Tuesday, 21 July 2026

வருந்தேன் தோழி. வாய்க்க அவர் செலவே.

 வருந்தேன் தோழி. வாய்க்க அவர் செலவே.


பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து

வெளி தேசங்களுக்குச் செல்ல எண்ணுகின்றான். போகும் இடம்

கரடு முரடானது. நீண்ட நீரில்லாத பாலை நிலத்து வழியே செல்லல்

வேண்டும். மரங்களின் பின்னே பாலை நிலத்தில் வாழ்ந்துவரும்

வழிப்பறி செய்யும் மறவர்கள் தனியாக ஆள்துணையின்றி எவரேனும்

வருகிறர்களா? என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பர். தனியாக 

வருபவரை அம்பெய்து கொன்றுவிட்டு அவரிடமுள்ள பொருள்களை

வழிப்பறி செய்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் தக்க தருணத்துக்காகக்

காத்துக்கொண்டிருப்பர். அதனால்தான் அவ்வழியே செல்லநேரும்

வணிகக் குழுக்கள்(சாத்து என்று அழைக்கப்படுவர்) கூட்டமாக வாள்,

கேடகம்(கேடயம்), வில், அம்பு முதலான பாதுகாப்புக்கான ஆயதங்களோடு

பயணம் செய்து கடப்பது வழக்கம். ஏனெனில் பாலை நிலத்து மக்கள்

ஆறலை கள்வர்கள்(வழிப்பறிக் கள்வர்கள்). ஈவிரக்கமற்ற கொடிய கள்வர்கள்.

உண்ண உணவும், பருகுவதற்குரிய நீரும், படுத்துறங்கத் தோதான இடமும்

அப்பாலை நிலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. தலைவனைப் போலத் தனியாளாகப்

பொருள்தேடி வருபவர்கள் வணிகக் குழுக்களைக் கண்டு அவர்களோடு

இணைந்து பயணம் செய்தால் பாதுகாப்பான பயணமாக அமையும். உணவும் நீரும்

அவர்களின் கருணையால் கிடைத்துவிடும். வணிகக் குழுக்களைச் சந்திக்க வாய்ப்புக்

கிட்டவில்லையென்றால் தனியாளாக வருபவர்கள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக

நேரிடும். உண்ணுவதற்குக் கட்டுச்சோறு, பருகுவதற்கு நீர், பாதுகாப்புக்கு உடைவாள்

முதலானவற்றையும் சுமந்துகொண்டு மிகவும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையோடும்

சுற்றுமுற்றும் கூர்ந்து நோக்கிக்கொண்டும் பயணித்தல் இன்றியமையாதது. ஏனெனில்

அறமற்ற, ஈவிரக்கமற்ற ஆறலை கள்வர்களிடம் அகப்பட்டுக் கொண்டால்  மரணம் உறுதி.

எனவேதான், பெண்கள் இவ்வழியே வருவதேயில்லை.


இங்கே குறிப்பிடப்படும் தலைவனும் தன் உயிரையொத்த தலைவியை உடன்அழைத்து

வராமல் தான் மட்டுமே வந்துள்ளான். உண்மையில் நடந்தது என்னவென்றால் தலைவி

தானும் உடன்வருவதாகப் பிடிவாதம் செய்தாள். அழுது அடம் பிடித்தாள். ஆனால் அவள்

தோழி பாலைநிலத்தின் தன்மையையும்  வழிநெடுகச் சந்திக்க வேண்டிய இடர்களையும்

விரிவாக எடுத்தரைத்தாள். தலைவியிடம் "தோழி! நீ மிக மென்மையானவள். உன் மேனி

தளிர் போன்ற வண்ணம் கொண்டுள்ளது. பாலைவழியே பயணம் மேற்கொணடால் உன்

உடல் வாடிவிடும். மேலும் உனக்குரிய உணவு, நீர், தங்குமிடம் போன்ற இன்றியமையாத

தேவைகளுக்காகத் தலைவன் பெருமுயற்சி மேற்கொள்ளல்வேண்டும். எனவே, நீ 

அவனுடன் பயணம் மேற்கொள்ளாதே. அவன் பொருள் ஈட்டும் உயர்ந்த நோக்கத்தோடு

இப் பயணத்தைத் தொடங்கியுள்ளான். எனக்கு இதில் யாதொரு வருத்தமும் இல்லை.

நீயும் இதுபோலவே மனத்துயரை விலக்கிவிட்டுத் தலைவன் மேற்கொண்ட பெருளீட்டும்

முயற்சி முழு வெற்றிபெற வாழ்த்துவாயாக" என்றுரைத்தாள்.


தொடர்புடைய பாடல்:

நூல்= நற்றிணை. பாடல் எண்: 148. திணை: பாலை. புலவர்:கள்ளம்பாளனார்.

"வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்

நீஅவண் வருதல் ஆற்றாய் எனத்தாம்

தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே

நெடுங்கயம் புரிந்த நீரில் நீளிடைச்

செங்கால் மாஅத்து அம்புடைப் பொருந்தி

வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது

கல்அளைச் செறிந்த வள்உகிர்ப் பிணவின்

இன்புனிற்று இடும்பை தீரச் சினம்சிறந்து

செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை

உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும்

அருஞ்சுரம் இறப்ப என்ப

வருந்தேன் தோழி, வாய்க்கஅவர் செலவே.


அருஞ்சொற் பொருள்:

கயம்=ஆழம். ஆள்வினை=முயற்சி. அளை=குகை.

உகிர்=நகம். பிணவு=பெண். புனிறு,= ஈன்றணிமை.

ஏற்றை= ஆண் விலங்கு. மருப்பு= தந்தம். ஒருத்தல்=ஆண்.

புகர்=புள்ளி, கறை. இறப்ப=கடந்த.


இப்பாடலில் ஒரு காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு கற்குகையில் பெண்புலி ஒன்று அண்மையில்

குட்டிகளை ஈன்று பசிக் கொடுமையால் தவிக்கின்றது. பெண்

புலியின் பசிப்பிணி தீர்க்கவேண்டும் என்று எண்ணிய ஆண்புலி

உயர்ந்த கோடுகளை(தந்தங்கள்) யுடைய ஆண்யானையின்

புள்ளிகள் பொருந்திய முகத்தில் பாய்ந்து அதனைக் கொன்று

பெண்புலிக்குப் படைத்தது. இந்த உவமைமூலமாகத் தலைவனும்

தலைவியும் இல்லறம் நடத்தத் தேவைப்படும் பொருளை ஈட்டுவதற்

காக அச்சம் கொள்ளத்தக்க பாலைவழியே பிற தேசங்களுக்குச்

செல்கின்றான் என்று குறிப்பாகப் புலவர் உணர்த்துகிறார்.


ஆதாரம்:

சங்க இலக்கியம்-- நற்றிணை மூலமும் உரையும்- வர்த்தமானன்

பதிப்பகம். உரையாசிரியர்: முனைவர் கதிர் மகாதேவன்.

Sunday, 5 July 2026

புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

 புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.


தலைவன் தான் ஒருத்தியைக் கண்டு அவள் நெற்றியழகால்

புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானை

போலக் கட்டுண்ட நிலையைத் தன் பாங்கனிடம் உரைத்தது.

நூல்: குறுந்தொகை--பாடல் எண்: 129-- திணை:குறிஞ்சி--

இயற்றியவர்:கோப்பெருஞ்சோழன்.


தலைவன் கூற்று:

எலுவ(தோழ!) இளையோர்களுக்கு ஆதரவான நண்பனே! 

அறிவுடையோர்க்கு(புலவர்க்கு) உற்றவனாக விளங்கும்

தோழனே! நான் என் மனத்தை வருடிக்கொண்டிருக்கும்

ஒரு செய்தியை நவில்கின்றேன். நீ கவனித்துக் கேட்பாயாக.

அன்றொருநாளில் மனத்துக்கு உகந்த ஒரு காட்சியைக் கண்டேன்.

பரந்த கடலின் நடுவே வளர்பிறையில் எட்டாம்நாள் பக்கத்தில்

பசுமையான வெள்ளிய நிலவொளியை வீசும் பிறைமதி தோன்றிய

தைப் போலத் தலைவியின் கூந்தலுக்கு அணுக்கத்தில் விளங்கிய

அவளது சிறிய நெற்றி(நுதல்) என் கண்களில் பட்டது. அதனால் நான்

புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானையைப்

போலக் கட்டுண்டேன். உறுப்பு இலக்கணப்படி(அங்க சாத்திரப்படி) பெண்

களுக்கு நெற்றியின் அகலமும் வளைவும் ஒளிவீசும் எட்டாம்நாள் பிறை

போல இருப்பது சாலச் சிறந்ததாம்.


இனி பாடலை நோக்குவோம்:(நேரிசை ஆசிரியப்பா)

"எலுவ! சிறாஅர் ஏமுறு  நண்ப!

புலவர் தோழ! கேளாய் அத்தை.

மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்

பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்

கதுப்(பு)அயல் விளங்கும் சிறுநுதல்

புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே!

அருஞ்சொற் பொருள்:

எலுவ=தோழ. ஏம், ஏமம்=பாதுகாப்பு, ஆதரவு.

அத்தை=பொருளற்ற ஒலிக்குறிப்பு-அசை.

எண்ணாள் பக்கம்=எட்டாம் நாள்(அட்டமி)

பக்கம்=பட்சம்.


பார்வை:

சங்க இலக்கியம்-குறுந்தொகை மூலமும் உரையும்

வர்த்தமானன் பதிப்பக வெளியீடு. உரை:முனைவர் 

தமிழண்ணல்.

Friday, 19 June 2026

மேற்காசியாவில் போர்ச்சூழல் விலகுமா?

 மேற்காசியாவில்  போர்ச்சூழல் விலகுமா?


