ஒற்றுப் பெயர்த்தல்-சித்திரகவியில் ஒருவகை.
ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒரு மொழியும் தொடர்
மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை அப்பொருள் ஒழிய,
வேறுபொருள்பட வைப்பது. வேறுவகையில் சொல்வதானால்
"ஒன்றிநிற்கும் வேறு பொருளைப் பெயர்த்தெடுத்தல்" என்று
பொருள் கொள்ளலாம்.
சோழர்களின் பிற்காலத் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட
சோழபுரத்திலுள்ள தோற்றப்பொலிவுமிக்க மாபெரும் அரண்மனை
யாக வளங்கிய கங்காபுர மாளிகையை விவரிக்கும் ஒரு பாடலில்
ஒற்றுப் பெயர்த்தல் கையாளப் பட்டுள்ளது. பாடலை நோக்குவோம்:
"வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து
மண்குளிரச் சாயல் வளர்க்குமாம்---தண்கவிகைக்
கொங்கார் அலங்கல் அநபாயன் கொய்பொழில்சூழ்
கங்கா புரமாளி கை".
பொருள்:
வளப்பத்தை யுடைய மேகங்கள் கீழாக, மேலோங்கி வானகத்தின்
கண் உண்டாகிய கற்பகப் பூக்களை உச்சிமீது உடையதாய்,
உலகெலாம் தன்னுருவச் சாயையாகிய நிழலைப் பெருக்கும்
குளிர்ச்சி பொருந்திய குடையினையும், மதுநிறைந்த மாலையையும்
உடைய அநபாயனது(இரண்டாம் குலோத்துங்க சோழனது)
கங்காபுரத்தின் மாளிகை(கங்கைகொண்ட சோழபுரத்தின்) மாளிகை
என்பது ஒருபொருள். ஒற்றுப் பெயர்த்தலைக் கையாண்டால் பொருள்
கீழ்க்கண்டவாறு மாறுபடும்:
கங்காபுரம்+ஆளி+கை=கங்காபுர மாளிகை.
அதாவது, ஒற்றுப் பெயர்த்தலுக்குப் பிறகு, பாடல்
மாளிகையை விவரிப்பதற்குப் பதிலாக, மாளிகையை
(மாநிலத்தையும்) ஆளுகின்ற அநபாயச் சோழனது
அதாவது, இரண்டாம் குலோத்துங்கச் சோழனது வள்ளல்
தன்மைமிக்க கை எனப் பொருள்படுகிறது. பாடலின்
வேறுபொருளாவது:
வளப்பத்தையுடைய மேகத்தைப் பழிக்கும் தன்மையை
யுடையதாய், வானகத்தில் உண்டாகிய கற்பகமரத்தோடு
பகைகொண்டு அதனைவிடவும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்து
உலகத்தில் வாழும் மக்களுடைய உள்ளமெல்லாம் குளிரும்
வணணம் காவல்புரிந்து மக்களைக் கண்போலக் காக்கும்
கங்கைகொண்ட சோழபுரத்தை(கங்காபுரத்தை) யாண்டுவரும்
குளிர்ந்த வெண்கொற்றக் குடையினையுடைய அநபாயச்
சோழனது கை எனப் பொருள் மாறிவிட்டது.
கங்காபுர மாளிகை என்பது ஒற்றுப் பெயர்த்தலுக்குப் பின்,
கங்காபுரம் ஆளி கை என மாறிப் பொருள் தருகிறது.
இனி, சொல்லணியியலில் மடக்கணிப் பாடலொன்றைப்
பார்ப்போம்:
மடக்கு யமகம் என்றும் அழைக்கப்படும். வந்த சொல்லே
திரும்பவந்து வேறு பொருள் தருவது மடக்கு எனப்படும்.
இதில் பலவகைகள் உள்ளன. முதல்மடக்கு, இடைமடக்கு,
கடைமடக்கு, முதலடிமடக்கு, இரண்டாமடி மடக்கு, மூன்றாமடி
மடக்கு, நான்காமடி மடக்கு, முற்று மடக்கு போன்றவை அவை.
கீழ்க்கண்ட பாடலில் இரண்டாமடியில் மடக்கு பயின்று
வந்துள்ளது:
"கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கில்
இனியார் இனியார் எமக்குப்---பனிநாள்
இருவராத் தாங்கும் உயிரன்றி எங்குண்(டு)
ஒருவராத் தாங்கும் உயிர்?"
பொருள்:
கனிபோன்ற மொழியினையுடைய இவள் புலம்பும்படி
அரசனே! நீ பிரிந்த காலத்து எங்களுக்கு இனியராய்
(இனியவராய்) இனிமையான சொற்களைச் சொல்லிக்
காக்கும் தலைவர் இனியார்? இனியார், இனியார்?
பனிக்காலத்தில் பிரியாதிருந்த இருவரும் இப்போழுது
பிரிந்து தனியராய் வாழ்ந்தால் உயிர் தாங்குவது எவ்வாறு?
இப் பாடலில் இனியார்(இனிமையுடையவர்) இனியார்?
(இனி யாவர் உளர்?) என்று மடங்கி வந்து சுவையூட்டுகிறது.
ஆதாரம்:
தண்டி யலங்காரம் நூல்- வெளியிட்டவர்=தென்னிந்திய
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.