Wednesday, 17 July 2019

கல்விக்கண் திறந்த காமராசர் புகழ் ஓங்குக!

செயல் வீரர் காமராசர் புகழ் ஓங்குக!

சீர்மிகுந்த விருதுநகர்ப் பதிவாழ்ந்த தம்பதிகள்
குமார  சாமி
ஏர்மிகுந்த சிவகாமி எனுமிவர்கள் பெற்றெடுத்த
         இனிய பிள்ளை;
கார்மிகுந்த வண்ணத்தர்; வெள்ளைநிற உள்ளத்தர்;
          காம ராசர்
பேர்மிகுந்த தமிழினத்தின் பெட்புமிக்க அடையாளம்;
          பீடு தானே!

தீரர்சத்ய மூர்த்திக்குச் சீர்த்திமிகு மாணாக்கர்;
பாரதத்தாய் கைவிலங்கைப் பட்டென்(று) அறுத்தெறிய
வீரமிகப் போராடி வெஞ்சிறையில் வாடியவர்;
ஈரநெஞ்சில் வாஞ்சையுடன் ஏழையர்க்கு நன்மைசெய்தார்.

தீமை  யிலாத  விருதுநகர்ச்
சேர்வில்  தோன்றி  அரசியலில்
ஏமம்  மிக்க  காங்கிரசாம்
இயக்கம்  தனிலே  படிப்படியாய்க்
காம  ராசர்  தொண்டியற்றிக்
கண்ய  மிக்க  முதலமைச்சாய்
பூம  டந்தை  உளங்களிக்கப்
பொறுப்பு  மிக்க  ஆட்சிதந்தார்.

நன்மைமிகு உழவுசெய்ய  அணைகள்பல எடுத்தார்;
 நல்லதொழிற் சாலைபல நிறுவிவளம் கொடுத்தார்;
உன்னதமாம் கல்விகற்கப் பள்ளிபல திறந்தார்;
  ஓயாத தொண்டாற்றி ஊண்,உறக்கம் துறந்தார்;
இன்மைமிகு மாணவர்க்காய் அழுதுகண்ணிர் உகுத்தார்;
  ஏற்றமிகு பகலுணவுத் திட்டந்தான் வகுத்தார்;
பன்னரிய சீருடைத்திட் டந்தனையே கொணர்ந்தார்;
  பாங்கான அவர்தொண்டை மக்களெலாம் உணர்ந்தார்.

கரும வீர! காம ராச! கல்வி கற்க உதவினீர்;
தரும மிக்க ஊழ லற்ற தக்க ஆட்சி தந்ததால்
அருமை யென்று சகல மக்கள் ஆத ரித்து வந்தனர்;
திருமி குந்த நல்ல கால மென்று சொல்லி வாழ்த்தினர்.

நேர்மையாய் எளிமை யாக
நித்தமும் தொண்டு  செய்தார்;
கூர்மையாம் அறிவு  கொண்டே
கொடுமைகள் களைந்து  மக்கள்
ஓர்மையாய்த்  துணிவாய்  வாழ
         ஊழலே இலாமல்  ஆண்டார்;
சீர்மையாய்  நாட்டை  யாண்ட
          செம்மலை  வாழ்த்து  வோமே!

வாழி! பெருந்தலைவர்; வாழி! அவர்திருப்பேர்;
வாழி! அவர்புகழும் மக்கள்தொண்டும்--வாழி!
உலகில்  கதிரும்  ஒளிரும்  மதியும்
நிலவும்  வரையளவும்  நின்று.

அருஞ்சொற் பொருள்:

கார்--கருமை; பெட்பு--பெருமை; பீடு--சிறப்பு; சேர்வு--வாழிடம்; ஏமம்--வலிமை;
பூமடந்தை--நிலமகள்; கண்ணீர் உகுத்தார்--கண்ணீர் சிந்தினார்;
கொணர்ந்தார்--கொண்டுவந்தார்;
திருமிகுந்த காலம்--பொற்காலம்;
ஓர்மை--உறுதி, துணிவு;கதிர்--சூரியன்;
மதி--சந்திரன்.






Sunday, 7 July 2019

காடும் செடியும் அவளாகத்

காடும் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.

ஐவேல் அசதி என்னும் வள்ளல் அந்நாளில் கற்றறிந்த
பெரியோர்கள்பால் அன்பும் மரியாதையும் கொண்டவ
னாக விளங்கினான். அவன் வீரத்திலும் சிறந்து விளங்
கியவன். அசதி என்பது அவனது இயற்பெயர் என்றும்
"ஐவேல்" என அழைக்கப்படும் வேலைக் கைவசம் வைத்துக்
கொண்டிருந்த காரணத்தால் 'ஐவேல் அசதி' என்று
அழைக்கப்பட்டான்  என்றும்  சான்றோர் கூறுவர். இந்த
வள்ளலிடம் ஔவையார் தன் புலமையை வெளிப்படுத்திப்
பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஐவேல் அசதி தமிழ்
கற்ற தன்னை மிகுந்த அன்போடும் மதிப்போடும் நடத்து
வதைக் கவனித்த ஔவையார் அவ்வள்ளல் மீது கோவை
எனப்படும் சிற்றிலக்கியம் ஒன்றை இயற்றினார். காலப்
போக்கில் அந்த நூல் நமக்குக் கிடைக்காமல் போயிற்று.
ஆனால் அந்நூலின் சில பாடல்கள் கிடைத்துள்ளன.
அப்பாடல்களைப் பார்ப்போம்.

அகப்பொருள் சுவை ததும்பும் பாடல்களைக் கொண்ட
அசதிக் கோவையில் உடன்போக்கு என்னும் துறையில்
பாடப்பட்ட பாடல் இது:
"அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்
முற்றா  முகிழ்முலை எவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதவர் ஈட்டமும்  கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே".
பொருள்:
காதலனோடு உடன்போக்குச் சென்ற மகளை நினைத்து
ஒரு தாய் புலம்பும் பாடலிது. கதியற்றவரைக் காக்கும்
ஐவேல் அசதியின் அழகிய மலைநாட்டின்மேல் வாழும்
என்மகள் எவ்வாறு கொடிய பாலைநிலத்தின் வழியே
தன் காதலனுடன் சென்றாள்? முத்தமிழ் நூல் கற்ற
பெரியோரைப் பிரிவதும், கல்லாதவர் கூட்டத்தில் சிக்கிய
கற்றவர் நிலையும், இளமைக் காலத்தில் கைப்பொருள்
இல்லாத வறுமைத் துயரும் எவ்வாறு மனக் கொதிப்பைத்
தருமோ அந்த அளவு கொதிப்பும் வெம்மையும் உடைய
பாலைநிலத்தை என்மகள் எவ்வாறு கடந்து சென்றனள்?
என்று அத்தாய் புலம்பியதாகப் பாடல் தெரிவிக்கிறது.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்.ஒரு காதலன் பொருள்
தேடுவதற்காகத் தன் காதலியைத் தவிக்கவிட்டுச் சென்று
விட்டான். அவன் பொருள்தேடி வந்தால்தான் திருமணம்
நடைபெறும். ஆனால் காதலியோ அவன் பிரிவால் மிகவும்
வாடி, வதங்கிப் புலம்பத் தொடங்கிவிட்டாள். அப்பாடல்:
"அருஞ்சஞ் சலங்கொண்ட ஐவேல் அசதி அகல்வரையின்
இருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென தன்னைமொழி
தருஞ்சஞ் சலமும் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும்
பெருஞ்சஞ் சலங்கொண்டு யானிருந் தேனொரு பெண்பிறந்தே".
பொருள்:
பிறர்  மனக்கவலை(சஞ்சலம்) யைத் தன்னுடைய துயரமாக
எண்ணி  அதனைத் துடைக்கும் வள்ளல் ஐவேல் அசதி மலை
நாட்டில் வாழும் எனக்குள்ள மனக்கவலை ஏராளம். என் அன்னை
உடன்போக்கு நிகழ்த்திய எனக்குத் தரும் ஏச்சும் பேச்சும், என்னைப்
பிரிந்த காதலனால் ஏற்பட்ட  எப்பொழுது திரும்பி வருவார்?
என்ற ஏக்கமும் ஊரார் என்னவிதமாக அலர்(பழிச்சொல்) தூற்று
வாரோ என்ற கவலையும் என்னைப் படாதபாடு படுத்துகின்றன.
பெண்ணாகப் பிறந்து இந்தப் பாடு படும் நான் சாகாமல் உயிர்
வாழ்வது எதற்கு?

