பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்.
ஔவைப் பிராட்டியார் (இடைக்காலத்தவர்--சங்க காலத்தவர் அல்லர்) ஒருநாள் ஒரு ஊர் வழியே சென்று
கொண்டிருந்தார். வெயில் ஏறத் தொடங்கி விட்டது. நடந்த
களைப்பும் அலுப்பும் அம்மையை வாட்டவே ஒரு நிழல் மரத்
தடியில் அமர்ந்து அடிமரத்தில் சாய்ந்து கொண்டார். களைப்பு
நீங்கிய பிறகு நடைப் பயணத்தைத் தொடரலாம் என்று நினைத்
துக் கொண்டார். அச்சமயம் அவ்வழியே சென்ற அவ்வூர்க்காரன்
ஒருவன் ஔவையாரை நோக்கி வந்தான். அவன் இளகிய மனம்
கொண்டவன். பிறருக்குதவும் பெருந்தன்மை கொண்டவன். அவன்
"அம்மையே! தாங்கள் வெயிலாலும் வழி நடந்த களைப்பாலும்
சோர்வடைந்து தென்படுகிறீர்கள். என் இல்லத்துக்கு வந்து உணவுண்டு
களைப்பு நீங்கிய பிறகு செல்க" எனச் சொன்னான். அம்மையும் அன்புப்
பேச்சால் மனம் நெகிழ்ந்து அவனைப் பின்தொடரந்தார்.
வீட்டை நெருங்க நெருங்க உதவி செய்ய எண்ணியவன் மனம் படபட
வென்று அடித்துக் கொண்டது. ஏனெனில் அவனுக்கு வாய்த்த மனைவி
அவன்போலப் பிறர்க்குதவும் எண்ணமுடையவள் அல்லள். கொடுமைக்
காரி என்றுகூடச் சொல்லலாம். அவன் கால்கள் பின்னலிட்டன. அம்மை
யைத் திருப்பி அனுப்பிவிடலாமா என்று குழம்பிய சிந்தையோடு சிறிது
நேரம் நின்றான். பிறகு "அம்மையே! சிறிது நேரம் பொறுத்திருங்கள்;
வந்து விடுகிறேன்" என்று கூறி வீட்டுக்குள் சென்றான்.
அம்மை சிறிது நேரம் காத்துக்கொண்டிருந்தார். உள்ளே சென்றவன்
வெளியே வரவில்லை. பொறுமை இழந்த ஔவையார் மெல்ல எட்டிப்
பார்த்தார். உள்ளே சென்றவன் மனைவியருகில் அமர்ந்திருக்கக் கண்
டார். அவன் மனைவி முகத்தைத் தடவி மெல்ல வருடி விட்டான்.அவன்
சென்ற சமயம் அவள் தலைவாரிக் கொண்டிருந்தாள். கணவன் அவள்
கூந்தலில் உள்ள ஈரையும் பேனையும் நீக்கினான். முகத்தைத் துடைத்து
விட்டுப் பொட்டுவைத்து அழகுபடுத்தி விட்டான். பின்னர் மெல்லிய
குரலில் "வாசலில் ஒரு அம்மை காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு
விருந்து படைக்கவேண்டும்" என்றான். அதுவரை சிரித்த முகத்தோடு
கணவன் செய்த பணிவிடைகளை இரசித்து ஏற்றுக் கொண்ட அவள்
முகம் சிவந்தாள். வாய்க்கு வந்தபடியெல்லாம் அவனை ஏசினாள்.
பேயாட்டம் ஆடினாள். வாழ்த்துமடல்(? வசவுமடல்) பாடினாள். இத்தனை
ஏச்சும் பேச்சும் போதாவென்று பழைய சுளகாலே அவனை அடிக்கத்
தொடங்கினாள். விழுந்த அடிதளைத் தாங்க இயலாத கணவன் வெளியே
ஓடிவந்துவிட்டான். ஔவையார் இக்காட்சியைக் கண்டு வருந்தினார்.
அவன் பரிதாப நிலையை எண்ணிப் பாடலானார்:
இருந்து முகந்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
விருந்துவந்த தென்று விளம்ப---வருந்திமிக
ஆடினாள்; பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்.
ஔவையார் குரலைக் கேட்ட மனைவி சற்றே
அச்சம் கொண்டாள். வந்தவர் பெரும் புலவர்;
சாபம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது?
