Thursday 29 October 2020

குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத்

 குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்....


பெருமாள் கோவிலில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் புளியோதரை 

மிகச் சுவையுள்ளதாக  இருக்கும். பெருமாள் கோவில் புளிச்சாதம்

அவ்வளவு புகழ்பெற்றது. புளிச் சாதம்  கட்டுச் சோறு என்றும் அழைக்

கப் படுகிறது. பயணம் மேற்கொள்பவர்கள் வழியில் பசிக்கும் வேளையில்

உண்டு பசியாறப் புளிச் சோற்றினைத் துணியில் கட்டி எடுத்துச் செல்வது

வழக்கம். அதனால் அதனைப் பொதி சோறு என்றும், ஆற்றுணா என்றும்

அழைத்தனர். ஆற்றுணா என்னும் சொல் வழிநடையுணவு (ஆறு=வழி)

என்று பொருள்படும். கட்டுச் சோற்றின் சிறப்பு என்னவென்றால் குறைந்தது

இரண்டு நாட்களாவது கெடாமல், சுவை குறையாமல் இருக்கும். எனவேதான்

பண்டைய காலத்திலிருந்து பயணம் மேற்கொள்வோர் தம்முடன் கட்டுச் சோற்

றினைத் தவறாமல் கொண்டு செல்வர்.


சங்க காலத்தில் வேங்கடநாட்டை ஆண்டுவந்த புல்லி என்னும் மன்னனின்

அரசாட்சியின்கீழ் வாழ்ந்துவந்த ஆயர்கள்(கோவலர்) தம் மாடுகளை மேய்ச்

சலுக்கு ஓட்டிவரும் பொழுது  தம் உணவுக்காகப் புளிச்சோற்றை மூங்கில்

குழாய்களில் அடைத்து எருதுகளின் கழுத்தில் மாட்டிக் கொண்டு வருவது 

வழக்கம். அத்தகைய இனிய புளிச் சோற்றினை அப்பாதை வழியாகவரும் வழிப்

போக்கர்களின் களைப்புத்  தீரவும் பசியாறவும்  தேக்கிலைகளில் வைத்துப்

பகிர்ந்து அளிப்பர் என்று அகநானூறு தெரிவிக்கின்றது.(அகம். பாடல்: 311):

"வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்

மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி

செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்

புல்லி நன்னாட் டும்பர் செல்லரும்......"

(வம்பலர்=புதியவரான வழிப்போக்கர்; மழவிடை= இளமையான எருது;

செவியடை=பசியால் காதடைப்பது; தீம்புளி=இனிய புளிச்சோறு)


சீவக சிந்தாமணி என்னும் இலக்கியம் அறத்தை வலியுறுத்தும் பொழுது

எமன் நம் உயிரைக் கவர்ந்து செல்லும் பாதையில் அறமானது பொதி

சோறு போல உதவும் என்றுரைக்கின்றது.

" கூற்றங்கொண் டோடத் தமியே கொடுநெறிக்கண் செல்லும் போழ்தில்

ஆற்றுணாக் கொள்ளீர்". (கூற்றம்: எமன்;  ஆற்றுணா: கட்டுச் சோறு).


நாலடியார் என்னும் நீதிநூலிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது:

"ஆட்பார்த் துழலும் அருளில் கூற் றுண்மையால்

தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய் மின்"

பொருள்: விதிமுடிந்த ஆளைத் தேடிப் பார்த்து அவர் உயிரைக் கவர்ந்து

செல்லும் எமன் இருக்கின்றார். அச்சமயத்தில் தோளில் சுமந்து செல்லும்

கட்டுச் சோறு(தோட்கோப்பு) போல அறம் உதவும்.


பதின்மூன்றாம் நூற்றாண்டில் பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த போது

அவர் அரசூர் என்னும் பகுதிக்கு அரசனான சீனக்கன் என்னும் குறுநில

மன்னருடன் நட்புக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை பொய்யாமொழிப்

புலவருக்குப் புளியஞ் சோறு அளித்துப்  பசியாற்றினார். உடனே புலவர்

அதனைப் பாராட்டிப் பாடல் சொன்னார்:

"அளிதொ ளுந்தொடை யானர சைக்குமன்

ஒளிகொள் சீனக்கன் இன்றுவந் திட்டசீர்ப்

புளியஞ் சோறுமென் புந்தியிற் செந்தமிழ்

தெளியும் பொதெலாம் தித்தியா நிற்குமே".

(அளிதொளும் தொடை=வண்டுலவும் மாலை; அரசைக்கு மன்=அரசூர்ப்

பகுதிக்கு அரசன்)

சோழ மண்டல சதகம் என்னும் சிற்றிலக்கியத்திலும் இச் செய்தி சொல்லப்

பட்டுள்ளது.:

"பொய்யா மொழியார் பசிதீரப் புளியஞ் சோறு புகழ்ந்தளித்த

செய்யார் அரசூர்ச் சீனக்கர் செய்த தெவரும் செய்தாரோ?"


வள்ளலார் இராமலிங்க அடிகளும்  தாம் பேரின்ப அமுதை நாடாமல் வாய்க்கு

இன்பம் தரும் சித்திரான்னங்களை நாடியதாக வருந்திப் பாடியுள்ளார்.(பெரிய

ஞானிகள் உலகத்தவர் செய்யும் குற்றச் செயல்களைத் தாம் செய்ததாகக் கூறி

வருந்துதல்  ஆன்மிக மரபு):

"உடம்பொடு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன்; பலகால்

கடம்பெறு புளிச்சோ(று) உண்டுளே களித்தேன்; கட்டிநல் தயிரிலே கலந்த

தடம்பெறும் சோற்றில் தருக்கினேன்; எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்;

திடம்பெறு மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன்; என்செய்வேன்? எந்தாய்!"

சித்திரான்னங்களில் இனிப்புச் சுவை கலந்த சோறு தலையாயது; என்றாலும்

அதனை வயிறார உண்டு பசி தீர்த்தல் இயலாது; ஏனென்றால் ஓரளவுக்குமேல்

அது திகட்டிவிடும். புளிச் சோறு வயிறார உண்டு பசி தீர்க்கக் தோதானது;

தெவிட்டாதது.











Sunday 11 October 2020

குடம்பிடித்தான் சட்டிகொள்

 'குடம்பிடித்தான் சட்டிகொள்'…


திருமணமாகிச் சில ஆண்டுகள் கடந்த பின்னும் தனக்குக் குழந்தைப்

பேறு கிட்டவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு பெண்மணி பல திருத்தலங்

களுக்குச் சென்று இறைவனிடம் வேண்டுதல் வைத்தும், பல வித மருத்துவ

முறைகளைப் பின்பற்றியும் மேலும் என்னென்னவோ முயற்சி செய்தும்

நினைத்த செயல் கைகூடாததால் நொந்து நூலாகிச் சோர்ந்து போயிருந்தார்.

ஒரு நாள் வழக்கம் போல ஆலயத்துக்குச் சென்ற அவர் ஒரு சித்தர் யோக நிலை

யில்  ஒதுக்கமான இடத்தில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அருகில்  இருந்தவர்  

களை விசாரித்ததில் அவர் சக்தி வாய்ந்த சித்தரென்றும், எப்போதாவது இக்கோ

விலுக்கு வருவாரென்றும் கூறினர். அப் பெண்மணிக்கு ஒரு கருத்து உதித்தது.

உடனை சித்தர் அருகில் சென்று அவர் யோக நிலையிலிருந்து  இயல்பு நிலைக்கு

வரும்வரை காத்திருந்து அவர் கண்களைத் திறந்தவுடன் தன் துக்கத்தைச் சொல்

லித்தனக்குப் பிள்ளை வரம் கிட்ட ஒரு வழி கூறுமாறு கோரினார். சித்தர் மெல்ல

நகைத்துவிட்டுக் "குடம் பிடித்தான் சட்டிகொள்" உனக்குப். பிள்ளை பிறக்கும் என்று

சொல்லிவிட்டுப் பழையபடி யோக நிலைக்குச் சென்றுவிட்டார்.


அப்பெண்மணிக்குச் சித்தர் வாக்குக்குப் பொருள் புரியவில்லை.அருகில் இருந்

தோர்க்கும் இதன் விளக்கம் தெரியவில்லை. யாராவது தமிழ்ப் புலவரிடம் கேட்க

லாம் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதற்குள் சில நாட்கள் கடந்து

விட்டன. ஒரு நாள் அவ்வூர்க் கோவிலுக்குப் பெரும் புலவர் மாம்பழக் கவிச்சி ங்க

நாவலர் வருகை புரியப்போகிறார் என்று கேள்விப் பட்டுக்கோவிலுக்குச் சென்று

காத்திருந்தார்.புலவர் வந்தவுடன் அவரைச் சந்தித்து நடந்த செய்திகளைத் தெரி

 வித்து விட்டுச் சித்தர் கூற்றுக்கு விளக்கம் கோரினார். அவர் உடனே குடம் என்பது

குக்குடம் என்பதைக் குறிக்கும் என்றும் சட்டி என்பது கந்தர் சஷ்டி விரதத்தைக்

குறிக்கும் என்றும்  கூறிச் சித்தரின் சொற்றொடருக்குப் பொருள் சேவற்கொடி 

பிடித்தோனின்(குடம் பிடித்தான் --குக்குடம் பிடித்தான்--சேவற்கொடி பிடித்தான்)

சஷ்டி விரதம் மேற்கொள்(சட்டி கொள்) என்பதாகும். சித்தரின் அறிவுரையைக் கடைப்பிடித்தல் நன்று என்றார்.


மாம்பழக் கவிராயர் பழனி நகரத்தில் 1836ஆம் ஆண்டில் பிறந்தார். மூன்றாம்

வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறையருளால் பிழைத்தெழுந்தார்.

ஆனால் கண்பார்வையைப்  பறிகொடுத்தார். கல்வி கற்றேதீர வேண்டும் என்ற

தணியாத ஆர்வத்தால் தந்தையாரிடம் கோரிக்கைவிடுத்துக் கசடறக் கற்றார்.

அவரது இயற்பெயர் பழனிச்சாமி. குடும்பத்தில் எல்லோருக்கும் மாம்பழம் என்ற

ஒட்டுப் பெயர்இருந்தது. கவிபாடும் திறமை கைகூடியதால் மாம்பழக் கவிராயர்

என்று அழைக்கப்பட்டார். பழனியைச் சுற்றியுள்ள சமீன்தார்கள், மிராசுதார்கள்,

பிரபுக்கள் முதலியோரிடத்தில் பாடித் தன் புலமையை வெளிப்படுத்தினார்.


அந்தக்காலத்தில்(19ஆம் நூற்றாண்டில்) மன்னர் என்ற செல்வாக்கோடு திகழ்ந்த

வர் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். அவர் தமையனார் பொன்

னுச்சாமித் தேவர் நிர்வாகியாகத்  திகழ்ந்தார். இருவரும் தமிழ் மற்றும்

சமக்கிருத மொழிகளில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். அவர்கள் முன் பாடித்

தம் திறமையையும் புலமையையும் புலப்படுத்தும் ஆவல் கொண்டார். பல மாதங்

கள் காத்திருந்த பிறகு அவர்களைச் சந்தித்தார். அவர்கள் சமுத்தி கொடுத்தால் 

பாடுவீர்களா? என்று கவிராயரிடம் வினவினார்கள். சமுத்தி என்பது நாம் வேண்

 டும் குறிப்புகளைக் கொடுத்து வேண்டிய பாவகைகளைப் பாடச் சொல்வது.. கவி

ராயர் தாம் ஆயத்தமாக உள்ளதாகச் சொன்னார். உடனே பொன்னுச்சாமித் தேவர்

"கிரியில் கிரியுருகும் கேட்டு" என்ற ஈற்றடியைச் சொல்லி ஒரு நேரிசை வெண்பா

வைப் பாடப் பணித்தார். உடனே கவிராயர் கீழ்க்கண்ட பாடலைச் சொன்னார்:

"மாலாம்பொன் னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்

சேலாம்கண் மங்கையர் வா சிக்குநல்யாழ்---நீலாம்

பரியில் பெரிய கொடும் பாலைகுளி ரும்ஆ

கிரியில் கிரியுருகும் கேட்டு".

பொருள்: திருமாலை ஒத்த பொன்னுச்சாமித் தேவர் நாட்டில் சேல்போன்ற

கண்ணையுடைய மங்கையர் இசைக்கும் நல்ல யாழிலிருந்து பிறக்கும் நீலாம்பரி

இராகப் பாடலால் பெரிய கொடும் பாலை நிலமும் குளிர்ந்து விடும்;  ஆகிரி

இராகப்  பாடலால் மலையும் உருகி விடும் "

கவி காளமேகத்தின் மறு அவதாரம் போல மாம்பழக் கவிராயர் ஆசுகவிகளை

உடனடியாகச் சொல்லக் கேட்டு மன்னர் திகைத்து விட்டார். வேறு பல சமுத்தி

களைக் கொடுத்தார்;  எல்லாவற்றுக்கும் உடனே உடனே பாடி முடித்தார். காசி

என்ற சொல் 4முறை  வரும் வண்ணம் பாடச் சொன்னார்; பாடிய பிற்பாடு, அதே

காசி என்ற சொல் 6 முறையும், 10 முறையும், 14 முறையும்  வரும் பாடல்கள் பாடு

மாறு கேட்க அவற்றையும் அவ்விதமே பாடி நிறைவேற்றினார். இறுதியாக, எலிக்

கும் புலிக்கும் சிலேடை யாகப் பாடச்சொன்னார். அது பின்வருமாறு:

"பாயும் கடிக்கும் பசுகருவா டும்புசிக்கும்

சாயும் குன் றில்தாவிச் சஞ்சரிக்கும்---தூயதமிழ்

தேங்குமுத்து ராமலிங்கச் சேதுபதிப்  பாண்டியனே!

வேங்கையொரு சிற்றெலியா மே".

எலிக்குப் பொருத்தும் முறை:பாயும், கடிக்கும்;

ப்சிய கருவாடும் புசிக்கும்; சாய்வான மலைகளில் தாவிச் சஞ்சரிக்கும்.

வேங்கைக் குப் பொருந்தும் முறை: பாயும், கடிக்கும்;

பசு, காராடு முதலியவைகளைப்  புசிக்கும்;

சாய்வான மலைகளில் தாவிச் சஞ்சரிக்கும்.

மாம்பழக் கவிராயரின் திறமையை மெச்சிக் 'கவிச் சிங்கம்' என்னும் பட்டத்தைச்

சூட்டி மகிழ்ந்தார். அவர் தலைக்கு உருமால் கட்டிவிட்டு  மரியாதை செய்தார்.


மாம்பழக்  கவிச்சிங்கத்தின் பெருமை அளவிடற்கரியது. கம்பர், கவி காளமேகம், 

கூத்தர், புகழேந்தி யார் முதலியோர் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்

டியவர். அன்னார் புகழ் என்றும் நின்று நிலவுக!.