மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்.
பருவ மழை மிக மிக இன்றியமையாதது. மாதம் மூன்று
முறை மழை பொழிந்தால் அந்ந நாடு செழிப்படையும்
என்பதில்யாதொரு ஐயமும் இல்லை. "மாதம் மும்மாரி மழை
பொழிகிறதா?" என்று வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இருவர்
சந்தித்துக்கொள்ளும் வேளையில் விசாரித்துத்தெரிந்துகொள்வது
நமது நாட்டில் மரபு. அந்த அளவுக்குப் பருவமழை நமக்குத் தேவையான
வாழ்க்கை வசதி. பருவமழை காலத்தில் பெய்யாவிட்டாலோ, குறைவாகப்
பெய்தாலோ, இயல்பான அளவுக்கு மேல் பெய்தாலோ நமக்கு இடையூறாகும்.
மழையை நம்பி வேளாண்மை யுள்ளது. மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மழை
இன்றியமையாதது.
பாரத நாட்டைப் பொருத்த வரையில் இரண்டு பருவக்காற்று மழை நடைமுறையில்
உள்ளன. தென்மேற்குப் பருவ மழை: இது பெரும்பாலும் தமிழ்நாட்டைத் தவிர்த்து
ஏனைய பாரதப் பகுதிகளில் பெய்கிறது. ஜூன் முதல்செப்டம்பர் முடிய நீடிக்கும்.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் மட்டும் கொட்டித் தீர்க்கும். அக்டோபரில் தொடங்கி
டிசம்பர் முடிய மழையிருக்கும். தென்மேற்குப் பருவமழை சரிவரப் பெய்யாவிட்டால்
காவிரியில் தண்ணீர் வராது. குறுவை, சம்பா, தாளடி முதலிய வேளாண்மைப் பயிர்களைப்
பயிரிட முடியாது. குடிப்பதற்கும் நீரில்லாக் கொடுமை நிலவும். வடகிழக்குப் பருவமழை
சரியாகப் பெய்யாவிட்டால் தமிழ்நாட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்துக் குறைந்துவிடும்.
மேட்டூர் அணை நிரம்புவதற்கு வழியேற்படாது.
தமிழ்நாடும் கருநாடகமும் காவேரி ஆற்றுநீரை மிகுதியாகச் சார்ந்துள்ளன. கருநாடகத்து
மக்களுக்கு ஓர் தவறான எண்ணம் அந்நாட்டு அரசியல்வாதிகளால் கற்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது காவேரி கருநாடகத்தில் உற்பத்தியாவதால் காவேரி முழுவதுமாகத் தமக்கே
சொந்தம் என்றும், வேறு எந்த மாநிலத்துக்கும் இதில் பங்கோ, உரிமையோ இல்லை
என்றும் நம்பவைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாகப் பலவிதமான சிக்கல்களும்
போராட்டங்களும் உருவாதல் கண்கூடு.
அனைத்துலகச் சட்ட திட்டப்படி, மலையோ, ஆறோ இரு வேறு பகுதிவழியாகச் செல்லுமே
யானால் இருவருக்கும் அது சொந்தமில்லை. ஆனால் அதன் பயனை இரு பகுதியினரும்
அனுபவித்துக் கொள்ளலாம். நைல் நதி பதினொரு நாடுகள் வழியாகப் பாய்ந்து செல்கிறது.
பதினொரு நாடுகளும் சிக்கலின்றிப் பகிர்ந்துகொள்கின்றனர். ஐரோப்பாவில் டான்யூப்
நதி பத்து நாடுகள் வழியாகப் பாய்கிறது. பத்து நாடுகளும் பாங்காகப் பகிர்ந்துகொள்கின்
றன. ஏன் பாகிஸ்தான் சிந்துநதியை நம்மோடு சிக்கலின்றிப் பகிர்ந்துகொள்கிறது. பங்களா
தேஷ் பத்மா நதியை எந்த வித இடையூறும் இல்லாமல் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.
ஆனால், ஒரே நாட்டிலுள்ள கருநாடகமும் தமிழ்நாடும் பகிர்ந்து கொள்வதில் ஏகப்பட்ட
சிக்கல்கள் உருவாகின்றன. ஏனெனில், காவேரி தமக்கே சொந்தம், அதைப் பகிர்வதற்குத்
தமிழகத்திற்கு உரிமையில்லை என்னும் எண்ணம் கருநாடக அரசியல்வாதிகளால்
பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கருநாடகம் கிருட்டிணராஜ சாகர், கபினியணை, ஹேமாவதி, ஹாரங்கி
போன்ற அணைகளைக் கட்டியுள்ளது. அவற்றை மீறித் தமிழ்நாட்டுக்குத்
தண்ணீர் விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் பெருமழைக் காலத்தில் தமிழ்
நட்டுக்குத் தண்ணீர் சென்றுவிடக் கூடாதென்பதற்காக மேகேதாட்டு என்ற இடத்தில்
67 டி. எம். சி. நீரைச் சேமிக்கத் திட்டமிட்டு ஓரணை கட்ட எண்ணுகின்றனர். இது
நிறைவேறிவிட்டால் வெள்ளக் காலத்தில் கூடத் தமிழகத்திற்குத் தண்ணீர் வர
வாய்ப்பேயில்லை. மிகத் துணிச்சலாக அனைத்துலக ஆற்று ஒப்பந்தச் சட்டத்தைக்
கருநாடக அரசியல்வாதிகள் மீறத் துடிக்கின்றனர். மையப் பேரரசும், சுப்ரீம் கோர்ட்டும்
என்ன செய்யப் போகின்றார்கள்?
