பணத்தட்டு எவ்விடம்?
பழனி நகரத்தில் 1836ஆம் ஆண்டு தோன்றியவர் பழனிச்சாமி.
தனது மூன்றாவது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுக்
கடவுள் அருளால் உயிர்தப்பினார். இருந்த போதிலும் கண் பார்
வையைப் பறிகொடுத்தார். மனந்தளராமல் தமிழ், வடமொழி,
இசை முதலானவற்றைத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் முறைப்
படி கற்றுச் சீரிய புலமையடைந்தார்.
அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்
கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்
கியவர்கள் இராமநாதபுரத்தை யாண்ட முத்துராமலிங்க சேதுபதி
யும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர். இவர்கள்
அவையில் தம் புலமையைக் காட்டிக் 'கவிச்சிங்கம்' என்ற பட்டம்
பெற்றார் பழனிச்சாமி என்ற மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.மாம்பழம்
என்னும் பட்டம் அவர்க்கு முந்திய தலைமுறையினர் திருமலை மன்
னரிடம் பெற்றதாகும்.
ஒருமுறை பொன்னுச்சாமித்தேவர் மாம்பழக் கவிச்சிங்கத்துக்குப்
பரிசு அளிக்கும்போதில் ஓர் அழகிய வெள்ளித்தட்டில் வைத்துக்
கொடுத்தார். புலவருக்குத் துணையாய் வந்த சிறுவன் வெள்ளித்
தட்டின் அழகைப் பற்றி விவரித்துச் சொன்னான். உடனே புலவருக்குத்
தட்டின் மீது பெருவிருப்பம் உண்டாயிற்று. நேரடியாகத் தேவரிடம் தமக்குத்
தேவை என்று சொல்வதற்கும் கூச்சமாக இருந்தது. எனவே, '"பணத்தட்டு
எவ்விடம்?" என்று வினவினார். பணத்தட்டு என்பதற்குப் பணத்தையுடைய
தட்டு என்றும் பணத்துக்குத் தட்டு(தட்டுப்பாடு) என்றும் பொருள்படும். இக்
கேள்வியை எதிர்பாராத தேவர் சமஸ்தானத்துக்குப் பணத் தட்டுப்பாடு
வந்தால்(ஏற்பட்டால்) பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவர்;
புலவருக்குப் பணத்தட்டு வந்தால் அவர் சமாளித்துக் கொள்வார்(புலமை
யும் வறுமையும் சேர்ந்தே இருப்பது தானே) என்று எண்ணிப் "பணத்தட்டு
அவ்விடத்துக்கே" என்று விடையிறுத்தார். புலவரும் ஆசைப்பட்ட படியே
வெள்ளித் தட்டையும் பரிசையும் எடுத்துச் சென்றார்.
ஒருமுறை வாயிற் காவலர் ஒருவர் வேறு காவல் பணியிலிருந்து இந்தப்
பணிக்கு மாற்றப் பட்டிருந்தார். மாம்பழக் கவிச்சிங்கம் பழனியிலிருந்து
வந்தவர் ஆதலாலும் காவலர் இதற்குமுன் அவரைப் பார்த்ததில்லை
ஆதலாலும் கவிச் சிங்கத்துக்கு அரசவைக்குள் நுழைய அனுமதி
மறுத்துவிட்டார். இதற்குள் வேறு ஒரு காவலர் வந்து புலவரைப்பற்றி
எடுத்துச் சொல்லி உள்ளே அனுமதிக்கச் செய்தார். கவிச்சிங்கம் சிறிது
தாமதமாக அரசவைக்குள்நுழைந்த காரணம் பற்றிப் பொன்னுச்சாமித்
தேவர் வினவ, அவர் நடந்த நிகழ்வை ஒரு பாடலில் கூறினார். பாடல் வருமாறு:
"தருமகுண மிகுமுனது சமுகமுறார் வறுமையெனச்
சலிக்கக் காய்ந்து
வருமிரவி வெயிலதனால் மயங்கியின்று யானிங்கு
வந்த போழ்தில்
அருமை தவிர் பாராச்சே வகர்தமது பெயர்ப்பொருளை
அறியக் காட்டிக்
கருவமொடு தடு ப்பதென்னே காமர்பொன்னுச் சாமியெனும்
கருணை மாலே!"
பொருள்:
அழகிய பொன்னுச்சாமி என்னும் பெயருடைய கருணை மிக்க
திருமாலின் அம்சமானவரே! தருமகுணம் மிகும் உமது சமுகத்தை
அடையார் வறுமையால் சலித்து வாடுவர். நான் தங்களை நாடி
ஏறு வெயிலில் வரும்போது வெயில் கொடுமையால் மயக்க
நிலையை அடைவதுபோல் இருந்தேன். வாயில் காக்கும் பாராச்
சேவகர் என்னை நுழைய விடாமல் தடுத்தார்.(இருந்தாலும் வேறு
காவலர் ஒருவர் வந்து விளக்கிச் சொல்லியதன் பேரில் என்னை
அனுமதித்தார்.). மன்னர் தவறு செய்த காவலரை அழைத்து வர
உத்தரவிட்டார். உடனே கவிச்சிங்கம் "ஐயா! அவர் இதற்குமுன்
என்னைப் பாராச் சேவகர்(பார்த்திராத சேவகர்) தானே; எனவே,
பாராச் சேவகர் பணியில் கடுமையாக நடந்து கொண்டார். அவர்
தம் கடமையைச் சரியாகச் செய்தார். எனவே அவர்க்கு யாதொரு
தண்டனையும் தேவையில்லை"என்றார். பாரா என்னும் சொல்
தமிழ்ச் சொல் அன்று. ஆனால் அதன் பொருள் காவல் என்னும்
பொருளில் கையாளப் பட்டுள்ளது. பாராச் சேவகன்=என்னை
இதற்குமுன் பார்த்திராத சேவகர்; பாராச் சேவகன்=காவல் காக்கும்
சேவகன் என்று இருபொருள்படப் புலவர் கையாண்டுள்ளார்.