Tuesday, 7 January 2020

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்,

நாட்டுப் புறப்பாடலின் தொன்மை.

சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியாக மக்கள் நாவில்
நாட்டுப் புறப் பாடல்கள் தவழ்ந்திருத்தல் வேண்டும். அப் பாடல்
க்ளே மேலும் மேலும் திருத்தமடைந்து இலக்கியங்களாக மலர்ந்
திருக்க வேண்டும். இலக்கியம் செம்மையுற்ற பிறகு இலக்கணம்
உருவாக்கப் பட்டிருத்தல் வேண்டும்.

மதுரையின் வளத்தை விவரிக்கும் அழகிய நாட்டுப்புறப்பாடல்
பின்வருமாறு:
"கட்டுக் கலங்காணும்; கதிர்உழக்கு நெற்காணும்;
அரிதாள் அரிந்து வர மறுதாள் பயிராகும்;
அரிதாளின் கீழாக ஐங்கலத்தேன் கூடுகட்டும்;
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெலென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை".
இந்த அழகிய நாட்டுப்புறப் பாடலில் ஏதோ சில வரிகள் விடு
பட்டுப் போனதாக நினைவு. என் சின்ன வயதில் இதைவிடப்
பெரியதாக இருந்த பாடல் காலப் போக்கில் நினைவாற்றல்
குறைவால் சுருங்கிக் போய்விட்டதாகத் தோன்றுகிறது.இந்த
வயல் வளம் அல்லி அரசாணி மாலை என்னும் இலக்கியத்தில்
எவ்வாறு விவரிக்கப் பட்டுள்ளது என்று பார்ப்போம்:
"வண்ணலும் இஞ்சியும் மஞ்சளும் மாமரமும்
கன்னலும் செந்நெலும் கதித்து விளைவாகிக்
கருத்த பயிர்தனிலே களையெடுக்கும் பள்ளிகளும்
அறுப்பு விடுவாரும்  அரிகூட்டி நிற்பாரும்
ஆனை அடிமறைய அடிராசி நெல்விடுவார்
ஆனவிரு மூன்றுபங்கில் அரண்மனைக்குப் பங்கொன்றுபோம்
கட்டுக் கலங்காணும் கதிர்உழக்கு நெற்காணும் ......
(அல்லி அரசாணி மாலை வரிகள்:525--531)
கொடைச் சிறப்பைச் சொல்லும் வரிகள் (535, 536):
"கொடுப்பாரே யல்லாமல் கொள்வார் ஒருவரில்லை;
எடுப்பார்கள் தானம் ஏற்பார் ஒருவரில்லை"

காதலன் காதலியிடம் தன் காதல் ஆழத்தை விவரிக்கும் பாடல்:
"செத்து மடிந்தாலும் செலவழிந்து போனாலும்
செத்த இடத்தனிலே செங்கழுநீர்ப் பூபூப்பேன்;
மாண்டு மடிந்தாலும் வைகுந்தம் சேர்ந்தாலும்
மாண்ட இடந்தனிலே மல்லிகைப் பூபூப்பேன்;
பஞ்சணை மெத்தையிலே படுக்கைமலர் ஆவேன்யான்;
கொண்டைக்குப் பூவாவேன்; கொசவத்திற் பையாவேன்;
நெற்றிக்குப் பொட்டாவேன்; நீலவிழி மையாவேன்;
முந்தானைத் தொங்கலிலே முள்ளாகி ஓட்டுவேன் யான்,;
காலுக்கு மெட்டியாவேன்; கைவளையல் தானாவேன்".

கல்யாணப் பந்தல் பற்றிக் காதலி விவரிக்கும் பாடல்:
"முத்தைப் பிளந்தார்கள்; மூன்றாங்கால் இட்டார்கள்;
பவளம் பிளந்தார்கள்; பந்தற்கால் நட்டார்கள்;
வெள்ளியால் கால்நிறுத்தி வெற்றிலையாற் பந்தலிட்டார்;
கரும்பாலே கால்நிறுத்தி அரும்பாலே பந்தலிட்டார்;
ஈர்க்குப் பிளந்தார்கள் இருகாதம் பந்தலிட்டார்;
மூங்கில் பிளந்தார்கள், முக்காதம் பந்தலிட்டார்;
நாணல் பிளந்தார்கள், நாற்காதம் பந்தலிட்டார்".
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அம்மையார் பாடும்
பாடலைப் பார்ப்போம்:
"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம்வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்".

மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றிக் கனாக்கண்டேன் தோழீநான்".

இனி உணவைப் பற்றியொரு நாட்டுப்புறப் பாடலை
நோக்குவோம்:
"பாண்டத்தைக் கழுவிப் பனிநீர் உலைவார்த்து
முத்துப்போற் சோறு வடித்தாள் இளங்கொடியாள்;
அத்தி விறகொடித்துத் தித்திக்கும் பால்காய்ச்சிப்
புத்துருக்கு நல்லநெய்யும் பொன்போல் பருப்புகளும்
அதிரசமும் தேன்குழலும் அறுசுவைப் பண்டங்களும்
பத்துவிதக் கறியும் பதினெட்டுப் பச்சடியும்
எட்டு விதக் கறியும் இயல்பான பலகுழம்பும்
முப்பழமும் சர்க்கரையும் அப்பளமும் தான்படைத்து
ஆயாசந் தீரவே பாயாசந் தான் கொடுத்தாள்".

விருந்தைப் பற்றிப் புலவர் ஒருவர் படைத்த இலக்கியம்:
"பொன்னம் பருப்பனமேல் போடுபருப் பைக்கணடு
இன்னும் பருப்போமென் றெண்ணிநிற்க--உன்னதமாய்
வைத்த ரசம்உண்டோர் வானத் தமுதரசம்
கைத்தரசம் என்றே கருதுவர்--சத்தியமாய்
பாயாசம் கொஞ்சம் பருகினா லும்போதும்
ஆயாசம் எல்லாம் அகன்றோடும்---காயாம்,மா
ஊறுகாய் ஒன்றே உலகை விலைகொள்ளும்,
வேறுகாய் வர்க்கங்கள் வேண்டாவே....

