எற்கண்டு பெயருங் காலை, யாழநின் கற்கெழு சிறுகுடி
எய்திய பின்றை ஊதல் வேண்டுமால் நாய்பயிர் குறிநிலை
கொண்ட கோடே.
தலைவியை மணந்துகொள்ளும் கருத்தின்றி நாடோறும்
இடையூறு மிக்க வழியில் தலைவன் வந்துபோய்க் கொண்டிருந்தான்.
இரவில் அந்த அஞ்சத்தக்க வழியில் தன்னந்தனியனாய்த் தலைவன்
வந்து போவதால் ஏற்படவிருக்கும் ஏதங்கள் ஏராளம். இந்த உண்மையை
அவனுக்கு உணர்த்தித் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதற்
காகத் தோழி இரவுக் குறியை முற்றிலும் தவிர்த்தல் நன்றென்று தலைவி
யிடம் அறிவுறுத்துகின்றாள். தோழியின் அறிவுரை மிகமிகச் சரியானதே
என்று முடிவுசெய்த தலைவி தலைவனுடன் தோழியை விரிவாக
உரையாடச் சொல்கின்றாள். பாடல் எண்:318. அகநானூறு/நித்திலக்குவியல்.
திணை:குறிஞ்சி. புலவர்:கபிலர். தோழி கூற்று.
"கான மானதர் யானையும் வழங்கும்.
வான மீமிசை உருமும் நனிவுரறும்.
அரவும் புலியும் அஞசுதக வுடைய
இரவுச் சிறுநெறி தமியை வருந்தி
வரையிழி யருவிப் பாட்டொடு பிரசம்
முழவுச்சேர் நரம்பின் இம்மென இமிரும்
பழவிறல் நனந்தலைப் பயமலை நாட!
மன்றல் வேண்டினும் பெறுகுவை, ஒன்றோ
இன்றுதலை யாக வாரல், வரினே
எம்முறு துயரமொடு யாமிவண் ஒழிய
எற்கணடு பெயருங் காலை, யாழநின்
கற்கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேணடுமால் சிறிதே வேட்டொடு
வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்
நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே".
பொருள்:
மலையிலிருந்து விழுகின்ற அருவி ஒலியுடன், வண்டினங்களும்
இணைந்து ஒலிப்பது தண்ணுமை ஒலியுடன் கூடிய யாழ் நரம்பின்
ஒலிபோல இம்மென்று ஒலிக்கும். இத்தகைய இயற்கை வளமிக்கதும்
வெற்றியினையும் அகன்ற இடப் பரப்பினையும் உடையதுமான
பயன் மிகுந்த மலைநாட்டுத் தலைவனே!
காட்டில் பெரிய யானைகள் உட்படப் பல்வேறு விலங்குகளும் நடமாடும்.
வானில் மிக உயர்ந்த இடத்தில் இடியும் உரத்துமுழங்கும். அவ்வழியில்
கொடிய பாம்புகளும் புலிகளும் திரிவதால் அவ்வழியில் நடமாடும்
அனைத்து உயிரினங்களும் மனிதர்களும் அஞ்சி நடுங்குவர். இத்தகைய
ஒடுக்கமான குறுகிய வழியில் நீ தனியாளாய்த் துணையின்றி நள்ளிரவில்
வருகின்றாய். நீ தலைவியை மணந்துகொள்ள விரும்பினால் அவ்வாறு
பெறுவது உறுதி. எனவே, இன்றுமுதல் இனி இரவில் இங்கே வரவேண்டா.
(இரவுக்குறி மறுக்கப்பட்டது).
அவ்வாறு நீ வருவாயானால் உனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்துவிடுமோ?
என்று பதறித் துடித்துவிடுவோம். அந்தவிதப் பதற்றத்துக்கும் மயக்கத்துக்கும்
யாம் ஆளாகாமல் இருக்க நீ ஒரு நற்செயல் செய்தல்வேண்டும். தலைவியைக்
கண்டு உன் ஊருக்குத் திரும்பும் காலத்தில், உனது மலைகள் பொருந்திய
சிற்றூரினை அடைந்தபின்னர், நீ குறிசெய்வதற்காக ஊதுகின்ற ஊதுகொம்பை
ஊதுமாறு வேண்டுகின்றேன். (வேட்டையாடுபவர்கள் அடர்ந்த காட்டில் கூடவந்த
வேட்டைக்காரர்களோ, உதவிக்குவந்த நாய்களோ பலதிசைகளில் பிரிந்துசென்று
விட்டால் தலைவன் அவர்களையும் அவைகளையும் ஒருங்கிணைக்கவும் தான்
இருக்குமிடத்தைத் தெரிவிக்கவும் ஊதுகொம்பு மூலம் ஊதிக் குறிசெய்வது வேட்டைத்
தொழிலில் நடைமுறையிலிருக்கும் பழக்கம்). அந்த ஊதுகொம்பின் ஒலிகேட்டு யாம்
ஆறுதல் அடைவோம்.
தோழியின் உரையடலைக் கேட்ட தலைவன் நிலைமையை அறிந்துகொண்டு மேலும்
கால தாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) மேற்கொள்ள ஆயத்தம் புரிவான்.
பார்வை:
அகநானூறு/நித்திலக் குவியல்---வர்த்தமானன் பதிப்பகம்.
உரையாசரியர்கள்: முனைவர் தமிழண்ணல் மற்றும் கவிஞர் நா..மீனவன்.