யாப்பு=கலிவிருத்தம்(தேமா/புளிமா, கூவிளம்3)

எழுத்துக் கட்டுப்பாடு உண்டு. நேரசையில் பாடல்

தொடங்கினால் ஒற்று நீக்கிப் பதினொரு எழுத்துகள்

வரும். நிரையசையில் பாடல் தொடங்கினால் ஒற்று

நீக்கிப் பன்னிரண்டு எழுத்துகள் வரும்.


உலகச் சண்டியர், உண்மையே பேசிடார்,

கலகம் செய்வதில் கைகண்ட வித்தகர்,

தலைமைப் பண்பினில் சற்றுமே தேறிடார்,

அலகை ஒத்த அமெரிக்க மேலிடம்.  (அலகை=பேய்)


டிரம்பின் சீடராம் இஸ்ரவேல் மேலிடம்,

தரமில் செய்கையில் தன்னிகர் அற்றவர்,

மரணம் கண்டு மகிழ்பவர், நெஞ்சினில்

கருணை யில்லாக் கயமைகொள் தீயவர்.


நெதன்யா கென்பார், நெகிழ்ச்சியில் கல்நெஞ்சர்,

பதைக்கச் செய்வதில் பாதகர், மக்களை

வதைக்கும் வித்தையில் வல்லவர், ஞாலத்தைச்

சிதைக்கும் செய்கையில் தேர்ந்தவர், பாவியர்.


பாலஸ் தீனமும் பாலிக்கும் ஹம்மாஸாம்

காலன் போல்,போர்க் கணங்களும் நைந்திட

சீலம் நீங்கிய தீயர் இருவரும்(டிரம்ப், நெதன்யாகு)

ஞாலம் சோர்ந்திட நாசப்போர் செய்தனர்.


உதவ எண்ணிய ஒப்பில்நா டாம்ஈரான்

எதையும் கையாளும் ஏவு கணைகளால்

மதங்கொள் யானைபோல் வாட்டி வதைத்தது.

சிதறி யோடினர் தீயஇஸ் ரேலியர்.


ஈரான் நாட்டின் எதிரி இணக்கமில்

தேரா மூர்க்க அமெரிக்கா தாக்கிடச்

சீரார் தேசம் சிதறிச்சின் னாபின்னம்

போரால் ஆனதே, பொற்பெலாம் தேய்ந்ததே.


சால நெஞ்சைச் சவட்டுமிந் நேர்ச்சியால்

ஓலம் செய்கின்றார், ஒப்பாரி வைக்கின்றார்.

ஞால மக்கள் நலிவுற, ஈரான்தம்

கோல நீரிணை ஹோர்முஸைப் பூட்டினர்.


ஹோர்முஸ் பாதையை ஓர்ந்தே அடைத்ததால்

பார்க்குள் நாடுகள் பல்துயர் உற்றன.

யார்க்கும் பெட்ரோல், எரிபொருள் கிட்டிடாப்

போர்க்கு மூலமாம் பூசல் வெடித்தது.


மேலை ஆசியப் பூமியில் இஸ்ரவேல்

பாலஸ் தீனப் படைக்குழு ஹம்மாஸை

ஓலம் பொங்க உடற்றிடும் போர்களால் (உடற்றிடும்=சிதற அடித்தல்)

காலம் பூரா கவலை வருத்துமே.


அமெரிக் காஇஸ்ரேல் ஆங்கார நாடீரான் (நாடு+ஈரான்)

தமக்குள் மோதிடும் தன்மையால் பூமியில்

அமைதி கெட்டது, அன்றாடம் போர்க்குரல்.

நமையார் காப்பார்? நலஞ்செய்க ஆண்டவா!


பின்குறிப்பு:

அமெரிக்கா-ஈரான் இவ்விரு நாடுகளுக்கிடையே

ஹோர்முஸ் நீரிணை திறப்பது குறித்து ஒப்பந்

தம் கையொப்பம் இடப்படலாம் என்ற பேச்சு

அடிபடுகிறது. ஒப்பந்தம் நிறைவேறி மேற்காசியா

வில் அமைதி நிலவினால் அனைவரும் வரவேற்பர்.

Tuesday, 2 June 2026

குயிலோசையை வெறுக்கும் தலைவி.

 தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்குக் குயிலோசை,

நிரம்பி ஓடும் ஆறு, கொடியதாய்த் தோன்றுகிறதாம்.


வினைவயிற் பிரிந்து சென்றான் தலைவன். கார்காலத்தில்

திரும்பி வருவதாக உறுதியளித்திருந்தான். ஆனால், தலைவிக்கோ

ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது போலத் தோன்றுகிறது.

நெடுங்காலம் ஆறாத புண்ணின் நிணங் காயாத மார்பிலே வேலைக்

கொண்டு குத்தினாற்போலக் குயிலோசை துன்பம் தருகின்றது.

அதனைக் காட்டிலும் நீர் நிரம்பிப் பாய்கின்ற ஆறு கொடியதாய்த்

தோன்றுகிறது. போதாக் குறைக்குக் குருக்கத்தி மலருடனே விரவிய 

செண்பக மலரை விற்பதற்காகக் கடகப்பெட்டியுடன்(கடாப்பெட்டி) தெருவில்

கூவிவரும் உழவர்மகள் ஆற்றை விடவும் மிகக் கொடியவளாகத் தென்படு

கின்றாள்.


