Friday 25 March 2022

கண்டசுத்தி(கண்டசித்தி)

 கண்டசுத்தி(கண்டசித்தி).


கண்டசுத்தி என்பது ஒருவர் மனத்தில் எண்ணியதை, மற்றவர்

தம் மனத்தால் கண்டுணர்ந்து அதைப் பற்றிப் பாடுவதாகும்.

இதனைக் 'கண்டசித்தி' என்ற பெயராலும் குறிப்பிடுவர். இச்

செயல் மிகவும் அரிதான ஒன்றாகும். 'அபிதான சிந்தாமணி'

என்னும் கலைக்களஞ்சியத்தில் அந்தகக்கவி வீரராகவ முதலியார்

கண்டசுத்தி பாடுவதில் வல்லுநர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சங்ககாலத்தில் பாண்டியமன்னன் ஒருவனுக்குப் பெண்களின்

கூந்தலுக்கு இயற்கைமணம்  உண்டா? இல்லையா? என்ற ஐயம்

மனத்தில் உதித்ததாகவும், இந்த ஐயத்துக்கு விடையளிக்கும் கவிதை

பாடும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகத் தரப்படும்

என்று அறிவித்ததாகவும், இறையனார் 'கொங்குதேர் வாழ்க்கை

அஞ்சிறைத் தும்பி' என்ற கவிதை பாடியதாகவும்  செவிவழிக் கதை

வலம் வருகிறதன்றோ!. இதுபோல், பதினேழாம் நூற்றாண்டில் ஈழ

நாட்டு யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசிங்கம் என்னும் மன்னன்

ஒருநாள் அருகிலுள்ள சோலைக்குச் சென்றிருந்தார். சோலை, நறுமணப்

பூக்களையுடைய செடிகளோடும், கண்கவர் கனிகளையுடைய மரங்களோடும்

அழகாகத் தோற்றமளித்தது. 


ஒருமரத்தில் பறவைக் கூடொன்று தென்பட்டது. அதில் தாய்க்கிளி

யொன்றும்  இரண்டு குஞ்சுகளும் வசித்தன. இவை மூன்றும் கூட்டை விட்டு

வெளியே வருவதும் அருகிலுள்ள வாழைமரத்தைப் பார்த்து அச்சத்துடன்

கூட்டுக்குள் நுழைந்து முடங்கிக் கொள்வதும், சிறிது நேரம் கழிந்தவுடன்

இதுபோலவே வெளியே வந்து பழையபடி கூட்டுக்குள் நுழைந்து பதுங்குவதும்

ஆகிய செயல்களைச் செய்தன. மன்னர் பரராசசிங்கம் இந்தக் காட்சியைக்கண்டு

திகைத்துப் போனார். கூடிருக்கும் மரத்துக்கு அருகில் என்ன உள்ளது? எதனைப்

பார்த்துத் தாய்க்கிளியும் குஞ்சுகளும் அஞ்சிக் கூட்டுக்குள் திரும்ப நுழைகின்றன?

என்று அறிய ஆவல்கொண்டார். கூடிருந்த மரத்துக் கருகில் சென்று பார்த்தார்.

வாழைமரம் ஒன்று நின்றிருந்தது. அதிலிருந்து ஒரு பசுங்குருத்து வெளிவந்து

நீட்டிக் கொண்டிருந்தது. இம்  மரத்தைப் பார்த்து ஏன் கிளிகள் அச்சமடைகின்றன?

என்று புரியாமல் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். மனத்துக்குள் சோலையில்

கண்ட காட்சியே திரும்பத் திரும்பத் தோன்றி மறைந்தது. மறுநாள் அவைப் புலவர்களிடம்

இதைப் பற்றிக் கேட்டுப் பார்க்கலாம் என்று முடிவுசெய்து உறங்கிவிட்டார்.


மறுநாள் புலவரவை கூடியதும் அங்கிருந்த புலவர்களிடம் 'நான் மனத்தில் எண்ணியதை

உங்களில் எவரேனும் உம் மனத்தால் கண்டு கவிதை பாட இயலுமா?' என்று வினவினார்.

புலவர்கள் 'ஐயா!  இக்கலை கண்டசுத்தி என்னும் பெயருடையது. இதில் தேர்ந்தவர் நம்

ஈழநாட்டில் எவரும் இலர். தாய்த்தமிழ் நாட்டில் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும்

புலவர் இதில் வல்லுநராகத் திகழ்வதாகக் கேள்விப்படுகிறோம். அவரை வரவழைத்தால்

தங்கள் எண்ணம் ஈடேறும்' என்று விடையிறுத்தனர்.