நாட்டுப்புறப்பாடல் நாடோடிகள் பாடல்,  வாய்மொழி இலக்கியம்,
ஏட்டில் எழுதாக் கவிதைகள் காற்றில் வந்த கவிதைகள், மக்கள்
பாடல்கள், மரபுவழிப்பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப்
பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பல்வகைப் பெயர்களால்
அழைக்கப்படுகின்றன. கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஒருமுறை
வயல் வழியே நடந்து சென்றபோது மூன்று மனிதர்கள் ஏற்றம்
இறைத்துக் கொண்டு ஏற்றப் பாடலை இனிமையாகப் பாடிக்
கொண்டிருந்தனர். முதல் மனிதர் "மூங்கில் இலை மேலே"
என்று தொடங்கினார். இவர் மாட்டை ஓட்டுபவர். இரண்டாமவர்
ஏற்றத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கிணற்றிலிருந்து நீரை
இறைப்பவர். இவர் "தூங்கும் பனிநீரே" என்று பாடினார். அதற்குள்
அவர்கள் தாயார் "பொழுது சாய்ந்து விட்டது; நீர் பாய்ச்சியது
போதும் "என்று கூறவும் மாட்டை அவிழ்த்து வீட்டை நோக்கி
விர்ட்டிவிட்டுத் தாங்களும் இல்லத்துக்கு ஏகினர். கம்பர் அடுத்த
அடி என்ன என்று அறிய ஆவலாயிருந்தார். மறுநாள் அதிகாலை
யிலேயே வந்து காத்திருந்தார்.ஏற்றம் இறைக்கத் தொடங்கினர்.
முதலிரண்டு அடிகள் பாடிய பிற்பாடு மூன்றாவது அடியைப்
பாடுபவர் "தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" என்று முடித்
தார். கம்பர் பெருமானையே கவர்ந்திழுத்த நாட்டுப்புறப் பாடல்
நம்மை ஈர்க்காமல் விட்டுவிடுமா?







..
























Monday, 16 December 2019

திரைப்படப் பாடல்களில் தென்படும் இலக்கியச் சாயல்கள்.

திரையிசைப் பாடல்களில் சில இலக்கியக் கூறுகள்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்களில் எனக்குத்
தென்பட்ட சில இலக்கியக் கூறுகளை எடுத்தியம்ப விழைகிறேன்.
இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையன்று. மேலும் கவிஞரின் அனைத்துத்
திரைப் பாடல்களையும் நான் படித்திலேன். நான் படித்த மற்றும்
கேட்டு இரசித்த சிற்சில பாடல்களில் எனக்குத் தென்பட்ட இலக்கியத்
தன்மைகளைத் தெரிவித்துள்ளேன்.

தொன்மைமிகு தமிழ்மொழி  மிகப் பெரிய அளவில் இலக்கிய வளம்
படைத்தது. எத்தனையோ புலவர்கள் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.
அவ்வப்பொழுது தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளனர். எத்தனையோ
விதமான கற்பனைகள், உவமை, உருவகம் ,சொல்லணி,  பொருளணி
நயங்களைக் கையாண்டு இலக்கியம் படைத்துள்ளனர். இவர்களுக்குப் பின்
வரும் அடுத்த தலைமுறையினர் இலக்கியம் படைக்கும் போது முன் தலை
முறையினர் கையாண்ட வழிமுறைகளை ஆங்காங்கே எடுத்தாள்வது மிக
இயல்பானதே. இதைத் தவிர்க்கவே இயலாது. எடுத்துக் காட்டாகக்  கம்பர் தம்
இராமாயணத்தில்  தமக்கு முன்பிருந்த சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்
தக்கதேவரின் கற்பனை, சொல்லாடல்கள், உவமை உருவக நயங்கள் முத
லியவைகளில் சிலவற்றை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார். இதைப் போல
வே கம்பருக்குப் பின்வந்த இலக்கியவாதிகள் கம்பரின் வழிமுறைகளை
எடுத்தாண்டுள்ளனர். இதைப் போலவே கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப்
பாடல்களிலும் முந்திய தலைமுறைப் புலவர்களின் கற்பனைநயம், சொல்நயம்
முதலானவை ஆங்காங்கே தென்படுகின்றன. ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.

தனிப்பாடல் திரட்டு நூலில் இடைக்காலப் புலவர் ஒருவர் பாடிய பாடல் தென்படுகிறது:
"மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
காவுறங்கின இன்னம்என்மகள் கண்ணுறங்கிலள்" என்னும்
வரிகளையும், தாயுமானவர் பாடிய
"மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே" என்னும்
வரிகளும், கம்பர் இயற்றிய
"நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்"
பாடலில் பயின்று வரும் வரிகளும் கவிஞர் கண்ணதாசனின்
"காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது"
என்னும் பாடலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது நன்கு
தெரிகின்றது.(படம்: மாலையிட்ட மங்கை).

மற்றொரு எடுத்துக்காட்டாகக் கம்பர் இயற்றிய கீழ்க்கண்ட
பாடலைப் பார்ப்போம்:
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ண லேநின்
கைவண்ணம்  அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன் ".
விசுவாமித்திரர் இராமனைப் புகழ்ந்து கூறியவை: "தாடகைக்கு எதி
ரான போரில் இராமா! உன் கைவண்ணத்தைக் கண்டேன். தற்பொழுது
உன் பாதம் பட்டவுடன் கல்லாக உருமாறியிருந்த அகலிகை மீண்டும்
பெண்ணுருவம் அடைந்ததன் வாயிலாக உன் கால்வண்ணத்தைக்
கண்டேன்" என்றார். இப்பாடலில் 'வண்ணம்' என்ற சொல் எட்டுமுறை
பயின்றுவந்துள்ளது. இந்தப் பாடலின் சாயல் கண்ணதாசனின் பாசம்
என்ற திரைப் படத்தில் வரும் கீழ்க்கண்ட பாட்டில் தென்படுகிறது:
"பால்வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு
மால்வண்ணம் நான்கண்டு வாடுகிறேன் " எனக் கதாநாயகன்
பாடக் கதாநாயகி பதிலிறுக்கும் விதமாகக் கீழ்க்கண்டவாறு
பாடுகிறாள்.
"கண்வண்ணம் அங்கே கண்டேன்; கைவண்ணம் இங்கே கண்டேன்;
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்". இந்தப் பாடலில்
இன்னும் பல வரிகள் உள்ளன. மொத்தமாகப் பன்னிரண்டு முறை
வண்ணம் என்ற சொல் பயின்றுவந்துள்ளது.