குயிலோசை, நிரம்பிய ஆற்றுநீரோட்டம், நறுமலர்- இவையெல்லாம்

தலைவிக்கு ஒருகாலத்தில் இன்பமளித்தவை. தற்பொழுது தலைவனைப்

பிரிந்திருக்கும் தலைவிக்குக் குயிலோசை குத்தல் ஏற்படுத்துகிறது. நிரம்பிய

ஆற்றுநீரோட்டம் கடந்த காலத்தில் தலைவனும் தானும் ஒருங்கே ஆற்றில்

நீராடியதை நினைவூட்டி மனத்தைக் காயப்படுத்துகிறது. இவைபோலவே,

நறுமலர்களை விற்றுவரும் மங்கை தலைவன் தனக்கு மலர்சூட்டித் தழுவிய

நிகழ்வை நினைவூட்டி வதைக்கின்றாள். ஏற்கெனவே, தான் நாள்முழுவதும்

தலைவனுடனான நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டு சரிவர உண்ணாமலும்,

உறங்காமலும் பித்துப் பிடித்த நிலையில் திரிவதாக நற்றாய்முதல் அனைவரும்

பழிக்கின்றனர். இந்நிலையில் குயிலோசை, நிரம்பிய ஆற்றுநீரோட்டம், நறுமலர்

விற்றுவரும் மங்கையின் கடகப்பெட்டி போன்றவை பிரிவுத் துயரை மேலும் அதிகப்

படுத்துகின்றன. தலைவன் திரும்பிவந்தாலொழிய இவ்விடர்கள் தீரமாட்டா.

பாடலை நோக்குவோம்:

நூல்: நற்றிணை. திணை: முல்லை. புலவர்:மாறன்வழுதி.

பாடல் எண:97. 


                     நேரிசை ஆசிரியப்பா.


"அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா

எவ்வ நெஞ்சத்(து) எஃகுஎறிந் தாங்குப்

பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்

தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே.

அதனினும் கொடியள் தானே மதனின்

துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு

பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென

வண்டுசூழ் வட்டியள் திரிதரும்

தண்டலை உழவர் தனிமட மகளே."


அருஞ்சொற் பொருள்:

வழும்பு=நிணம். மதன்=அழகு. பித்திகை=சிறு சண்பகம்.

வட்டி=கடகப் பெட்டி(கடாப் பெட்டி).


நூல் ஆதாரம்: சங்க இலக்கியம்-நற்றிணை- வர்த்தமானன்

பதிப்பகம். உரையாசிரியர்-முனைவர் கதிர் மகாதேவன்.

Thursday, 14 May 2026

முத்து ரகுநாத சேதுபதியும் சவ்வாதுப் புலவரும்.

 முத்துரகுநாத சேதுபதியும் சவ்வாதுப்புலவரும்.


அது பதினெட்டாம் நூற்றாண்டுக் காலம். அரசியல் சூழ்நிலை

குழப்பமாக இருந்த நேரம். கும்பினிக்காரர்கள் (இங்கிலாந்து

நாட்டைச் சேர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள்)

வணிகம் புரியும் பொருட்டு நம் நாட்டுக்குள் நுழைந்து சிறுகச்

சிறுக ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டிருந்த காலக்கட்டம்.

மூவேந்தர்களும், குறிப்பிடத்தக்க குறுநில மன்னர்களும் மறைந்து

விட்டனர். ஆங்காங்கே சில சமீன்தார்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்

தனர். இராமநாதபுரத்தில் சேதுபதிகள் ஓரளவு செல்வாக்கோடு திகழ்ந்தனர்.

மூவேந்தர்களைப் போலக் குடிமக்களைப் பேணுவதிலும் தமிழ்மொழியைப்

போற்றுவதிலும் கலைகளைப் பாதுகாப்பதிலும் ஈடுபாட்டுடன் நடந்துகொண்டனர்.

சேதுபதிகளில் குறிப்பிடத்தக்கவர் கிழவன் சேதுபதியாவார். வீரத்திலும் ஆட்சித்

திறத்திலும் மிளிர்ந்தார் என்று கூறினால் சற்றும் மிகையாகாது. அவரது ஆட்சிக்

காலம் கி. பி. 1673-1708 வரையாகும். அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த சேதுபதிகளும்

திறம்படவே ஆட்சி நடத்தினர்.


