Wednesday 14 August 2019

ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத்
தாழ்ப்பாள்.

நம் நாட்டில் அரசாட்சி செய்த அரசர்களைப் பற்றியே
ஆதாரம் மிக்க வரலாறு இல்லாத பொழுது புலவர்களைப்
பற்றிய வரலாற்றைப் பற்றி என்ன சொல்ல இயலும்?
திருவள்ளுவர், ஔவையார், கம்பர், ஒட்டக் கூத்தர், புக
ழேந்தியார், அருணகிரி நாதர், காளமேகனார் போன்ற
புலவர்களைப் பற்றிய நம்பத் தகுந்த வரலாறுகள் கிடைக்க
வில்லை. சிறிதளவு உண்மையும் பெருமளவு  கற்பனையும்
கலந்த கதைகள் உலவுகின்றன. கல்வெட்டுச் செய்திகள்,
புலவர் பெருமக்கள் படைத்த இலக்கியங்கள், சிற்றிலக்கி
யங்கள், பாடல்கள் முதலியவற்றை ஒருங்கே ஆய்ந்து
ஓரளவு நம்பகமான வரலாற்றை எழுத வேண்டியதாகிறது.

அதன்படி, இடைக்காலத்தில் சோழப்பேரரசு மிகப்பெரும்
புகழோடும் படைவலிமையோடும் ஆட்சி நடத்திக் கொண்
டிருந்த பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்
றாண்டின் இறுதிக் காலக் கட்டம் முடிய செயங்கொண்டார்,
கம்பர், ஒட்டக் கூத்தர், புகழேந்தியார், ஔவையார் போன்ற
பெரும் புலவர்கள்  தமிழுக்குத் தொண்டுசெய்துகொண்டிருந்
தனர். இவர்களில் ஒட்டக் கூத்தருக்கு மட்டுமே ஓரளவு நம்பக
மான வரலாறு கிடைக்கிறது. செயங் கொண்டாரையும், கம்ப
ரையும் ஒட்டக் கூத்தர் மிகவும் புகழ்ந்து பாடியுள்ளமையால்
அவர்கள் கூத்தர் காலத்துக்கு முந்திய காலத்தவர்கள் என்று
தீர்மானிக்கலாம். ஏனென்றால் சம காலத்தில் வாழ்ந்தவர்களுக்
குள்ளேதான் போட்டி, பொறாமை காரணமாகப் பூசல் விளைகிறது.
அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் கூத்தர், புகழேந்தியார், ஔவை
யார் ஆகியோர் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாக நம்பினால் தவறு
இல்லை.

ஒட்டக் கூத்தரின் இயற்பெயர் கூத்தர் என்பதாகும். தில்லை நடராசரைக்
குறிக்கும் சொல்லாகும். ஒட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் கெட்டிக்
காரராக விளங்கியமையால் ஒட்டக் கூத்தர் என்னும் பெயர் உருவானதாகச்
சிலர் சொல்வர். எதிரில் உள்ளவர் பாடும் கருத்தை ஒட்டிப் பாடுவதில் தேர்ச்சி
பெற்றவர் என்பதனால் இப்பெயர் உருவாகியிருக்கும் என் வேறு சிலர் சொல்வர்.
இவர் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த மூன்று சோழ வேந்தர்களுக்குக் கல்வி
கற்பித்த ஆசான் ஆகவும் அவ்வவர் அவைக்களத்தில் தலைமைப் புலவராகவும்
விளங்கியவர். விக்கிரம சோழன்(1120--1136), அவர் மகன் இரண்டாம் குலோத்துங்
கன்(1136--1150), அவர் மகன் இரண்டாம் இராசராசன்(1150--1163) ஆகிய சோழப்
பேரரசர்கள் மீது மூவருலாப் பாடியவர்.மூன்று பெருவேந்தர்களுக்குக் குருவாக
விளங்கியமையால் அரசியல் செல்வாக்கும் உடையவர். இது காரணமாகச் சற்றே
செருக்கும் உடையவர்.