உடனே வீரராகவருக்குத்  தூதுவன்மூலம் செய்தி அனுப்பப்பட்டது. இருபது நாட்களுக்குள்

புலவர் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்தார். ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு பரராசசிங்க

மன்னரைச் சந்திக்க அரண்மனைக்குள் நுழைந்தார். மன்னர் புலவரை முறையாக

வரவேற்று நல்லதோர் ஆசனத்தில் அமரச் செய்தார். மன்னரும் புலவரும் ஒருவருக்

கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். பிற்பாடு மன்னர் தாம் சோலையில் கண்ட

காட்சியொன்று மனத்தை நெருடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். அதனைக் கண்டசுத்தி 

மூலம் கவிதை பாடி வெளிப்படுத்த உம்மால் இயலும் என்று பல புலவர்கள் கூறுகின்றனர்.

நீவிர் அவ்வாறு பாடி எம்மை மகிழ்வித்தல் வேண்டும் என்றார்.


புலவர் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். பின்னர் பாடத் தொடங்கினார்:

ஓங்கிய பெரும் மத்தகத்தையுடைய யானையைச் செலுத்தித் திக்குவிசயம் செலுத்தி வந்து

செங்கோல் ஆட்சி நடத்துகின்ற எங்கள் அரசரே! காட்டில்(சோலையில்)உள்ள வாழை மரத்

தில் அண்மையில் வெளிவந்த பசுங்குருத்து காற்றினால் அலைப்புண்டு அசைவதைக் 

கண்ட அருகிலிருக்கும் மரத்தில் கூடுகட்டித் தங்கியுள்ள அழகிய சொற்களை உதிர்க்கும்

கிளிகள் நச்சுப் பாம்பு தான் அசைகிறது என்று தவறாக எண்ணி அஞ்சிக் கூட்டுக்குள்

சென்று முடங்குவதும் பின்னர் நச்சுப் பாம்பு அவ்விடத்தைவிட்டு விலகியிருக்கும் என்று

எண்ணி வெளியே வருவதும் பசுங்குருத்து அசைவதைக் கண்டஞ்சி மீண்டும் கூட்டுக்குள்

செல்வதும் ஆகிய மடமைமிக்க செயல்களைச் செய்யும் சோலைகளையுடைய நாட்டுக்குரிய

களங்கமில்லாத(அகளங்கா) வேந்தனே! நீ வீதியுலா வரும்போது நின்னைக் கண்டு தன்

மனத்தைப் பறிகொடுத்த மடந்தை ஒருதலைக் காதலால் துன்புறுகின்றாள். ஊழிக்காலத்தில்

கடலிலிருந்து கிளம்பும் வடவைக்கனல் என்னும் தீப்பிழம்பைப் பிழிந்து துருத்தி வைத்து 

ஊதி மீண்டும் காய்ச்சிக் குழம்பாகச் செய்து அதனைத் தெளித்தால் நறுமணப் புழுகு

என்று எண்ணி அம்மடந்தை  பொறுத்துக் கொள்வாளோ? பொறுக்க மாட்டாள்.(வடவைக்

கனல் கயவரைப் பாடிப் பரிசேதும் கிட்டாமல் வெறுங்கையராகத் திரும்பிவரும் புலவர்

மனம் போல் சுடும் தன்மையுடையது என்கின்றார் புலவர்). ஆக, இந்தப் பாடல் மூலமாக

மன்னன் சோலையில் கண்ட காட்சியும் அதற்குரிய காரணமும் வெளிப்படுத்தப் பட்டன.


பாடல் பின்வருமாறு:

வடவைக் கனலைப் பிழிந்து கொண்டு மற்றும் ஒருகால் வடித்தெடுத்து

 வாடைத் துருத்தி வைத்தூதி மறுகக் காய்ச்சிக் குழம்புசெய்து

புடவிக் கயவர் தமைப் பாடிப் பரிசு பெறாமல் திரும்பிவரும்

 புலவர் மனம்போற் சுடுநெருப்பைப் புழுகென் றிறைத்தாற் பொறுப்பாளோ?

அடவிக் கதலிப் பசுங்குருத்தை நச்சுக் குழலென் றஞ்சியஞ்சி

 அஞ்சொற் கிளிகள் பஞ்சரம்விட்(டு) அகலா நிற்கும் அகளங்கா!