சவ்வாதுப் புலவர் கி. பி 1745 ஆம் ஆண்டில் பரமக்குடியருகிலுள்ள எமனேஸ்வரம்

என்ற சிற்றூரில் பிறந்தவர். இஸ்லாமியத் தமிழ்ப்புலவர். சேதுபதி அரசவையில்

தமிழறிஞராகத் தொண்டு செய்தவர். இவரின் மைத்துனர் சர்க்கரைப் புலவரும்

சேதுபதி அரசவையில் தமிழ்த்தொண்டாற்றிக் கொண்டிருந்தார். இப் புலவர்களின்

காலத்தில் ஆட்சி புரிந்தவர் முத்துரகுநாத சேதுபதி ஆவார். சேதுபதிகள் ஆட்சிப்பணி

எவ்வளவு கடுமையாக இருப்பினும் தமிழவைக்கு நேரில்வந்து புலவர்கள் மற்றும் இதரக்

கலைஞர்களுடன் கலந்துரையாடி ஆட்சிப் பணிப்பளுவால் ஏற்பட்ட மன இறுக்கத்தைத்

தளர்த்துவது வழக்கம். சேதுபதிகள் அனைவருமே தாமே கவிபாடவும் வல்ல மேதைகள்.

அன்றாடம் அரசவையில் தமிழ்ப்புலவர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் குழுமுவது வழக்கம்.

நேரம் வாய்க்கும்பொழுது சேதுபதிகளும் கலந்துகொண்டு புலவர்களைப் பாடல் புனையச்

செய்தும், ஏற்கெனவே இயற்றிய இலக்கியங்களிலிருந்து சுவையான பகுதிகளை மேற்

கோள் காட்டிச் சொற்பொழிவாற்றச் செய்தும் அவையைக் கலகலப்பாக்குவர்.


ஒருமுறை புலவர்களுக்குள் சேதுபதியவர்களைப் போற்றும் போட்டி உருவாயிற்று.

ஒவ்வொரு புலவரும் சேதுபதியவர்களின் வீரத்தைப் பற்றியும், ஈகைத் தன்மையைப்

பற்றியும், நீதி நேர்மையைப் பேணுவது பற்றியும், கலைகளின் மீதுள்ள ஈடுபாட்டைப்

பற்றியும், இன்னும் பல்வேறு விதமான குண இயல்புகளைப் பற்றியும் பாடினர்.

எதிர்பாராத விதமாக ஒரு புலவர் சேதுபதி மன்னர் இறைவனைத்தவிர வேறு யாருக்கும்

தலைவணங்கியதில்லை என்று புகழந்தார். மற்றப் புலவர்கள் " ஆம், உண்மையே" என்று

ஒரே குரலில் முழங்கினர். இடையில் சவ்வாதுப் புலவர் குறுக்கிட்டு " சேதுபதி மன்னர்

மூன்று தருணங்களில் தலைசாய்ப்பதுண்டு" என்று மெல்ல மொழிந்தார். இதைக்கேட்ட

சேதுபதி மன்னர் சிறிது சினங்கொண்டார். ஏனைய புலவர்கள் " சவ்வாது! என்ன உளறு

கின்றீர். சுயநினைவோடுதான் பேசுகின்றீரா? " என்று சீறினர். அனைவரையும் கையால்

சைகைசெய்து அமைதிப் படுத்திய சவ்வாதுப் புலவர் உடனே பாடத் தொடங்கினார்:


             கட்டளைக் கலித்துறை.


"கிளையாளன் சேது பதிரகு நாயகன் கிஞ்சுகவாய்

இளையார் கலவி யிடத்தும்நம் ஈசரி டத்துமென்றும்

வளையாத பொன்முடி சற்றே வளையும் மகுடமன்னர்

தளையா டியகையிற் காளாஞ்சி யேந்தும் சமயத்துமே".

என்ற பாடலைப் பாடி முடித்தவுடன் சேதுபதியுள்ளிட்ட அனைவருமே " ஆகா! அருமை, மிக

அருமை. மிகச் சிறந்த கற்பனை மட்டுமல்லாது உண்மையும் ஆகும்" என்று சவ்வாதுப்

புலவரை மெச்சினர்.

பொருள்: சேதுபதி மன்னர் தலைசாய்க்கும் தருணங்கள் மூன்று:

1) கிளி போன்ற சிவந்த வாயையுடைய தன் மனைவியுடன் கூடி முயங்கும் பொழுது.

2)எல்லாம்வல்ல இறைவன் சிவபெருமானை வணங்கும் பொழுது.

3)போரில் தம்மை எதிர்த்த பகைமன்னர் தோல்வியடைந்ததனால் கைகளில் விலங்கு

போடப்பட்டுச் சேதுபதி மன்னருக்காகக் காளாஞ்சி என்னும் தாம்பூலம் உமிழும் கலத்தை

ஏந்தும் பொழுது. (தாம்பூலம் தரித்தபின்னர் அதனை மென்று சக்கையை உமிழ்வதற்காகத்

தலைசாயக்கும் பொழுது). இம் மூன்று தருணங்களைத் தவிர்த்து ஏனைய தருணங்களில்

சேதுபதி மன்னர் தலைசாய்த்து வணங்குவதில்லை.

அருஞ்சொற் பொருள்:

கிஞ்சுகம்=கிளி: தளை= விலங்கு: காளாஞ்சி: தாம்பூலம் மென்றபின்னர்ச் சக்கையை

உமிழும் கலம்.

பார்வை: 'தனிச் செய்யுள் சிந்தாமணி' - தனிப்பாடல் திரட்டு முதல் பாகம்.

Thursday, 23 April 2026

சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்.

 சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்.


வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்றுவிட்டான்

ஒரு தலைவன். அதாவது, திருமணத்தை உறுதிசெய்துவிட்டு

அதற்காகப் பொருள் தேடிவரத் தொலைவிலுள்ள நாடுகளுக்குச்

செல்வது சங்ககால வழக்கம். அக்காலத்தில் பிரிவினால் தலைவனும்

துன்பம் கொள்வான்; தலைவியும் துன்பம் கொள்வாள். அவ்வேளையில்

காதலித்த பொழுது நிகழ்ந்த நேர்வுகளை அசைபோட்டு இருவரும்

தம்மைத் தேற்றிக்கொள்வர். இங்கே ஒரு தலைவியிடம் அவள் தோழி

தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட துயரத்தை ஆற்றியிருந்த விதம்

பற்றி வினவினாள். அதற்குத் தலைவி விடையிறுத்தாள்: " நம்மைப்

பிரிந்து(என்னைப் பிரிந்து) தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்று

அங்கே உறைகின்றார்;ஆயினும் என் நெஞ்சிற்கு அருகிலேயே எப்பொழுதும்

வீற்றிருக்கின்றார். அவரது நாட்டுக் கடலில் உருவாகும் அலைகள்,

விழுது தாழ்ந்த தாழையினது முதிர்ந்த கொழுவிய அரும்பு, நாரைகள் கோதுகின்ற

சிறகைப்போல விரிந்து மடல்கள் மலர்கின்ற கடற்கரைச் சோலையை

ஒட்டி அமைந்துள்ள எங்கள் சிற்றூரில் இல்முகப்பில் வந்து மீண்டுசெல்லும்‌.

அவர் தற்பொழுது வெகு தொலைவிலுள்ள நாட்டில் உறைகின்ற வேளையிலும்

என் நெஞ்சருகே எப்பொழுதும் வீற்றிருக்கின்றதாகவே உணர்கின்றேன்.

தலைவன் தற்பொழுது தங்கியுள்ள நாட்டின் நீரைக் கண்டு அவனது

பிரிவால் ஏற்பட்ட துயரை ஆற்றியிருந்தேன்". காதலர் பிரிய நேர்ந்தால்,

காதலனை நினைவுபடுத்தும் அவன் தொடர்புடைய எந்தப் பொருளைக்

கண்டாலும் காதலிக்குப் பிரிவுத் துன்பம் குறையும் என்பது இலக்கியச்

செய்தி. இனி, தொடர்புடைய பாடலைப் பார்ப்போம்:


குறுந்தொகை: பாடல் எண்: 228;

      யாப்பு: நேரிசை ஆசிரியப்பா.

 புலவர்:வள்ளுவன் பெருஞ்சாத்தன்.


"வீழ்தாள் தாழை யூழுறு கொழுமுகை

குருகுளர் இறகின் விரிபுதோ (டு) அவிழும்

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்

திரைவந்து பெயரும் என்பநம் துறந்து

நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்

நெஞ்சிற்(கு) அணியர் தண்கடல் நாட்டே".


அருஞ்சொற் பொருள்:

குருகு= நாரை; தோடு= மடல்; கானல்=கடற்கரைச் சோலை;

நண்ணிய=பொருந்திய; முன்றில்=வீட்டின் முகப்பு;

திரை=அலை; பெயரும்= மீண்டு செல்லும்; சேண்=தொலைவு;

அணியர்=அருகில் உள்ளவர்.


இதே கருத்து குறுந்தொகை 361 ஆம் பாடலிலும் பயின்று

வருகிறது. தலைவனது மலையில் முதல்நாள் மாலை பெய்த மழை

யினால் உண்டாகிய அருவியால் அடித்துவரப்பட்ட காந்தள் மலர்

மறுநாள் காலையில் தலைவியின் ஊர்அருகே வந்தது. தம்

தலைவனோடு  தொடர்புடைய பொருட்களைத் தொட்டுத் தீண்டலும்,

தழுவுதலும், பாராட்டிப் போற்றுதலும் மகளிர் இயல்பு. பார்க்க பா.எ.361.

    யாப்பு: நேரிசை ஆசிரியப்பா.


"அம்ம! வாழி தோழி அன்னைக்(கு)

உயர்நிலை உலகமும் சிறிதால்;; அவர் மலை

மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு

காலை வந்த காந்தள் முழுமுதல்

மெல்லிலை குழைய முயங்கலும்

இல்லுய்த்து நடுதலும் கடியா தோளே".

தலைவனது மலையில் மாலையிற் பெய்த மழையினால் உருவான

அருவியால் அடித்து வரப்பட்ட  காந்தள் மறுநாள் தலைவியின் வீட்டருகே

வர, அதனை எடுத்துத் தலைவி தழுவிக் கொண்டாள்; அதன்கிழங்கை

வீட்டில் நட்டு வைத்தாள். அன்னையும் இச்செயலை விலக்கவில்லை.

(ஏனெனில் வரைவு உறுதிசெய்யப்பட்டுள்ளது). அன்னையின் உதவிக்கு

மேலுலகம் அளித்தாலும் அது சிறிதேயாகும்.