புகழேந்திப் புலவர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப் படுகிறது.
தமிழ்ப் புலமையில் கூத்தருக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர். வரகுண பாண்டிய
வேந்தனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். முன்கோபமோ, செருக்கோ
சிறிதும் இல்லாதவர். நளவெண்பா என்னும் இலக்கியத்தை இயற்றியவர். வரகுண
பாண்டியனின் மகளுக்கு ஆசானாக விளங்கியவர். வரகுண பாண்டியன் தன் மகளை
இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு மணம்செய்து கொடுத்து அப்பெண்மணியைப்
புகுந்த வீட்டுக்கு அனுப்பிவைத்த பொழுது சீர்வரிசைகளுக்குப் பொறுப்பாளராகவும்
தன் மகளுக்கு நல்ல குடும்ப நெறிகளைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் புகழேந்தி
யாரையும் மகளுடன் அனுப்பினான்.
 பாண்டிய இளவரசியோடு(தற்பொழுது சோழ அரசி) வந்த புகழேந்தியாருக்கும்  சோழ
மன்னனின் அவைப் புலவர் கூத்தருக்கும் புலமைப் பூசல்கள் அடிக்கடி நடைபெற்றன.
பொதுவாகவே, சமகாலப் புலவர்கள் பிணக்கும் பூசலும் இல்லாமல் ஒற்றுமையாக
வாழ்தல் அரிதாகும். கூத்தரின் செருக்கான குணத்துக்கும் புகழேந்தியாரின் அமைதி
யான குணத்துக்கும் ஒத்துப் போகவில்லை. அவ்வப்போது இருவரும் தத்தம் பேரரசரைப்
புகழ்ந்து பாடிக் கொண்டனர். ஒரு  சமயம்  கூத்தர் பாண்டியனின் பட்டத்து யானை
கனவட்டம் சோழனின் பட்டத்து யானை கோரம் என்பதற்கு நிகராகாது என்றும், பாண்டிய
னின் வைகைநதி சோழனின் காவேரிக்கு ஈடாகாது என்றும், பாண்டியனின் மீன்கொடி
சோழனின் புலிக்கொடிக்குச் சமமாகாதென்றும்,  பாண்டியனின் வேப்பம்பூ மாலை சோழ
னின் ஆத்தி மாலைக்கு நேராகாது என்றும், பாண்டியனின் கொற்கைநகர் சோழனின்
உறையூரைப் போலாகாது என்றும், பாண்டியனின் சந்திரகுலம் சோழனின் சூரிய குலத்
துக்கு ஒப்பாகாது என்றும் பாட, உடனே புகழேந்தியார் பாண்டியனின் சின்னங்களைப்
புகழ்ந்தும் சோழனின் சின்னங்களை இகழ்ந்தும் எதிர்ப்பாட்டுப் பாடினார். விவாதத்
தின் இறுதியில் கூத்தர் கீழ்க்கண்ட பாடலைச் சொல்லத் தொடங்கினார்:
"வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
என்றும்  முதுகுக்(கு) இடான்கவசம்" என்று பாடிக் கொண்டிருக்கையிலேயே இடை
மறித்த புகழேந்தியார் மீதியுள்ள பாதிப் பாட்டைத் தமது சொற்களைக் கொண்டு
கீழ்க்கண்டவாறு நிறைவுசேய்தார்:
..................................................................................----துன்றும்
வெறியார்  தொடைகமழும்  மீனவர்கோன்  கைவேல்
எறியான் புறங்கொடுக்கின்   என்று".
கூத்தர் சொல்ல நினைத்த செய்தி:
எமது சோழ மன்னன் முதுகுக்குக் கவசம் அணிய மாட்டான்.
ஏனென்றால் அவன் வெற்றி நாயகன்; வீர, தீர பராக்கிரமம்
உடையவன். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழையல்லன்.
ஆனால் இடையிலேயே மறித்த புகழேந்தியார் அந்தப் பாட்டைத்
தடம் மாறிச் செல்லும்படியாக மாற்றிப் பாடினார்:
புகழேந்தியார்  சொன்ன செய்தி:
சோழ வேந்தன் முதுகுக்குக் கவசம் அணிய மாட்டான்; ஏனென்றால்
ஒருவேளை போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓட நேர்ந்தாலும்,
பாண்டிய வேந்தன் தமது வேலைப் புறமுதுகு காட்டி ஓடுவோர் மீது
எறியவே மாட்டான். இது மிக மிக நிச்சயம்.
இந்தப் பாடல் மூலம் சோழ வேந்தனை இழிவு படுத்தியதாகவும்
வேறு பல குற்றச் சாட்டுகளை எடுத்துரைத்தும்  கூத்தர் சோழ
வேந்தனின் சினத்தைத் தூண்டிவிட்டார். இதனைச் செவிமடுத்த
சோழ வேந்தன் புகழேந்தியார்மீது கடும் சினமும் வெறுப்பும் கொண்
டான். தனது வீரர்களை ஏவிப் புகழேந்தியாரைச் சிறையில் அடைக்கச்
செய்தான்.