இனி, வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப் போனான்--பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து".
தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.
பெண் ஒருத்தியின் கூற்று:
மாத்தத்தன் சோழநாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசன்.
அவன் தன் பகுதியிலுள்ள தெருக்களில் உலா வரும்போது
அவன் சிறப்பையறிந்த மக்கள் அவனை வாழ்த்தி வரவேற்
கின்றனர். அக் கூட்டத்திலேயுள்ள கன்னிப் பெண்கள் அவன்
பால் மனத்தைப் பறிகொடுத்துக்  கைவளையல்களை நெகிழ
விட்டனர். இது மன்னர்களையும் சிற்றரசர்களையும் அகப்
பொருள் துறையில் புகழ்ந்து பாடுவதற்காக உலா என்னும்
சிற்றிலக்கியம் படைக்கப் புலவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை.
வழக்கம் போலக் கம்பனைப் பெரிதும் பின்பற்றும் கவிஞர்
கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
"சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு"
என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு
இயற்றியுள்ளார்.

இனி, அனைவரும் நன்கு அறிந்த பட்டினத்தார் பாடல்:
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத் தழும்மைந் தரும்சுடு காடுமட்டே;
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே".
இந்தப் பாடலின் சாயல் பாத காணிக்கை என்னும்
படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
"வீடுவரை உறவு; வீதிவரை மனைவி;
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?"
என்ற திரைப் பாடலில் தென்படுகின்றது.

புறநானூற்றையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை.
"அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே".
பாரிமகளிர் பாடிய இப்பாட்டில் "கடந்த திங்களில்
வெண்ணிலவு காய்ந்த பொழுது எம் தந்தை எம்
முடன் இருந்தார். எங்கள் குன்றும்(பறம்பு மலை)
எம்வசம் இருந்தது. இந்த மாதத்தில் வெண்ணிலவு
காயும் பொழுது எம் தந்தை எம்முடன் இலர்(மூவேந்
தர்களால் கொல்லப்பட்டார்). எம் குன்றும் எம்வசம்
இல்லை(எம் குன்றைக் கைப்பற்றிக் கொண்டனர்).
இப் பாடலிலுள்ள வரிகளின் சாயல் நாடோடி படத்தில்
கவிஞர் இயற்றிய
"அன்றொருநாள் அதே நிலவில் அவர்இருந்தார் என்
அருகே; நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை;
நீ அறிவாயே வெண்ணிலவே" என்றதிரையிசைப்
பாடலில்  தென்படுகின்றது.

இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல்
மிகப் புகழ்பெற்றது:
"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான்  கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான்  ஐயோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான்  பண்ணி  னானே."
இந்தப் பாடலால் கவரப்பட்ட கவிஞர் கண்ணதாசன்
பாவமன்னிப்பு என்ற படத்தில் " அத்தான், என்னத்தான்,
அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி" என்ற
திரைப்படப் பாடலை இயற்றினார்.

இனி, திருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல்
எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்".(குறள்:1094). இப்பாடலின்
கருத்தை வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்
அவர் இயற்றிய "நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
உன்னைநான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே;
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே."
என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப்
பட்டிருக்கும்.

இன்னும் ஆராய்ந்தால் பாடல்கள் கிடைக்கும். ஏன்
என்றால் நம் இலக்கியம் மிக  மிகச் செழுமையானது.
திரையிசைப் பாடல்  இயற்றும் கவிஞர்கள் அனைவருமே
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். கவிஞர் கண்ண
தாசன் தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்தவர்.. அதிலும்
குறிப்பாகக் கம்பர் மீது மிகுந்த  ஈடுபாடுடையவர். எனவே
திரையிசைப் பாடல்களில் இலக்கியக் கூறுகள்தென்
படுவதில் வியப்பேதும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு
மேலான இலக்கியத் தொன்மை கொண்ட நம் மொழியில் கூறப்
படாத கருத்தோ கற்பனையோ இல்லை. அதனால் எவர் கவிதை
படைத்தாலும் முந்திய இலக்கியக் கூறுபாடுகள் தென்படுவதில்
தவறேதும் இல்லை. எந்தக் கவிஞரையும் குறை சொல்லவே
இயலாது.









Sunday, 8 December 2019

கரும்புக்கு வேம்பிலே கண்.

கரும்புக்கு வேம்பிலே கண்.

ஏகம்பவாணன் என்பவன் இடைக்காலத்திலே தமிழ்நாட்டில்
விளங்கிய வாணர்குலத் தலைவர்களுள் ஒருவன். வாணர்கள்
அக்காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் இருந்திருக்
கின்றனர். தென்பெண்ணை யாற்றங் கரையில் திருக்கோவ
லூர் நாட்டிலுள்ள ஆற்றூரில் இந்த ஏகம்பவாணன் சிறப்புற்
றிருந்தான். இதே காலத்தில் பாண்டிய நாட்டில் சிறீவல்லப
மாறன் ஆட்சிபுரிந்து வந்தான். இவர்கள் காலம் 15ஆம் நூற்றாண்
டின் பிற்பகுதிக் காலமாகும். ஆற்றூர் ஆறையெனவும் அழைக்கப
படும்.

முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் செல்வாக்கு
இழந்து குறுநில மன்னர்களாக வாழ்ந்த காலக்கட்டம். இவர்களைக்
காட்டிலும் ஏகம்பவாணன்  செல்வாக்கோடு திகழ்ந்தான். ஓருமுறை
ஏகம்பவாணன் கழனிகளைப் பார்க்கச் சென்றிருந்த பொழுது சேர,
சோழ, பாண்டிய அரசர்களும் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது
பேச்சுவாக்கில் ஏகம்பவாணனை இழிவாகப் பேசிவிட்டனர். இதனால்
சினமடைந்த ஏகம்பவாணன் தன்னிடமிருக்கும் பூதத்தை ஏவி மூவரை
யும் சிறைப்பிடிக்க ஆணையிட்டான்.(தமிழ் நாவலர் சரிதையில் பூதம்
என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. நம்பத் தயங்குபவர்கள் முரட்டு
அடியாள் என்று பொருள்கொள்க.) பூதம் சேரனையும், சோழனையும்
சிறைப்பிடித்தது. பாண்டியன் வேப்பம்பூ மாலை அணிந்திருந்த கார
ணத்தால் அவனை நெருங்க அஞ்சிப் பின்வாங்கிவிட்டது.