என்று நினைத்துக் கணவனை அழைத்து
விருந்தினரை உள்ளே அழைத்து வருமாறு
கூறினாள். உடனே கணவன் ஔவையாரைக்
கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவர் அவன்
வேண்டுகோளை ஏற்கவில்லை. மேலும் ஒரு
பாடலைப் பாடினார்:
காணக்கண் கூசுதே; கையெடுக்க நாணுதே;
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே--வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற(து); ஐயையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
"அன்பினால் உன்மனைவி உணவு படைக்கவில்லை;
புலவராகிய நான் சபித்துவிடுவேனோ என்ற பயத்தில்
வேண்டா வெறுப்பாக உணவு படைக்க முன்வந்தாள்.
அதைக் காணவும் கண்கள் கூசுகின்றன. கையால்
உணவைத் தொடவும் நாணுகின்றேன். தமிழ் பாடும்
என்வாய் இந்த உணவை உண்ண மறுக்கிறது. நடந்த
நிகழ்வையும் உன் மனைவியின் செய்கைகளையும்
எணணி எனது எலும்புகளெல்லாம் ஏரிவது போல
உணர்கிறேன். அவள் அமுதத்தையே படைத்தாலும்
எனக்கு வேண்டா" எனச் சொல்லிவிட்டு அவ்வூரிலி
ருந்து கிளம்பிச் சென்றார். ஔவையார் ஒருபாடலில்
"நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்"
என்று நவின்றுள்ளார். எனவே, இது போன்ற பெண்களின்
பிறவிக் குணத்தை மாற்றவே இயலாது எனபதை அறிந்து
மனம் தேறிக்கொள்ளல் வேண்டும்.
உலகில் வருவிருந்தோர் உண்டு.
கும்பகோணம் என்று இக்காலத்தில் அழைக்கப்படுகின்ற
குடந்தை நகரில் ஔவையார்(பிற்கால ஔவையார்) வாழ்ந்த
காலத்தில் ஒரு தெருவில் இரு செல்வந்தர்கள் வாழ்ந்து வந்த
னர். ஒருவர் பெயர் திருத்தங்கி; மற்றொருவர் பெயர் மருத்தன்.
திருத்தங்கி மகா கஞ்சன். மருத்தனோ வள்ளல் தன்மை யுடையவர்;
பிறர்க்கு உதவும் குணமுடையவர்.
கஞ்சத்தனம் உள்ள செல்வந்தர்கள் இரண்டு வகையினர். ஒரு
வகையினர் எதற்காகவும் யாரையும் நாட மாட்டார்கள். அம்மாதிரி
ஆட்களால் யாருக்கும் எவ்விதத் தொல்லையும் இல்லை. ஆனால்
இன்னொரு வகையினர் கஞ்சத்தனம் உடையவர்களாகவும், அதே
சமயம் மற்றவர்களைப் போலப் பாராட்டையும், புகழையும் விரும்பு
கின்றவர்களாகவும் இருப்பார்கள். செல்வச் செழிப்பில் திளைக்கும்
திருத்தங்கி இரண்டாம் வகையினர். மருத்தன் வாரி வழங்கிப்
பெயரையும், புகழையும் சேர்ப்பது திருத்தங்கியின் கண்களை
உறுத்தியது. மருத்தன் வீட்டுக்கு வரும் பாணர்கள், புலவர்கள்
முதலானோரைத் தமது வீட்டுக்கும் அழைத்துவந்து தானும் வள்ளல்
தன்மை யுடையவர் போலக் காட்டிக் கொண்டு புகழ்பெறுவார்.
இதில் முக்கிய செய்தி என்னவென்றால், தமது ஏவலாளர் மூலம்
மருத்தன் வீட்டுக்கு வருபவர்களுக்குப் பரிசு வழங்குவது, விருந்தோம்பு
வது போன்றவை முடிந்துவிட்டனவா என்பதை உறுதி செய்துகொண்டு
அதன்பின்னரே மருத்தன் வீட்டுக்குச் சென்று விருந்தினரைத் தமது
வீட்டுக்கு அழைத்து வருவார். வாய்ச் சொற்களாலேயே விருந்தோம்பி
அனுப்பிவிடுவார். செலவே யில்லாமல் பாராட்டைப் பெற்றுவிடுவார்.