புகழேந்தியாருக்கு நேர்ந்த அவலத்தைக் கேள்வியுற்ற சோழ அரசி,
தனது கணவனாகிய சோழவேந்தன் மீது சினம் கோண்டாள். தனக்கு
ஆசானாக விளங்கிய புகழேந்தியாரைச் சிறையில் அடைத்த செயல்
தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதினாள். சோழ வேந்
தனிடம் ஊடல் கோண்டு அந்தப் புரத்தில் ஒரு அறைக்குள் நுழைந்து
கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வழக்கம் போல அரசவை  நிகழ்ச்சி
முடிந்ததும் அந்தப்புரத்துக்கு  விரைந்து வந்த சோழன் மெல்லக் கதவைத்
தட்டினான். அண்மையில்தான் திருமணம் நடந்துள்ளது. அதனால் மிக்க
ஆவலுடன்  மனைவியைப் பார்க்க வந்த மன்னன் ஏமாற்றமடைந்தான்.
பலமுறை கதவைத் தட்டியும் திறக்காததால் அரசி தன்னிடம் ஊடல்
கொண்டுள்ளதை யறிந்தான். மிகவும் ஏமாற்றத்தோடு அரசவைக்குத்
திரும்பி வந்து தன் குருநாதர் கூத்தரிடம் நடந்ததை எடுத்துரைத்து
"நீவிர் பக்குவமாக அரசிக்கு அறிவுரை பகர்ந்து அவள் ஊடலைக்
கைவிட உதவல் வேண்டும்" என்று மன்றாடினான். அக்காலத்தில்
மன்னனுக்காக அரசவைப் புலவர்கள் சமரச முயற்சி மேற்கொள்வது
இயல்புதான். அதன்படியே கூத்தரும் அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.
கூத்தர் சற்றே செருக்கும் ஆணவமும் கொண்டவர். புகழேந்தியார்
மீதுள்ள வெறுப்பால் குழைவும் கனிவும் இல்லாமல் அரசியை
நோக்கிப் பாடலானார்:
நானே இனியுனை வேண்டுவ தில்லை, நளினமலர்த்
தேனே! கபாடம் திறந்திடு வாய்;திற  வாவிடிலோ
வானே றனைய  இரவி குலாதிபன் வாயில்வந்தால்
தானே திறக்கும்நின்  கையித  ழாகிய  தாமரையே.
பொருள்: நான் இனி உன்னைக் கெஞ்சி வேண்டத்
தேவையில்லை.  அரசி, கதவைத் திறந்திடுவாயாக.
அப்படித் திறக்காவிட்டால்  சூரியகுல வேந்தனாகிய
சோழ மன்னன் உன்னை நாடிக் கதவருகில் வந்தால்
அவன் மேனியிலிருந்து கிளம்பும் சந்தன மணத்தாலும்
அவனைப் பற்றிய இனிய நினைவுகளாலும் மயங்கி
உன்னை அறியாமல் உன் கையிதழாகிய தாமரை
தானே கநவைத் திறக்கும். எனவே, அதற்கு இடமளிக்
காமல் நீயே கதவைத் திறப்பாய்.
ஏற்கெனவே, அரசி தன் ஆசான் சிறையில் வாடும்
கொடுமையினை எண்ணிக் குமுறிக் கொண்டிருக்கும்
வேளையில் கூத்தர் குழைவும், கனிவும், கெஞ்சுதலும்
இல்லாமல் அதிகாரத் தோரணையில் பாடியது அவளுக்கு
அளவுகடந்த சினத்தை உண்டாக்கியது. உடனை கதவின்
மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டுக் கொண்டாள். இதன்
காரணமாகவே ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்
பாள் என்ற சொல்லடைவு உருவாயிற்று. அதாவது,
பிடிக்காத ஒருவரின் கருத்துக்கோ/செயலுக்கோ
அல்லது பிடிக்காத ஒரு நிகழ்வுக்கோ இருமடங்கு
எதிர்வினை ஆற்றுவதை இச் சொல்லடைவு குறிக்
கும்.  பொதுவாக, ஊடலை க் கைவிடக் கோரிக்கை விடும்
போது பணிவும், கனிவும், குழைவும், நெகிழ்ச்சியும் குரலில்
வெளிப்படுதல் வேண்டும். இது போர்க்களம் அன்று. குடும்
பக் களம். ஊடலில் தோற்பவர் வெல்வர்; வெல்பவர் தோற்பர்.
ஊடலில் வெற்றி பெற ஆடவர் தோற்றல் வேண்டும். கவிச்
சக்கரவர்த்தி கூத்தருக்கும் இந்த நியதி தெரியும்.  புகழேந்தி
யார் மீதுள்ள புலமைக் காய்ச்சலாலும், சோழமன்னன் மீதுள்ள
அளவுகடந்த அன்பினாலும், அன்றைய காலக் கட்டத்தில் சோழப்
பேரரசின் செல்வாக்கை எண்ணியும்  அதிகாரம் புலப்படக்
கோரிக்கை வைத்தார். கோரிக்கை மறுக்கப்பட்டதும் அல்லாமல்
இருமடங்கு எதிர்வினையும் நிகழ்ந்தது. அதாவது கூத்தரின்
பாட்டுக்குக் கூடுதல் தாழ்ப்பாள் இடப்பட்டது.