இதனையறிந்த ஏகம்பவாணன் பாண்டியனின் வேப்பம்பூ மாலை
யைப் பறித்துவிட்டால் அவனையும் சிறைப்படுத்தி விடலாம் என்று
நினைத்து நான்கு தாதியரை(அழகான பணிப் பெண்டிர்) பாண்டிய
னிடம் அனுப்பிவைத்து வேப்பம்பூ மாலையை எப்பாடுபட்டாவது
பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்கள் பாண்டியனைச் சந்தித்து
வேப்பம்பூ மாலையைப் பரிசாகத் தருமாறு கோரிப் பாடல்களைப்
பாட ஆரம்பித்தார்கள். முதலாவது தாதி கீழ்க்கண்ட பாடலைப்
பாடினாள்:
"தென்னவா! மீனவா! சீவலமா றா!மதுரை
மன்னவா!  பாண்டி வரராமா!--முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா!
கரும்புக்கு வேம்பிலே கண்."
சுரும்பு= வண்டு; வண்டு உண்பதற்கு மாலையளித்த (மாலையி
லுள்ள பூக்களில் நிறைந்திருக்கும் தேனையுண்ண) மன்னவா!
கரும்பு போன்ற இனிமையான இப்பெண்ணுக்கு(எனக்கு=தாதிக்கு)
உன் வேப்பம்பூ மாலை மீது கண்ணாக வுள்ளது. ஆகவே, அதனைப்
பரிசாகத்தா என்று பாடினாள். தன் இனத்துக்குரிய அடையாள மாலை
யைக் கொடுக்க மனமில்லாத பாண்டியன் வேறு சில பரிசுகளை ஈந்தான்.

தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறாததால் இரண்டாவது தாதி பாடத்
தொடங்கினாள்:
"மாப்பைந்தார்க் கல்ல, முத்து  வண்ணத்தார்க்  கல்ல, வஞ்சி
வேப்பந்தார்க்  காசைகொண்டு  விட்டாளே---பூப்பைந்தார்
சேர்ந்திருக்கும் நெல்வேலிச் சீவலமா  றா!தமிழை
ஆய்ந்திருக்கும் வீரமா றா!"
இந்த வஞ்சிக் கொடிபோன்றபெண்(நான்) முத்துமாலை மீதோ வேறு
மரகத மாலை மீதோ ஆசை கொள்ளவில்லை. திருநேல்வேலிப் பதியை
ஆளும் சிறீவல்லப மாறா! சங்கம் வைத்துத் தமிழை ஆய்ந்து வளர்த்த,
வீரத்திலும் குறைவில்லாத மாறனே! நீயணிந்திருக்கும் வேப்பமாலைக்கு
ஆசைகொண்டுளேன் என்று பாட இதற்கும் பாண்டியன் மசியவில்லை.

உடனே மூன்றாமவள் பாட ஆரம்பித்தாள்:
"வேம்பா கிலுமினிய சொல்லிக்கு நீமிலைந்த
வேம்பா கிலுமுதவ வேண்டாவோ?--தேம்பாயும்
வேலையிலே  வேலைவைத்த  மீனவா! நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாள் மான்."
கரும்பைச் சாறு பிழிந்து அடுப்பில் பாகாகக் காய்ச்சும் பொழுது இனிய
நறுமணம் கமழும். அத்தகைய சூடான பாகைவிட இனிமையான சொற்களைப்
பேசுபவளுக்கு நீயணிந்த வேம்பாகிலும் பரிசாகத் தர வேண்டாவா? கடலில்
வேலைவைத்த மீனக் கொடியுடைய அரசனே!(சிவபெருமான் கடலிலே நிகழ்த்
திய திருவிளையாடலை மதுரைப் பாண்டியனுக்கு ஏற்றிச் சொல்லிப் புகழ்தல்)
தேன்சொரியும் உன் வேப்பம்பூ மாலையிலே இந்த மான்போன்ற பெண் மயக்
கம் வைத்துவிட்டாள். அதனால் அதைப் பரிசாகத் தந்து இவள் மயக்கத்தைத்
தெளிவிப்பாய் என்று பாடினாள். இதற்கும் பாண்டியன் மனமிளகவில்லை.

உடனே நாலாமவள் பாண்டியனின் தன்மானத்தைச் சீண்டுவதுபோல் பாடல்
பாடி மாலையைப் பறிக்கத் திட்டமிட்டுப் பாடத் தொடங்கினாள்:
"இலகு   புகழாறை. ஏகம்ப  வாணன்
அலகை  வரும்வரும்என்  றஞ்சி--உலகறிய
வானவர்கோன்  சென்னியின்மேல் வண்ண  வளையெறிந்த
மீனவர்கோன்  கைவிடான்  வேம்பு".
அய்யகோ, பரிதாபம்;  ஆற்றூர்(ஆறை) எனும் ஊர்க்குரியவனான ஏகம்ப
வாணனின் பூதத்துக்கு(அலகை) அஞ்சி இந்திரன் முடிமேல் வளையெறிந்த
வீரம்செறிந்த பாண்டிய வழியில் வந்த இவன் வேப்பம்பூ மாலையைக் கை
விடத் தயங்குகிறான். பூதத்துக்கு அஞ்சாவிட்டால் இவன் வேப்பம்பூ
மாலையை இந்நேரம் பரிசாகத் தந்திருப்பானே எனப் பாடிச் சீண்டினாள்.
இவ்வாறு பாண்டியனின் வீரத்தைப் பழித்துப் பாடியவுடன் பாண்டியன்
வெகுசினத்துடன் வேப்பம்பூ மாலையைக் கழற்றித் தாதியிடம்
பரிசளித்தான். வேப்பமாலை நீங்கியதை யறிந்த பூதம் பாண்டியனைச்
சிறைசெய்தது. ஏகம்பவாணன் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டான்.

இந்தக் கதையை நம்புகிறோமோ இல்லையோ இந்தப் பாடல்களில் மிளி
ரும் இலக்கியச் சுவையைப் புறந்தள்ள இயலாது.



சோற்றுக்கு அரிசிதரச் சொன்னால் களிக்கு மாவைத் தந்தான்.

ஏகம்பவாணன் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில
மன்னன். அவன் காலக்கட்டத்தில் முடியுடை மூவேந்தர்களும்
குறுநில மன்னர்களாகவே வாழும்படி நேர்ந்துவிட்டது. அடுத்
தடுத்து நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகளால் தமிழகத்தைக்
காலம் காலமாக ஆண்டவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஏகம்பவாணன் சிறந்த ஆட்சியாளன் மட்டுமன்று; உயர்ந்த வள்ள
லும் கூட. அவனை நாடிப் புலவர்கள், பாணர்கள் முதலிய கலை
ஞர்கள் அடிக்கடி வருவதும், தத்தம் திறமைக்கு ஏற்பப் பரிசில்
பெற்றுச் செல்வதும் வழக்கம்.

ஒருமுறை வறுமையில் வாடிய புலவர் ஒருவர் அவனைச் சந்தித்
துப் பாடல்களைப் பாடி அவனை மகிழ்வித்தார். புலவரின் திறமை
யைக் கண்டு கழிபேருவகையடைந்த ஏகம்பவாணன் புலவருக்குத்
தக்க பரிசளித்து மரியாதை செய்தான். என்ன பரிசளித்தான் என்று
அவரது பாடல் வாயிலாகக் காண்போம்:
சேற்றுக் கமலவயல் தென்னாறை  வாணனையான்
சோற்றுக்(கு) அரிசிதரச் சொன்னக்கால்----வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான்; கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா(று) எவ்வா(று) அவன்?.
பொருள்:
வறுமையில் வாடும் யான் சோறுபொங்க அரிசி தருமாறு கேட்டேன்;
ஆனால் வாணனோ களிக்கிண்ட மாவைத் தந்தான். அரிசிக்குப்
பதிலாகக் களிமாவைத் தருபவன் கற்றவர்க்குப் பரிசாகச் செம்பொன்
அள்ளித் தருதல் எவ்வாறு இயலும?  இவ்வாறு வாணனைப் பழிப்பது
 போலப் புகழ்ந்து பாடியுள்ளமை புலவரின் கவித்திறனை
வெளிப்படுத்துகின்றது. களி என்னும் சொல் களி என்ற உணவை
யும், செருக்கு, மதம் போன்ற உணர்ச்சிகளையும் குறிக்கும். அது
போலவே, மா என்ற சொல்லும் உணவைச் சமைக்கப் பயன்படும்
மாவையும்  யானையையும் குறிக்கும். இவ்வாறாகப் புலவர் பாடலில்
பயின்றுவந்த "களிக்கு மா" என்ற சொல் செருக்கு மிகுந்த யானை
என்ற பொருளைத் தரும். ஏற்கெனவே வறுமையில் உழல்பவருக்கு
யானையைப் பரிசாகத் தருவது நியாயமா? என்று கேட்கத் தோன்றும்
யானையை மட்டுமன்றி அதனைக் கட்டித் தீனிபோடுவதற்குத்  தேவை
யான பொருளையும் சேர்த்துக் கொடுப்பது வழக்கம். சங்க காலத்தில்
இருந்தே புலவர்களும் பாணர்களும் யானைப்  பரிசில் பெற்றுச் செல்
வது வழக்கமான நடைமுறைதான்.

இதே ஏகம்பவாணன் தொடர்பூடைய மற்றொரு பாடலைப் பார்ப்போம்.
அரண்மனையில் பணிபுரிந்துவந்த தாதி ஒருத்தி பிழை செய்தனள்.
ஏகம்பவாணன். அவள்மீது கடுங்கோபங் கொண்டு ஏனைய  பிற தாதி
யரிடம் ' கைவிலங்கு கொண்டு வருக' என்று கட்டளையிட்டான். தவறு
செய்த தாதி என்னாகுமோ, ஏதாகுமோ என்று அஞ்சி நடுங்கினாள்.
அவள் மேனி நடுங்கியது; அச்சத்தில் வியர்த்துக் கொட்டியது. தன் நடுக்
கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாணனை நோக்கிப் பேசலானாள்.
"ஐயா, விலங்கைக் கொண்டு வருமாறு பணித்துள்ளீர்;  சேர, சோழ, பாண்
டிய மன்னர்களில் யாருக்காக விலங்கைக் கொண்டுவரச் சொன்னீர்?
யாருக்கு விலங்கை மாட்ட எண்ணியுள்ளீர்? இவாவாறு பேசியதன் மூலம்
தான் செய்த பிழையை மன்னித்துவிடுமாறும், தனக்கு விலங்கு மாட்டத்
தேவையில்லையென்றும் மறைமுகமாகக் கோரிக்கை வைத்தனள். அவளின்
திறமையான பேச்சை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவளுக்கிருக்கும்
தமிழ்ப் புலமையைக் கொண்டு அவள்  சொல்லிய  நயமிக்க பாடலைக்
கீழே பார்ப்போம்:
அலங்கல் மணிமார்பன், ஆறையர்கோன்  வாணன்
விலங்கு கொடுவருக வென்றான்---இலங்கிழையீர்!
சேரற்கோ, சோழற்கோ  தென்பாண்டி நாடாளும்
வீரற்கோ  யார்க்கோ விலங்கு.
ஆறை=ஆற்றூர்; சேரற்கோ, சோழற்கோ, வீரற்கோ--சேரனுக்கோ,
சோழனுக்கோ, வீரனுக்கோ.














Thursday, 21 November 2019

விச்சுளிப் பாய்ச்சல் கூத்தாடியின் உயிரை வாங்கிய பரிதாபம்.

விச்சுளிப் பாய்ச்சல் கூத்தால் உயிரிழந்த நிகழ்வு.

மாகுன்(று) அனையபொன் தோளான் வழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன்; பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற் கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனள்என்று  சொல்லீர்  அயன்றைச் சடையனுக்கே.
கழாய்க்(கழை=மூங்கில்) கூத்தாடும் பெண் ஒருத்தி பாண்டியன் அரசவை
யில் அரியபல கூத்துகளை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். செய்வதற்கு
மிகவும் அரிதான, மிக மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனப்படும்
கூத்தை நிகழ்த்திக் காட்டி வேந்தனை வியக்கவைத்திடல் அவளது குறிக்
கோளாக இருந்தது.

