Wednesday 20 December 2023

பாயசத்தைக் கொண்டுவந்தீர்; இதில் தோசம் பிறந்திடும்.

 பாயசத்தைக் கொண்டுவந்தீர்; இதில் தோசம் பிறந்திடும்.


வெறிவிலக்கல் என்னும் துறை அகப்பொருள் இலக்கியத்தில் மிகச்

சுவையாகப் படைக்கப்படும் பகுதியாகும். தலைவனும் தலைவியும் களவியலில்

காதல் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் தலைவனைப் பிரிய

நேர்ந்தால் தலைவி நிறம் மாறி(பசலை நோயுற்று வெளுத்து) மற்றும்

மெலிந்து தோற்றப்பொலிவை யிழந்து தோன்றுவாள். தன் மகளின்

பொலிவிழந்த தோற்றத்தைக் கண்டு அன்னை தெய்வம் முருகன்

அச்சுறுத்தி யிருப்பானோ? என்னும் கவலையால் அவன் சினத்தைத்

தணிப்பதற்காக எடுக்கும் நிகழ்ச்சிதான்  வெறியாடல். இந்நிகழ்வில்

வேலன்(பூசாரி) கையில் வேலைத் தாங்கிக்கொண்டு தன்மேல் தெய்வம்

முருகன் ஏறியிருப்பதாக எண்ணி ஆட்டம் ஆடி ஆடொன்றைப் பலியிட்டு

அதன் குருதியினைத் தினைத் தானியத்தின்மேல் தெளித்து அந்தக்

கலவையை முருகனுக்குப் படைத்து வழிபடும் நிகழ்ச்சிதான் வெறியாடல்

என்பதாகும். இதனைச் செய்து முடித்தால் முருகன் தலைவியை நலம்

பெறச் செய்வான் என்னும் சங்ககால அன்னையர் நம்பிக்கை அடிப்படையில்

எழுந்த ஒரு சடங்காகும். ஆனால் இங்கே தலைவி முருகனால் அணங்கப்பட

வில்லை. அவள் மெலிவுக்குக் காரணம் அவளது களவியல் காதலும்

தலைவன் பிரிவும் ஆகும். எனவே, வெறியாடினால் பயனேதும் கிட்டாது.

ஆதலால் தோழி வெறியாடலை விலக்கி அறத்தொடு நிற்பது மரபு. இந்த

வெறிவிலக்கலைப் புலவர்கள் தம் கற்பனைக்கேற்றவாறு சுவையாகப் படைத்து

இலக்கியத்துக்கு மெருகேற்றுவர். இங்கே நமச்சிவாயப் புலவர் இந்த வெறி

விலக்கலை எங்கனம் கையாண்டுள்ளார் என்று பார்ப்போம்:


இங்கே ஒரு தலைவி தெய்வம் அழகர்மீது காதல்கொண்டு அவர் நினைவால்

மெலிகின்றாள். இந்திய நாட்டில் கடவுளின் அடியார்கள் நாயகன்- நாயகி

தோரணையில் பக்திப் பரவசத்தை வெளிப்படுத்துவது மரபு. ஆண்டாள்

திருமால் மீது காதல்கொண்டு பாடினாரல்லவா? இது பக்தி இலக்கியப்

படைப்பில் இயல்பானதே. நம் தலைவியும் சோலைமலை அழகர்மீது காதல்

கொண்டு அவர் நினைவால் பசலைநோயுற்றாள்; மெலிந்தாள். சங்ககால

வழக்கப்படி வெறியாடலை நிகழ்த்த அன்னை முடிவுசெய்தாள். அதற்காக,

பாயசத்தைக் கொண்டுவந்தாள்; வேலனையும் அழைத்து வந்தாள். தோழி அன்னை

யிடம் உரையாடினாள் "அன்னையே! பாயசத்தைக் கொண்டுவந்தீர்.( இங்கே

பாயசம் என்பது பாய்+அசம் என்று பிரிந்து பாய்கின்ற ஆட்டைக் குறிக்கும்.

அசம், வடமொழி அஜம், என்பதற்கு ஆடு என்பது பொருள்.) அநாவசியமான

உயிர்ப்பலியால் தோசம்தான் உண்டாகும். ஏனென்றால் இவளை வாட்டுவது

முருகன் அல்லன். இவள் மனங்கவர்ந்த காதலன்"  என்று கூறி அறத்தொடு

நின்றாள். சரி, பாடலைப் பார்ப்போம்:

"வண்டு துறைசோ லைமலைப்  பரிகாரி வந்தாலிவளுக்(கு)

அண்டு படாதவிக் காமச் சுரம் விடும் ஆதலினால்

பண்டு பழகினர் போலிந்த வேளையிற் பாயசத்தைக்

கொண்டுவந் தீரிதில் தோசம் பிறந்திடும் கோதையரே"

பொருள்:

"கோதையரே(தாய்மாரே!) இவளுக்கு வரக்கூடாத(அண்டு படாத)

இந்தக் காதல் நோய் வண்டுகள்தங்கும் சோலைமலையிலுள்ள

மருத்துவராகிய அழகர் வந்தால் நீங்கும். ஆதலினால் முன்

மருந்து கொடுத்துப் பழகினவர்போல இந்த வேளையில் பாய்கின்ற

ஆட்டைப் பலியிடுவதற்காகக் கொண்டுவந்தீர். அநாவசிய உயிர்ப்

பலியால் பாவம் உண்டாகும். அதனால் இதனைக் கைவிடுக." 


இனி, ஒப்பிலாமணிப்புலவர் இதனை எப்படிக் கையாள்கின்றார்

எனப் பார்ப்போம்:

"சீதார விந்தபுயன் தென்னவன்தன் திண்சிலம்பில்

போதாலும் கண்ணாலும் போர்செய்வோர்க்(கு)---ஓதும்

கொடியிடையார் தம்மாற் குணமாமோ? இந்தத்

துடியிடையார் கொண்ட துயர்".

பொருள்:

குளிர்ச்சியான தாமரையில் இருக்கும் வெற்றித் திருமகளைத்

தன் தோளில் தாங்கியிருக்கும் பாண்டியனின் திண்மையான

மலையகத்தில்  வாழுகின்ற உடுக்கை போன்ற இடையுடைய

தலைவி, தன் காதலன்(தலைவன்) பிரிவால்  கொண்ட பசலை

நோயை மற்றும் உடல்மெலிவை, மலர்க்கணையாலும் நெற்றிக்

கண்ணாலும் போர்புரியும் மன்மதனுக்கும் சிவபெருமானுக்கும்

உரியதாகச் சொல்லப்படும் கொடிகளாகிய மீனத்துக்கும்

இடபத்துக்கும்(ரிஷபத்துக்கும்) இடைப்பட்ட தாகிய ஆட்டைப்(மேஷத்தை)

பலியிட்டு வெறியாடல் நிகழ்த்துவது நீக்குமா?(நீக்காது; தலைவியின்

காதலனைச் சேர்ந்தால் தான் நீங்கும்).

(சீத அரவிந்தம்=குளிர்ச்சியான தாமரை; தென்னவன்=பாண்டியன்;

சிலம்பு= மலை;  போது= மலர்(மலர்க்கணை); கண்= நெற்றிக்கண்;

மன்மதனுக்குரிய கொடி மீனக்கொடி; சிவனுக்குரியது ரிஷபக்கொடி;

இடையார்=மீனத்துக்கும் ரிஷபத்துக்கும் இடையிலுள்ள மேஷம்(ஆடு)

பார்வை:

தனிப்பாடல் திரட்டு -- சாரதா பதிப்பகம் வெளியீடு; உரை--தமிழறிஞர்

உயர்திரு கா.சுப்பிரமணிய பிள்ளை.

Friday 1 December 2023

கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்.ல்.

 கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்.


தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்துப் பழகி

வந்தாலும் இதுகுறித்த செய்தி அரசல் புரசலாக ஊர்மக்கள்

சிலருக்குத் தெரியவருகிறது. அவர்களில் ஒருவர் தலைவியின்

அன்னையிடம் தெரிவிக்க அன்னை முன்னெச்சரிக்கையாக

இருக்க எண்ணித்தன் மகளை இற்செறிக்க(வீட்டைவிட்டு

வெளியே செல்லத் தடைபோடுதல்) எண்ணி இது தொடர்பாகக்

கணவனிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தாள். அவர்கள்

உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த தோழி தலைவியிடம்

அறிவித்துவிட்டாள். 


ஏற்கெனவே தலைவனும் தலைவியும் வரைந்து கொள்ளாமல்

(திருமணம் புரிந்துகொள்ளாமல்) காதலை நீட்டிப்பது குறித்துத்

தோழி வருத்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தாள்.  தலைவியின்

அன்னை இற்செறிக்கத் திட்டமிடுவதையறிந்த தோழிக்கு வருத்தம்

கூடியது. தலைவனிடம் "வரைந்து கொள்ள ஏற்பாடு செய்" என்று

உறுதிபடக் கூற முடிவெடுத்தாள். 