இச் செய்தியை அறிந்த சோழமன்னன் அரசியின் ஊடலுக்குக்
காரணம் அவள் குருநாதரின் சிறைவாசமே என்று புரிந்து
கொண்டு புகழேந்தியாரைச் சிறையிலிருந்து விடுதலை
செய்து அந்தப் புரத்துக்கு அனுப்பி வைத்தான். தன் மாணவி
யாகிய சோழ அரசியின் அறைக் கதவருகில் வந்து நின்று
குழைவும் கனிவும் தோன்றுமாறு இதமாகவும் நெகிழ்ச்சி
யாகவும் பாடத் தொடங்கினார்:
இழையொன் றிரண்டு  வகிர்செய்த நுண்ணிடை ஏந்துவள்ளைக்
குழையொன் றிரண்டு விழியணங் கேகொண்ட கோபந்தணி;
மழையொன் றிரண்டுகை மானா பரணன்நின் வாயில்
   வந்தால்
பிழையொன் றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே.
பொருள்: நூலை இரண்டாகப் பிளந்தது போன்று நுண்
ணியதும் வள்ளைக் கொடியை ஒத்ததும் ஆகிய இடை
யை உடையவளே! குண்டலங்கள் இரண்டும் ஆடச்
சிவப்பேறிய விழிகளை யுடைய ஆரணங்கே! மழை
போல் வாரி வழங்கும் இரண்டு கைகளையுடைய
மானாபரணனாகிய சோழமன்னன்(மானாபரணன்--
மானத்தை ஆபரணமாக உடையவன்--சோழர்களின்
பட்டப் பெயர்) நின் கதவருகே வரும்போது சிறப்புமிக்க
பாண்டியர் குடியிற் பிறந்த நீ உன் கணவனாகிய
சோழ மன்னன் புரிந்த பிழை ஒன்றிரண்டைப் பொறுத்துக்
கொண்டு சமாதானம் அடைவாய்.(சோழ மன்னன் புரிந்த
பிழைகள் ஒட்டக் கூத்தரின் பேச்சைச் செவிமடுத்ததும்
அவர் வேண்டுகோளை யேற்றுப் புகழேந்தியாரைச் சிறை
யிலடைத்ததும் ஆகும்). பாண்டிய இளவரசி(தற்போது சோழ
அரசி) கதவைத் திறந்து தன் குருவை வணங்கி நின்றாள்
என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?