Thursday 21 November 2019

விச்சுளிப் பாய்ச்சல் கூத்தாடியின் உயிரை வாங்கிய பரிதாபம்.

விச்சுளிப் பாய்ச்சல் கூத்தால் உயிரிழந்த நிகழ்வு.

மாகுன்(று) அனையபொன் தோளான் வழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன்; பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற் கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனள்என்று  சொல்லீர்  அயன்றைச் சடையனுக்கே.
கழாய்க்(கழை=மூங்கில்) கூத்தாடும் பெண் ஒருத்தி பாண்டியன் அரசவை
யில் அரியபல கூத்துகளை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். செய்வதற்கு
மிகவும் அரிதான, மிக மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனப்படும்
கூத்தை நிகழ்த்திக் காட்டி வேந்தனை வியக்கவைத்திடல் அவளது குறிக்
கோளாக இருந்தது.

 விச்சுளிப் பாய்ச்சல் என்பது கூத்தாடுபவள் மூங்கிலை(கழையை) நட்டு
அதன்மீது ஏறி உயரத்தில் இருந்தபடியே பலப்பல வித்தைகளை நிகழ்த்தி
அதிரடியாய்த் தான் அணிந்திருக்கும் மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு
அது கீழ்நோக்கி சற்றுத் தொலைவு வந்தவுடனே, விச்சுளி என்னும் பறவை
போலக் கழைமேலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து கையால் தொடாமலேயே
பாய்ச்சலில் இருக்கும்போதே அம்மூக்குத்தியை மூக்கில் கோத்துக்கொண்டு
கீழே குதிக்காமல் அந்தரத்தில் இருந்தபடியே மேல்நோக்கிப் பாய்ந்து கழை
உச்சியை அடைவது. இக்கூத்தைச் செய்யும் போது சிறு கவனப்பிசகு நேர்ந்
தாலும் முயற்சி தோற்றுவிடும். வேந்தன் உள்ளிட்ட அவையோர் முன்னிலை
யில் பெருத்த அவமானத்துக்கு உள்ளாக நேரிடும். மேலும் உயிரழக்கவும் நேரிடலாம்.

இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், ஒருமுறை இக்கூத்தை
நிகழ்த்திவிட்டால் அடுத்து இதனை நிகழ்த்த ஆறு மாத கால இடைவெளி
தேவைப்படும். ஏனென்றால் அடுத்து இதனை நிகழ்த்தவதற்கு ஆறு மாதம்
மூச்சடக்கும் பயிற்சியினை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம். ஆறு
மாதம் மூச்சடக்கும் பயிற்சி மேற்கொள்ளாமல் இந்தக் கூத்தை நிகழ்த்தி
னால் உயிரிழக்க நேரிடும்.

அநேகமாக, இந்தச் செய்தி அவையிலிருக்கும் அனைவருக்கும் நன்றாகத்
தெரியும். ஆனால், கூத்தாடுபவளின்  போதாத காலம், பாண்டிய வேந்தனுக்கு
இந்த உண்மை தெரியாது. கூத்தாடுபவள் விச்சுளிப்  பாய்ச்சல் செய்யும்
அந்தக் கணப்பொழுதில் வேறோரு பெண்ணைப் பார்த்துவிட்டான். அவள்
அழகால் அவன் கவனம் சிறிது நேரம் சிதறிவிட்டது. பிறகு இயல்பான
நிலைக்குத் திரும்பிவிட்டான். அதற்குள் விச்சுளிப் பாய்ச்சல் முடிந்துவிட
அவையினர் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். பாண்டியன் சோர்வும்
ஏமாற்றமும் அடைந்தான். இருந்தாலும், தான் வேந்தன் என்ற ஆணவம்
தலையெடுக்கக் கூத்தாடுபவளை விளித்து மீண்டும் ஒருமுறை வித்தை
யைச் செய்து காட்டச் சொன்னான். விச்சுளிப் பாய்ச்சலைப் பற்றி அறிந்
திருந்த அவையினர் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மீண்டும்
முயன்றால் கூத்தாடுபவள் உயிர் இழப்பது உறுதி. ஆனால், வேந்தனிடம்
இந்த உண்மையைச் சொல்ல அச்சமும் தயக்கமும் அவர்களை ஆட்டிப்
படைத்தன. கூத்தாடுபவள் நிலையோ மிக மிகப் பரிதாபமாக இருந்தது.
தான் இன்று உயிரிழப்பது உறுதி என்று நினைத்துக் கொணாடாள்.
அவளாவது வேந்தனிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். அரச
கட்டளையை மீறுவதற்கு அஞ்சினாள். இருதலைக் கொள்ளி எறும்பு
போலத் தவித்தாள். பாதி உயிர் போனவள் போலானாள். என் செய்வது?

