் முன்னழகு; முளரி=தாமரை;
புதைத்தல்=மறைத்தல்)
இனி, இதே துறையில் இயற்றப்பட்ட தனிப்பாடல் ஒன்றைப்
பார்ப்போம்:
"காலையர விந்தம்; கழுநீர் உடன்கலந்தால்
மாலையர விந்தம் மயக்காதோ?---பாலைப்
பழிக்கின்ற மென்மொழியீர், பாண்டியனார் ஊரை
அழிக்கின்ற தென்னோ அது."
தலைவன் கூற்று:
காலை அரவிந்தம்(மலர்ந்த தாமரை) போன்ற உம் கைகளால்
கழுநீர்(குவளை மலர்) போன்ற உம் கண்களை மூடிக்கொள்கிறீர்.
அதனால் மாலையில் கூம்பிய மொட்டுப் போன்ற உம் முன்னழகால்
நான் கிறங்கி மயக்கம் அடைகிறேன். ஏன் இந்தத் துன்பம் தருகிறீர்?
மென்மையிலும் சுவையிலும் பாலைத் தோற்கடிக்கும் பேச்சுடைய
பெண்ணே! உம் செயலால் பாண்டியனார் ஊரை அழிக்கின்றதேனோ?
பாண்டியனார் ஊர் மதுரை என்ற கூடல். நீர் நாணிக் கண் புதைப்பதனால்
நாம் சந்தித்துக் கூடிக் கொள்ளும் வாய்ப்பைக் கெடுக்கிறீர்.. இப்
பாடலில் பாண்டியனார் ஊர் என்று சாமர்த்தியமாகச் சொல்லிக்
கூடல் நிகழ்வு தடைப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார் புலவர். மிக மிக
நயமான கற்பனை.
இந்தத் தனிப்பாடல் 'கலைச்செல்வி' என்பவர் தொகுத்து உரையெழுதி
வெளியிட்ட தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ளது. புதுக்கோட்டை மீனாட்சி பதிப்பகத்தின் வெளியீடு.
காலை அரவிந்தம்= மலர்ந்த தாமரை= கைகளுக்கு உவமை.
கழுநீர்=குவளை மலர்=கண்களுக்கு உவமை.
மாலை அரவிந்தம்=கூம்பிய தாமரை மொட்டு=முன்னழகுக்கு உவமை.