திடமுக் கடவா ரணமுகைத்த தேவ தேவ சிங்கமே!

 திக்கு விசயம் செலுத்திவரும் செங்கோல் நடாத்தும் எங்கோனே!

பஞ்சரம்=பறவைக்கூடு; வாரணம்=யானை; புடவி=பூமி.

கண்ட சுத்தி மனத்தையறியும் கலைபோல் தோன்றுகிறது. தற்காலத்தில் இவ்விதத்

திறமையுள்ளவர் எவரேனும் இருக்கின்றாரா? எனத் தெரியவில்லை.

Saturday 12 March 2022

பாயாத வேங்கை; பூவாத புண்டரிகம்.

 பாயாத வேங்கை; பூவாத புண்டரிகம்.


வேங்கை என்பது புலியையும், வேங்கை மரத்தையும் குறிக்கும் சொல்லாகும்.

புண்டரிகம் என்பது தாமரையையும், புலியையும் குறிக்கும் சொல்லாகும்.

எனவே, வேங்கைமரத்தைக் குறிக்க அடைமொழி சேர்த்துப் 'பாயாத வேங்கை'

என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது.  அதுபோலவே, புலியைக் குறிக்கப்

'பூவாத புண்டரிகம்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. இனி, இவை

பயன்படுத்தப்பட்ட பாடலைப் பார்ப்போம்:(தண்டியலங்கார மேற்கோள் செய்யுள்)

"பாயாத வேங்கை மலரப் படுமதமா

பூவாத புண்டரிகம் என்றஞ்சி---மேவும்

பிடிதழுவி மாறதிருங் கானிற் பிழையால்

வடிதவழும் வேலோய் வரவு".

பொருள்:

கூர்மைபெற்ற வேலை ஏந்தியவனே! பாயாத வேங்கை, அதாவது, வேங்கை மரமானது

மலர்ந்துள்ளது. அதனைப் பூவாத புண்டரிகம், அதாவது புலியென்று ,தவறாக நினைத்து

வெருவிய  பெண் யானைகள் பலம்பொருந்திய ஆண்யானைகளின் பக்கம் பாதுகாப்பைத்

தேடிப் புகலடையும். தம் அருகில் அடைக்கலம் தேடி வந்த பிடி யானைகளைக் களிற்று

யானைகள் தழுவிக்கொண்டு புலிகளின் உறுமலுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் பிளிறும்.

இத்தன்மை யுடைய கானகத்தில் நீ இடையாமத்தில்(இரவு வேளையில்) தனித்து வருதல்

தவறாகும். இக் கூற்று தலைவனிடம் தலைவி கூறியதாகும். யானைகளின் உளவியல்

மிக மிக நுட்பமானது. பருத்த உடலையும் கூர்மையான கொம்பையும் கொண்டிருந்தாலும்

பிடி யானை புலியைக் கண்டு அச்சம் கொள்ளும். களிற்று யானை புலியைத் துணிவுடன்

எதிர்கொள்ளும். எனவேதான் திருவள்ளுவர் தம் திருக்குறளில் கீழ்க்கண்டவாறு பாடினார்.

"பரியது கூர்ங்கோட்ட(து) ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்".


காதலின் போது காதலர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்தித்துக் கொள்வது சங்ககால

வழக்கம்.  பகலில் சந்தித்துக் கொண்டால் அச்சந்திப்பு பகற்குறி எனப்படும். இரவில்

சந்தித்துக் கொண்டால் அச்சந்திப்பு இரவுக்குறி எனப்படும். குறிஞ்சி நிலப்பகுதியில்

பகற்குறியில் சிக்கல் ஏதும் உருவாகாது. ஆனால் இரவுக்குறியில் தலைவன் தலைவி

யைச் சந்திக்க வரும்போது கொடிய புலி, யானை, கரடி போன்ற விலங்குகளாலும், 

பாம்பு போன்ற ஊர்வனவற்றாலும், பேய், காற்று, கருப்பு போன்றவற்றாலும், எதிர்பாராத

மழை, சூறாவளி போன்றவற்றாலும்  இடர் நிகழ வாய்ப்புண்டு. எனவே, தலைவி இது

குறித்துத் தன் கவலையைத் தலைவனிடம் எடுத்துரைக்கின்றாள். ஏற்கெனவே பகற்

குறிக்கு வாய்ப்பில்லாமல் இரவுக்குறியை நாடியுள்ளனர். குறிஞ்சி நிலப்பகுதியில்

தினை கதிரறுத்த பிற்பாடு தினைப்புனம் காக்கும் வேலை தலைவிக்கு வாராது.