ஒருநாள் ஔவையார் குடந்தை நகருக்கு வந்தார். அவர் வருகையைக்
கேள்விப்பட்ட மருத்தன் ஔவையார் இருக்கும் இடம் தேடிச்சென்று
தமது இல்லத்துக்கு அழைத்துவந்து உணவு பரிமாறி அவரை ஓய்வெ
டுக்கச் செய்தார். பிறகு அவருக்குத் தக்க பரிசுகள் வழங்கிப் பெருமைப்
படுத்தினார். வழக்கம் போல நடந்த நிகழ்ச்சிகளை ஏவலாளர் மூலமாக
அறிந்த திருத்தங்கி பெரிய கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டு வந்தார்.
"அம்மையே! தாங்கள் எனதில்லத்துக்கும் வருகை புரிதல் வேண்டும்"
என்று கேட்டுக்கொண்டார்.
ஔவையார் மருத்தனையும் அழைத்துக்கொண்டு திருத்தங்கியின்
வீட்டுக்குச் சென்றார். மூவரும் பல நாட்டு நடப்புக்களைப் பற்றிப்
பேசிக் கொண்டனர். திருத்தங்கி இடையிடையே தமது செல்வாக்கை
யும்வளத்தையும் பற்றிய சுயபுராணத்தைப் படித்தார், எல்லாம் முடிந்த
பிறகு ஔவையார் தாம் விடைபெறுவதாகத் தெரிவித்தார். உடனே,
திருத்தங்கி "அம்மையே! தங்கள் திருவாயால் எங்கள் இருவரையும்
பாடி மகிழ்விக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்றார்.
ஔவையார் பாடத் தொடங்கினார்:
"திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்;
மருத்தன். திருக்குடந்தை வாழை---குருத்தும்
இலையுமிலை; பூவுமிலை; காயுமிலை; என்றும்
உலகில் வருவிருந்தோர் உண்டு."
தமது வாழை இலைகளோடும் பூக்களோடும் காய்களோடும் செழிப்
பாகவுள்ள செய்தியைத் தெரிவித்த பாடலைக் கேட்டுப் புளகாங்கிதம்
அடைந்தார் திருத்தங்கி. மருத்தன் தோட்டத்து வாழைகளெல்லாம் இலை,
பூ, காய் எதுவுமின்றி வாடிக்கிடக்கும் செய்தியைத் தெரிவிப்பதாக நினைத்துக்
கூடுதல் மகிழ்ச்சியுற்றார் திருத்தங்கி. ஆனால், மருத்தனோ பாடல் தெரிவிக்கும்
உண்மைச் செய்தியை அறிந்து களிப்படைந்தார். உண்மையிலேயே மருத்தன்
தோட்டத்து வாழைகள் செழிப்பில்லாமல் வாடி வதங்கி உள்ளன; ஏனென்றால்
அவர் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் அனைவருக்கும் இல்லையென்று சொல்
லாமல் பூக்கள், காய்கள் அனைத்தையும் சமைத்து இலையில் பரிமாறி உபசரித்து
விட்டார். பெரிய வள்ளல்; பிறர்க்குதவும் பெருந்தகை. அதாவது எவருக்கும்
எதுவும் தராமல் செல்வச் செழிப்போடிருக்கும் திருத்தங்கியைவிடவும் பிறர்க்குக்
கொடுத்துக் கொடுத்து அதனால் செழிப்புக் குறைந்து காணப்படும் மருத்தன்
புகழால் மிக உயர்ந்தவர். இந்த வஞ்சப் புகழ்ச்சி யணி பயிலும் பாடல் திருத்
தங்கிக்கு விளங்கியிருக்க வாய்ப்பில்லை. அவர் ஔவையார் வாயால் செலவே
இல்லாமல் பாராட்டுக்கள் கிடைத்துவிட்டன என்று கழிபேருவகையில் ஆழ்ந்தார்.
ஆனால் இந்தப் பாடல் மூலம் மருத்தன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
திருமண விருந்தின் சிறப்பு.