மேலுமொரு பாடலைப் பார்ப்போம்:
"ஆலவட் டப்பிறை ஐவேல் அசதி அணிவரைமேல்
நீலவட் டக்கண்கள் நேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலைவிட் டுச்சுற்றி  வட்டமிட்  டோடி. வரவழைத்து
வேலைவிட்  டுக்குத்தி வெட்டுவ  ளாகில்  விலக்கரிதே".
பொருள்:
ஆலவட்டம் போன்ற  முழுநிலவு ஒளிரும் ஐவேல் அசதி என்னும்
தலைவனின் அழகிய மலைநாட்டில் வாழ்பவர்கள் நாங்கள். என்
காதலியின் நீலவட்டக்(கருமைநிறக்) கண்கள் என்னை நேருக்கு
நேராக நோக்கும் போது நான் கிறங்கி, நிலை தடுமாறி, மயங்கி
விட்டேன்.  என்னை ஒரு சுற்றுச்சுற்றிச் சிறிது தொலைவு
ஓடினாள். அங்கிருந்து கொண்டு அவளருகே என்னை வரவழைத்
தாள். நல்ல வேளை, மீண்டும் தன் வேல்போன்ற கண்களால்
என்னை நேருக்கு நேராக நோக்கி வெட்டியிருந்தால் அதனைத்
தடுத்து விலக்க இயலாமற் போயிருக்கும். என்னவொரு கூரிய,
காதற் பார்வை!

பிறிதொரு சுவையான பாடலைப்  பார்ப்போம் :
"ஆரா யிரங்கொண்ட  ஐவேல்  அசதி  அகன்கிரியில்
நீராடப்  போகும் நெறிதனி  லேயந்தி  நேரத்திலே
சீரான  குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொருபெண்
போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே".
பொருள்:
ஆத்தி மரங்கள் ஆயிரக் கணக்கில் வளர்ந்து நிற்கும் ஐவேல்
அசதியின் அகன்ற மலைப்பகுதியில், அந்தி நேரத்திலே,
நீராடப் போகும் பாதைவழியே முகத்திலே புன்முறுவல் தவழ
எடுப்பான தோற்றமுடைய பெண் ஒருத்தி போகின்றாள். அந்த
அழகுச் சிலையை விட்டுவிடாதே, பிடி பிடி என்று சொல்வது
போல வானத்தில் நிலவு உதித்துப்  புறப்பட்டது. காதலன் தன்
காதலியைச் சந்தித்த அந்த நிகழ்வைத்  திருமணத்துக்குப் பிறகு
அவளிடம் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் நினைவு கூர்ந்து
பரவசமடைகின்றான்; அவளும்தான்.

வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"அழற்கட்டுக் கட்டிய  ஐவேல் அசதி அணிவரையின்
மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கைநல்லாள்
உழக்கிட் டுரியிட்டு  முவ்வுழக் கிட்டுரி நாழியிட்டுக்
குழற்கட்  டவிழ்த்துட னங்ஙனின்  றேமயிர் கோதினளே".
பொருள்:
ஐவேல் அசதியின் மலைநாட்டில் கொடிய விலங்குகளான புலி,
கரடி, காட்டு யானை போன்ற உயிரினங்களும் ஆங்காங்கே
வாழ்ந்து வந்தன. இரவில் இரைக்காக வேட்டையாடுவதற்காக
வலம் வருதல் இயல்பு. அவைகளிடமிருந்து மக்களைக் காத்தல்
வேண்டி எல்லாப் புறத்திலும் நெருப்பிட்டுக் காவல் செய்திருப்
பார்கள். இதைத்தான் அழற்கட்டு என்று பாடல் குறிக்கிறது.
இந்த மலைநாட்டிலே மேகங்கள் திரண்டு நிற்கும் ஒரு மாளிகை
மேல்தளத்திலே செப்புச் சிலைபோன்ற பெண் ஒருத்தி தோன்றி
னாள். பொழுது புலர்ந்து மூன்று நாழிகை கடந்திருக்கும்  அந்த
வேளையில் ஒயிலாக நின்ற அந்தப் பெண் தனது கூந்தலை
அவிழ்த்துவிட்டு  முடியைக் கோதத் தொடங்கினாள். அக்காட்சி
மேகத்தைக் கண்ட மயில் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்
கியதை ஒத்திருந்தது. இத்தகைய அழகிய காட்சியைத்  தெரு வழி
யே சென்ற இளைஞன் ஒருவன் கண்டு சொக்கிப் போனான்.
அவன் சொல்வதாக இப் பாடல் அமைந்துள்ளது. பாடலின் மூன்றாம்
வரியில் வரும் 'உழக்கு' என்னும் சொல் காற்படியையும், 'உரி'
என்னும் சொல் அரைப்படியையும்,  'முவ்வுழக்கு' என்னும் சொல்
முக்காற்படியையும், 'நாழி' என்னும் சொல் ஒருபடியையும் குறிக்கும்.
அனைத்தையும் கூட்டினால் மூன்று படி, அதாவது, மூன்று நாழியைக்
குறிக்கும். நாழி என்னும் சொல் நாழிகையையும் குறிக்கும். எனவே,
விடிந்து மூன்று நாழிகை கடந்த வேளை.

இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:
"ஆடும் கடைமணி  ஐவேல்  அசதி  அணிவரைமேல்
நீடும் கயற்கண்ணி தந்தவவ் வாசை  நிகழ்த்தரிதால்
கோடும் குளமும்  குளத்தருகே  நிற்கும்  குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத்  தோன்றுமென்  கண்களுக்கே".
பொருள்:
கடைவாயிலில்  விருந்தினர் வருகையை அறிவிக்கும் மணி
ஓசை  இடையறாமல் ஒலிக்கும் கொடைக் குணம் உடையவன்
ஐவேல் அசதி என்னும் மலைநாட்டுத் தலைவன். அம்மலைப்
பகுதியில்  பேரெழில் பாவை ஒருத்தியை ஒரு இளைஞன்
பார்த்துக் கிறங்கிப் போனான். அவள்மேல் அவன் வைத்த
ஆசை அவனைப் பித்துப் பிடித்தவன் போல மாற்றிவிட்டது.
தன்னைச் சுற்றியிருக்கும்  எல்லாப் பொருள்களும் அப்பெண்ணைப்
போலவே அவன் கண்களுக்குத் தோன்றின. எனவேதான்,
'கோடும் குளமும் குளத்தருகே நிற்கும் குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே'
என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு திரிகின்றான்.
காதலின் வேகம் படுத்தும் பாடு.













Tuesday, 25 June 2019

மாமன்னர் இராசராசர் போற்றுதலுக்கு உரியவரா? அல்லரா?...

மாமன்னர் இராசராசர் வருகை புரிந்தால்..... ...

ஆற்றோரம் சென்றேன்; அசைந்துவரும் தென்றலெனும்
காற்றை  நுகர்ந்தேன்; களித்தேன்; மணல்மீதில்
தன்னந் தனியே தனிமையினில் ஆழ்ந்திருந்தேன்;
என்னருகே ஆங்கொருவர் ஏற்றமுடன்  வந்துநின்றார்;
"ஐயன்மீர் நீவிர் எவரென்று நானறியேன்,
பையவே தாங்கள் பகர்க" என்றுரைத்தேன்.
"பிள்ளாய்!இம் மண்ணிற் பிறந்த தமிழ்வேந்தன்,
தெள்ளு தமிழில் அருண்மொழி வர்மனென்பார்;
பட்டப்பேர் பற்பலவாம்; பாசத்தில் மக்களெலாம்
பெட்புடனே ' ராசராசன்' பேர்கொண்(டு) அழைத்தனரே;

மக்கள்சிலர் என்பெருமை மங்கக் குறைசொல்லி
நக்கல்,நை யாண்டி நவில்கின்றார்" என்றுரைத்தார்.
"ஆயிரம் ஆண்டுக்கு முன்நிகழ்ந்த சம்பவத்தைப்
பாயிரம் கூறிப் பகர்தல்  அரிதேயாம்.
வேந்தன் தனக்கு விரிந்த பொறுப்புண்டு,
சாந்துணையும் அப்பொறுப்பைத் தட்டிக் கழித்திடோம்.
எல்லை  தனைக்காத்(து) எதிரிகள் வாராமல்
நல்லவிதம் நாட்டை நடத்திடல் ஓர்கடமை;
மக்களெல் லாரும் சமமாவர் என்றெண்ணி
எக்கணமும் ஆட்சி இயக்கிடுதல் ஓர்கடமை;