அன்னை பாதுகாப்பாக இற்செறித்துவிடுவது வழக்கம்( தலைவிக்கு நேரும் வீட்டுச்

சிறை அனுபவம்). இற்செறிப்புக் காரணமாகப் பகற்குறி வாய்ப்பு பறிபோகிறது. இரவுக்

குறியில் தலைவனுக்குப் பலவிதமான அச்சுறுத்தல்கள் நேரிடும். பிறகு, காதலர்கள்

எவ்வாறு சந்தித்துக் கொள்வது? இதற்குத் தீர்வு வரைவு கடாவுதல் ஒன்றே. அதாவது,

தலைவன் தன் தமரோடு(சுற்றத்தாரோடு) தலைவியின் வீட்டுக்குச் சென்று அவளின்

தந்தையிடம் மகட்கொடை(பெண் கேட்டல்) வேண்டித் திருமணம் புரிதல் வேண்டும்.

ஏனென்றால் களவு வாழ்வை இரு திங்களுக்குமேல் அனுமதித்தல் மரபில்லை.


இதே கருத்தை எடுத்தியம்பும் குறுந்தொகை 141ஆம் பாடலை நோக்குவோம்:

"வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்

செல்கென் றோளே யன்னை யெனநீ

சொல்லின் எவனோ? தோழி! கொல்லை

நெடுங்கை வன்மான் கடும்பகை உழந்த

குறுங்கை யிரும்புலிக் கொலைவல் ஏற்றை

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

ஆரிருள் நடுநாள் வருதி

சாரல் நாட! வாரலோ வெனவே"

பொருள்:

இரவுக் குறியில் தலைவியைச் சந்திக்கும் தலைவன் வழக்கம்போல் அன்றும்

வந்துள்ளான். அவன்வரும் வழியில் அவன் எதிர்கொள்ள இருக்கும் இடர்களை

எண்ணி அஞ்சிய தலைவி தோழியிடம் " நீ தலைவனிடம் இனி இரவில் வாராதே;

எம் தாய் எம்மைத் தினைப்புனத்தைக் காவல் காக்கும்படி ஆணையிட்டனள்.

ஆதலின் பகற்குறியில் தினைப்புனத்திற்கு வருவீரேல் தலைவியைச் சந்திக்க

வாய்ப்புள்ளது என்று கூறு. அதனால் என்ன குற்றம் உருவாகும்?" என்று நவின்றாள்.

விளக்கவுரை:

தோழி! மலைப்பக்கத்தை யுடைய நாட! கொல்லையில் உள்ள நீண்ட தும்பிக்கையை

யுடைய யானையினது கடுமையான பகையினால்  வருந்திய, குறுங்காலையுடைய,

கொலைசெய்வதில் தேர்ச்சி பெற்ற பெரிய ஆண்புலியானது தன் இரைக்காக ஏதாவது

விலங்கு(பசிய கண்ணையுடைய செந்நாய் போன்றவை) அந்த வழியில் வருகின்றதா?

என்று  கண்ணை விழித்துப் பார்த்திருக்கும். இப்படிப்பட்ட ஆபத்து நிறைந்த வழியில்

இருள் சூழ்ந்த நள்ளிரவில் வருகின்றாய். அங்ஙனம் வருதல் எனக்கு அச்சத்தையும்

மனவுளைச்சலையும்  கொடுக்கிறது. அவ்வாறு வாராதே. வளைந்த அலகையுடைய

சிறு கிளிகள் விளைந்த தினைப் பயிரைக் கொத்திச் சேதப்படுத்துகின்றன. அக்

கிளிகள் அவ்வாறு தினைப் பயிருக்கு ஊறு விளைவிக்கா வண்ணம்  காவல் புரிய

அன்னை ஆணையிட்டனள். தலைவ! நீ பகற்குறியில் அங்கு வந்து சந்திப்பாயாக!

என்று தலைவனிடம் கூறுவதில் என்ன

குற்றம் ஏற்படும்? என்றாள் தலைவி.

புலவர்: மதுரைப் பெருங் கொல்லனார்.

அருஞ்சொற் பொருள்:

நெடுங்கை வன்மான்=நீண்ட துதிக்கையுடைய யானை;

குறுங்கை யிரும்புலி=குறுகிய முன்னங்காலையுடைய புலி.

ஏற்றை=ஆண்புலி; நடுநாள்=நள்ளிரவு.