Thursday 31 October 2019

காளமேகத்தின் 'த' மற்றும் 'க' வருக்கப் பாடல்கள்.

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது....
(காளமேகப்  புலவர்  பாடல்)

காளமேகப்  புலவர்பற்றிய  கதைகள் பல உலவுகின்றன.
அவரது பிறந்த ஊரைக் குறித்தும் பல செய்திகள் உள.
பெரும்பாலோர் கருத்துப்படி திருவரங்கப் பெருமாள்
கோவில் மடைப்பள்ளியில் பரிசாரகராகப் பணிபுரிந்த
இவருக்கு இலக்கணப்படி ஆசுகவி  பாடும் கவித்திறம்
வந்தது எப்படி? இது குறித்தும்  சில கதைகள் உள்ளன.
தெய்வச் செயலால் இவர்க்குக் கவித்திறம் வந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து தன் கவித்திறத்தைக்
காட்டிவந்த இவர் திருமலைராயன் பட்டினத்தில் வாழ்ந்து
வந்த அதிமதுர கவிராயர் என்பவரிடம் போட்டி நிகழ்த்த
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன்படி அதிமதுர கவி
ராயரும் அவர் சீடர்களும்(மொத்தம்:64 பேர்கள்) சொல்லும்
குறிப்புக் கேற்றவாறு சொற்பிழை, பொருட்பிழை, இலக்
கணப்பிழை இல்லாமல் ஆசுகவிதைகள் பாடுதல் வேண்
டும்.

போட்டி விதிகளின்படி புலவர்கள்  பல்வேறு சிக்கலான
குறிப்புகளைச் சொன்னார்கள். உடனுக்குடன் கவிகாள
மேகம் ஆசுகவிதைகள் சொல்லி அயரவைத்தார்."செருப்பு
என்ற சொல்லில் தொடங்கி விளக்குமாறு என்ற சொல்லில்
முடித்தல் வேண்டும்"; "கரி என்ற சொல்லில் தொடங்கி உமி
என்ற சொல்லில் முடித்தல் வேண்டும்"; வல்லினம், மெல்லினம்
மற்றும் இடையினம் இந்தப் பிரிவு எழுத்துக்களை வைத்துத்
தனித்தனியாகப் பாடல்கள் சொல்லல் வேண்டும்". மேலும்,
'க' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும், 'த'வருக்க
எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும் ஆசுகவிதைகள்
சொல்லல் வேண்டும்.  இப்படி எத்தனையோ நிபந்தனைகள்
விதித்த போதும் கவிகாளமேகம் வெற்றி பெறுவதைத் தடுக்க
முடியவில்லை. அப்படி ஒரு ஆசுகவிதையைத்தான் நாம்
பார்க்கவுள்ளோம்.

'த' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திய கவிதை:
"தாதிதூ  தோதீது; தத்தைதூ  தோதாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே---தாதொத்த
துத்திதத் தாதே, துதித்துத்தே  தொத்தீது;
தித்தித்த  தோதித்  திதி".
விளக்கம்:
தாதிதூ தோதீது--தாதி  தூதோ  தீது--அடிமைப் பெண்மூலம்
அனுப்பும் தூது நன்மையைத் தராது;
தத்தைதூ  தோதாது--தத்தை  தூது  ஓதாது--நான் வளர்க்கும்
கிளியோ தூதுப் பணியைத் திறம்படச் செய்யாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே--தோழியின் மூலமாக அனுப்பும்
தூதோ நாளைக் கடத்தும் தூதாகும்(காரியம் ஆகாது);
தே துதித்துத் தொத்தீது--நான் ஏதோ அணங்கால்(பேய், பிசாசு
போன்ற பயமுறுத்தும் தெய்வம்) அச்சுறுத்தப் பட்டிருக்கலாம்
என்றெண்ணி என் அன்னை முருகனைத் தொழுது அனுப்பும்
தூதும் நன்மை பயக்காது.
தாதொத்த துத்தி தத்தாதே--பூந்தாது போன்ற தேமல்கள்
என் மேனியில் படராமல் இருக்க;
தித்தித்த  தோதித்  திதி--எனக்கு இனிமையான தித்திப்பை
நல்கும்  என் தலைவனின் பெயரை--தித்தித்தது;
ஓதிக்கொண்டிருப்பதே எனக்கு உகந்ததாகும்--ஓதித்திதி.
அருஞ்சொற் பொருள்:
தாதி--அடிமைப் பெண்; தத்தை --கிளி; தூதி--தூது செல்பவள்;
ஒத்தித்தது--நாளைக் கடத்துதல்; தே--தெய்வம்;துதித்து--வழி
பட்டு; தொத்தல்--தொடர்தல்;துத்தி--தேமல்;தத்துதல்--படர்தல்;
திதி--நிலைமை; இருப்பு.
மேல் விளக்கம்:
இது அகப்பொருள் குறித்த பாடல். தலைவன் நினைப்பாகவே
வாழும் தலைவி, யாரைத் தூது அனுப்பலாம் என்று சிந்தித்துப்
பின் யார் தூதாலும் பயனில்லை என்று எண்ணி , அவனது
தித்திக்கும் பெயரைச் சொல்லிக் கொண்டிருத்தலே நல்லதாகும்
என்று முடிவுசெய்கிறாள். கவி காளமேகப்புலவர் புகழ் என்றும்
நிலைத்து நிற்கட்டும்!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை.

