Wednesday 24 May 2023

கோரைக்கால் ஆழ்வான் கொடை.

 கோரைக்கால்  ஆழ்வான்  கொடை.


கோரைக்கால் என்னும் ஊரில் 'ஆழ்வான்' என்ற

பெயருடைய செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

யாருக்கும் எதுவும் ஈயாத கஞ்சனாக வாழ்ந்தவன்.

ஆனால், தன்னைப்போல வசதிமிக்க வேறு சில செல்

வந்தர்கள் புலவர்களால் பாராட்டப் படுவதைக் கேள்வி

யுற்று அவர்கள்மேல் பொறாமை கொண்டான். அதே

நேரம் அவர்களைப்போலக் கொடைகொடுக்கும் எண்ண

மும் அவனுக்கு அணுவளவும் இல்லை.


கொடை கொடுக்காமல் எவ்வாறு புலவர்களால் பாராட்

டப்பட இயலும் என்று கருமித்தனமாகச் சிந்தித்தான்.

அவனுக்கு ஒரு கபடமான திட்டம் மனத்தில் உதித்தது.

அதன்படி, புலவர்கள் தன்னைப் புகழ்ந்து  பாடுவதை

மகிழ்ச்சியுடன் கேட்டுவிட்டு யாதொரு பரிசும் தராமல்

மறுநாள் பெரிய பரிசு தருவதாக வாக்களித்துவிட்டுத்

தராமல் 'நாளை தருவேன், நாளை தருவேன் என்று

கூறி அவர்களை அலைக்கழித்து அவர்களே வெறுத்

துப் போய் விலகிக் கொள்ளுமாறு செய்வதே திட்டம்.


இப்படியே நாட்கள் உருண்டோடின. புலவர்கள் பலர்

ஆழ்வானைப் புகழ்ந்து பாடிப் பரிசு எதுவும் பெறாமல்

வெறுங்கையராய்த் திரும்பிச் செல்தல் வாடிக்கையாக

நிகழ்ந்தது. இந்நிலையில் ஔவையார் அவ்வூருக்கு

வந்தார். ஆழ்வானைப் பற்றி மக்கள் எடுத்துக் கூற,

அக்கஞ்சனைப் பற்றிய சகல விவரத்தையும் அறிந்து

கொண்டார். ஔவையார் அவன் இல்லத்துக்குச் சென்

றார்; அவன்மீது புகழாரம் சூட்டினார். வழக்கம்போல,

இரசித்துக் கேட்ட ஆழ்வான் " அம்மையே! உங்களுக்கு

யானை ஒன்றைப் பரிசளிக்க எண்ணியுள்ளேன்; நாளை

வந்து பெற்றுக் கொள்க" எனவுரைத்தான். ஔவையாரும்

அவன் பேச்சை நம்பியதுபோல் நடித்து அவன் வீட்டைவிட்டு

நீங்கினார். மறுநாள் அவன் மனைக்கு வந்தார். ஆழ்வான்,

"தாயே! யானையைக் கட்டித்  தீனி போடுதல் மிகவும் சிரமம்;

எனவே, யானைக்குப் பதிலாகக் குதிரை ஒன்றை அளிக்கத்

தீர்மானித்துள்ளேன். நாளே வந்து பெற்றுக் கொள்வீர்" எனச்

சொன்னான். ஔவையார் மனம் சலியாமல் ஆழ்வான் வீட்டை

விட்டு நீங்கி மறுநாள் வந்தார். கஞ்சன் குதிரைக்குப் பதிலாக

எருமை தருவதாகவும் மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளுமாறும்

கூறினான். ஔவையார் சற்றும் சளைக்காமல் மறுநாள் வந்தார்.

எருமைக்குப் பதிலாக எருது தர நினைப்பதாகவும் மறுநாள் வரு

மாறும் நவின்றான். ஔவையார் நமட்டுச் சிரிப்புச் சிரித்தபடியே

அங்கிருந்து அகன்று மறுநாள் வந்தார். கஞ்சப் பிரபு எருதுக்குப்

பதிலாகப் புடைவை தருவதாகவும் மறுநாள் வருமாறும் பகர்ந்தான்.


இந்தக் கண்கட்டி விளையாட்டை முடித்துவிட எண்ணிய ஔவையார்

"கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்

எருதாய் முழப்புடைவை  யாகித்---திரிதிரியாய்த்

தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே

கோரைக்கால் ஆழ்வான்  கொடை."

என்ற பாட்டை அவன் வீட்டுச் சுவரில் எழுதிவைத்து விட்டு  வெறுங்கையோடு

அவ்வூரிலிருந்து கிளம்பிச் சென்றார். அவ்வூர் மக்கள் அப்பாடலைப்

படித்துவிட்டு அக்கஞ்சனைத் தூற்றி வசைபாடினர். அன்றிலிருந்து

அவன் புலவர்களை ஏமாற்றும் எண்ணத்தைக் கைவிட்டான். ஆனால்,

வள்ளலாக மாறிவிடவில்லை. கஞ்சனாக வாழ்வது அவன் பிறவிக்

குணம். தெய்வம்தான் அதை மாற்ற முடியும்.


