பரிபாடல் கூறும் யானை வழிபாடும் கவழ மிச்சிலும்.
நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது யானை ஆகும். முற்
காலத்தில் டைனோசர் என்னும் மிகப் பெரிய உயிரினம் வாழ்ந்ததாகச்
சொல்லப்படுகிறது. ஆனால், இன்று அத்தகைய விலங்கினம் உயிர் வாழவில்லை.
யானையின் உயர்ந்த மற்றும் பருத்த உடலமைப்பு ஓரளவு அச்சமூட்டினாலும்
அனைவர்க்கும் யானையின் மீது ஈர்ப்பு ஏற்படுவது மறுக்க இயலாத
உண்மை.
யானைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு மிகமிகத் தொன்மையானது. மனித
இனம் உலகில் தோன்றிய காலத்திலேயே அல்லது அதற்கும் முற்பட்ட காலத்தி
லேயே யானை தோன்றியிருக்கக் கூடும். யானை காட்டு விலங்காக இருப்பினும்
இன்றுவரை யானைகள் வீட்டு விலங்குகள் போலவே வளர்க்கப்படுகின்றன.
கோவில்களிலும், பரம்பரை பரம்பரையாக யானை வளர்ப்போர் வீடுகளிலும் அரசு
அனுமதி பெற்று வளர்க்கப் படுகின்றன.
நம் இலக்கியங்களில் யானையைப் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படும்.
சங்க இலக்கியம் முதல் இன்றைய கால இலக்கியம் வரை யானையைப் பற்றிய
செய்தி/தகவல் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். சிறுவர் முதல் பெரியோர் ஈறாக
அனைவருமே யானையைப் பற்றிய செய்தியைப் படித்து இரசிப்பர்.. ஏனெனில்
குழந்தைப் பருவத்திலிருந்தே யானை நம்மைக் கவர்ந்திழுக்கத் தொடங்கிவிடுகிறது.
யானையின் செம்மாந்த தோற்றமும் நடையும் நம் கண்களை விட்டு அகலா. சிறு
வயதில் பெற்றோருடன் கோவிலுக்குச் சென்றால் தவறாமல் யானையைக் கண்டு
குதுகலம்அடைந்து சற்று அச்சத்துடன் அதன் தும்பிக்கையினால் ஆசீர்வாதம் பெற்றுப்
பரவசம்அடைந்த நிகழ்வு பசுமையாக இருக்கிறது.
சங்க காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்தனர். அதனால் மன்னர்களுக்குள் அடிக்கடி
போர் நடைபெற்றது. அப்போது போர்களில் யானைகளைப் பயன்படுத்தினர்.
இளைஞர்கள் யானையுடன் போர்செய்து பழகுதல் வேண்டும். புறநானூற்றில்
புலவர் பொன்முடியார் பாடிய பாடலில்(பாடல் எண்:312) பின்வருமாறு பாடியுள்ளார்:
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிருவாள் அருஞ்சமம் முருக்கிக்
களி(று)எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே".
தனியொருவனாக யானையுடன் போர்புரிந்து அதனைக் கொல்லுதல் இயலாத செயல்.
வேல்கொண்டோ வாள்கொண்டோ அதனைத் தடுக்க முயற்சி செய்யலாம். அதனைக்
காயப்படுத்தி அச்சுறுத்தி விரட்டலாம். அதனை வெல்ல முடியாது.
எனவேதான் வள்ளுவர் பின்வருமாறு பாடினார்:
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.'
நற்றிணை ஒரு காட்சியைச் சொல் ஓவியமாகக் காட்டுகிறது:
"புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்(டு)
ஒலிபன் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து
வன்சுவல் பராரை முருக்கிக் கன்றொடு
மடப்பிடி தழீஇய தடக்கை வேழம்
தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப்
பொன்புரை கவழம் புறந்தருபு ஊட்டும்"
யானை கூட்டமாக வாழும் விலங்கு. பிடி(பெண் யானை)
மற்றும் கன்று மீது அதிகமாகப் பாசத்தை வெளிக்காட்டும்.
இப் பாடல் அதனை விளக்குகிறது. புலியுடன் போரிட்ட யானையின்
கோடுகள்(தந்தங்கள்) இரத்தத்தால் சிவந்து காணப்படுகின்றன.
அவற்றில் முத்துக்கள் பதிந்திருப்பது போலத் தோன்றும். அதிலிருந்து
புலவு நாற்றம் வருகிறது. அந்த வேழம்(ஆண் யானை) வேங்கை
மரத்தின் பருத்த அடியை முறித்துத் தன் கன்றுடனே பிடியை(பெண்யானையை)
அணைத்துக்கொண்டு வேங்கை மரத்தின் பூக்களை அவை உண்ணுமாறு
ஊட்டும். அவ்வளவு பாசம் உடையது யானை.
இனி, கலிங்கத்துப் பரணியில் போர்க்களக் காட்சியைக் காண்போம்.
சோழநாட்டுக் களிறும் கலிங்க தேசத்துக் களிறும் மோதிக் கொண்டன.
"மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு
மதக்கரி மருப்பினிடையே
நெருப்போடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ
நிழற்கொடி தழற்கதுவவே"
(பாடல் எண்:411)
இரு மலைகளைப்போல மதங்கொண்ட களிறுகள் தம் தந்தங்களால்
ஆவேசமாக மோதிக் கொள்ள அவைகளின் தந்தங்களுக்கிடையே
தீப்பொறி எழுந்து நிழலுக்கு ஏற்றியிருந்த துகிற்கொடிகளைப் பற்றியது.
பரிபாடலில் செவ்வேளைப் பற்றிய(முருகனைப் பற்றிய) பத்தொன்பதாம்
பாடலில் யானைவழிபாடு குறிப்பிடப்படுகிறது. முருகனுக்குரிய யானை
யின் நெற்றியில் குங்குமத்தால் அழகுபடுத்திப் பூவோடு கூடிய நீரைத்
தெளித்துச் செவிக் கவரியைச் சார்த்திப் பொலிந்த பவழத்தாற் செய்த
நல்ல காம்பினை உடைய பொற்குடையை மேலே எடுத்து மனமகிழ்வுடன்
பூசனை புரிவர். அப்பொழுது அந்த யானைக்கு அளிக்கப்படும் கவழ மிச்சிலை
(யானை உண்டு மிச்சமிருக்கும் உணவை) உண்ணாவிட்டால் பெண்டிர் தம் காதலரின்
அன்பை அடைய மாட்டார். கன்னிப் பெண்கள் நல்ல கணவரை அடையமாட்டார்.
இது அந்தக் காலத்தில் நிலவிய நம்பிக்கை. பாடல் வருமாறு:
"கன்னிமை கனிந்த காலத் தார்நின்
கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில்
மறுவற்ற மைந்தர்தோள் எய்தார்;; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார்;நின் குன்றம்
குறுகிச் சிறப்புணாக் கால்".
யானை நம் நாட்டுக்குக் கிடைத்த அரும் பெரும் சொத்து. அதனைத் துன்புறுத்
தாமல் பேணிப் பாதுகாப்பது நமது கடமை.
பார்வை:
சங்க இலக்கிய வெளியீடு, வர்த்தமானன் பதிப்பகம்.
"