அன்றணைந்தான் வாராவிட்டால்..........
இலக்கிய உலகில் காளமேகப் புலவரைப் பற்றித் தெரியாதவர்கள்
தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஆசுகவி பாடுவதில் வல்லுநர்.
அவர் கால்படாத இடமே தமிழகத்தில் இல்லை. அவர் வெறிவிலக்கல்
என்னும் அகத்துறையில் பாடிய ஒரு பாடலைப் பார்ப்போம்:
"முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கில் ஒனறெடுத்து
முந்நான்கில் ஒன்றின்மேல் மோதினான்---முந்நான்கில்
ஒன்றரிந்தால் ஆகுமோ? ஓஓ மடமயிலே!
அன்றணைந்தான் வாராவிட் டால்."
தலைவனும் தலைவியும் களவுக் காதல் நிகழ்த்துகின்றனர். யாதோ
ஒரு காரணம் பற்றித் தலைவன் வரைவைத்(திருமணத்தை) தாமதப்
படுத்துகின்றான்.ஓரிரு நாட்களாக அவன் வாராதிருக்கின்றான்.
தலைவி இது காரணமாக நிறம் மங்கி மெலிவடைகின்றாள். அன்னை
இதற்குக் காரணம் அறிய எண்ணி அக்கால வழக்கப்படி வெறியாடல்
நிகழ்த்தி முருகனைத் தொழத் திட்டமிடுகின்றாள். இதனை அறியும்
தோழி வெறியாடலை விலக்க நினைத்து இப்பாடலைப் பாடுகின்றாள்:
முந்நான்கு(பன்னிரண்டு இராசிகளைக் குறிக்கிறது) இராசிகளில்
ஒன்றான மகரத்தைக் கொடியில் கொண்ட மன்மதன்(மகரம்=மீன்)
முந்நான்கில் ஒன்றான தனுசை(வில்லை)யெடுத்து முந்நான்கில் ஒன்றான
கன்னியின் மேல்(தலைவியின்மேல்) மோதினான். அதாவது மன்மதன்
தலைவியின்மேல் கரும்பு வில்லால் மலர்க்கணை தொடுத்தான். இதன்
விளைவால் சோர்வடைந்தாள். தலைவன் வந்து இவளுடன் பழகினால்
சோர்வு நீங்கித் தெளிவு பிறக்கும். அன்றணைந்த தலைவன் வாராவிடின்
முந்நான்கில் ஒன்றான மேஷத்தை(ஆட்டை)ப் பலியிட்டு வெறியாடினால்
பயனேதும் இல்லை என்று தோழி கூறி அறத்தொடு நிற்கின்றாள்(தலைவி
தலைவனொடு கொண்ட களவுக் காதலை வெளிப்படுத்துகின்றாள்).
பன்னிரண்டு இராசிகளைப் பயன்படுத்தி வெறியாடல் துறையில்
நான்கே வரிகளில் களவுக் காதலைக் கூறியவிதம் கவிஞரின்
புலமைக்குச் சான்றாகும்.
திருமலராயன் பட்டினம் என்ற ஊரில் அதிமதுரகவிராயர் என்ற புலவரொடு
நிகழ்ந்த புலமைப் போட்டியில்(யமகண்டம் என்ற கொடுமையான போட்டி)
கவிராயர் குழுக்கூட்டம் "எழுத்தாணி எனத் தொடங்கிச் சூரிக்கத்தி" என
முடித்து வெண்பா ஒன்றைப் பாடுமாறு கேட்டுக்கொள்ளக் காளமேகம் பாடியது:
"எழுத்தா ணிதுபெண் இதனை முனி காதில்
வழுத்(து)ஆ ரணக்குகனை வாதுக்(கு)---அழைத்ததுவும்
மாரன்கை வில்மான்முன் காத்ததுவும் நன்றாகும்
தீரமுள்ள சூரிக்கத் தி".
எழுத்தாணிது பெண்= எழுத்து+ ஆண்+ இதுபெண்:
எழுத்துக்களில் உயிரெழுத்துக்கள் பன்னி
ரண்டும் ஆணென்றும், உயிரமெய் எழுத்துக்
கள் பெண்ணென்றும், ஒற்றெழுத்துக்கள்
அலியென்றும் கருதப்படும்(பிங்கல
நிகண்டு).
பொருள்:
தமிழ் எழுத்துக்களைப் பற்றியும் மொழிஇயல்பைப் பற்றியும்
தமிழுக்கு அன்னை(அனை) எனக் கருதப்படும் அகத்திய முனி
காதில் ஓதிய வேதங்கள் போற்றும் குகனாம் முருகனைச் சண்டைக்கு
அழைத்தவன் சூரபத்மன்(சூர்); மன்மதன் கையில் உள்ளவில்
கரும்பு வில்(இக்கு); முன்னாளில் திருமால் முதலையிடம் இருந்து
காத்தது யானை(அத்தி). சூர்+இக்கு+ அத்தி= சூரிக்கத்தி.
எழுத்தாணி என்று தொடங்கிச் சூரிக்கத்தி என்று வெண்பா
முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அர்த்தம் பண்ணும் பொழுது 'எழுத்தா
ணிதுபெண்' என்று படித்து எழுத்து+ ஆண்+ இது பெண் என்று படித்து
எழுத்து வகைகளை அதாவது மொழி இயல்பை என்று பொருள் கொள்ள
வேண்டும். அதுபோலவே, 'சூரிக்கத்தி' என்பதனைச் சூர்+இக்கு+அத்தி
என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும். காளமேகப் புலவர் எந்தப்
போட்டியிலும் தோற்றதேயில்லை. திருஞான சம்பந்தர், கம்பர் போன்ற
பெருந் தமிழ் ஆளுகைகளுக்குச் சமமான புலமை கொண்டவர்
காளமேகப் புலவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
பார்வை:
காளமேகப் புலவர் பாடல்கள்- உரையாசிரியர்:
புலியூர்க்கேசிகன்.