விலங்குகள் வெளிப்படுத்தும் அன்பு/நட்பு.
ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்
ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவான்
ரீஜெண்ட்(சமஸ்தானத்தின் மன்னர் பட்டத்துக்கு உரியவர்
ஆட்சி செய்யும் வயது முதிர்ச்சி அடையாதவராக இருப்பின்
உரிய வயது அடையும்வரை அவர் சார்பாகச் சமஸ்தான நடவடிக்
கைகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும் அரசப் பிரதிநிதி)
பதவியில் இருந்து பல நல்ல, அரிய செயல்களைச் செய்தவர் மாட்சிமை
கொண்ட அமராவதி சேஷையா சாஸ்திரிகள் ஆவார். மக்களுடைய
இயல்புகளை நன்றாக அறிந்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில்
வல்லவர். வாயில்லா உயிரினங்கள்மீதும் அத்தகைய அருளைப்
பொழிந்தவர்.
ஒருசமயம் பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டதாகவும் கொடுத்த
உணவை உண்ணாமல் வீசியெறிந்துவிடுவதாதவும் சிலநேரங்களில்
காலின் கீழே போட்டு மிதித்து விடுவதாகவும் அடிக்கடி பிளிறிக்கொண்டே
இருப்பதாகவும் யாரும் அதனை நெருங்குவதற்கு அஞ்சுவதாகவும் பணி
பாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். உடனே பாகனை அழைத்து இதுகுறித்து
விசாரித்தார். பாகன்" ஐயா நான் பணியில் சேர்ந்து சில நாட்களே கடந்துள்ளன.
இதற்கு முன்பு பணியில் இருந்த பாகன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
அவருக்குப் பதிலாக என்னை நியமித்துள்ளனர். நான் என்னால் இயன்ற
பணிவிடைகளைச்செய்து வருகிறேன்.ஆனாலும் பட்டத்து யானை இயல்பு
நிலையில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானையின் நான்கு
கால்களிலும் இரும்புச் சங்கிலிகளைச் சுற்றிப் பிணைத்துள்ளேன்" என்றார்.
திவான் ரீஜெண்ட் உடனே தாமே நேரில் சென்று யானையின் நிலையை ஆய்வு
செய்ய எண்ணி யானை கட்டப்பட்டுள்ள கூடாரத்துக்கு வந்து யானையைப் பார்த்தார்.
கரும்பு, அரிசி, வெல்லம் முதலியவைகளைக் கொண்டுவந்து யானைக்குப் படைக்குமாறு
பணியாளர்களை ஏவினார். அவையெல்லாம் யானைமுன்பாகப் படைக்கப் பட்டன. ஆனால்
யானை அவற்றை எடுத்து உண்ணாமல் கீழே போட்டுவிட்டது. திடீரென்று உரத்த குரலில்
பிளிறியது. அதனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. மத்தகத்
திலிருந்து மதநீர் ஏதும் கசியவில்லை. அதற்கான அறிகுறி ஏதுமில்லை. எனவே திவான்
யானைக்கு மதம் பிடிக்கவில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்து
கொண்டார். வேறு யாது காரணத்தால் யானை இயல்புநிலை தவறி நடக்கிறது? என்று
ஆழ்ந்து சிந்தித்தார்.
பட்டத்து யானையை வேடிக்கை பார்க்கச் சிலர் குழுமியிருந்தனர். ஆனால் எவரும் அதன்
அருகில் செல்ல அஞ்சி ஒதுங்கியே நின்றனர். கூட்டத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி
யானையைப் பார்த்துக் கதறியழுதுகொண்டிருந்தாள். யானை அப்பெண்ணை நோக்கித்
துதிக்கையை நீட்டி நீட்டிப்பிளிறியது. இதனைக் கூர்ந்து கவனித்த திவான் அப்பெண்ணை
அருகில் வருமாறு அழைத்து விசாரித்தார். "ஏனம்மா அழுகின்றாய்? யானையைப் பார்த்துப்
பார்த்துக் கதறியழுவதன் காரணம் என்ன?" என்று வினவினார். உடனே அப்பெண் தன்
முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கோண்டு " ஐயா! என் கணவர்தான் இந்தப் பட்டத்து
யானையைக் கவனித்து வளர்த்து வந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இந்த யானை
என் கணவரிடம் மிகவும் அன்பாகப் பழகி வந்தது. அண்மையில் அவர் நோயுற்று இறந்து
விட்டார். அந்தத் துக்கத்தில் நான் வீட்டுக்குள்ளேயே முடங்கி அழுது கொண்டிருந்தேன்.
இன்று இந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டதாகவும் இயல்பை மீறி நடப்பதாகவும் கேள்விப்
பட்டு இங்கு வந்தேன். யானையைக் கண்டவுடன் அதன் வாடிய தோற்றத்தைப் பார்த்துத்
துக்கம் நெஞ்சையடைக்க அழுது கொண்டிருக்கிறேன்" என்றாள். உடனே திவான் அவளிடம்
"நீ இந்தக் கரும்பை யானையிடம் கொடுத்துப் பார்" என்றார். அப்பெண் தயக்கத்தோடும்
அச்சத்தோடும் சற்றுத் தொலைவில் இருந்தபடி கரும்பை யானையிடம் நீட்டினாள். என்ன
வியப்பு! யானை பாகனின் மனைவி தனக்குப் பழக்கப்பட்டவள் என்பதனாலும், எத்தனையோ முறை அவள் கையால் கவளம் முதலிய உணவை வாங்கியுண்டதாலும்
தட்டாமல் அவள் கொடுத்த கரும்பை உண்ணத் தொடங்கியது. உடனே குழுமியிருந்த
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திவான் மேலும் சில கரும்புகளையும் அச்சுவெல்லம் அரிசி முதலியவற்றையும் யானைக்குக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவ்வாறே
அப்பெண் அனைத்தையும் கொடுக்க, யானை எல்லாவற்றையும் வாங்கியுண்டது.
ஓரிரு நாட்களாக உணவேதும் உண்ணாமல் இருந்த யானை தற்பொழுது வயிறார
உண்டவுடன் தெளிவு பெற்றது.
இவ்வண்ணமே இன்னும் சிலகாலம் செய்து வருமாறு அப்பெண்ணுக்குத் திவான்
கட்டளையிட்டார். மேலும் புதிய பாகனையும் யானையிடம் பழகச்செய்யுமாறு அப்
பெண்ணுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு பட்டத்து யானையால் பழைய பாகனின்
மனைவிக்கு அரண்மனைத் தொடர்பு விட்டுப் போகாமல் தொடர்ந்தது. யானையும்
புதிய பாகனிடம் பழகி அவரை ஏற்றுக்கொண்டது. விலங்குகளும் அன்பையும் நட்பை
யும் வெளிப்படுத்துகின்றன. பழைய பாகன் இறந்தவுடன் அவர் நட்பையிழந்த துயரத்
தால் வாடிய யானை பாகனின் மனைவியின் நட்பாலும் புதிய பாகனின் நட்பாலும்
துன்பம் நீங்கித் தெளிவும் தெம்பும் பெற்று இயல்புநிலை அடைந்தது. அன்பே உலகில்
அனைத்தையும் ஆட்டிப் படைக்கிறது என்பது உண்மை.
பார்வை: 'நல்லுரைக் கோவை'--ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதனார்.
(நாலாம் பாகம்).