அன்றிரவு வழக்கம்போல் இரவுக்குறியில்(இரவு நேரத்தில் காதலன்-

காதலி சந்திக்கும் இடம்) தலைவியைச் சந்திக்க வந்தான். ஓரளவு

சீற்றம் காட்டிய தோழி" தலைவியின் அன்னை உங்கள் இருவரைப்

பற்றியும் ஏதோ கேள்விப்பட்டிருப்பாள் என நினைக்கிறேன்; அதனால்

தலைவியை இற்செறிக்கத் திட்டமிடுகின்றாள். அநேகமாக நீ இனி

தலைவியைச் சந்திக்க இயலாது." என்றாள். உடனே தலைவன் சற்றே

செருக்குடன் நான் வழக்கம்போல இரவுக்குறியில் இங்கு வந்து தலைவி

யைச் சந்திப்பது திண்ணம்; கூடிய விரைவில் அவளை வரைந்து கொண்டு

இல்வாழ்க்கை தொடங்குவேன்" என்று மொழிந்தான். உடனே தோழி"ஐய!

உம் வீரத்தை அறிவோம்; நீர்  பெரிய வீரரே. ஆயினும், கடற்கரையை

ஒட்டியமைந்துள்ள சோலையில், ஏராளமான மீன்கள் நீந்தித் திரியும் பெரிய

நீர்த்துறையில் வளைந்த கால்களையுடைய கொலைத் தொழிலில் தேர்ந்த

முதலைகள் வாழ்கின்றன. இது காரணமாக இத்துறையில் நீந்திக் கடக்க

எவரும் அஞ்சுவர்.. நீர் உம் ஆண்மைத் திறத்தால் இவ்விரவில் இத்துறையில்

நீந்தி வருகின்றீர். உமது இந்தச் செயலுக்காகத் தலைவி அஞ்சி வருந்துகிறாள்;

உமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ? என்று பதறித் துடிக்கிறாள். உம் இருவரது

இடுக்கண்ணைக் கண்டு நான் நொந்து போகின்றேன்.  இரட்டைப் பிள்ளைகள்

நஞ்சுண்டால்(கவைமக நஞ்சுண்டாங்கு அஞ்சுவல்) இருவர் திறத்திலும் இரங்கும்

தாயைப் போல நான் இருவருக்காகவும் பதறித் துடிக்கிறேன். எனவே நீர் பகற்குறி,

இரவுக்குறி இவைகளைக் கைவிட்டு உடனடியாக வரைந்து கொள்ள ஏற்பாடு

செய்க. அதுவே உங்கள் இருவர்க்கும் நன்மை பயக்கும்" என்றாள். பாடல்

கீழ்க்கண்டவாறு:

"கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றை

வழிவழக்(கு) அறுக்கும் கானல்அம் பெருந்துறை

இனமீன் இருங்கழி நீந்தி நீநின்

நயனுடை  மையின்  வருதி இவள்தன்

மடனுடை மையின் உயங்கும் யானது

கவைமக நஞ்சுண் டாஆங்(கு)

அஞ்சுவல் பெரும!என் நெஞ்சத் தானே!"

(குறுந்தொகை எண்:324; நெய்தல் திணை;

புலவர்:கவைமகனார்)

புலவர் பெயர் தெரியாததால் அவர் எழுதிய சொற்றொடரால்

அழைக்கப்படுகிறார்.


கவை என்னும் சொல் இருவேறு பட்ட கிளையைக் குறிக்கும். இங்கு

இரட்டைப் பிள்ளைகளைக் குறித்தது. இரட்டைப் பிள்ளைகள் ஒரே

நேரத்தில் நஞ்சுண்டால் பெற்றதாய் எப்படிப் பதறித் துடித்துத் திண்டாடு

வாளோ அந்த நிலையில் உள்ளதாகத் தோழி கூறுகிறாள். இந்த

உவமையால் இருவர்க்கும் நன்மை செய்யும் மருந்து விரைந்து தருதல் தேவை

என்று அறிவுறுத்துகின்றாள். நஞ்சைவிலக்க உடனடியாக மருந்து தருதல்

இன்றியமையாதது. அதுபோல இந்த இடுக்கண்ணை விலக்க வரைவுமேற்

கொள்ளல் உடனடித் தேவையாகும். வரைவு மேற்கொள்ளலே உரிய சிறந்த

மருந்தாகும் என்றாள். "கவை மகவு" என்ற தொடர் படித்து இன்பறத்தக்கது.

அருஞ்சொற் பொருள்:

கோள்வல் ஏற்றை=கொல்லுதல் வல்ல ஆண்(முதலை);

நயன்=அன்பு; உயங்கும்= வருந்தும்; அஞ்சுவல்=அஞ்சுவேன்.