கொள்ளை,கொலை இல்லாக் குறையற்ற ஆட்சிதரல்
விள்ளரிய வீரமுடை வேந்தர்க்காம் ஓர்கடமை;
மாக்கடலில் கொள்ளை, வழிப்பறி செய்வோரை
ஊக்கமுடன் போரிட்(டு) ஒடுக்கிடுதல் ஓர்கடமை;
பெண்களைப் பொன்போலப் பேணிடுதல் ஓர்கடமை;
கண்கள்நிகர் கல்வி, கலை கற்பித்தல் ஓர்கடமை;
மக்கள் விரும்பி வணங்கும் கடவுளர்க்கு
நெக்குருகக் கோவில் நிறுவிடுதல் ஓர்கடமை;
இத்தனையும் செய்தேன், இதன்மேலும் செய்கையுண்டு;
முத்தனைய செய்கைகளை மோசமெனக் கூறுகின்றார்;

சாதி,மத பேதத்தைச் சற்றும்,பின் பற்றவில்லை;
வேதியரைப் போற்றியதாய் வீண்குற்றம் சாட்டுகின்றார்;
தேவரடி யாரென்னும் தெய்வ நெறிசெய்தேன்,
கேவலமாய் அன்னவரைக் கேலி புரிகின்றார்;
நீதி,நெறி யோடு நிலத்தைப் பகிர்ந்தளித்தேன்,
சாதிநெறி பார்த்துச் சலுகைசெய்த தாய்ச்சொல்வர்;
மங்கை பலரை மணந்ததனால் பெண்பித்தர்,
பங்கம் உடையவர், பாங்கற்றார் என்றுரைப்பர்;
பேரரசை மேலும் பெரிதும் வலுவாக்க
வீரமுடைச் சிற்றரசர் வேந்தர்க்(கு) உதவிடுவர்;

பெண்ணைக் கொடுக்கும் உறவுமுறை கொண்டவர்கள்
பெண்கொடுத்துத் தத்தம் பிணைப்பை வலுச்செய்வர்;
எப்பொழுது போர்நிகழும்? யார்சாவைச் சந்திப்பார்?
தப்பறவே யாராலும் சாற்ற இயலாதே!
ஆரிறந்த போதும் அரசைத் தொடர்ந்திடவே
பேரரசர் பிள்ளைபலர்  பெற்றிடுவர்; ஈதுண்மை.
பேரரசைக் காத்திடவே பெண்டிர்பல  ரைமணத்தல்
பாரதநன் னாட்டின் பழக்கம்தான், குற்றமிலை.
எத்தனையோ  குற்றங்கள் என்மேற்  சுமத்திடினும்
அத்தனையும் ஆதாரம் அற்றவைதாம் என்றவுண்மை

செந்தமிழ் மக்கள் தெளிவாகத் தேர்ந்திடுவர்;
சிந்தனையை வேறு திசையினில் செல்லவிடார்;
போற்றுவார் போற்றிடினும் பொல்லாப் புழுதியினைத்
தூற்றுவார் தூற்றிடினும்  சோர்ந்திடேன்; மெய்யேயாம்.
எம்மக்கள் என்காலம் ஏற்றமிகு பொற்காலம்,
தம்மினத்தின் தக்க அடையாளச் சின்னமென்பர்;
நஞ்சனைய கூற்று நவில்பவரை நம்பாமல்
நெஞ்சகத்தில் என்னை நிலைநிறுத்தி வாழ்ந்திடுவர்."
என்றெல்லாம் பேசி எனைவிட்டு நீங்கினரே,
அன்றுநமை  ஆண்ட  அவர்.









Saturday, 8 June 2019

கோதாவரி தமிழர்களின் குறை தீர்க்குமா?+

தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டம்
(கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி)
கங்கையையும் பொன்னியையும் இணைத்திடலாம் என்றபகற்
  கனவு கண்டோம்;
"மங்கலமாம் இப்பணியை நிறைவேற்ற எந்தவொரு
   வழியும் இல்லை;
வெங்கொடுமை; மிகுந்தபொருட் செலவாகும்; மாநிலங்கள்
    விரும்ப வில்லை;"
பங்கமுற இவ்வாறு கூறியதால் கைவிட்டோம்;
    பரிதா பம்தான்.

எப்பொழுதும் பசுமைதவழ் நெற்பயிர்கள் அசைந்தாடி
   இனிய தென்றல்
வெப்பமதை விலக்கிநல்ல குளிர்ச்சிதரும் நன்செய்நிலம்
   மிக்க நாட்டில்
தப்பியது பருவமழை; வறட்சிமிக உருவாகித்
   தண்ணீர்ப் பஞ்சம்
துய்ப்பவரைத்  துன்புறுத்தி வாட்டமுறச்  செய்கிறது;
   சோகம்  தானே!

தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப் பகுதியெலாம்
   தழைத்த காலம்;
அமிழ்தமன்ன பொற்காலம்; அக்காலம் இனிவருமோ?
   ஆறே, பொன்னி!
இமிழ்திரைவங்  கக்கடலில் கலந்திடும்நற் கழிமுகத்துக்
    கேற்றம் சேர்த்தாய்;
துமிதமது காணாமல் கழனியெலாம் பாலையெனத்
    தோன்றும் அம்மா!
(துமிதம்--மழைத்துளி; கழனி--வயல்)

பருவமழை பொய்த்துநமை வாட்டுவது போதாதோ?
    பங்கு கேட்கும்
கருநாடர் அணைகளிலே நீர்தேக்கிப் பயனடைவர்;
    கபட மாக
அருமைமிகு காவிரியை அடைத்துவைத்து வஞ்சித்தல்
    அறமோ? சொல்வீர்;
பெருமைமிகு மையத்துப் பேரரசே! தலையிட்டுப்
    பிணக்கைத் தீர்ப்பீர்!

இந்நிலையில் நதிகோதா வரியினையும் பொன்னியையும்
    இணைப்போம் என்னும்
பொன்னிகர்த்த முன்மொழிவைப் பலர்சொல்லி மகிழ்கின்றார்;
    புகல்வோம் நன்றி;
மின்னிகர்த்த வேகத்தில் திட்டத்தை நிறைவேற்ற
    வேண்டிக் கொள்வோம்;
என்னவொரு தடைவரினும் எதிர்கொண்டு முறியடிப்போம்;
    ஏற்றுக் கொள்வோம்.

நிதிநிலையைக் காரணமாய்ச் சொல்லாதீர்; சூழல்கெடும்
    நினைப்பும் வேண்டா;
சதிபுரிந்து தடைசெய்ய எண்ணிடுவோர் தயைகூர்ந்து
    தள்ளி நிற்பீர்;
மதிமிகுந்த தென்னகத்து முதல்வரெலாம் ஒருங்கிணைந்து
   வழியைத் தேடிக்
கதியெனவே நம்புகின்ற இத்திட்டம் நிறைவேறக்
   கைகள் தாரீர்!

மையத்துப் பேரரசை ஆட்சிசெய்வோர் அக்கறையாய்
   மனது வைத்தால்
உய்யும்வகை நதிகோதா வரியினையும் பொன்னியையும்
   ஒருங்கே சேர்த்து
நையவைக்கும் தணீர்ப்பஞ்சம் நீக்கிடலாம்;வறட்சியினை
    நாட்டை விட்டே
ஐயமற விரட்டிடலாம்; வளமனைத்தும் மீட்டிடலாம்;
    அனைத்தும் உண்மை.
(தணீர்ப் பஞ்சம்--தண்ணீர்ப் பஞ்சம்--இடைக்குறை)

தென்னகத்து மக்களெலாம் இப்பெரிய காரியத்தில்
    சேர்ந்து நின்று
தன்னலத்தைத் துறந்து,பொது நலமெண்ணி நன்முறையில்
    தம்மால் ஆன
சின்னவொரு பணியெனினும் சிறப்பாகச் செய்திடுவோம்;
    தீர்க்க  மாகப்
பன்னரிய சாதனையாய் நிறைவேற்றி முடித்திடுவோம்;
   பாங்காய் வெல்வோம்.