காளமேகப் புலவரிடம்  'க' வருக்க எழுத்தை மட்டும் பயன்
படுத்தி ஆசுகவி ஒன்றைப் பாடுமாறு அதிமதுர கவிராயர்
குழு கேட்டுக் கொண்டதற்கிணங்கச்  சில நொடிகள் கூடத்
தாமதம் செய்யாமல்   அன்னார் பாடிய கவிதை:
"காக்கைக்கா காகூகை; கூகைக்கா காகாக்கை;
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க--கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா  கா".
திருக்குறளின் 481ஆம் பாடலின் கருத்து இதில் பொதியப்
பட்டுள்ளது.
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை  இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது". (குறள்: 481)
காகம் தன்னைவிட வலிமையான கோட்டானை(ஒரு
வகை ஆந்தையை) அதற்குக் கண்தெரியாத பகல் வேளை
யில் சண்டையில் வென்றுவிடும். அதுபோலப் பகைவரை
வெல்ல விரும்பும் அரசன் தக்க காலம் கனியும் வரை காத்திருந்து
அந்த நேரத்தில் போரிட்டால் வெல்லலாம் என்ற திருக்குறளின்
கருத்தை உள்வாங்கிக் கவிகாளமேகம் தன் கவிதையைப்
பாடியுள்ளார்.

காளமேகப் புலவரின் கவிதைக்குப் பொருள்:
காக்கைக்கு ஆகா கூகை--இரவில் காக்கைக்குச்
சரியாகக் கண் தெரிவதில்லை. ஆனால் கூகைக்கு
(கோட்டானுக்கு--ஒருவகை ஆந்தைக்கு) மிகக் கூர்
மையான பார்வை இரவில் உள்ளதால் காக்கையால்
வெல்ல முடியாது. அது போலவே,
கூகைக்கு ஆகா காக்கை-காக்கைக்குப் பகல் நேரத்தில்
நன்கு கண் தெரிவதாலும், கூகைக்குப் பகலில் கண்
தெரிவதில்லை என்பதாலும் பகலில் கூகையால் காக்கை
யை வெல்ல முடியாது. எனவே,
கோக்கு(கோவுக்கு--மன்னனுக்கு)
கூ(பூமி) காக்கைக்கு(காத்தலுக்கு--காப்பதற்கு), அதாவது
குடிமக்களைப் பகைவரிடமிருந்து காப்பது மன்னனின்
கடமை யாகும். அக் கடமையைச் செய்வதற்கு,
கொக்கொக்க--கொக்கைப் போலத் தக்க நேரம்வரும்வரை
காத்திருக்க வேண்டும். இல்லையென்றால்,
கைக்கைக்கு--பகையை எதிர்த்து
காக்கைக்கு--குடிமக்களைக் காப்பாற்றுவதற்கு
கைக்கைக்கா கா--கைக்கு ஐக்கு ஆகா--தக்க நேரத்தில்
போரிடாவிட்டால் எப்படிப்பட்ட திறமையும், வீரமும் பொருந்திய
தலைவனுக்கும்(ஐ க்கு) நினைத்த காரியம் கைகூடாமல் போய்
விடும்.

குறுவிளக்கம்:
காக்கையால் இரவு நேரத்தில் கூகையை வெல்ல இயலாது.
கூகையால் பகல் நேரத்லில் காக்கையை வெல்ல இயலாது.
அதனால் பூமியிலுள்ள குடிகளைக் காக்கும் மன்னன் பகை
வரை வெல்வதற்கும், அதன்மூலம் குடிகளைக் காப்பதற்கும்
கொக்கைப் போலத் தக்க நேரம் வரும் வரை காத்திருத்தல்
வேண்டும்.  தகுந்த நேரம் அமையாவிட்டால் எப்படிப்பட்ட
திறமைசாலிக்கும் பகைவரை எதிர்த்து வெல்ல இயலாமற்
போய்விடும்..

காளமேகப் புலவரின்  தமிழ்மொழிப் புலமையும், ஆசுகவி
பாடும் திறமையும் நமக்குப் பெரு வியப்பை விளைவிக்
கின்றன. கவி காளமேகத்தின் புகழ் ஓங்குக!

1 comment: