Tuesday, 2 June 2026

குயிலோசையை வெறுக்கும் தலைவி.

 தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்குக் குயிலோசை,

நிரம்பி ஓடும் ஆறு, கொடியதாய்த் தோன்றுகிறதாம்.


வினைவயிற் பிரிந்து சென்றான் தலைவன். கார்காலத்தில்

திரும்பி வருவதாக உறுதியளித்திருந்தான். ஆனால், தலைவிக்கோ

ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது போலத் தோன்றுகிறது.

நெடுங்காலம் ஆறாத புண்ணின் நிணங் காயாத மார்பிலே வேலைக்

கொண்டு குத்தினாற்போலக் குயிலோசை துன்பம் தருகின்றது.

அதனைக் காட்டிலும் நீர் நிரம்பிப் பாய்கின்ற ஆறு கொடியதாய்த்

தோன்றுகிறது. போதாக் குறைக்குக் குருக்கத்தி மலருடனே விரவிய 

செண்பக மலரை விற்பதற்காகக் கடகப்பெட்டியுடன்(கடாப்பெட்டி) தெருவில்

கூவிவரும் உழவர்மகள் ஆற்றை விடவும் மிகக் கொடியவளாகத் தென்படு

கின்றாள்.


குயிலோசை, நிரம்பிய ஆற்றுநீரோட்டம், நறுமலர்- இவையெல்லாம்

தலைவிக்கு ஒருகாலத்தில் இன்பமளித்தவை. தற்பொழுது தலைவனைப்

பிரிந்திருக்கும் தலைவிக்குக் குயிலோசை குத்தல் ஏற்படுத்துகிறது. நிரம்பிய

ஆற்றுநீரோட்டம் கடந்த காலத்தில் தலைவனும் தானும் ஒருங்கே ஆற்றில்

நீராடியதை நினைவூட்டி மனத்தைக் காயப்படுத்துகிறது. இவைபோலவே,

நறுமலர்களை விற்றுவரும் மங்கை தலைவன் தனக்கு மலர்சூட்டித் தழுவிய

நிகழ்வை நினைவூட்டி வதைக்கின்றாள். ஏற்கெனவே, தான் நாள்முழுவதும்

தலைவனுடனான நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டு சரிவர உண்ணாமலும்,

உறங்காமலும் பித்துப் பிடித்த நிலையில் திரிவதாக நற்றாய்முதல் அனைவரும்

பழிக்கின்றனர். இந்நிலையில் குயிலோசை, நிரம்பிய ஆற்றுநீரோட்டம், நறுமலர்

விற்றுவரும் மங்கையின் கடகப்பெட்டி போன்றவை பிரிவுத் துயரை மேலும் அதிகப்

படுத்துகின்றன. தலைவன் திரும்பிவந்தாலொழிய இவ்விடர்கள் தீரமாட்டா.

பாடலை நோக்குவோம்:

நூல்: நற்றிணை. திணை: முல்லை. புலவர்:மாறன்வழுதி.

பாடல் எண:97. 


                     நேரிசை ஆசிரியப்பா.


"அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா

எவ்வ நெஞ்சத்(து) எஃகுஎறிந் தாங்குப்

பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்

தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே.

அதனினும் கொடியள் தானே மதனின்

துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு

பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென

வண்டுசூழ் வட்டியள் திரிதரும்

தண்டலை உழவர் தனிமட மகளே."


அருஞ்சொற் பொருள்:

வழும்பு=நிணம். மதன்=அழகு. பித்திகை=சிறு சண்பகம்.

வட்டி=கடகப் பெட்டி(கடாப் பெட்டி).


நூல் ஆதாரம்: சங்க இலக்கியம்-நற்றிணை- வர்த்தமானன்

பதிப்பகம். உரையாசிரியர்-முனைவர் கதிர் மகாதேவன்.

No comments:

Post a Comment