சீர்மிகுமித் திட்டத்தை  மையத்தில்  ஆள்வோர்கள்
   செம்மை யாக
நேர்மைமிக  நிறைவேற்றிச் செயல்படுத்தி விட்டாலே
    நீங்கும்  துன்பம்;
நீர்மிகுந்து வளம்மிகுந்து  தென்னகத்து மாநிலங்கள்
    நெருடல் இன்றிப்
பார்புகழப் பிணக்கின்றி ஒற்றுமையாய் வாழ்ந்திடுமே,
    பாசத் தோடு.

ஆண்டவனே! மாபெருமிச் செயலுக்கு நின்கருணை,
    அளவில் ஆசி
வேண்டிடுவோம், தட்டாமல் நல்கிடுவாய்; பருவமழை
    விரைந்து பெய்து
மீண்டுமிந்தத் தென்பகுதி செழிப்படைய வழிசெய்வாய்;
    வேண்டும் நீரை
யாண்டுந்தென்  னகமக்கள் பெற, வரந்தா; பங்கீட்டை
    எளிதாய் ஆக்கே!
(ஆக்கு + ஏ = ஆக்கே; 'ஏ' அசையாகும்)











Monday, 27 May 2019

நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

கலித்தொகை--குறிஞ்சிக்கலி--பாடல் எண்:51--கபிலர்
"சுடர்த்தொடீஇ  கேளாய், தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை  பரிந்து, வரிப்பந்து  கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்(கு) அன்னை
'அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணுநீர்  ஊட்டிவா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்றென்னை
வளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்(டு),
'அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்,
'உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்(று) என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தானக்  கள்வன்  மகன்."
அருஞ்சொற் பொருள்:
சுடரத்தொடீஇ!--சுடரும் வளையல் அணிந்தவளே!; அடைச்
சுதல்--மலர் சூட்டுதல்; பட்டி--பசுக் கொட்டில்; தெருமந்திட்டு--
மனம் தடுமாறி; கோதை பரிந்து--மாலை அறுத்து
கருத்துரை:
மணலினால் சிற்றில் கட்டி  மறுகினில் ஆடும் போதில்
இணக்கமில் குறும்பன் இந்த இல்லத்தைச் சிதைத்தான் முன்னாள்;
வணங்கிடா வம்புக் காரன் மாலையைப் பறித்தான்; நாங்கள்
சிணுங்கிடப் பந்தைக் கௌவித் தெருவினில் ஓடி னானே!
(மறுகு----தெரு).

பட்டியில் வாசம் செய்யும் பகடினை நிகர்த்த அன்னான்
வெட்டியாய்த் தெருவைச் சுற்றும் விடலைபோல் வளர்ந்து விட்டான்;
கட்டிய மனையில் யானும் கனிவுடைத் தாயும் ஓர்நாள்
மட்டிலா ஓய்வில் சற்றே மகிழ்ந்திடும் வேளை வந்தான்.
(பகடு---எருது)

'அளவிலாத் தாகம் 'என்றான்; அருந்திடத் தண்ணீர் கேட்டான்;
தளர்வினைக்  கண்ட அன்னை  தக்கபொற் பாத்தி ரத்தில்
இளகிய மனத்தால் நீரை எடுத்துவந் தனளே; அஃதைக்
"களங்கமில் விருந்தி  னர்க்குக்  கைகளில் தருவாய்" என்றாள்.

பாத்திரம் தனையான்  நீட்டப், பாதகன் வளையல் பூண்ட
பூத்திறம்  போலும் கையைப் பொசுக்கெனப் பற்றி னானே;
ஆத்திரம், மருட்சி பற்ற, அன்னையே  இவனின் செய்கை
பார்த்திடாய் என்றேன்; தாயும் பதற்றமாய் அலறி வந்தாள்

விரைவினில் மருட்சி நீங்கி, "விக்கலால் துன்பம் உற்றான்;
அரைநொடி அச்சம் கொண்டேன்; ஆதலால் அழைத்தேன்" என்றேன்;
உரைத்திடேன் நிகழ்ந்த சேதி; உண்மையை அறியா அன்னை
துரையவன் பிடரி நீவித் "துன்பமே நீங்கிற்(று)" என்றாள்.

இத்தனை நிகழ்வும் நோக்கி எத்தன்தன் ஓரக் கண்ணால்
வித்தக மாகப் பார்த்து மெல்லிய முறுவல் பூத்தான்;
சித்தமே இழந்த நானும் சிறியதோர் நகையைக் காட்டிப்
பித்தனைக் கள்வன் தன்னைப் "பிரிந்துநீ செல்வாய்" என்றேன்.

விளக்கவுரை:
தலைவி தோழியிடம் கூறுகிறாள்:
சிறு வயதில் நாம் தெருவில் விளையாடும் பொழுது, மணலால்
சிற்றில் கட்டி மகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கம் . ஒருநாள்
இதுபோல விளையாடிக் கொண்டிருந்த  பொழுது அங்கு வந்த
ஒருவன் தன் கால்களால் சிற்றிலைச் சிதைத்தான். நாம் சூடி
யிருந்த மலர்களைப் பறித்துப் பிய்த்தெறிந்தான். நாம் விளை
யாடும் பந்துகளை எடுத்துக் கொண்டு தெருவழியே ஓடினான்.
இப்படியாக நம்மை நோகச் செய்தான்  பட்டிக் காளை போன்றவன்.
ஒருநாள், அன்னையும் யானும் எங்கள் இல்லத்தில் இருந்த
பொழுது ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து "தாகமாக உள்ளது.
அருந்துவதற்குத் தண்ணீர் தருக!" என்றுரைத்தான். அவன்
வேறு யாரும் அல்லன்; நமக்கு ஏற்கெனவே துன்பம் தந்து
நம்மை நோகச் செய்தவன்தான். அன்னை உள்ளே சென்று
பொற்கலத்தில் தண்ணீர் கொண்டுவந்து "நீ இந்த நீரை
அவனுக்குப் பருகக் கொடு" என்று கூறினள். நானும் நீர்
நிரம்பிய பொற்கலத்தை அவனிடம் நீட்டினேன். அவன்
பழைய குறும்புக் காரன் என்று அப்பொழுது அறியேன்.
அவன் வளையல் அணிந்த என் கரங்களைப் பற்றிக்
கொண்டான். அவன் பிடி வலுவாக இருந்தமையாலும்,
மனம் தடுமாறியமையாலும் "அன்னையே! இவன் செய்த
செயலைப் பார்ப்பாய்"  என்றேன். அன்னையவள் மனம்
பதறியபடி அலறிக் கொண்டு வந்தாள். எனக்கு என்ன
நேர்ந்ததோ? உடனேஅவளிடம் உண்மையைக் கூறா
மல், "இவன் நீர் அருந்தும் பொழுது  விக்கினான். என்ன
வோ துயர் இவனை வாட்டுகிறது என்று எண்ணி உனை
அழைத்தேன்" என நவின்றேன்.அன்னை
இவன் பிடரியை நீவிவிட்டுச் சரியாகியது என்றாள். நான் உண்மையைச்
சொல்லாமல் பொய் பேசியதைக் கேட்ட அந்தக் குறும்பன்
என்னை ஓரக் கண்ணால் நோக்கி மெல்ல நகைத்தான்.
இவன் சிறந்த கள்வனின் மகன்; காதல் கள்வன். என்னை
என்னவென்று அழைப்பது? நானும் ஒருவகையில் கள்ளி
யே என நினைத்துப் புன்முறுவல் பூத்தேன்.








;

Friday, 17 May 2019

மாதவியின் கானல் பாணி கனகர்--விசயர் முடித்தலை நெரித்தது.

