யானையின் நெற்றிப் பட்டம் அழகா? யானை அழகா? யானைமேல்
வீற்றிருக்கும் பாண்டியன் மார்பில் இலங்கும் தார் அழகா?
வழக்கப்படி பாண்டிய வேந்தன் உலாவருகின்றான். உடன் அவன்
பரிவாரங்களும் வருகின்றனர். மிடுக்காக யானை மேல் வீற்றிருந்து
உலாவரும் பாண்டிய வேந்தனைக் கண்கொட்டாமல் பார்த்து அவன்
வீரத்தோற்றத்தையும் ஒளிவீசும் முகப் பொலிவையும் கண்டு வீதியின்
இருபுறமும் நிற்கும் பொதுமக்கள் வியந்தும் புகழ்ந்தும் பேசிக் கொள்
கின்றனர். மாட மாளிகைகள் செறிந்திருக்கும் மதுரை வீதி. பாண்டிய
வேந்தனின் உலாவைக் கண்டு களிக்கப் பருவப் பெண்கள் மூவர் நின்று
கொண்டிருக்கின்றனர்.
பாண்டியனின் யானை அப்பெண்களின் அருகே வந்துவிட்டது.மூவரில்
ஒருத்தி யானைக்கு அணிவிக்கப்பட்டுள்ள பொன்னாலான நெற்றிப்பட்டத்
தால் ஈர்க்கப்பட்டாள். "யானையின் நெற்றிப் பட்டம் மிக அழகாயுள்ளது"
என்று வியந்து கூறினாள். உடனே மற்றொருத்தி "இல்லை யில்லை;
யானை மிக அழகாகவும் பொலிவுடனும் தோன்றுகிறது. அதன் அழகு
கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது" எனச் சொன்னாள். மூன்றாவது
பெண் '"யானையின் பிடரி மீது மிடுக்காக வீற்றிருந்து ஒளிரும் வேலைக்
கைக்கொண்டு வீதியின் இருபுறமும் நிற்கும் மக்களைப் பார்த்து முகமலர்ச்சி
யைக் காட்டும் பாண்டியவேந்தனது அகன்ற மணிமார்பில் அசைந்தாடும்
மணம் கமழும் மாலை மிக அழகாயுள்ளது" என்று பகர்ந்தாள். உண்மையில்
மூன்று கூறுகளும், யானையின் நெற்றிப் பட்டம், யானை, யானை மேல்
வீற்றிருக்கும் பாண்டியனின் மாலை, மிகுந்த அழகுடன் தோற்றம் தருகின்றன.
பெண்கள் மூவரில் ஒவ்வொருத்தியும் தன் தன் கருத்தைத் தெரிவித்தாள்.
இந்தச் செய்தியைச் சொல்லும் பாடல் பின்வருமாறு:
பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றார் இருவர்; அவருள்ளும்
பொன்னோடை நன்றென்றாள் நல்லளே; பொன்னோடைக்(கு)
யானை நன்(று) என்றாளும் அந்நிலையள்; யானை
எருத்தத்(து) இருந்த இலங்கிலைவேல் தென்னன்
திருத்தார்நன்(று) என்றேன் தியேன்".
அருஞ்சொற் பொருள்:
பொன்னோடை= பொன்னாலான யானை நெற்றிப் பட்டம்;
எருத்தம்=கழுத்து(பிடரி); இலங்கும்=ஒளிரும்; இலைவேல்=இலைவடிவ வேல்;
தென்னன்=பாண்டியன்; தார்=மாலை; தியேன்=தீயேன் என்னும் சொல் "தியேன்"
என்று குறுகியுள்ளது.
இந்தப் பாடல் தனிப்பாடல் திரட்டொன்றில் காணப்படுகிறது. கவிதை நடை மற்றும்
கருத்து முதலியவற்றைக் கவனிக்கும் பொழுது, 'முத்தொள்ளாயிரம்' நூலிலுள்ள
பாட்டோ? என்று எண்ணத் தோன்றுகின்றது. பாண்டியனின் மார்பில் தவழும்
மாலை அழகு என்று சொன்ன மூன்றாவது பெண்ணின் கூற்றில் பாடல் இயற்றப்
பட்டுள்ளது. அவள் தன்னைத் தீயேன்(தியேன்) என்று ஏன் நொந்து கொள்கின்றாள்?
ஒருவேளை பாண்டியன் மீது கொண்ட ஒருதலைக் காதலால் அவனருகில் இருக்கும்
பேறு கிட்டவில்லையே என்று புலம்புகின்றாளோ, என்னவோ?