 விச்சுளிப் பாய்ச்சல் என்பது கூத்தாடுபவள் மூங்கிலை(கழையை) நட்டு
அதன்மீது ஏறி உயரத்தில் இருந்தபடியே பலப்பல வித்தைகளை நிகழ்த்தி
அதிரடியாய்த் தான் அணிந்திருக்கும் மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு
அது கீழ்நோக்கி சற்றுத் தொலைவு வந்தவுடனே, விச்சுளி என்னும் பறவை
போலக் கழைமேலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து கையால் தொடாமலேயே
பாய்ச்சலில் இருக்கும்போதே அம்மூக்குத்தியை மூக்கில் கோத்துக்கொண்டு
கீழே குதிக்காமல் அந்தரத்தில் இருந்தபடியே மேல்நோக்கிப் பாய்ந்து கழை
உச்சியை அடைவது. இக்கூத்தைச் செய்யும் போது சிறு கவனப்பிசகு நேர்ந்
தாலும் முயற்சி தோற்றுவிடும். வேந்தன் உள்ளிட்ட அவையோர் முன்னிலை
யில் பெருத்த அவமானத்துக்கு உள்ளாக நேரிடும். மேலும் உயிரழக்கவும் நேரிடலாம்.

இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், ஒருமுறை இக்கூத்தை
நிகழ்த்திவிட்டால் அடுத்து இதனை நிகழ்த்த ஆறு மாத கால இடைவெளி
தேவைப்படும். ஏனென்றால் அடுத்து இதனை நிகழ்த்தவதற்கு ஆறு மாதம்
மூச்சடக்கும் பயிற்சியினை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம். ஆறு
மாதம் மூச்சடக்கும் பயிற்சி மேற்கொள்ளாமல் இந்தக் கூத்தை நிகழ்த்தி
னால் உயிரிழக்க நேரிடும்.

அநேகமாக, இந்தச் செய்தி அவையிலிருக்கும் அனைவருக்கும் நன்றாகத்
தெரியும். ஆனால், கூத்தாடுபவளின்  போதாத காலம், பாண்டிய வேந்தனுக்கு
இந்த உண்மை தெரியாது. கூத்தாடுபவள் விச்சுளிப்  பாய்ச்சல் செய்யும்
அந்தக் கணப்பொழுதில் வேறோரு பெண்ணைப் பார்த்துவிட்டான். அவள்
அழகால் அவன் கவனம் சிறிது நேரம் சிதறிவிட்டது. பிறகு இயல்பான
நிலைக்குத் திரும்பிவிட்டான். அதற்குள் விச்சுளிப் பாய்ச்சல் முடிந்துவிட
அவையினர் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். பாண்டியன் சோர்வும்
ஏமாற்றமும் அடைந்தான். இருந்தாலும், தான் வேந்தன் என்ற ஆணவம்
தலையெடுக்கக் கூத்தாடுபவளை விளித்து மீண்டும் ஒருமுறை வித்தை
யைச் செய்து காட்டச் சொன்னான். விச்சுளிப் பாய்ச்சலைப் பற்றி அறிந்
திருந்த அவையினர் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மீண்டும்
முயன்றால் கூத்தாடுபவள் உயிர் இழப்பது உறுதி. ஆனால், வேந்தனிடம்
இந்த உண்மையைச் சொல்ல அச்சமும் தயக்கமும் அவர்களை ஆட்டிப்
படைத்தன. கூத்தாடுபவள் நிலையோ மிக மிகப் பரிதாபமாக இருந்தது.
தான் இன்று உயிரிழப்பது உறுதி என்று நினைத்துக் கொணாடாள்.
அவளாவது வேந்தனிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். அரச
கட்டளையை மீறுவதற்கு அஞ்சினாள். இருதலைக் கொள்ளி எறும்பு
போலத் தவித்தாள். பாதி உயிர் போனவள் போலானாள். என் செய்வது?

உயிரிழக்கத் தன் மனத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். தயங்கித்
தயங்கிக் கழைமீது ஏறினாள். வழக்கம்போலத் தான் அணிந்திருந்த
மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு அதை நோக்கிக் கழையிலிருந்த
படியே பாயந்தாள். ஐயகோ! பரிதாபம். அவளால் மூக்குத்தியைத் தன்
மூக்கில் கோக்க முடியாமல் போய்விட்டது. தரையில் அவள் தலை
மோதி உயிரையிழந்தாள். பாண்டிய வேந்தன் பதறிவிட்டான். என்ன
நேர்ந்தது என்றே அவனுக்குப் புரிபடவில்லை. அவையிலிருந்தவர்கள்
விச்சுளிப் பாய்ச்சலைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறினர். ஐயகோ!
அநியாயமாக ஓர் உயிரிழப்பு நேர்ந்துவிட்டதே எனப் புலம்பினான்.

தொடக்கத்தில் காட்டப்பட்ட பாடல் கூத்தாடுபவள் கூற்றாக இயற்றப்
பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் பாண்டிய வேந்தன் யாரென்று
தெரியவில்லை. "பெரிய குன்று போன்ற தோளையுடைய பாண்டிய
வேந்தன் நான் விச்சுளிப் பாய்ச்சல் கூத்தை நிகழ்த்தும் பொழுது
சுவைக் கரும்பின் பாகனைய சொல்லையுடைய பெண்ணொருத்தி
யைப் பார்த்துத் தடுமாறியதால் என் நிகழ்ச்சியைப் பார்க்கத்  தவறி
விட்டான். மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக்காட்டச்  சொல்லிப் பணித்தான்.
அரச கட்டளையை மீற இயலாததால்  என் உயிர் போவது உறுதியாகி
விட்டது. வலசை(பறவைகளின் இடப் பெயர்ச்சி) போகின்ற பறவைகளே!
நீங்கள் புழற்கோட்டம் வழியாகச் சென்றால்  அயன்றைச் சடையனிடம்
என் நிலையைச் சொல்லிச் சாவை நெருங்கிக்கொண்டிருக்கின்றாள்
எனத் தெரிவித்திடுக" என்பது பொருளாகும். இதில் குறிப்பிடப்படும்
அயன்றைச் சடையனைப் பற்றி வேறு தகவல் தெரியவில்லை. ஞாயிறு,
அம்பத்தூர், ,ஆவடி, எழுமூர் முதலியன அடங்கிய கோட்டம் புழற் கோட்ட
மாகும். அயன்றைச் சடையன் என்பவன் கூத்து நிகழ்த்தும் கலைஞர்களைப்
பேணிப் புரந்திடும் வள்ளலாகத் திகழ்ந்தவன் எனத் தோன்றுகிறது. கழைக்
கூத்தின் சகல இயல்புகளையும், விளைவுகளையும், அருமை பெருமைகளை
யும் நன்கு அறிந்தவனாய் இருந்திருப்பான் எனவே, "அயன்றைச் சடையனுக்
குச் சொல்லீர்" என்று பறவைகளிடம் வேண்டினாள்.