மாதவி மடந்தை கானல் பாணி கனக,விசயர் தம்
முடித்தலை நெரித்தது.
(சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்; நீர்ப்படைக் காதை)
Ui
சிலப்பதிகாரத்தின் மிகச் சுவையாக வடிவமைக்கப்
பட்ட பகுதி புகார்க் காண்டத்தில் பயின்று வரும் கானல்
வரிப் பகுதி. தித்திக்கும் தீந்தமிழ்ப் பாடல்களைக் கொண்ட
பகுதி. சிலப்பதிகாரக் கதையையே நகர்த்திச் செல்லும்
பகுதி என்று இளங்கோவடிகள் கருதியதால்தான் வஞ்சிக்
காண்டத்தில் மாடலன் என்ற அந்தணன் சேரவேந்தன் செங்
குட்டுவனைச் சந்தித்த பொழுது "மாதவிப் பெண் பாடிய
கானல்வரிப் பாட்டு, வடநாட்டு அரசர்கள் கனகர் மற்றும் விசயர்
பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்குத்
தேவையான கல்லைத்தலையில் சுமக்கும்படி நேரிட்டது"
என்று அம்மறையவன்  கூறியதாக இளங்கோ தெரிவிக்கின்றார்.
அடிகளின் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்ற சிந்தனை
கானல்வரிப் பாட்டால் வலுப்பெறுகிறது.

கானல் என்பது கடற்கரைச் சோலையைக் குறிக்கும். வரி என்பது
இசை, இசைப்பாட்டு, கூத்து வடிவம் ஆகியவற்றைக் குறிக்கும்.
கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப் பாடல்  வரிப்பாடல் எனப்
படும். வரிப்பாடல்களில் பலவகைகள் உள்ளன. அவை வருமாறு:
1.ஆற்றை வருணிப்பது---ஆற்றுவரி
2.தலைவனின்  ஊர் மற்றும் பெயர் குறிப்பிட்டு வருணித்துப்
பாடுவது சார்த்துவரி அல்லது சாற்றுவரி.
3.யாப்புப் பாடலால் ஆகிய வரி மயங்கிசை கொச்சகக் கலிப்பா

4.பாடும் முறையால் பெயர் பெற்றவரி---முரிவரி; யாழ்முரிவரி;
வாய்முரிவரி.
5.கானலை வருணிப்பது கானல்வரி.
6.தலைவன் மற்றும் தலைவியின் உள்ள நிலையை(காதல்)
வருணிப்பது திணை நிலைவரி.
இன்னும் பலவகையான வரிப்பாடல்கள் உள்ளன.

கோவலனும் மாதவியும் இந்திரவிழா நிறைவு நாளன்று
காவிரிப்பூம்பட்டினத்து மக்களோடு கடலாடிவிட்டு ஒரு
கடற்கரைச் சோலையில்(கானலில்) இளைப்பாறிக்
கொண்டிருக்கும் பொழுது யாழை மீட்டிக் கோவலன்
கையில் கொடுத்த மாதவி அவனைப் பாடுமாறு குறிப்புக்
காட்டினாள். கோவலன் நல்ல கலையுள்ளம் கொண்டவன்.
வித்தை தெரிந்தவன். எனவே, உற்சாகமாகப் பாடத் தொடங்
கினான்.
"மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச்  செங்கோல் அதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய்  வாழி!  காவேரி!
கன்னி தன்னைப்  புணர்ந்தாலும்
         புலவா தொழிதல் கயற்கண்ணாய்!
மன்னும் மாதர் பெருங்கற்பென்(று)
         அறிந்தேன் வாழி! காவேரி!
பொருள்:வளையாத செங்கோல் ஆட்சி செலுத்தும்
சோழன் தெற்கே கன்னியாகுமரிவரை படைநடத்திச்
சென்று குமரியோடு சேர்ந்தாலும் அவனைவிட்டு நீங்காத
நினைவுடைய  காவிரியே! நீ வாழ்க! சோழன் குமரியோடு
சேர்ந்தாலும் அவனை விட்டு நீங்காமல் இருப்பதற்குக்
காரணம் உன் கற்புநிலை தவறாமையே ஆகும் என்பதை
அறிந்துகொண்டேன். காவிரியே, நீ வாழ்க.(காவிரியும்
குமரியும் பெண்களாக உருவகப் படுத்தப்பட்டு இப்பாடலில்
வருணிக்கப்பட்டன). இது ஆற்றுவரியாகும். வரிப்பாடல்கள்
ஒருபொருள குறித்து மூன்றடுக்கி வருவன.

புகார் நகரைப் பற்றிய வரிப்பாடல்:
"காதலர் ஆகிக்  கழிக்கானல்
     கையுறைகொண்(டு) எம்பின் வந்தார்;
ஏதிலர் தாமாகி யாமிரப்ப
     நிற்பதை யாங்(கு) அறிகோம் ஐய!
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
     இணைகொண்டு  மலர்ந்த  நீலப்
போதும் அறியாது வண்டூசல்
     ஆடும் புகாரே எம் ஊர்".
பொருள்:எம்மேல் காதல்கொண்டு கானலுக்கு எம்பின்னே
வந்தவர் இன்று அயலார் போலாகிவிட்டார். அவர் அன்பை
இரந்துகேட்கும் நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். இப்படிச்
செய்வார் என்று எப்படி நாங்கள் அறிவோம்? மடந்தையரின்
கண்களையும் நிலவைக் கண்டு மலர்ந்த குவளை மலர்களை
யும் நோக்கும் மக்கள் எது கண்? எது குவளை? எனக் குழம்பும்
பூம்புகார் நகரம் எங்கள் ஊராகும்.

"நிணம்கொள் புலால் உணங்கல் நின்றுபுள்
ஓப்புதல் தலைக்கீ  டாக
கணம்கொள் வண்டார்த்(து) உலாம்கன்னி
நறு ஞாழல் கையிலேந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னி
        மற்(று) ஆண்டோர்
அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ!
பொருள்: கடற்கரையில் காயப்போட்டிருக்கும் கருவாட்டி
னைத் தின்னவரும் பறவைகளை ஓட்டுவதற்காக ஒரு
பூங்கொத்தைக் கையில்கொண்டு பெண் ஒருத்தி நிற்கின்
றாள். இப்படி மணம் வீசும் கானலில் ஆளைக் கொல்லும்
தெய்வ அணங்கு இருக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கு
போயிருப்பேனா? அவள் காதலில் வீழ்ந்திருப்பேனா?

"ஓடும் திமில்கொண்  டுயிர்கொள்வர்  நின்ஐயர்;
கோடும் புருவத்(து)  உயிர்கொல்வை மன்நீயும்;
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்கு இழவல் கண்டாய்!
பொருள்:உன்னைப் பெற்ற பரதவர் மீன் பிடி படகு
களைக் கொண்டு கடல்மீது உயிர்கொல்வர்.ஆனால்
நீயோ வளைந்த உன் புருவ வில்கொண்டே பார்ப்பவர்
உயிரைக் கவர்கிறாய். இதனால் பிறர்படும் துயரை
நீ எண்ணுவதில்லை.உன் பெருமையையும் உணர்வ
தில்லை.உன் மார்பின் சுமையாலே துன்பப்படும் உன்
சிற்றிடையை இழந்துவிடாதே.
"கயல்எழுதி வில்எழுதிக் காரெழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்;
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்(து) அரவஞ்சி வாழ்வதுவே."
பொருள்:கண்ணுக்காக மீனையும், புருவத்துக்காக வில்
லையும்  கூந்தலுக்காக மேகத்தையும் எழுதிய  இவள்
காமனின் (காதலில் ஈடுபட்டோரைக் கொல்லும்) கொலைத்
தொழிலையும் சேர்த்து எழுதிய இவள் முகம் முழு நிலவோ?
வானத்தில் இருந்தால் இராகு, கேது எனும்கோள்களால்
விழுங்கப்படலாம்என்று அஞ்சிப் பூமிக்கு வந்து வாழும் முழு
நிலவு தானோ?

கோவலன் பாடிய பாடல்கள் காதல் சுவை சொட்டச் சொட்ட
தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளை போலத் தித்தித்தன.
ஆனால் அவன் வேறு ஒரு பெண்மேல் நாட்டமுடையவன்
போன்ற கருத்துத் தோன்றுமாறு பாடினமையால் அவன்
மீது ஐயம் கொண்ட மாதவி எதிர்வினையாற்ற எண்ணினாள்.
மனம், வாக்கு, காயத்தால் பரிசுத்தமானவள் என்ற போதும்,
ஊழ்வினை பிடர்பிடித்து உந்தியதன் விளைவாகத் தானும்
வேறு ஒரு  ஆடவன்மேல் காதல் கொண்டவள் போன்ற குறிப்புத்
தோன்று மாறு காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறை
சார்ந்த காமச்சுவை சொட்டும் எதிர்ப்பாடல்களைப் பாடலானாள்.

