ஏகம்ப வாணனும் முடியுடை மூவேந்தரும்.
தென்பெண்ணை யாற்றங் கரையில், திருக்கோவலூர்ப் பகுதியில்
ஆற்றூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு குறுநில மன்னனாக
ஆட்சி புரிந்தவன் ஏகம்பவாணன். ஆற்றூரை 'ஆறை' என்று அழைப்பது
இலக்கிய வழக்கம். ஏகம்பவாணன் ஆட்சிக்காலத்தில் முடியுடை மூவேந்தராகிய
சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் செல்வாக்கிழந்து பெயரளவில் தம் ஆட்சிப்
பகுதிகளை ஆண்டுகொண்டிருந்தனர். ஏகம்பவாணன் ஆட்சிக் காலத்தில்
பாண்டிய நாட்டை சிறீவல்லப மாறன் ஆட்சி புரிந்து வந்தான். ஏகம்பவாணன்--
சிறீவல்லபமாறன் ஆட்சிக்காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி
யாகும். (மண்ணின் மைந்தர்களான சேர, சோழ மற்றும் பாண்டியர்களின் அதிகாரம்
தாழ்ந்தும் விசய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் அதிகாரம் ஓங்கியும் இருந்த
காலக்கட்டம் அது.)
ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு மூவேந்தரும் திருக்கோவலூரில் சந்தித்துக்
கொண்டனர். மரியாதை நிமித்தமாக ஏகம்பவாணனை நேரில் சந்திக்க அவன்
அரண்மனைக்குச் சென்றனர்.ஏகம்பவாணன் அங்கே காணப்படாமையால் அவன்
மனைவியிடம் இதுபற்றி விசாரித்தனர். அப்பெண்மணி "வாணர் ஐயா கழனிக்குச்
சென்றிருக்கிறார்" என்று தகவல் தெரிவித்தாள். மூவேந்தரும் தாம் முடியுடை வேந்தர்
என்ற தோரணையில் " ஏகம்ப வாணர் முடி(நாற்று)நடப் போயிருக்கிறாரோ?" என்று
ஏளனமாக வினவியுள்ளனர். ஏகம்பவாணன் மனைவி கல்வியில் தேர்ந்தவள்.
அவள் உடனே ஒரு பாடல் மூலம் விடையிறுத்தாள்:
"சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி
யானை மிதித்த அடிச்சேற்றில்---மானபிரான்
மாவேந்தன் ஏகம்ப வாணன் பறித்துநட்டான்
மூவேந்தர் தங்கள் முடி."
மூவேந்தருடைய படைவீரர்களைக் கொன்று குவித்து அவர் உடல்களின் தசைகளைத்
தழையாக்கி அவ்வீரர்கள் சிந்திய இரத்தமாகிய நீரைத் தேக்கி அக்களத்தில் யானை
களைக் கொண்டு உழச்செய்து ஏகம்பவாணனாகிய பெருவேந்தன் சேர,, சோழ, மற்றும்
பாண்டிய மன்னரது மகுடங்களைப் பறித்து நட்டான் என்று முகத்தில் அறைந்தது போல்
பதில் கூறியதால் மூவேந்தரும் வாயடைத்து ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றனர்.
ஏகம்பவாணன் அரண்மனைக்குத் திரும்பியதும் அவன் மனைவி மூவேந்தர்கள் இங்கு
வந்ததையும் ஏளனமாகப் பேசியதையும் ஒன்றுவிடாமல் எடுத்துரைத்தாள். அனைத்தையும்
கேட்டுக்கொண்ட ஏகம்பவாணன் "தாங்கள் பெருவேந்தர்கள் என்ற பழைய பெருமையில்
பேசிவிட்டனர். இன்றைய நிலையென்ன? குறுநில மன்னனாகிய நம்மைவிட மிகத் தாழ்ந்த
நிலையிலுள்ளனர். அவர்கட்குத் தக்க பாடம் புகட்டுவோம்" என்று பெருஞ்சிரிப்புச் சிரித்து
விட்டுத் தனக்குப் பணிபுரியும் பூதத்தையனுப்பி மூவேந்தரையும் சிறைப்பிடித்து வரச்
சொன்னான். பூதம் அவ்வாறே முதலில் சேரனையும் அடுத்துச் சோழனையும் சிறைப்பிடித்து
வந்தது. பாண்டியன் அணிந்துள்ள வேப்பமாலைக்குப் பயந்து அவனைச் சிறைப்பிடிக்க
இயலாமல் திரும்பிவந்து ஏகம்பவாணனிடம் செய்தியைச் சொன்னது. உடனே ஏகம்பவா
ணன் நான்கு அழகிய தாதியரை அனுப்பிப் பாண்டியன் அணிந்துள்ள வேப்பமாலையைப்
பரிசாகப் பெற்றுவருமாறு பணித்தான். அவர்களும் ஆடிப் பாடிப் பாண்டியனிடம் வேப்ப
மாலையைப் பரிசாகப் பெற்று வந்து ஏகம்பவாணனிடம் அளிக்க அவன் பூதத்தை ஏவிப்
பாண்டியனைச் சிறைப்பிடித்தான்.
