மாமன்னர் இராசராசர் வருகை புரிந்தால்..... ...
ஆற்றோரம் சென்றேன்; அசைந்துவரும் தென்றலெனும்
காற்றை நுகர்ந்தேன்; களித்தேன்; மணல்மீதில்
தன்னந் தனியே தனிமையினில் ஆழ்ந்திருந்தேன்;
என்னருகே ஆங்கொருவர் ஏற்றமுடன் வந்துநின்றார்;
"ஐயன்மீர் நீவிர் எவரென்று நானறியேன்,
பையவே தாங்கள் பகர்க" என்றுரைத்தேன்.
"பிள்ளாய்!இம் மண்ணிற் பிறந்த தமிழ்வேந்தன்,
தெள்ளு தமிழில் அருண்மொழி வர்மனென்பார்;
பட்டப்பேர் பற்பலவாம்; பாசத்தில் மக்களெலாம்
பெட்புடனே ' ராசராசன்' பேர்கொண்(டு) அழைத்தனரே;
மக்கள்சிலர் என்பெருமை மங்கக் குறைசொல்லி
நக்கல்,நை யாண்டி நவில்கின்றார்" என்றுரைத்தார்.
"ஆயிரம் ஆண்டுக்கு முன்நிகழ்ந்த சம்பவத்தைப்
பாயிரம் கூறிப் பகர்தல் அரிதேயாம்.
வேந்தன் தனக்கு விரிந்த பொறுப்புண்டு,
சாந்துணையும் அப்பொறுப்பைத் தட்டிக் கழித்திடோம்.
எல்லை தனைக்காத்(து) எதிரிகள் வாராமல்
நல்லவிதம் நாட்டை நடத்திடல் ஓர்கடமை;
மக்களெல் லாரும் சமமாவர் என்றெண்ணி
எக்கணமும் ஆட்சி இயக்கிடுதல் ஓர்கடமை;
கொள்ளை,கொலை இல்லாக் குறையற்ற ஆட்சிதரல்
விள்ளரிய வீரமுடை வேந்தர்க்காம் ஓர்கடமை;
மாக்கடலில் கொள்ளை, வழிப்பறி செய்வோரை
ஊக்கமுடன் போரிட்(டு) ஒடுக்கிடுதல் ஓர்கடமை;
பெண்களைப் பொன்போலப் பேணிடுதல் ஓர்கடமை;
கண்கள்நிகர் கல்வி, கலை கற்பித்தல் ஓர்கடமை;
மக்கள் விரும்பி வணங்கும் கடவுளர்க்கு
நெக்குருகக் கோவில் நிறுவிடுதல் ஓர்கடமை;
இத்தனையும் செய்தேன், இதன்மேலும் செய்கையுண்டு;
முத்தனைய செய்கைகளை மோசமெனக் கூறுகின்றார்;
சாதி,மத பேதத்தைச் சற்றும்,பின் பற்றவில்லை;
வேதியரைப் போற்றியதாய் வீண்குற்றம் சாட்டுகின்றார்;
தேவரடி யாரென்னும் தெய்வ நெறிசெய்தேன்,
கேவலமாய் அன்னவரைக் கேலி புரிகின்றார்;
நீதி,நெறி யோடு நிலத்தைப் பகிர்ந்தளித்தேன்,
சாதிநெறி பார்த்துச் சலுகைசெய்த தாய்ச்சொல்வர்;
மங்கை பலரை மணந்ததனால் பெண்பித்தர்,
பங்கம் உடையவர், பாங்கற்றார் என்றுரைப்பர்;
பேரரசை மேலும் பெரிதும் வலுவாக்க
வீரமுடைச் சிற்றரசர் வேந்தர்க்(கு) உதவிடுவர்;
பெண்ணைக் கொடுக்கும் உறவுமுறை கொண்டவர்கள்
பெண்கொடுத்துத் தத்தம் பிணைப்பை வலுச்செய்வர்;
எப்பொழுது போர்நிகழும்? யார்சாவைச் சந்திப்பார்?
தப்பறவே யாராலும் சாற்ற இயலாதே!
ஆரிறந்த போதும் அரசைத் தொடர்ந்திடவே
பேரரசர் பிள்ளைபலர் பெற்றிடுவர்; ஈதுண்மை.
பேரரசைக் காத்திடவே பெண்டிர்பல ரைமணத்தல்
பாரதநன் னாட்டின் பழக்கம்தான், குற்றமிலை.
எத்தனையோ குற்றங்கள் என்மேற் சுமத்திடினும்
அத்தனையும் ஆதாரம் அற்றவைதாம் என்றவுண்மை
செந்தமிழ் மக்கள் தெளிவாகத் தேர்ந்திடுவர்;
சிந்தனையை வேறு திசையினில் செல்லவிடார்;
போற்றுவார் போற்றிடினும் பொல்லாப் புழுதியினைத்
தூற்றுவார் தூற்றிடினும் சோர்ந்திடேன்; மெய்யேயாம்.
எம்மக்கள் என்காலம் ஏற்றமிகு பொற்காலம்,
தம்மினத்தின் தக்க அடையாளச் சின்னமென்பர்;
நஞ்சனைய கூற்று நவில்பவரை நம்பாமல்
நெஞ்சகத்தில் என்னை நிலைநிறுத்தி வாழ்ந்திடுவர்."
என்றெல்லாம் பேசி எனைவிட்டு நீங்கினரே,
அன்றுநமை ஆண்ட அவர்.
ஆற்றோரம் சென்றேன்; அசைந்துவரும் தென்றலெனும்
காற்றை நுகர்ந்தேன்; களித்தேன்; மணல்மீதில்
தன்னந் தனியே தனிமையினில் ஆழ்ந்திருந்தேன்;
என்னருகே ஆங்கொருவர் ஏற்றமுடன் வந்துநின்றார்;
"ஐயன்மீர் நீவிர் எவரென்று நானறியேன்,
பையவே தாங்கள் பகர்க" என்றுரைத்தேன்.
"பிள்ளாய்!இம் மண்ணிற் பிறந்த தமிழ்வேந்தன்,
தெள்ளு தமிழில் அருண்மொழி வர்மனென்பார்;
பட்டப்பேர் பற்பலவாம்; பாசத்தில் மக்களெலாம்
பெட்புடனே ' ராசராசன்' பேர்கொண்(டு) அழைத்தனரே;
மக்கள்சிலர் என்பெருமை மங்கக் குறைசொல்லி
நக்கல்,நை யாண்டி நவில்கின்றார்" என்றுரைத்தார்.
"ஆயிரம் ஆண்டுக்கு முன்நிகழ்ந்த சம்பவத்தைப்
பாயிரம் கூறிப் பகர்தல் அரிதேயாம்.
வேந்தன் தனக்கு விரிந்த பொறுப்புண்டு,
சாந்துணையும் அப்பொறுப்பைத் தட்டிக் கழித்திடோம்.
எல்லை தனைக்காத்(து) எதிரிகள் வாராமல்
நல்லவிதம் நாட்டை நடத்திடல் ஓர்கடமை;
மக்களெல் லாரும் சமமாவர் என்றெண்ணி
எக்கணமும் ஆட்சி இயக்கிடுதல் ஓர்கடமை;
கொள்ளை,கொலை இல்லாக் குறையற்ற ஆட்சிதரல்
விள்ளரிய வீரமுடை வேந்தர்க்காம் ஓர்கடமை;
மாக்கடலில் கொள்ளை, வழிப்பறி செய்வோரை
ஊக்கமுடன் போரிட்(டு) ஒடுக்கிடுதல் ஓர்கடமை;
பெண்களைப் பொன்போலப் பேணிடுதல் ஓர்கடமை;
கண்கள்நிகர் கல்வி, கலை கற்பித்தல் ஓர்கடமை;
மக்கள் விரும்பி வணங்கும் கடவுளர்க்கு
நெக்குருகக் கோவில் நிறுவிடுதல் ஓர்கடமை;
இத்தனையும் செய்தேன், இதன்மேலும் செய்கையுண்டு;
முத்தனைய செய்கைகளை மோசமெனக் கூறுகின்றார்;
சாதி,மத பேதத்தைச் சற்றும்,பின் பற்றவில்லை;
வேதியரைப் போற்றியதாய் வீண்குற்றம் சாட்டுகின்றார்;
தேவரடி யாரென்னும் தெய்வ நெறிசெய்தேன்,
கேவலமாய் அன்னவரைக் கேலி புரிகின்றார்;
நீதி,நெறி யோடு நிலத்தைப் பகிர்ந்தளித்தேன்,
சாதிநெறி பார்த்துச் சலுகைசெய்த தாய்ச்சொல்வர்;
மங்கை பலரை மணந்ததனால் பெண்பித்தர்,
பங்கம் உடையவர், பாங்கற்றார் என்றுரைப்பர்;
பேரரசை மேலும் பெரிதும் வலுவாக்க
வீரமுடைச் சிற்றரசர் வேந்தர்க்(கு) உதவிடுவர்;
பெண்ணைக் கொடுக்கும் உறவுமுறை கொண்டவர்கள்
பெண்கொடுத்துத் தத்தம் பிணைப்பை வலுச்செய்வர்;
எப்பொழுது போர்நிகழும்? யார்சாவைச் சந்திப்பார்?
தப்பறவே யாராலும் சாற்ற இயலாதே!
ஆரிறந்த போதும் அரசைத் தொடர்ந்திடவே
பேரரசர் பிள்ளைபலர் பெற்றிடுவர்; ஈதுண்மை.
பேரரசைக் காத்திடவே பெண்டிர்பல ரைமணத்தல்
பாரதநன் னாட்டின் பழக்கம்தான், குற்றமிலை.
எத்தனையோ குற்றங்கள் என்மேற் சுமத்திடினும்
அத்தனையும் ஆதாரம் அற்றவைதாம் என்றவுண்மை
செந்தமிழ் மக்கள் தெளிவாகத் தேர்ந்திடுவர்;
சிந்தனையை வேறு திசையினில் செல்லவிடார்;
போற்றுவார் போற்றிடினும் பொல்லாப் புழுதியினைத்
தூற்றுவார் தூற்றிடினும் சோர்ந்திடேன்; மெய்யேயாம்.
எம்மக்கள் என்காலம் ஏற்றமிகு பொற்காலம்,
தம்மினத்தின் தக்க அடையாளச் சின்னமென்பர்;
நஞ்சனைய கூற்று நவில்பவரை நம்பாமல்
நெஞ்சகத்தில் என்னை நிலைநிறுத்தி வாழ்ந்திடுவர்."
என்றெல்லாம் பேசி எனைவிட்டு நீங்கினரே,
அன்றுநமை ஆண்ட அவர்.