வருந்தேன் தோழி. வாய்க்க அவர் செலவே.
பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து
வெளி தேசங்களுக்குச் செல்ல எண்ணுகின்றான். போகும் இடம்
கரடு முரடானது. நீண்ட நீரில்லாத பாலை நிலத்து வழியே செல்லல்
வேண்டும். மரங்களின் பின்னே பாலை நிலத்தில் வாழ்ந்துவரும்
வழிப்பறி செய்யும் மறவர்கள் தனியாக ஆள்துணையின்றி எவரேனும்
வருகிறர்களா? என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பர். தனியாக
வருபவரை அம்பெய்து கொன்றுவிட்டு அவரிடமுள்ள பொருள்களை
வழிப்பறி செய்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் தக்க தருணத்துக்காகக்
காத்துக்கொண்டிருப்பர். அதனால்தான் அவ்வழியே செல்லநேரும்
வணிகக் குழுக்கள்(சாத்து என்று அழைக்கப்படுவர்) கூட்டமாக வாள்,
கேடகம்(கேடயம்), வில், அம்பு முதலான பாதுகாப்புக்கான ஆயதங்களோடு
பயணம் செய்து கடப்பது வழக்கம். ஏனெனில் பாலை நிலத்து மக்கள்
ஆறலை கள்வர்கள்(வழிப்பறிக் கள்வர்கள்). ஈவிரக்கமற்ற கொடிய கள்வர்கள்.
உண்ண உணவும், பருகுவதற்குரிய நீரும், படுத்துறங்கத் தோதான இடமும்
அப்பாலை நிலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. தலைவனைப் போலத் தனியாளாகப்
பொருள்தேடி வருபவர்கள் வணிகக் குழுக்களைக் கண்டு அவர்களோடு
இணைந்து பயணம் செய்தால் பாதுகாப்பான பயணமாக அமையும். உணவும் நீரும்
அவர்களின் கருணையால் கிடைத்துவிடும். வணிகக் குழுக்களைச் சந்திக்க வாய்ப்புக்
கிட்டவில்லையென்றால் தனியாளாக வருபவர்கள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக
நேரிடும். உண்ணுவதற்குக் கட்டுச்சோறு, பருகுவதற்கு நீர், பாதுகாப்புக்கு உடைவாள்
முதலானவற்றையும் சுமந்துகொண்டு மிகவும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையோடும்
சுற்றுமுற்றும் கூர்ந்து நோக்கிக்கொண்டும் பயணித்தல் இன்றியமையாதது. ஏனெனில்
அறமற்ற, ஈவிரக்கமற்ற ஆறலை கள்வர்களிடம் அகப்பட்டுக் கொண்டால் மரணம் உறுதி.
எனவேதான், பெண்கள் இவ்வழியே வருவதேயில்லை.
இங்கே குறிப்பிடப்படும் தலைவனும் தன் உயிரையொத்த தலைவியை உடன்அழைத்து
வராமல் தான் மட்டுமே வந்துள்ளான். உண்மையில் நடந்தது என்னவென்றால் தலைவி
தானும் உடன்வருவதாகப் பிடிவாதம் செய்தாள். அழுது அடம் பிடித்தாள். ஆனால் அவள்
தோழி பாலைநிலத்தின் தன்மையையும் வழிநெடுகச் சந்திக்க வேண்டிய இடர்களையும்
விரிவாக எடுத்தரைத்தாள். தலைவியிடம் "தோழி! நீ மிக மென்மையானவள். உன் மேனி
தளிர் போன்ற வண்ணம் கொண்டுள்ளது. பாலைவழியே பயணம் மேற்கொணடால் உன்
உடல் வாடிவிடும். மேலும் உனக்குரிய உணவு, நீர், தங்குமிடம் போன்ற இன்றியமையாத
தேவைகளுக்காகத் தலைவன் பெருமுயற்சி மேற்கொள்ளல்வேண்டும். எனவே, நீ
அவனுடன் பயணம் மேற்கொள்ளாதே. அவன் பொருள் ஈட்டும் உயர்ந்த நோக்கத்தோடு
இப் பயணத்தைத் தொடங்கியுள்ளான். எனக்கு இதில் யாதொரு வருத்தமும் இல்லை.
நீயும் இதுபோலவே மனத்துயரை விலக்கிவிட்டுத் தலைவன் மேற்கொண்ட பெருளீட்டும்
முயற்சி முழு வெற்றிபெற வாழ்த்துவாயாக" என்றுரைத்தாள்.
தொடர்புடைய பாடல்:
நூல்= நற்றிணை. பாடல் எண்: 148. திணை: பாலை. புலவர்:கள்ளம்பாளனார்.
"வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்
நீஅவண் வருதல் ஆற்றாய் எனத்தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங்கயம் புரிந்த நீரில் நீளிடைச்
செங்கால் மாஅத்து அம்புடைப் பொருந்தி
வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது
கல்அளைச் செறிந்த வள்உகிர்ப் பிணவின்
இன்புனிற்று இடும்பை தீரச் சினம்சிறந்து
செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை
உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும்
அருஞ்சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி, வாய்க்கஅவர் செலவே.
அருஞ்சொற் பொருள்:
கயம்=ஆழம். ஆள்வினை=முயற்சி. அளை=குகை.
உகிர்=நகம். பிணவு=பெண். புனிறு,= ஈன்றணிமை.
ஏற்றை= ஆண் விலங்கு. மருப்பு= தந்தம். ஒருத்தல்=ஆண்.
புகர்=புள்ளி, கறை. இறப்ப=கடந்த.
இப்பாடலில் ஒரு காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு கற்குகையில் பெண்புலி ஒன்று அண்மையில்
குட்டிகளை ஈன்று பசிக் கொடுமையால் தவிக்கின்றது. பெண்
புலியின் பசிப்பிணி தீர்க்கவேண்டும் என்று எண்ணிய ஆண்புலி
உயர்ந்த கோடுகளை(தந்தங்கள்) யுடைய ஆண்யானையின்
புள்ளிகள் பொருந்திய முகத்தில் பாய்ந்து அதனைக் கொன்று
பெண்புலிக்குப் படைத்தது. இந்த உவமைமூலமாகத் தலைவனும்
தலைவியும் இல்லறம் நடத்தத் தேவைப்படும் பொருளை ஈட்டுவதற்
காக அச்சம் கொள்ளத்தக்க பாலைவழியே பிற தேசங்களுக்குச்
செல்கின்றான் என்று குறிப்பாகப் புலவர் உணர்த்துகிறார்.
ஆதாரம்:
சங்க இலக்கியம்-- நற்றிணை மூலமும் உரையும்- வர்த்தமானன்
பதிப்பகம். உரையாசிரியர்: முனைவர் கதிர் மகாதேவன்.