முதலில் சிறைப்பிடிக்கப்பட்ட சேரனும் சோழனும் ஏகம்பவாணனுக்குத் திறை(வரி/கப்பம்)
செலுத்தச் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுச்
சென்றுவிட்டனர். பாண்டியன் தன் மனைவிக்குச் செய்தியனுப்பி "நீ நேரில் இங்கு வந்து
சிறைமீட்க ஏற்பாடு செய்க" என்று உத்தரவிட்டான். இதற்கிடையில் ஏகம்பவாணன் தன்
னைப் புகழ்ந்து பாடிய பாணனுக்குப் பாண்டிய நாட்டைப் பரிசாகத் தந்துவிட்டான்.
பாண்டியன் மனைவி ஆறைநகர்க்கு வந்தவுடன் ஏகம்பவாணனைச் சந்தித்து வணக்கம்
தெரிவிக்கும் வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகு பாண்டியனைச் சிறைப்பிடித்த
காரணத்தை வினவினாள். ஏகம்பவாணன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கூறினான்.
சேர, சோழ மன்னர்கள் திறை செலுத்தச் சம்மதித்து ஒப்பந்தம் போட்டு விடுதலையாகித்
தத்தம் ஊர்களுக்குத் திரும்பிச் சென்று விட்டனர் என்று கூறினான்.பாண்டியன் மனைவி
"பாண்டிய மன்னரும் திறை செலுத்தவும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளவும் ஆயத்தமாக
உள்ளார். அவரை விடுதலை செய்யுங்கள்" என்ற கோரிக்கை வைத்தாள். ஏகம்பவாணன்
"பாண்டியனைப் பொருத்தவரை வேறொரு செய்தியும் உண்டு. உங்கள் பாண்டிய நாட்டை
என்னிடம் உதவிகோரிவந்த பாணன் ஒருவனுக்குத் தானமாகக் கொடுத்து விட்டேன். இப்
பொழுது பாண்டியனை விடுதலை செய்தாலும் அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல
இயலுமா?" என்று வினவினான்.
பாண்டியன் மனைவி நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து கொண்டனள். உடனே
"என்கவிகை, என்சிவிகை, என்கவசம், என்துவசம்,
என்கரியீ(து), என்பரியீ(து) என்பரே---மன்கவன
மாவேந்தன் ஏகம்ப வாணன் பரிசுபெற்ற
பாவேந்த ரைவேந்தர் பார்த்து".
என்ற பாடலை மொழிந்தனள். இதன் பொருள்:
ஏகம்பவாணன் அரண்மனை முன்றிலில் அவன் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்கள்
நின்றுகொண்டிருந்தனர். அரண்மனைக்குள் புலவர்களும் பாணர்களும் ஏகம்ப
வாணன் மீது கவிபாடிக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிவுற்றதும் வாணன் தன்
அருகில் குவித்துவைக்கப்பட்ட வெண்கொற்றக் குடை(கவிகை), பல்லக்கு(சிவிகை),
கவசவுடை, கொடி(துவசம்), யானை(கரி), குதிரை(பரி) போன்றவற்றைப் புலவர்க்கும்
பாணர்க்கும் பரிசுகளாக அள்ளிக் கொடுத்தான். அவற்றைப் பெற்றுக்கொண்ட புலவர்களும்
பாணர்களும் பெருமகிழ்வோடு அரண்மனையிலிருந்து வெளியே வந்தனர். முன்றிலில்
நின்றுகொண்டிருந்த சிற்றரசர்கள் புலவரையும் பாணரையும் நோக்கி "உமக்குப் பரிசாகக்
கிடைத்த கவிகை,, சிவிகை, கவசவுடை, துவசம், கரி, பரி போன்றவை எங்கள் பொருள்கள்.
எங்களைப் போரில் வென்று ஏகம்பவாணன் எங்களிடமிருந்து பறித்துக்கொண்டவை."
என்று பொருமிப் புலம்பினர்.
பாண்டியன் மனைவியின் இந்தக் கவிதையைக் கேட்டு ஏகம்பவாணன் மனம் மகிழ்ந்து
"அம்மணி! உம் கோரிக்கையை நிறைவேற்ற நாம் முடிவுசெய்து விட்டோம்; நீவிர் தக்க
இழப்பீட்டைப் பாணனுக்குக் கொடுத்துவிடுக; நாம் பாண்டியனை விடுதலைசெய்வோம்.
ஆண்டுதோறும் திறை செலுத்துவது தொடர்பாக ஒப்பந்தத்தில் பாண்டியன் கையெழுத்
திடட்டும்" என்று நவின்றான். இப்படியாக ஏகம்பவாணன் சினம் முற்றிலுமாக அடங்கியது.
பின்குறிப்பு:
இந்தக் கதையில் ஏகம்பவாணனிடம் பூதம் ஒன்று அடிமைவேலை பார்த்ததாகக் குறிப்பு
உள்ளது. இந்தக்கதை காணப்படும் விநோதரசமஞ்சரி என்னும் நூலிலும், தமிழ்நாவலர்
சரிதை என்னும் நூலிலும் தொண்டை மண்டல சதகம் என்ற நூலிலும் பூதத்தைப் பற்றிய
செய்தி உள்ளது. பூதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அன்றைய அரசியல் சூழ்நிலையில்
ஏகம்பவாணன் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களைப் போரில் வெல்வதும் அவர்
களைச் சிறைப்பிடிப்பதும் எளிதாகவே நிறைவேறியிருக்கும். ஏனென்றால் சேர, சோழ
மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆட்சிப் பரப்பிலும் படைப் பெருக்கிலும் சாதாரண சிற்றரசர்
போன்ற அதிகாரமே கொண்டிருந்தனர். எல்லாம் காலத்தின் கோலம்! வேறு என்ன
சொல்வது?