உயிரிழக்கத் தன் மனத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். தயங்கித்
தயங்கிக் கழைமீது ஏறினாள். வழக்கம்போலத் தான் அணிந்திருந்த
மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு அதை நோக்கிக் கழையிலிருந்த
படியே பாயந்தாள். ஐயகோ! பரிதாபம். அவளால் மூக்குத்தியைத் தன்
மூக்கில் கோக்க முடியாமல் போய்விட்டது. தரையில் அவள் தலை
மோதி உயிரையிழந்தாள். பாண்டிய வேந்தன் பதறிவிட்டான். என்ன
நேர்ந்தது என்றே அவனுக்குப் புரிபடவில்லை. அவையிலிருந்தவர்கள்
விச்சுளிப் பாய்ச்சலைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறினர். ஐயகோ!
அநியாயமாக ஓர் உயிரிழப்பு நேர்ந்துவிட்டதே எனப் புலம்பினான்.

தொடக்கத்தில் காட்டப்பட்ட பாடல் கூத்தாடுபவள் கூற்றாக இயற்றப்
பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் பாண்டிய வேந்தன் யாரென்று
தெரியவில்லை. "பெரிய குன்று போன்ற தோளையுடைய பாண்டிய
வேந்தன் நான் விச்சுளிப் பாய்ச்சல் கூத்தை நிகழ்த்தும் பொழுது
சுவைக் கரும்பின் பாகனைய சொல்லையுடைய பெண்ணொருத்தி
யைப் பார்த்துத் தடுமாறியதால் என் நிகழ்ச்சியைப் பார்க்கத்  தவறி
விட்டான். மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக்காட்டச்  சொல்லிப் பணித்தான்.
அரச கட்டளையை மீற இயலாததால்  என் உயிர் போவது உறுதியாகி
விட்டது. வலசை(பறவைகளின் இடப் பெயர்ச்சி) போகின்ற பறவைகளே!
நீங்கள் புழற்கோட்டம் வழியாகச் சென்றால்  அயன்றைச் சடையனிடம்
என் நிலையைச் சொல்லிச் சாவை நெருங்கிக்கொண்டிருக்கின்றாள்
எனத் தெரிவித்திடுக" என்பது பொருளாகும். இதில் குறிப்பிடப்படும்
அயன்றைச் சடையனைப் பற்றி வேறு தகவல் தெரியவில்லை. ஞாயிறு,
அம்பத்தூர், ,ஆவடி, எழுமூர் முதலியன அடங்கிய கோட்டம் புழற் கோட்ட
மாகும். அயன்றைச் சடையன் என்பவன் கூத்து நிகழ்த்தும் கலைஞர்களைப்
பேணிப் புரந்திடும் வள்ளலாகத் திகழ்ந்தவன் எனத் தோன்றுகிறது. கழைக்
கூத்தின் சகல இயல்புகளையும், விளைவுகளையும், அருமை பெருமைகளை
யும் நன்கு அறிந்தவனாய் இருந்திருப்பான் எனவே, "அயன்றைச் சடையனுக்
குச் சொல்லீர்" என்று பறவைகளிடம் வேண்டினாள்.

பின்குறிப்பு:
கூத்தாடிய பெண்ணின் அழகு, திறமை முதலிய நலங்களைக் கண்டு பாண்டியன்
அவள்பால் மனத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பதற்காகப் பாண்டிமாதேவி
செய்த சூழ்ச்சி என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். எப்படியோ, திறமைமிகு
பெண் ஒருத்தியை இழக்கும்படி நேர்ந்துவிட்டது.

பார்வை: தமிழ் நாவலர். சரிதை மூலமும் விளக்கவுரையும் நூலின் ஆசிரியர்:
                 பேராசிரியரும் தமிழ் ஆராய்ச்சியாளரூமான ஔவை சு. துரைசாமி
                 பிள்ளை.


1 comment: