குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்....
பெருமாள் கோவிலில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் புளியோதரை
மிகச் சுவையுள்ளதாக இருக்கும். பெருமாள் கோவில் புளிச்சாதம்
அவ்வளவு புகழ்பெற்றது. புளிச் சாதம் கட்டுச் சோறு என்றும் அழைக்
கப் படுகிறது. பயணம் மேற்கொள்பவர்கள் வழியில் பசிக்கும் வேளையில்
உண்டு பசியாறப் புளிச் சோற்றினைத் துணியில் கட்டி எடுத்துச் செல்வது
வழக்கம். அதனால் அதனைப் பொதி சோறு என்றும், ஆற்றுணா என்றும்
அழைத்தனர். ஆற்றுணா என்னும் சொல் வழிநடையுணவு (ஆறு=வழி)
என்று பொருள்படும். கட்டுச் சோற்றின் சிறப்பு என்னவென்றால் குறைந்தது
இரண்டு நாட்களாவது கெடாமல், சுவை குறையாமல் இருக்கும். எனவேதான்
பண்டைய காலத்திலிருந்து பயணம் மேற்கொள்வோர் தம்முடன் கட்டுச் சோற்
றினைத் தவறாமல் கொண்டு செல்வர்.
சங்க காலத்தில் வேங்கடநாட்டை ஆண்டுவந்த புல்லி என்னும் மன்னனின்
அரசாட்சியின்கீழ் வாழ்ந்துவந்த ஆயர்கள்(கோவலர்) தம் மாடுகளை மேய்ச்
சலுக்கு ஓட்டிவரும் பொழுது தம் உணவுக்காகப் புளிச்சோற்றை மூங்கில்
குழாய்களில் அடைத்து எருதுகளின் கழுத்தில் மாட்டிக் கொண்டு வருவது
வழக்கம். அத்தகைய இனிய புளிச் சோற்றினை அப்பாதை வழியாகவரும் வழிப்
போக்கர்களின் களைப்புத் தீரவும் பசியாறவும் தேக்கிலைகளில் வைத்துப்
பகிர்ந்து அளிப்பர் என்று அகநானூறு தெரிவிக்கின்றது.(அகம். பாடல்: 311):
"வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி
செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாட் டும்பர் செல்லரும்......"
(வம்பலர்=புதியவரான வழிப்போக்கர்; மழவிடை= இளமையான எருது;
செவியடை=பசியால் காதடைப்பது; தீம்புளி=இனிய புளிச்சோறு)
சீவக சிந்தாமணி என்னும் இலக்கியம் அறத்தை வலியுறுத்தும் பொழுது
எமன் நம் உயிரைக் கவர்ந்து செல்லும் பாதையில் அறமானது பொதி
சோறு போல உதவும் என்றுரைக்கின்றது.
" கூற்றங்கொண் டோடத் தமியே கொடுநெறிக்கண் செல்லும் போழ்தில்
ஆற்றுணாக் கொள்ளீர்". (கூற்றம்: எமன்; ஆற்றுணா: கட்டுச் சோறு).
நாலடியார் என்னும் நீதிநூலிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது:
"ஆட்பார்த் துழலும் அருளில் கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய் மின்"
பொருள்: விதிமுடிந்த ஆளைத் தேடிப் பார்த்து அவர் உயிரைக் கவர்ந்து
செல்லும் எமன் இருக்கின்றார். அச்சமயத்தில் தோளில் சுமந்து செல்லும்
கட்டுச் சோறு(தோட்கோப்பு) போல அறம் உதவும்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த போது
அவர் அரசூர் என்னும் பகுதிக்கு அரசனான சீனக்கன் என்னும் குறுநில
மன்னருடன் நட்புக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை பொய்யாமொழிப்
புலவருக்குப் புளியஞ் சோறு அளித்துப் பசியாற்றினார். உடனே புலவர்
அதனைப் பாராட்டிப் பாடல் சொன்னார்:
"அளிதொ ளுந்தொடை யானர சைக்குமன்
ஒளிகொள் சீனக்கன் இன்றுவந் திட்டசீர்ப்
புளியஞ் சோறுமென் புந்தியிற் செந்தமிழ்
தெளியும் பொதெலாம் தித்தியா நிற்குமே".
(அளிதொளும் தொடை=வண்டுலவும் மாலை; அரசைக்கு மன்=அரசூர்ப்
பகுதிக்கு அரசன்)
சோழ மண்டல சதகம் என்னும் சிற்றிலக்கியத்திலும் இச் செய்தி சொல்லப்
பட்டுள்ளது.:
"பொய்யா மொழியார் பசிதீரப் புளியஞ் சோறு புகழ்ந்தளித்த
செய்யார் அரசூர்ச் சீனக்கர் செய்த தெவரும் செய்தாரோ?"
வள்ளலார் இராமலிங்க அடிகளும் தாம் பேரின்ப அமுதை நாடாமல் வாய்க்கு
இன்பம் தரும் சித்திரான்னங்களை நாடியதாக வருந்திப் பாடியுள்ளார்.(பெரிய
ஞானிகள் உலகத்தவர் செய்யும் குற்றச் செயல்களைத் தாம் செய்ததாகக் கூறி
வருந்துதல் ஆன்மிக மரபு):
"உடம்பொடு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன்; பலகால்
கடம்பெறு புளிச்சோ(று) உண்டுளே களித்தேன்; கட்டிநல் தயிரிலே கலந்த
தடம்பெறும் சோற்றில் தருக்கினேன்; எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்;
திடம்பெறு மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன்; என்செய்வேன்? எந்தாய்!"
சித்திரான்னங்களில் இனிப்புச் சுவை கலந்த சோறு தலையாயது; என்றாலும்
அதனை வயிறார உண்டு பசி தீர்த்தல் இயலாது; ஏனென்றால் ஓரளவுக்குமேல்
அது திகட்டிவிடும். புளிச் சோறு வயிறார உண்டு பசி தீர்க்கக் தோதானது;
தெவிட்டாதது.