பாடலின் பொருள்:

ஆழ்வான் கொடுப்பதாகச் சொன்ன பரிசு முதலில் யானையாக

இருந்தது. மறுநாள் அதை மாற்றிக்  குதிரை என்றான். அடுத்த

நாள் எருமை என மாற்றினான். மீண்டும் அதை மாற்றி எருது

எனச்சொன்னான். கடைசியில் அதையும் மாற்றிப் புடைவை

என்றான். மறுநாள் சென்றால் புடைவையையும் மாற்றித் திரி

என்பான். தேரைக்கால் போலக் கால் தேய்ந்து ஓய்ந்து போனது.

கோரைக்கால் ஆழ்வானின் வள்ளல்தன்மை இந்தவிதத்தில்

உள்ளது.

Tuesday 2 May 2023

எம்மனோரிற் செம்மலும் உடைத்தே.ம்

எம்மனோரிற் செம்மலும் உடைத்தே.

நூல்: நற்றிணை; திணை: நெய்தல்; புலவர்: பெயர்
தெரியவில்லை; பாடல் எண்: 45
நெய்தல் நிலப் பகுதியில் தலைவன் ஒருவன் தலைவி
ஒருத்தியைக் கண்டு அவள் பால் காதல் கொண்டான்.
தலைவியின் தோழியிடம் தன் உள்ளக் கிடக்கையைத்
தெரிவித்துத் தனக்கும் தலைவிக்கும் இடையே காதல்
தழைக்க உதவுமாறு கோரினான். தோழி அவனுக்கு
விடையிறுக்கலானாள்: " ஐய! இத் தலைவி நீலநிறப்
பெருங்கடலுக்குட்சென்று மீன் பிடிக்கும் தொழிலை
மேற்கொண்டுள்ள  பரதவர் ஒருவரின் மகள். நாங்கள்
இந்தக்கடலை அடுத்துள்ள கானல் பகுதியில் அமைந்
துள்ள அழகிய சிறு குடியிருப்பில் வாழ்ந்து வருகிறோம்.
நீரோ பெரிய கொடிகள் அசையும் கடைத்தெருக்களை
யுடைய பழமையான ஊரில் விரைவாகத் தேரில் ஊர்ந்து
செல்லும் செல்வந்தரின் அன்புமகன். சுறாமீன் களைத்
துண்டு துண்டாக அறுத்து அவற்றை வெயிலில் காயவைத்து
அத்துண்டங்களைப் பறவைகள் கொத்தித் தின்னாமல் பாது
காக்கும் எமக்கு உம்மைப் போன்ற செல்வர்களின் தொடர்பு
எதற்கு? இவ்விடத்தைச் சுற்றிப் புலால் நாற்றம் கிளம்புகிறது.
நீர் செல்லாமல் இங்கு நிற்பது எதற்காக? கடல்நீரில் கிடைக்கும்
பொருட்களைக் கொண்டு நாங்கள் எங்களாலியன்ற சிறிய
நல்ல வாழ்க்கையை நடத்துகிறோம். உம்முடைய செல்வச்
செழிப்பு மிக்க வாழ்க்கைக்கு எமது சிறிய வாழ்க்கை நிகராக
முடியாது. ஆனால் எங்கள் கூட்டத்திலும் சிறப்பாக வாழும் செம்
மல்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரை என் தலைவி தேர்ந்
தெடுத்துக் காதல்செய்வாள்.  யாம் வாழ்ந்துவரும் வாழ்க்கை
யே எமக்குப் போதுமானதாகும்." என்று கூறினாள். சங்க
காலத்தில் சாதி, குலம் போன்ற சிக்கல்கள் இல்லாவிடினும்
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிலவியிருக்கும். அதனால்
தான் தோழி தலைவியை விரும்பியவனை ஏற்றுக்கொள்ளா
மல் மறுப்புரை கூறியிருப்பாள்.  இனி, பாடலை நோக்குவோம்:
"இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன்எறி பரதவர் மகளே; நீயே
நெடுங்கொடி நுடங்கும்  நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே;
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செலநின் றீமோ!
பெருநீர் விளையுளெம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்ம னோரிற் செம்மலும் உடைத்தே!"
அருஞ்சொற் பொருள்:
நண்ணிய=அடுத்துள்ள; காமர்=அழகிய;
நுடங்கும்=அசையும்; நியமம்=கடைத்தெரு;
நிணம்=புலால்; உணக்குதல்=உலர்த்துதல்;
ஓப்புதல்:=விரட்டுதல்; புரைவது=ஒத்திருப்பது.