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
       மணிப்பூ  வாடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண்  விழித்தொல்கி
       நடந்தாய்  வாழி, காவேரி!
கருங்க யற்கண்  விழித்தொல்கி
நடந்த வெல்லாம்  நின்கணவன்
திருந்து  செங்கோல்  வளையாமை
அறிந்தேன் வாழி, காவேரி!
பொருள்: ஆற்றின் இருகரையிலும்  பூக்களில் மொய்த்
துள்ள வண்டுகள் இன்னிசை பாட அழகிய பூக்களாகிய
ஆடையைப் போர்த்துக்  கொண்டு  மீன்போலும் அழகிய
கண்கள் விழித்தபடி ஓடித்திரிகின்ற  காவிரிப் பெண்ணே!
நீ இப்படி விழித்த விழி திறந்தபடி அசைந்தாடிப் பாய்வது,
உன்தலைவனாகிய சோழ வேந்தனின் நீதிதவறாத செங்
கோல் ஆட்சியினால்தான் என்பதை நான் அறிவேன்.
காவிரிப் பெண்ணே! நீ வாழ்க.  கோவலன்  பாடிய பாட்டில்
காவிரியோடு கங்கை, கன்னியாகுமரி முதலியவற்றையும்
சோழன் சேர்த்துக்  கொண்டாலும்  காவிரிப் பெண்ணே! நீ ஊடல்
கொள்ளமாட்டாய். ஏனென்றால் அதுவே நின் கற்புநிலை
தவறாமைக்குச் சான்றாகும், என்ற கருத்து வெளிப்பட்டது.
இதற்கு நேர்மாறாக மாதவி பாடிய பாட்டில் சோழமன்னன்
நீதி நெறி தவற மாட்டான் என்ற கருத்து வெளிப்பட்டது.
கோவலன் ஆடவர் எத்தனை பெண்டிரை மணந்தாலும்,
பெண்டிர் இச்செய்கையைப் பொறுத்துக்கொள்ளல் வேண்
டும் என்ற கருத்தைவலியுறுத்தினான். மாறாக, மாதவி
சோழமன்னன் நீதி, நெறி தவற மாட்டான் என்று உறுதிபடத்
தெரிவித்தாள்.

"மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்(கு)
   அறிகோம் ஐய?
நிறைமதியும்  மீனும் என அன்னம் ரண நீள்புன்னை அரும்பிப்
    பூத்த
பொறைமலி பூங்கொம் பேற வண்(டு) ஆம்பல் ஊதும்
    புகாரே எம்ஊர்."
பொருள்: வலிமைமிகு பரதர்கள் பிறர் அறியாமல் களவு
முறையில் கூடிய, பாக்கத்தில் உள்ள வளமிகு  பெண்டிரின்
அழகியகை வளையல்கள் கழன்று விழுந்து அவர்களின் களவு
ஒழுக்கத்தை ஊர் அறியச் செய்துவிடுவதை ஏழைகளாகிய
நாங்கள் எப்படி அறியாதிருப்போம்? அறிவோம்! அன்னப் பறவை
நீண்ட புன்னை மரக்கிளையிலே ஏறியிருக்க அன்னத்தையும்,
புன்னை மரத்தில் பூத்த பூக்களையும், வெண்மதியும் விண்மீனும்
என நினைத்து ஆம்பல் பூ மலரும்; அதனை வண்டுகள் மொய்க்கும்
புகார் எங்கள் ஊராகும்.

"தம்முடைய  தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ? விட்டகல்க;
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்."
பொருள்: என்னை நினைக்காமல் தனது இயல்பான அன்பு உளத்
தையும் தனது குதிரை பூட்டிய தேரையும் கூட அவர் விட்டுவிட்டுப்
போய்விட்டாரோ? இவைகளை விட்டுவிட்டார் என்றால் அவர் எம்
மையும் விட்டுவிட்டுப்  போகட்டும்!  அழகிய மெல்லிய பூங்கொத்து
களே! அன்னப் பறவைகளே! அவர் நம்மை ரண மறந்தாலும்,  நாம்
அவரை மறக்க மாட்டோமே!
"வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரை உலாவு கடல்சேர்ப்ப!
மாரிப் பீரத்(து) அலர்வண்ணம் மடவாள் கொள்ளக்
   கடவுள்வரைந்(து)
ஆரிக் கொடுமை செய்தார்என்  றன்னை அறியின்
   என்செய்கோ?
பொருள்: வீடுகளின் முன்பாக வலைகள் காயப் போட்டிருப
பர். கடல்முத்து நகையோடு செம்பவள வாய்திறந்து பேசும்
பரதவர் வாழும் சேரிக் குடியிருப்புகள் மிகவுடைய கடற்
கரையின் நெய்தல் நிலத் தலைவனே! என்மேனியானது
கார்காலத்தில் மலர்கின்ற பீர்க்கம்பூ நிறம் கொண்டால்
(பசலை நிறம்) ஐயோ! யாரால் வந்ததித் தீமை என்று ஊரில்
உள்ள கடவுளரை யெல்லாம் என் அன்னைவேண்டி வருந்து
வாள். என் அன்னைக்குத் தெரிந்தால் ஊர் முழுக்கத் தெரியத்
தொடங்கும். கட்டுவிச்சி மூலம் கட்டுப் பார்ப்பாள்(குறி
சொல்பவளிடம் குறி கேட்பாள்;) முருகனுக்கு ஆட்டையோ
கோழியையோ பலி கொடுப்பாள். என் களவு ஒழுக்கம் தெரிந்து
விட்டால் இற்செறித்து விரைவில் வரைவு கடாவ வழி மேற்
கொள்வாள். நான் என்ன செய்வேன்?

"கதிரவன் மறைந்தனனே; காரிருள் பரந்ததுவே;
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர்  உகுத்தனவே;
புதுமதி புரைமுகத்தாய்! போனார்நாட் டுளதாம்கொல்?
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தவிம் மருள்மாலை"
பொரூள்:பகலவன் மறைந்துவிட்டான். காரிருளும்
வந்து விட்டது. குவளைமலர் போலும் கண்கள் வருந்திக்
கண்ணீர்  சிந்தியபடி யுள்ளன.முழுநிலாப் போலும்
முகமுடைய பெண்ணே!  முழு நிலவை வெளியே
அனுப்பிவிட்டுப் பகலவனை விழுங்கும் இந்த மயக்
கும் மாலைப் பொழுது நமைப் பிரிந்து போன தலை
வர் நாட்டிலும் இருக்கும் அல்லவா?

"அடையல் குருகே! அடையலெம்  கானல்;
அடையல் குருகே! அடையலெம் கானல்;
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்(கு) உறுநோய் உரையாய்;
அடையல் குருகே! அடையலெம் கானல்".
பொருள்: செங்கால் நாராய்! செங்கால் நூராய்! இனி
எங்களது குளிர்மரச்  சோலையில்வந்து தங்காதே.
சிதறிவிழும் அலைகடல் தவழும் நெய்தல்நிலத்
தலைவனாகிய என் காதலனிடம் போய், நான் படும்
துயரம், அவரால் வந்த பிரிவுத் துன்பம் என்னும் நோயை
எடுத்துச் சொல்ல முடியாத நீ இங்கெதற்கு வருகிறாய்?
நாரையே! இங்கு நீ இனி வர வேண்டா."

இப்படியாகக் காமம் மிக்க கழிபடர் கிளவியைப் பாடிய
மாதவி கோவலனுக்குச் சந்தேகத்தைக் கிளப்பும்
வகையில் கானல்வரி எதிர்ப்பாட்டுகளைப் பாடி முடித்
தாள். வினை விளையும் காலம் நெருங்கிய  தாலும்,
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டியதாலும், கோவலன்
"கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்" என்று
சொல்லித் தன் பணியாட்களோடு அவ்விடத்தை விட்டு
அகன்றான். இதனைத் தொடர்ந்து பல நிகழ்வுகள்
நடந்தன. கண்ணகியை அடைந்து அவளோடு மது
ரைக்குச் சென்றான். தன் மனைவியின் சிலம்பை
விற்க முயலும்போது களவுக் குற்றம் சுமத்தப்பட்டுத்
தண்டிக்கப்  பட்டான். கணவன் கொலையுண்ட பிறகு
கண்ணகி பாண்டியனோடு வாதாடித்தன் கணவன்
கள்வன் அல்லன் என நிரூபித்தாள். பின்னர் மதுரை
நகரத்தை எரியூட்டினாள். நடைப் பிணம் போல வைகைக்
கரையோரமாக நடந்தே சென்று திருச்செங்குன்றம்
மலையுச்சியை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம்
சென்றாள் என இளங்கோவடிகள் தெரிவிக்கின்றார்.

சேரவேந்தன் கண்ணகிக்குச் சிலை எழுப்ப முடிவு
செய்து வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்
றான். ஆங்குள்ள ஆரிய மன்னர்களை வென்று
கனகர் மற்றும் விசயர் தலைமீது கண்ணகி சிலைக்
கான கல்லை ஏற்றிக் கொண்டுவந்தான். கண்ணகிக்கு
கோட்டம் எழுப்பி அதனுள்ளே இமயமலையிலிருந்து
எடுத்து வந்த கல்லால் வடித்த கண்ணகி சிலையை
நாட்டினான். இவ்வாறாக மாதவி பாடிய கானல்வரிப்
பாடல் கனக விசயர் முடித்தலை நெரித்தது. வாழ்க
கண்ணகி புகழ்! வளர்க சிலப்பதிகாரப் பெருமை!











"





.




Saturday, 4 May 2019

"பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்".

குன்றக் குரவையும், பத்தினிக் கோட்டமும்.

குற்றமற்ற கோவலன்  அநியாயமாகத் திருட்டுக்
குற்றம் சுமத்தப்பட்டுத் தண்டனையாகக்  கொலை
செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற கண்ணகி மிகுந்த
சினத்தோடு பாண்டியன்  நெடுஞ்செழியனின் அர
சவைக்குச் சென்று  வேந்தனிடம் வழக்காடித் தன்
கணவன் கோவலன் குற்றமற்றவன்  என நிலைநாட்
டினாள்.  தான் தவறு செய்துவிட்டதை  யுணர்ந்த
பாண்டிய வேந்தன் குற்ற உணர்ச்சியால் உயிர்
துறந்தான். கணவன் இறந்ததை யறிந்த கோப்பெருந்
தேவியும் அவன் காலடியில் உயிர்நீத்தாள். சினத்தின்
உச்சத்தில் இருந்த கண்ணகி, மதுரை நகரை எரியூட்டி
னாள். பின்னர் கால்போன போக்கில்  இரவு பகல் பாராது
கண்ணீர் சிந்தியபடியே வைகையாற்றின் கரையை
அடைந்து மேடென்றும் பள்ளமென்றும் பாராமல் நடந்து
நடந்து திருச்செங்குன்றம் மலையை அடைந்து அதன்
மீது ஏறினாள். மலைமீது பூத்துக் குலுங்கும் ஒரு வேங்கை
மர நிழலின் கீழ்வந்து நின்றாள். கண்ணீர் உகுத்தபடியே
பதினான்கு நாட்களைக் கழித்தாள். பதினான்காம் நாள்
தன் கணவனின் நினைவைப்  போற்றித் தொழுதாள். அப்
பொழுது வான் உலகத்தினர் அங்கு தோன்றிக் கண்ணகி
மீது மலர் மாரி பொழிந்தனர். பின்னர் தங்களுடன் வந்த
கோவலனையும் கண்ணகியையும் ஒருசேர அழைத்துக்
கொண்டு வானுலகுக்குத் திரும்பிச்  சென்றனர்.

இந்த வியத்தகு காட்சியைக் கண்ட மலைவாழ் மக்கள் அப்
பொழுது அப்பகுதிக்கு மலைவளம் காண வந்த சேரவேந்தன்
செங்குட்டுவனிடம்  விரிவாக எடுத்துரைத்தனர். அவ்வமயம்
உடனிருந்து இந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித்துக் கொண்
டிருந்த தண்டமிழ்ப் புலவர் சீத்தலைச் சாத்தனார் இது தொடர்
பான எல்லாச்  செய்திகளையும்  விளக்கமாகக் கூறினார்.

உடனே, சேரவேந்தன் செங்குட்டுவன் தன்னுடன் வந்த  தன்
மனைவி இருங்கோ வேண்மாளை நோக்கி
"உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தஇச்  சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?"
என வினவ, உடனே இருங்கோ வேண்மாள்
"காதலன் துன்பம் காணாது  கழிந்த
மாதரோ பெருந்திரு  உறுக; வானகத்(து)
அத்திறம் நிற்க;நம்  அகல்நா(டு)  அடைந்தவிப்
பத்தினிக்  கடவுளைப்  பரசல்  வேண்டும்"
என்று மொழிந்தாள். (பரசல்--வணங்கி வழிபடல்).
அரசி இவ்வாறு கூறியவுடன் செங்குட்டுவனும், அமைச்சரும்,
மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து ஆலோசித்துக் கண்ணகிக்குக்
கோட்டம் எழுப்ப முடிவு செய்தனர். கண்ணகி கோட்டத்துக்குச்
சிலை செய்யத் தோவையான கல்லை  இமயத்திலிருந்து எடுத்து
வரத் தீர்மானித்தனர். அதன்படி செங்குட்டுவன் வடதிசைநோக்கிப்
படையெடுத்துச் சென்றான். வழியில் எதிர்த்துப் போரிட்ட மன்னர்
களைத் தோற்கடித்து இமயமலையிலிருந்து பொருத்தமான கல்லைத்
தேர்ந்தெடுத்து அதனைக் கங்கை நீரில் நீராட்டித் தன்னிடம் தோல்வி
யடைந்த கனக விசயர் என்ற இரு ஆரிய மன்னர்கள் தலையில் ஏற்றிக்
கொண்டுவந்தான். வஞ்சி நகரம் திரும்பிய  செங்குட்டுவன் உடனே
கண்ணகி கோட்டத்தைக் கட்டுவித்தான். அதற்குள்  இமயத்திலிருந்து
கொண்டுவநத கல்லினால்  சிலை வடித்து அதனை நிறுவச்செய்தான்.

இதற்கிடையே, கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த துயரங்களைக்
கேள்விப்பட்ட கோவலன் தந்தைமாசாத்துவான் தன் சொத்தையெல்லாம்
தான  தர்மம் செய்துவிட்டுத் துறவு மேற்கொண்டான். கோவலனுக்குத்
தாய் அதிர்ச்சியில் உயிர்நீத்தாள்.  இந்த நிகழ்வையெல்லாம் கண்டும்
கேட்டும் வருந்திய கண்ணகியின் செவிலித் தாயும், தோழியும், கடவுட்
சாத்தனை மணந்து வாழ்ந்துவரும் தேவந்தி என்பவளும் ஆகிய மூவரும்
ஒன்று கூடிக் கண்ணகியைக் காண மதுரைக்கு வந்தனர். அங்கே அடைக்
கலம் கொடுத்த ஆயர்குலப் பெண் மாதரி துக்க மிகுதியால்  தீக்குளித்து
இறந்த செய்தியை அறிந்து மாதரி மகள் ஐயை என்பவளை அழைத்துக்
கொண்டு திருச்செங்குன்றம் மலைக்கு வந்தனர்.கண்ணகி கோட்டத்துக்
குள் நுழைந்து செங்குட்டுவனிடம் நிகழ்வனைத்தையும் விவரித்தனர்.
"முடிமன்னர் மூவரும் காத்தோம்பும்  தெய்வ
வடபேர்  இமய  மலையிற்  பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த
தொடிவளைத்  தோளிக்குத்  தோழிநான் கண்டீர்;
  சோணாட்டார்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை
மூவேந்தரும்  காத்து வளர்த்த கண்ணகிக்குத் தோழி
நான். சோழவளநாட்டில் பிறந்த பெண்பாவை கண்
ணகிக்குத் தோழி ஐயா, நான் தோழி என அறிக.
இவ்வாறு தோழி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

"மடம்படு  சாயலாள் மாதவி  தன்னைக்
கடம்படாள் காதல் கணவன்  கைப்பற்றிக்
குடம்புகாக் கூவல்  கொடும்கானம்  போந்த
தடம்பெரும் கண்ணிக்குத்  தாயார்நான் கண்டீர்;
  தண்புகார்ப் பாவைக்குத் தாயார்நான் கண்டீர்". 
பொருள்: மாதவிமேல் பொறாமை, சினம் எதுவும்
கொள்ளாமல் கொண்ட கணவனோடு குடம் நுழை
யாத(நீர் எடுப்பார் இன்றிப் பாழடைந்த) கிணறு
கள் இருக்கும் காட்டு வழியில் நடந்து வந்த கண்
ணகிக்குச் செவிலித் தாய் நான் கண்டீர்; செவிலித்
தாய் ஐயா, இதை அறிவீர்.

"தற்பயந்தாட்(கு) இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும்  எனக்கும் ஓர்சொல் இல்லை;
கற்புக் கடம்பூண்டு  காதலன் பின்போந்த
பொற்றொடி  நங்கைக்குத் தோழிநான் கண்டீர்;
   பூம்புகார்ப்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:தன்னைப் பெற்ற தாய்க்கும் எதுவும்
கூறாமல், தன்னை வளர்த்துக் காத்த என்தாய்க்கும்
எனக்கும்  எதுவும் கூறாமல், கற்பையே அணிகலன்
என மதித்துக் கணவன் பின்னே புறப்பட்டு வந்த
கண்ணகிக்குத் தோழி நான்; பூம்புகார்ப் பாவைக்
குத் தோழி ஐயா, இதனை யறிக.

இவ்வாறாகச் செவிலித் தாயும், அவள் மகளும்(கண்
ணகிக்குத் தோழி) புலம்பி அரற்றினர். உடனே,
தேவந்தி என்பவள் உரைக்கலானாள்.
"செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த  உணரா(து)  இருந்தேன்;மற் றென்செய்தேன்?
மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ? தோழி,
    அம்மாமி  தன்வீவும் கேட்டாயோ? தோழி".
பொருள்: நற்றவம் புரியாத பாவி நான். அன்றொரு
நாள் தீக்கனாக் கண்டதாக நீ சொன்ன பொழுதே
அதனைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்காமல் விட்டு
விட்டேனே. துயர் மிகுதியாலும் சினத்தாலும்  நீ
உன் ஒரு முலையைத்  திருகி எறிந்து மதுரையை எரி
யூட்டிய செய்தி கேட்டவுடன்  உனக்குத் தாயும்,
பிற்பாடு மாமியாரும் இறந்த செய்தியையும் நீ கேள்விப்
பட்டாயோ? தோழி, கேள்விப் பட்டாயோ? மேலும்,
"மாசாத்து வான்துறவும் கேட்டாயோ? அன்னை,
மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ? அன்னை".
"மாதவி தன்துறவும் கேட்டாயோ?  தோழீ,
மணிமே  கலைதுறவும்  கேட்டாயோ? தோழீ".
"வையெயிற்(று) ஐயையைக் கண்டாயோ? தோழீ,
மாமி மடமகளைக் கண்டாயோ? தோழீ".

இவ்வாறெல்லாம் பாடிப் புலம்பி அரற்றித் தீர்த்த
வுடன் வானிலே ஒரு பெண் உருவம் தோன்றியது.
சேர வேந்தன் செங்குட்டுவன் உடனே அதிசயப்
பட்டான்."பொன்னாலான சிலம்பையும் இன்னும் பல
அணிகலன்களையும் சூடிய மின்னல் கொடி போல
ஒரு பெண்ணுருவம் விண்ணில் தெரிகிறதே என்று
வியந்து கூறினான். கண்ணகித் தெய்வம் பேசினாள்:
"தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன்கோவில்
நல்விருந்(து) ஆயினான்; நானவன் தன்மகள்;
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்".
கண்ணகி தன்னைப் பாண்டியன் மகளென்று கூறிக்
கொண்டதால் பாண்டியன் மீதிருந்த அவளது சினம்
தணிந்து விட்டதை யறிந்த செங்குட்டுவன் உடபட
அங்கேயிருந்த அனைவரும் கண்ணகியையும் பாண்
டியனையும் வாழ்த்திப் பாடினார்கள். பின்னர் சோழ
வேந்தனையும் சேர வேந்தனையும் ஏற்ற முறையில்
வாழ்த்திப் பாடினர்.
"வீங்குநீர் உலகாண்ட விண்ணவர் கோன்தன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை;
ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த  சோழன்காண் அம்மானை;
 சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை".
பொருள்:கடலே எல்லையாக உடைய இந்த நிலவுலகை
ஆட்சிசெய்த, வானவர் தலைவன் இந்திரனது கோட்டை
மதிலைக்காத்த கொற்றவன் யார்?  வானில் வலம்
வந்த மூன்று கோட்டைகளையும் அழித்த(தூங்கெயில்
எறிந்த தொடித்தோள் செம்பியன் என்னும்) சோழமன்
னன் அவன். அவனது புகார் நகரை வாழ்த்திப் பாடி
அம்மானை விளையாட்டை ஆடுவாய் பெண்ணே!
"பொன்னி லங்கு பூங்கொடி பொலம்செய் கோதை
வில்லிட
மன்னி லங்கு மேகலை கள்ஆர்ப்ப  ஆர்ப்ப  எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த
டித்துமே;
தேவர் ஆர  மார்பன் வாழ்க வென்று  பந்த
     டித்துமே".
பொருள்:பொற்கொடி போன்ற அழகுடையவளே! பொன்
னாலான மாலைகள் ஒளிவீச, மேகலைகள் ஒலியெழுப்ப,
ஞாலமெங்கும் தென்னவன் பாண்டியன் வாழ்க என்று
வாழ்த்திப் பந்தடிப்போம். இந்திரன் அளித்த பூணாரம்
தவழும் மார்பன் வாழ்க என்று பந்தடிப்போம், வா.

"ஓரைவர் ஈரைம்  பதின்மர் உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு  போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்;
 கடம்பெறிந்த  வாபாடி  ஆடாமோ  ஊசல்."
பொருள்: பாண்டவர் ஐவரும்  கௌரவர் நூற்று
வரும்  உக்கிரமாகப் போர்புரிந்த பொழுது இரண்டு
பக்கத்துப் படைகளுக்கும் அளவின்றிப் பெருஞ்சோறு
படைத்த சேரன்-பொறையன்-மலையன் புகழ்பாடிக்
கருங்கூந்தல் விரிந்தாட ஊஞ்சல் ஆடுவோம்; கடலிற்
கடம்பை அழிந்த கொற்றவன் புகழ்பாடி ஊஞ்சல் ஆடு
வோம்.

கண்ணகிக்குக் கோவில் கட்டுவித்த செங்குட்டுவன்,
கோவிலில் அன்றாடம் பூசை மற்றும் விழா நடக்க
இறையிலியாக நிலம் வழங்கி நாடோறும் விழாச்
சிறப்பு விளங்கல் வேண்டும் என்ற ஆணை பிறப்
பித்தான். பூவும் அகில் புகையும் நறுமணப் பொருள்
களும் கொண்டு கண்ணகி தெய்வத்துக்குப் பூசை
செய்க என்று தேவந்திகைக்குக் கட்டளையிட்டான்.
கண்ணகி கோட்டத்தை வலமாக மூன்று முறை சுற்றி
வந்து தேவியை வணங்கிப் பணிந்து நின்றான். அங்கு
குழுமியிருந்த சிறையிலிருந்து விழாவை முன்னிட்டு
விடுவிக்கப்பட்ட மன்னர்களும், குடகு நாட்டவரும்,மாளுவ
மன்னனும், இலங்கையரசன் கயவாகுவும் "எங்கள் நாட்
டில் செங்குட்டுவன் பிறந்தநாள் விழா எடுக்கும் போது,
கண்ணகித் தெய்வமே! நீ தவறாமல் காட்சி தந்து அருளல்
வேண்டும்" என்று வணங்கி வேண்டினர். அப்பொழுது,
"நீங்கள் கேட்ட வரம் தந்தேன்" என்று வானில் ஒரு குரல்
ஒலித்தது. இப்படியாகக் கண்ணகி வழிபாடு பல இடங்
களுக்கும் பரவியது. மதுரையை எரியூட்டிய கண்ணகி
கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். பிற்பாடு கணவனுடன்
விண்ணுலகம் சென்ற நாளிலிருந்து சினந்தணிந்து அன்பும்,
அமைதியும் கொண்டவளாக மாறினாள். தன்னை நாடிவரும்
பக்தர்களுக்கு வேண்டியவரம் நல்கும் தெய்வமாக மாறிவிட்
டாள். கண்ணகி தெய்வத்தின் புகழ் ஓங்குக! பத்தினிக்
கோட்டத்தைப்  போற்றிடுவோம்.