பார்வை: குறுந்தொகை மூலமும் உரையும்-ஆக்கியோர்

                  டாக்டர் உ.வே.சா.அவர்கள்.

Tuesday, 31 March 2026

பொன்னுச்சாமித் தேவரும் முத்துராமலிங்க சேதுபதியும்.

 பொன்னுச்சாமித் தேவரும் முத்துராமலிங்க சேதுபதியும்.


கடந்த பதினெட்டு மற்றும் பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில்

பாண்டியநாடு குழப்பமான நிலையிலிருந்தது. ஆங்கிலக் கும்பினி

யாருடன் கூடிய கருநாடக நவாபின் ஆட்சி இந்த நாடெல்லாம் அமைந்த

பொழுது  மதுரை நாயக்க இராச வமிசம் அடியோடு ஒழிந்தது. நாயக்கரைச்

சார்ந்திருந்த இராமநாதபுரச் சேதுபதிகள் நிலைமையும் தடுமாறியது.

1773 இல் ஆட்சியிலிருந்த முத்துராமலிங்க சேதுபதி என்பவர் இவர்களை

எதிர்த்துப் போர்புரிந்து தோல்வியடைந்து சிறைப்பட்டார். இவர்க்குப்பின்

இவர் சகோதரி மங்களேசுவரி நாச்சியாரும் சேதுபதிகள் இருவரும் பட்டம்

பெற்றனர். இறுதியில் ஆட்சிபுரிந்த இராமசாமி சேதுபதி ஆண் வாரிசின்றி

அகால மரணமடைந்ததை யடுத்து அவர் தேவியார் பர்வதவர்த்தினி நாச்சியார்

பட்டம் பெற்றார். இவருக்கு அமைச்சராயிருந்து உதவியவர் இவர் சகோதரர்

வீசுபுகழ் கொண்ட கோட்டைச்சாமித் தேவர்.


அரசி பர்வதவர்த்தினி நாச்சியாருக்கு வாரிசு இல்லாததால், தமது தங்கை முத்து

வீராயி நாச்சியாரின் குழந்தைகளைத் தத்தெடுத்துப் பட்டம் கட்ட முடிவெடுத்தார்.

கணவனையிழந்த அரசி தத்தெடுக்கப் பல எதிர்ப்புகள் கிளம்பின. அக்கால வழக்கப்படி

இலண்டனிலிருந்த பிரிவி கவுன்சில் வரை வழக்கு சென்றது. பலப்பல ஆண்டுகளாக

வழக்கு நடைபெற்றது. இறுதியில் கணவனையிழந்த அரசி தத்தெடுத்தது செல்லும்

என்ற தீர்ப்பு வந்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே அரசியின்

தங்கையார் முத்துவீராயி நாச்சியாரும் அவர் கணவர் சிவஞானத் தேவரும் புதுமடம்

என்ற பகுதியிலிருந்து தம் பொன்னுச்சாமி, துரைராசா என்னும் மக்களொடு இராமநாதபுர

அரண்மனைக்கு வந்து தங்கினர். பொன்னுச்சாமி மூத்தவர் என்ற போதிலும் அரசியார்

இளையவரான துரைராசாவையே மகுடம் சூட்டிச் சேதுபதி யாக்கினார். பட்டம் சூட்டியபின்

துரைராசா முத்தராமலிங்க சேதுபதியானார். பொன்னுச்சாமி சகல அதிகாரங்கள் கொண்ட

அமைச்சரானார். அப்பொழுது அவர் வயது இருபதாகும். தம் தாய்மாமன் கோட்டைச்சாமித்

தேவரிடம் அரசியலைப்பற்றியும் நிர்வாகத்தைப் பற்றியும் நன்கு கற்றறிந்திருந்தார். தந்தை

சிவஞானத்தேவர் தமிழ்ப்புலமை மிக்கவர். தம் இரு பிள்ளைகட்கும் சகல கலைகளையும்

கற்பித்திருந்தார். இருவரும் கவிதை புனைவதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சேதுபதி நாட்டை

ஆள்வதில் பெரும்பொழுது செலவிட்டார். அவர் தமையனாரான பொன்னுச்சாமி தமிழ்ப்

புலவர்களோடு இலக்கிய விவாதம் நிகழ்த்தி மகிழ்வார். இராமநாதபுர அரண்மனையில்

கம்பராமாயண ஆராய்ச்சி நடைபெறும். பலதரப்பட்ட புலவர்களும் பங்குபெற்றுத் தத்தம்

கருத்துகளை வெளிப்படுத்துவர். புலவர் கூட்டம் இலக்கிய ஆராய்ச்சியிலும் விவாதங்களி

லும் ஈடுபட்டு அவையைச் சிறப்பாக நடத்தினர்.


ஒருநாள் கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம்- ஊர்தேடு படலத்திலுள்ள இலங்கை

மாதேவியைப் பற்றிய பாடல் ஆராய்ச்சிக்கு வந்தது. பாடல் பின்வருமாறு:

"அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள். அரவெல்லாம்

அஞ்சு வணத்தின் வேகம் மிகுத்தாள், அருளில்லாள்.