பாண்டிய மன்னன் வீட்டில் ஒரு மங்கலமான நிகழ்ச்சி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மன்னனின் மகனுக்கோ,
மகளுக்கோ நடைபெற்ற திருமண நிகழ்ச்சி. மன்னன் வீட்டு
நிகழ்ச்சி யென்றால் கூட்டம் கூடுதல் இயற்கை தானே!
சிற்றரசர்கள், அவர்களின் பரிவாரங்கள், அண்டை நட்பு நாட்டு
அரசர்கள், அவர்கள் பரிவாரங்கள், புலவர்கள், பாணர்கள்,
சொந்த நாட்டு அரசு அதிகாரிகள், படை வீரர்கள் இன்னும்
அரசோடு தொடர்புடைய வணிகப் பெருமக்கள், குடிமக்கள் என
எல்லாவிதமான மக்களும் குழுமியிருந்தனர். கூட்டத்தில் சிக்கிக்
கொண்ட ஔவையார் திணறிப் போனார். திருமண நிகழ்ச்சி
முடிந்ததும் ஒருவழியாகக் கூட்டத்தைச் சமாளித்துப் பாண்டியனைச்
சந்தித்து வாழ்த்துக் கூறினார். பாண்டியன் அந்தக் கூட்டத்திலும்
ஔவையை வரவேற்றுப் பரிசுகள் வழங்கி அனுப்பிவைத்தார்.
ஆனால், ஔவை உணவு உண்டாரா? என்று விசாரிக்க இயலவில்லை.
அவ்வளவு கூட்டம் இருந்தது. ஔவையார் ஒருவழியாக மண்டபத்தை
விட்டு வெளியே வந்தார். உணவு உண்ணாததால் ஒருவிதச் சோர்வு
அம்மையை அமுக்கியது. பையப்பைய நடந்தார்.
இனிமேலும் நடக்க இயலாது என்றெண்ணி வீதியிலிருந்த ஒரு வீட்டுத்
திண்ணையில் அமர்ந்து அங்குள்ள தூணில் சாய்ந்துகொண்டார்.
அந்த வீட்டுத் தலைவி அப்பொழுது வெளியே எட்டிப் பார்த்தாள்.
ஔவையார் சோர்வுடன் தூணில் சாய்ந்துகொண்டிருந்ததைக் கண்டு
அவரிடம் வந்து" அம்மையே! தாங்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்
போலக் காணப்படுகிறீர்; விருந்து உண்ணவில்லையா? ஏன் களைப்பாய்
இருக்கிறீர்? என்று வினவினாள். ஔவையார் உடனே பாடல் ஒன்றைச்
சொன்னார்.
"வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள்---அண்டி
நெருக்குண்டேன்; தள்ளுண்டேன்; நீள்பசியி னாலே
சுருக்குண்டேன்; சோறுண்டி லேன்."
"மகளே! பாண்டியன் வீட்டுக் கலியாணத்தில் நான் உண்ட சிறப்பைச்
சொல்கிறேன், கேட்டுக் கொள்வாயாக. மிகப் பெருங் கூட்டத்தால்
நெருக்கப்பட்டேன். இங்கும் அங்கும் தள்ளப்பட்டேன். வயிற்றிலோ
நெடுநேரமாகப் பசி வாட்டிக்கொண்டிருந்தது. பசியால் உடல் துவண்டு
தளர்ந்து போயிற்று. ஆனால் இத்தனை களேபரத்திலும் உணவுண்ண
இயலாமற் போயிற்று. பாண்டியன் மீது தவறேதும் இல்லை. அவர்
வீட்டு நிகழ்ச்சி யாதலால் படைகளை ஏவிக் கடுமையாக நடந்து
கூட்டத்தை ஒழுங்க படுத்த வழியில்லாமற் போயிற்று." என்றுரைத்தார்.
இதைக் கேட்ட அவ்வீட்டுத் தலைவி தான்
சமைத்து வைத்திருந்ததை அம்மைக்குப்
பரிமாறினாள். அம்மையும் அவ்வுணவை
வயிறார உண்டு கொடிய பசியை ஆற்
றிச் சோர்வு நீங்கித் தெளிவடைந்தார்.
'உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை
ஒப்பிக்கும் என்றன் உளம்." எனச் சொன்னவரல்லவா? எளிய உணவே
யானாலும் வயிறார உண்டு அப்பெண்ணை வாழ்த்தி விட்டுத் தன்
வழியே சென்றார்.