புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.
தலைவன் தான் ஒருத்தியைக் கண்டு அவள் நெற்றியழகால்
புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானை
போலக் கட்டுண்ட நிலையைத் தன் பாங்கனிடம் உரைத்தது.
நூல்: குறுந்தொகை--பாடல் எண்: 129-- திணை:குறிஞ்சி--
இயற்றியவர்:கோப்பெருஞ்சோழன்.
தலைவன் கூற்று:
எலுவ(தோழ!) இளையோர்களுக்கு ஆதரவான நண்பனே!
அறிவுடையோர்க்கு(புலவர்க்கு) உற்றவனாக விளங்கும்
தோழனே! நான் என் மனத்தை வருடிக்கொண்டிருக்கும்
ஒரு செய்தியை நவில்கின்றேன். நீ கவனித்துக் கேட்பாயாக.
அன்றொருநாளில் மனத்துக்கு உகந்த ஒரு காட்சியைக் கண்டேன்.
பரந்த கடலின் நடுவே வளர்பிறையில் எட்டாம்நாள் பக்கத்தில்
பசுமையான வெள்ளிய நிலவொளியை வீசும் பிறைமதி தோன்றிய
தைப் போலத் தலைவியின் கூந்தலுக்கு அணுக்கத்தில் விளங்கிய
அவளது சிறிய நெற்றி(நுதல்) என் கண்களில் பட்டது. அதனால் நான்
புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானையைப்
போலக் கட்டுண்டேன். உறுப்பு இலக்கணப்படி(அங்க சாத்திரப்படி) பெண்
களுக்கு நெற்றியின் அகலமும் வளைவும் ஒளிவீசும் எட்டாம்நாள் பிறை
போல இருப்பது சாலச் சிறந்ததாம்.
இனி பாடலை நோக்குவோம்:(நேரிசை ஆசிரியப்பா)
"எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை.
மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்(பு)அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே!
அருஞ்சொற் பொருள்:
எலுவ=தோழ. ஏம், ஏமம்=பாதுகாப்பு, ஆதரவு.
அத்தை=பொருளற்ற ஒலிக்குறிப்பு-அசை.
எண்ணாள் பக்கம்=எட்டாம் நாள்(அட்டமி)
பக்கம்=பட்சம்.
பார்வை:
சங்க இலக்கியம்-குறுந்தொகை மூலமும் உரையும்
வர்த்தமானன் பதிப்பக வெளியீடு. உரை:முனைவர்
தமிழண்ணல்.