அஞ்சு வணத்தின் உத்தரி யத்தாள், அலையாரும்

அஞ்சு வணத்தின் முத்தொளிர் ஆரத் தணிகொண்டாள்".

அனுமன் சீதை இலங்கையில் இருக்குமிடத்தைக் கண்டு பிடிப்பதற்ககாகக் கடலைத் தாண்டி

இலங்கைக்கு வந்து சீதைப்பிராட்டியைத் தேடி யலையும் பொழுது இலங்கையைக் காவல்

புரியும் இலங்கைமாதேவியைச் சந்திக்கின்றான். அப்பொழது அவ்விருவருக்கும்

உரையாடல் நிகழ்கிறது. அதைச்சொல்லவந்த கம்பர் மடக்கு அணி பயின்றுவரும்

இப்பாடலை மொழிகின்றார்.

பொருள்:

1. அஞ்சு வணத்தின்(வண்ணத்தின்-நிறத்தின்) ஆடை உடுத்தியிருந்தாள்.

2.அரவெல்லாம்(பாம்புகளெல்லாம்) அஞ்சும் உவணத்தின் கழுகு போன்ற வேகம்

கொண்டிருந்தாள்.

3.அம் சுவர்ணத்தின் உத்தரியத்தாள்- அழகிய தங்க உத்தரியம் தரித்திருந்தாள்.

4.அலையாரும் அம் சு வள் நத்தின் முத்தொளிர் ஆரத்து அணிகொண்டாள்.

கடல் அலைகளில் தவழும் அழகிய முதுகு கொண்ட சங்குகள் ஈன்ற முத்து

ஒளிரும் ஆரம்(மாலை) அணிந்திருந்தாள்.


பொன்னுச்சாமித் தேவரிடம் 'புத்தக வாசிப்பிற்கு' ஒரு பணியிடம் உண்டு.

அப்பணி செய்பவர் பொன்னுச்சாமித் தேவர் விரும்பிய நேரத்தில்

விரும்பிய பாடலை இசையோடு பாடிக் காட்டுதல் வேண்டும். இரவு பத்துமணிவரை

பணிபுரிதல் வேண்டும். ஒருநாள் இராமலிங்கம் என்னும் அந்த நபர்

இரவு எட்டு மணிக்கே இல்லத்துக்கு ஏகிவிட்டார். உடனே, தேவர் ஆசுகவி

பாடிவிட்டார்.

"எட்டு மணியோ இலைநீ எனையதற்குள்

விட்டுப் பிரிந்த விதமென்னோ?--இட்டமனை

மாலா மயலா மடியா மமதையா

சீலா இராமலிங்கம் செப்பு".


இராமலிங்கக் குருக்கள் என்ற புலவர் தேவரின் எதிரணியில்

பணிபுரிந்துவந்தார். அவரைத் தம்மோடு வைத்துக்கொள்ள

விரும்பிய தேவர் கீழ்க்கண்ட கடிதத்தை அனுப்பினார்:

"அஞ்சிரட்டி செய்வருடம் ஆளடிமை யில்திரிந்தும்

கஞ்சியன்றிக் காணாயக் காவலனால். --மிஞ்சியது

பூணா? புதுமனையா? பூவா? சொல் புத்தியிலா

வீணா இராமலிங்க மே!"


பொன்னுச்சாமித் தேவர் இளம்வயதிலேயே அமைச்சராகப்

பதவியேற்றுக் கொண்டார். அவர் பணியிற் சேர்ந்த புதிதில்

இராமநாதபுரச் சீமையில் ஆங்காங்கே கலவரங்கள், குறும்புகள்

நிகழ்ந்தன. தம் மதிநுடபத்தாலும், துணிவாலும் எல்லாக் குறும்புகளையும்

அடக்கி ஒடுக்கி அமைதியை நிலைநாட்டினார். இதனை ஒரு புலவர் மெச்சிப்

பாடியுள்ளார்:

"மதிக்கணைநெ றித்தபுரு வச்சிலையின் மாட்டிக்

கதிக்குமடை யாரிலக்கங் காட்டித்--துதித்தெவரும்

அஞ்சப் புவிபுரக்கும் அண்ணல்பொன்னுச் சாமிமன்னன்

தஞ்சத்தை யாரடையா தார்".

பொருள்:

தம் கூரிய அறிவாகிய அம்பை நெறித்த புருவங்களான

வில்லிடையே மாட்டிப் பகைவராகிய இலக்கைக் குறிக்கொண்டு

யாவரும் புகழவும் அஞ்சவும் காக்கும் பொன்னுச்சாமித்

தேவரைப் புகலடையாதவர் யார்?.


இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளும் பாடல்களும் ஏராளமாக

உள்ளன. விரிவு அஞ்சி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

ஆதாரம்:

'செந்தமிழ் வளர்த்த தேவர்கள்' நூலை இயற்றியவர் பெரும்

புலவர் ரா. ராகவ ஐயங்கார்.