தொடர்ச்சியாய் உப்புமா வேண்டா உணர்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
யாப்பு:4காய், மா, தேமா.
பெருமாளின் அவதாரம் பத்தெனநம்
புராணங்கள் பீடு கொள்ளும்.
ஒருதேர்ந்த சிற்றுண்டி அதுபோல
அவதார உருவங் கொள்ளும்.
திருவார்ந்த செல்வர்மற்றும் ஏழையென
அனைவரையும் திருப்தி செய்யும்.
பெரும்பூமி தனில்உப்பு மா, உணவு
மக்களிடை பிறங்கி நிற்கும்.
தோசை, இட்லி மீந்துவிட்டால் பிசைந்துப்மா
உண்டாக்கிச் சுவைக்கச் செய்வர்.
மாசில்சிறு தானியங்கள் கேழ்வரகு,
கம்பு, தினை, வளமார் சோளம்
ஆசையினால் அவல்,சேமி யா,வரகு
ஜவ்வரிசி அனைத்தும் கொண்டு
வாசமிக உப்புமா எனும்உணவை
உருவாக்கி மகிழ்வர் பெண்டிர்.
சமைத்திடுதல் எளிதாகும். செம்பாகச்
சுவையுமுண்டு. சமயம் மிச்சம்.
அமைந்திருக்கும் பொருள்கொண்டு பெருஞ்சிரமம்
ஏதுமின்றி அடுக்க ளையில்
தமைவருத்திக் கொள்ளாமல் பெருங்கூட்டம்
சமாளிக்கச் சமைத்தல் இஃதே.
சுமையெனவே தோன்றாமல் விருந்தோம்பத்
தேர்வுசெய்யும் சுருக்குப் பாதை.
இனும்வேறு நன்மைபல இருந்தாலும்
எதிர்மறையாய் இடரும் உண்டே.
தினந்தோறும் விதவிதமாய் உப்புமா
உண்டாலும் தெவிட்டும் ஓர்நாள்.
நனிமேன்மை தரும்பலவாம் தாதுக்கள்
குறைவதனால் நலியும் மேனி.
கனிகாய்கள் புலால்முதலாம் பலபொருட்கள்
உள.அவற்றைக் கணக்காய் உண்போம்.
நேரிசை வெண்பா.
ஆண்டவன் தோற்றுவித்த அத்தனையும் நற்பொருளே.
யாண்டும் நினைவில் இருத்திடுக-நீண்டபுகழ்
உண்டி பலவுளவே, உத்தமமாய்த் தேர்வுசெய்து
மண்டிடுவோம் உள்ளம் மகிழ்ந்து.
பழகப் பழகப் பசும்பால் புளிக்கும்.
வழக்கிலுள்ள சொல்லடைவு, மக்காள்!-பிழைக்குமா?
தப்புமா என்சிறுநா? தையால்! தொடர்ச்சியாய்
உப்புமா வேண்டா உணர்.
அருஞ்சொற் பொருள்:
பீடு=பெருமை. பிறங்குதல்=விளங்குதல். மண்டுதல்=
நிரம்ப உண்ணுதல்.
உப்மா= உப்புமா (இடைக்குறை=விகாரம்)