(பாடல்கள்:அறுசீர் ஆசிரிய விருத்தம். யாப்பு: 4 காய், மா, தேமா)
"தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப்
பகுதியெலாம் தழைத்த காலம்.
அமிழ்தமெனும் பொற்காலம், அக்காலம்
இனிவருமோ? அம்மா! பொன்னி!
இமிழ்திரைவங் கக்கடலில் கலக்கின்ற
கழிமுகத்துக்(கு) ஏற்றம் சேர்த்தாய்.
துமிதமது காணாமல் கழனியெலாம்
பாலையெனத் தோன்றும் அன்னாய்!
(துமிதம்=மழைத்துளி. கழனி= வயல்)
பருவமழை பொய்த்துநமை வாட்டுவது
போதாதோ? பங்கு கேட்கும்
கருநடர்தம் அணைகளிலே நீர்தேக்கிப்
பயன்பெறுவர், கபட மாக.
உரிமையுடைத் தமிழகத்தை முற்றாக
வஞ்சித்தல் ஊழல் ஆகும்.
தருணமிதில் அவர்செய்யும் அறமற்ற
செயலினைநாம் தடுத்தல் வேண்டும்.
(கருநாடர், கருநடர் எனக் குறுகியது இடைக் குறை)
திருக்குவதில் கைதேர்ந்த கருநாட்டின்
அரசியலார் திறமை யாக
கிருட்டிணராஜ் சாகரின்னும் கபினியணை
ஹேமவதி, ஹரங்கி போன்ற
உருப்படியாம் அணைகட்டித் தமிழ்நாட்டுக்(கு)
ஒருசொட்டு நீர்வி டாமல்
செருக்குடனே மேகேதாட்(டு) எனும்அணையைக்
கட்டுதற்கும் சிந்திக் கின்றார்.
(வேறு யாப்பு: அரையடிக்கு மா, மா, காய்)
உழுது பிழைக்கும் ஏழையருக்(கு)
உதவும் எண்ணம் சிறிதுமிலாப்
பழுது பட்ட மனங்கொண்ட
கருநாட் டினைஆள் அரசியலார்
தொழுது கெஞ்சிக் கோரிடினும்
நீரை விடுவித் திடமாட்டார்.
எழுதும் உச்ச நீதிமன்றத்
தீர்ப்பை மீற வழிகாண்பர்.
உலகம் முழுதும் பலநதிகள்
ஓடிப் பாய்ந்து வளஞ்செய்யும்.
திலகம் போன்ற நைல்நதியும்
டான்யூப் நதியும் பதின்நாட்டுள்
உலவி அவற்றைக் கடந்துசெல்லும்.
பாகிஸ் தானும் வங்கமுமே
கலகம் இன்றி நீர்பகிரும்.
கருநா டகத்தார் நிலையென்ன?
(பதின் நாட்டுள்=பத்து நாடுகள்)
தண்ணீர் இயற்கைத் தாயளித்த
தகைசால் அரிய பொருளாகும்.
மண்ணில் உதித்த அனைவருக்கும்
வாய்த்த உரிமைப் பொருளாகும்.
திண்ணம் எவர்க்கும் சொந்தமில்லை.
செகத்தார் எலார்க்கும் பொதுவுடைமை.
கண்ணின் மணிபோல் பயன்படுத்திக்
கருத்தாய்ப் பேணிக் காப்போமே.
ஞாலம் முழுதும் ஆட்சிசெயும்
நாடு களிலே நீர்ப்பகிர்வு
சீலம் மிகுந்த நெறிமுறையில்
சிறப்பாய் ஒழுங்காய் நிறைவேறும்.
காலக் கொடுமை! காவேரி
தமக்கே முற்றாய் உடையதென
ஓலம் எழுப்பும் கருநாடர்
துளிநீர் கூட விடமாட்டார்.
உச்ச நீதி மன்றத்தார்,
ஒன்றி யத்தை ஆட்சிசெய்வோர்
இச்சிக் கலையே தீர்ப்பதற்கு
ஏரார் டான்யூப், நைல், சிந்து
மெச்சும் பத்மா, போல்நதிகள்
மேற்கொள் சிறந்த நெறிமுறையை
நச்சி விரும்பி மேற்கொண்டால்
நல்ல வெற்றி அடைவோமே!
No comments:
Post a Comment