"நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?"
தலைவனுக்கும் தலைவிக்கும் வரைவு நிகழ்ந்து ஒரு சில திங்கட் காலமே
கழிந்துள்ளது. அதற்குள் பொருள் தேடும் நிமித்தம் தலைவியைப் பிரிந்து
தலைவன் சென்று விட்டான். ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது
போலத் தலைவிக்குத் தோன்றியது. கார்காலத்தில் திரும்பி விடுவதாகச்
சொல்லிச் சென்றான். கார்காலம் தொடங்கி விட்டது. அவன் வருகைக்காக
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த தலைவியின் கண்கள் பூத்துப் போயின.
ஆனால் தலைவன் வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. நாட்கள்
நகர்ந்து கொண்டே யிருந்தன.
ஒருநாள் தலைவன் அனுப்பிவைத்த பாணன் வந்து தலைவியிடம் தலைவன்
தேரில் வந்து கொண்டிருக்கும் நல்ல செய்தியைத் தெரிவித்தான். தலைவியால்
அவன் கூற்றை நம்ப முடியவில்லை. ஏற்கெனவே பாணனைப் பற்றி நல்லவிதமான
கருத்து கிடையாது. ஏனென்றால் இதற்கு முன்பு ஓரிருமுறை தலைவன் புரிந்த
தவறான செய்கைகளுக்குத் துணைபோனவன். இருந்தாலும் அவன் சொன்ன
நல்ல செய்தியைப் புறந்தள்ள இயலாது. எனவே பாணனிடம் " தலைவனை நீ
நேரில் கண்டாயா? இல்லையென்றால், அவன் வந்ததைப் பார்த்தவர் சொல்லக்
கேட்டாயா? அங்ஙனம் பிறர் சொல்லக் கேட்டிருந்தால், யார் வாயிலாகக் கேட்டாய்?
உண்மையை அறிய விரும்புகிறேன். சொல்வாயாக. உண்மையைப் பேசினால்
வெள்ளைக் கொம்புடைய யானைகள் சோணையாற்றில் நீரில் அமிழ்ந்து விளை
யாடும் பொன் கொழிக்கும் பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக.
சங்ககாலப் புலவர்கள்
சோணையாற்றைப் பற்றியும்(கங்கையாற்றின் கிளையாறு) அதன் கரையில் அமைந்த
பாடலிபுத்திர நகரைப் பற்றியும் அங்கு குவிந்துள்ள பெரும் செல்வம் பற்றியும் நன்கு
அறிந்திருந்தனர்.இனி, இச் செய்தியைச் சொல்லும் பாடலைப் பார்ப்போம்:
"நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையின் மொழிமோ;
வெண்தோட்(டு) யானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே."
குறுந்தொகை பாடல் எண்: 75.
புலவர் படுமரத்து மோசிகீரனார்.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் மகத நாட்டை(பீகார்)
யாண்ட நந்தர்கள் கங்கைக் கரையில் பெருஞ் செல்வத்தைப் பதுக்கி
வைத்திருந்ததாக மக்கள் பேசிக் கொண்டார்கள். நம் புலவர்கள்
இந்தச் செய்தியை அறிந்து வைத்திருந்தனர். மாமூலனார் என்று
அழைக்கப்பட்ட வரலாற்றுப் புலவர் அகநானூற்றில் இது குறித்துப்
பாடியுள்ளார். பாடல் எண்: 265. பாடல் பின்வருமாறு:
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ!"
இது மட்டும் அல்லாமல், நந்தர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மௌரி
யர்கள் தென்னாட்டின்மீதும் தமிழ்நாட்டின்மீதும் படையெடுத்தனர்.
அவர்கள் கர்நாடகத்து மைசூர் வரை கைப்பற்றிவிட்டனர். ஆனால்
தமிழகத்து எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் சில வரலாற்று
ஆய்வாளர்கள் உரைக்கின்றனர். வேறு சிலர் தமிழகத்துக்குள் பெரும்
படையுடன் நுழைந்தனர்; ஆனால் தமிழர்களின் கூட்டுப் படையால்
விரட்டி யடிக்கப் பட்டனர் என்று கூறுகின்றனர். அசோகச் சக்கரவர்த்தி
தம் கல்வெட்டுக்களில் சோழ, பாண்டிய வேந்தர்களை நல்லவிதமாகவே
பொறித்துள்ளார். இந்தச் செய்திகள் மூலம் சங்கம் நிலவிய காலம் கி.மு.
4 அல்லது 5ஆம் நூற்றாண்டு என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட கீழடி அகழாய்வு முடிவுகள் சங்கம் நிலவிய
காலத்தை கி.மு.6ஆம் நூற்றாண்டை ஒட்டியிருக்கலாம் என்று தெரிவிக்
கின்றன. இதற்கு முன்பு சில வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம் நிலவிய
காலத்தை. கி.பி.4ஆம் நூற்றாண்டு என்றனர். அது தவறு என்று உறுதிப்
படுத்தப்பட்டுள்ளது.