பின்குறிப்பு:
கூத்தாடிய பெண்ணின் அழகு, திறமை முதலிய நலங்களைக் கண்டு பாண்டியன்
அவள்பால் மனத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பதற்காகப் பாண்டிமாதேவி
செய்த சூழ்ச்சி என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். எப்படியோ, திறமைமிகு
பெண் ஒருத்தியை இழக்கும்படி நேர்ந்துவிட்டது.

பார்வை: தமிழ் நாவலர். சரிதை மூலமும் விளக்கவுரையும் நூலின் ஆசிரியர்:
                 பேராசிரியரும் தமிழ் ஆராய்ச்சியாளரூமான ஔவை சு. துரைசாமி
                 பிள்ளை.


Thursday, 31 October 2019

காளமேகத்தின் 'த' மற்றும் 'க' வருக்கப் பாடல்கள்.

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது....
(காளமேகப்  புலவர்  பாடல்)

காளமேகப்  புலவர்பற்றிய  கதைகள் பல உலவுகின்றன.
அவரது பிறந்த ஊரைக் குறித்தும் பல செய்திகள் உள.
பெரும்பாலோர் கருத்துப்படி திருவரங்கப் பெருமாள்
கோவில் மடைப்பள்ளியில் பரிசாரகராகப் பணிபுரிந்த
இவருக்கு இலக்கணப்படி ஆசுகவி  பாடும் கவித்திறம்
வந்தது எப்படி? இது குறித்தும்  சில கதைகள் உள்ளன.
தெய்வச் செயலால் இவர்க்குக் கவித்திறம் வந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து தன் கவித்திறத்தைக்
காட்டிவந்த இவர் திருமலைராயன் பட்டினத்தில் வாழ்ந்து
வந்த அதிமதுர கவிராயர் என்பவரிடம் போட்டி நிகழ்த்த
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன்படி அதிமதுர கவி
ராயரும் அவர் சீடர்களும்(மொத்தம்:64 பேர்கள்) சொல்லும்
குறிப்புக் கேற்றவாறு சொற்பிழை, பொருட்பிழை, இலக்
கணப்பிழை இல்லாமல் ஆசுகவிதைகள் பாடுதல் வேண்
டும்.

போட்டி விதிகளின்படி புலவர்கள்  பல்வேறு சிக்கலான
குறிப்புகளைச் சொன்னார்கள். உடனுக்குடன் கவிகாள
மேகம் ஆசுகவிதைகள் சொல்லி அயரவைத்தார்."செருப்பு
என்ற சொல்லில் தொடங்கி விளக்குமாறு என்ற சொல்லில்
முடித்தல் வேண்டும்"; "கரி என்ற சொல்லில் தொடங்கி உமி
என்ற சொல்லில் முடித்தல் வேண்டும்"; வல்லினம், மெல்லினம்
மற்றும் இடையினம் இந்தப் பிரிவு எழுத்துக்களை வைத்துத்
தனித்தனியாகப் பாடல்கள் சொல்லல் வேண்டும்". மேலும்,
'க' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும், 'த'வருக்க
எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும் ஆசுகவிதைகள்
சொல்லல் வேண்டும்.  இப்படி எத்தனையோ நிபந்தனைகள்
விதித்த போதும் கவிகாளமேகம் வெற்றி பெறுவதைத் தடுக்க
முடியவில்லை. அப்படி ஒரு ஆசுகவிதையைத்தான் நாம்
பார்க்கவுள்ளோம்.

'த' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திய கவிதை:
"தாதிதூ  தோதீது; தத்தைதூ  தோதாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே---தாதொத்த
துத்திதத் தாதே, துதித்துத்தே  தொத்தீது;
தித்தித்த  தோதித்  திதி".
விளக்கம்:
தாதிதூ தோதீது--தாதி  தூதோ  தீது--அடிமைப் பெண்மூலம்
அனுப்பும் தூது நன்மையைத் தராது;
தத்தைதூ  தோதாது--தத்தை  தூது  ஓதாது--நான் வளர்க்கும்
கிளியோ தூதுப் பணியைத் திறம்படச் செய்யாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே--தோழியின் மூலமாக அனுப்பும்
தூதோ நாளைக் கடத்தும் தூதாகும்(காரியம் ஆகாது);
தே துதித்துத் தொத்தீது--நான் ஏதோ அணங்கால்(பேய், பிசாசு
போன்ற பயமுறுத்தும் தெய்வம்) அச்சுறுத்தப் பட்டிருக்கலாம்
என்றெண்ணி என் அன்னை முருகனைத் தொழுது அனுப்பும்
தூதும் நன்மை பயக்காது.
தாதொத்த துத்தி தத்தாதே--பூந்தாது போன்ற தேமல்கள்
என் மேனியில் படராமல் இருக்க;
தித்தித்த  தோதித்  திதி--எனக்கு இனிமையான தித்திப்பை
நல்கும்  என் தலைவனின் பெயரை--தித்தித்தது;
ஓதிக்கொண்டிருப்பதே எனக்கு உகந்ததாகும்--ஓதித்திதி.
அருஞ்சொற் பொருள்:
தாதி--அடிமைப் பெண்; தத்தை --கிளி; தூதி--தூது செல்பவள்;
ஒத்தித்தது--நாளைக் கடத்துதல்; தே--தெய்வம்;துதித்து--வழி
பட்டு; தொத்தல்--தொடர்தல்;துத்தி--தேமல்;தத்துதல்--படர்தல்;
திதி--நிலைமை; இருப்பு.
மேல் விளக்கம்:
இது அகப்பொருள் குறித்த பாடல். தலைவன் நினைப்பாகவே
வாழும் தலைவி, யாரைத் தூது அனுப்பலாம் என்று சிந்தித்துப்
பின் யார் தூதாலும் பயனில்லை என்று எண்ணி , அவனது
தித்திக்கும் பெயரைச் சொல்லிக் கொண்டிருத்தலே நல்லதாகும்
என்று முடிவுசெய்கிறாள். கவி காளமேகப்புலவர் புகழ் என்றும்
நிலைத்து நிற்கட்டும்!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை.

காளமேகப் புலவரிடம்  'க' வருக்க எழுத்தை மட்டும் பயன்
படுத்தி ஆசுகவி ஒன்றைப் பாடுமாறு அதிமதுர கவிராயர்
குழு கேட்டுக் கொண்டதற்கிணங்கச்  சில நொடிகள் கூடத்
தாமதம் செய்யாமல்   அன்னார் பாடிய கவிதை:
"காக்கைக்கா காகூகை; கூகைக்கா காகாக்கை;
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க--கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா  கா".
திருக்குறளின் 481ஆம் பாடலின் கருத்து இதில் பொதியப்
பட்டுள்ளது.
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை  இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது". (குறள்: 481)
காகம் தன்னைவிட வலிமையான கோட்டானை(ஒரு
வகை ஆந்தையை) அதற்குக் கண்தெரியாத பகல் வேளை
யில் சண்டையில் வென்றுவிடும். அதுபோலப் பகைவரை
வெல்ல விரும்பும் அரசன் தக்க காலம் கனியும் வரை காத்திருந்து
அந்த நேரத்தில் போரிட்டால் வெல்லலாம் என்ற திருக்குறளின்
கருத்தை உள்வாங்கிக் கவிகாளமேகம் தன் கவிதையைப்
பாடியுள்ளார்.

காளமேகப் புலவரின் கவிதைக்குப் பொருள்:
காக்கைக்கு ஆகா கூகை--இரவில் காக்கைக்குச்
சரியாகக் கண் தெரிவதில்லை. ஆனால் கூகைக்கு
(கோட்டானுக்கு--ஒருவகை ஆந்தைக்கு) மிகக் கூர்
மையான பார்வை இரவில் உள்ளதால் காக்கையால்
வெல்ல முடியாது. அது போலவே,
கூகைக்கு ஆகா காக்கை-காக்கைக்குப் பகல் நேரத்தில்
நன்கு கண் தெரிவதாலும், கூகைக்குப் பகலில் கண்
தெரிவதில்லை என்பதாலும் பகலில் கூகையால் காக்கை
யை வெல்ல முடியாது. எனவே,
கோக்கு(கோவுக்கு--மன்னனுக்கு)
கூ(பூமி) காக்கைக்கு(காத்தலுக்கு--காப்பதற்கு), அதாவது
குடிமக்களைப் பகைவரிடமிருந்து காப்பது மன்னனின்
கடமை யாகும். அக் கடமையைச் செய்வதற்கு,
கொக்கொக்க--கொக்கைப் போலத் தக்க நேரம்வரும்வரை
காத்திருக்க வேண்டும். இல்லையென்றால்,
கைக்கைக்கு--பகையை எதிர்த்து
காக்கைக்கு--குடிமக்களைக் காப்பாற்றுவதற்கு
கைக்கைக்கா கா--கைக்கு ஐக்கு ஆகா--தக்க நேரத்தில்
போரிடாவிட்டால் எப்படிப்பட்ட திறமையும், வீரமும் பொருந்திய
தலைவனுக்கும்(ஐ க்கு) நினைத்த காரியம் கைகூடாமல் போய்
விடும்.

குறுவிளக்கம்:
காக்கையால் இரவு நேரத்தில் கூகையை வெல்ல இயலாது.
கூகையால் பகல் நேரத்லில் காக்கையை வெல்ல இயலாது.
அதனால் பூமியிலுள்ள குடிகளைக் காக்கும் மன்னன் பகை
வரை வெல்வதற்கும், அதன்மூலம் குடிகளைக் காப்பதற்கும்
கொக்கைப் போலத் தக்க நேரம் வரும் வரை காத்திருத்தல்
வேண்டும்.  தகுந்த நேரம் அமையாவிட்டால் எப்படிப்பட்ட
திறமைசாலிக்கும் பகைவரை எதிர்த்து வெல்ல இயலாமற்
போய்விடும்..

காளமேகப் புலவரின்  தமிழ்மொழிப் புலமையும், ஆசுகவி
பாடும் திறமையும் நமக்குப் பெரு வியப்பை விளைவிக்
கின்றன. கவி காளமேகத்தின் புகழ் ஓங்குக!

Wednesday, 2 October 2019

வைகை யாற்றுப் படுகை நாகரிகம்(கீழடி)

வைகை யாற்றுப் படுகை நாகரிகம்

மதுரைக்கு அருகிலுள்ள கீழடி (சிவகங்கை மாவட்ட
நிர்வாகத்துக்கு உட்பட்டது) என்னும் ஊரில் மேற்கொள்ளப்
பட்ட அகழாய்வில் 7800 பொருட்கள் கண்டெடுக்கப் பட்ட
தாகவும், கார்பன் சோதனையின் மூலம் அவை 2600 ஆண்டு
களுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்றும் நாளிதழ்
கள் தெரிவிக்கின்றன.அங்கே  சுடுமண் பாத்திரங்கள், சங்கு
வளையல்கள். செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடு
மண்ணால் ஆன உறைகிணறுகள், அகேட் மற்றும் சூது பவளம்,
மணிகள் கிடைத்தன. ரோம் நாட்டு அரிட்டைன் பானை ஓடுகளும்
கிடைத்துள்ளன. சுடுமண்ணால் ஆன கழிவுநீர்க் குழாய்கள்,
இரட்டைச் சுவர் போன்றவையும் கண்டறியப் பட்டுள்ளன.

மண்ணால்  ஆன பொருட்களைத்தாம் முதன்முதலாகக் கண்டு
பிடித்துப் பயன்படுத்தியிருப்பார்கள் நம் முன்னோர்கள். அதன்
பிறகு இரும்பு, செம்பு முதலிய உலோகங்களைக் கண்டுபிடித்துப்
பயன்படுத்தியிருப்பார்கள். மண்ணால் கலங்களைச் செய்வோர்
கலம்செய்கோ என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர். கல்
வெட்டுக்கள் பயன்பாட்டுக்கு வருமுன்பே மண் பானைகளில்
எழுத்தைப் பொறிக்கும் வழக்கம் நிலவியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால், மண் பானைகளில் தனிநபர்கள் தத்தம் பெயர்களைப்
பொறித்திருப்பர். மன்னர்கள் தாம் பெற்ற வெற்றி, புரிந்த அரிய
சாதனைகள் முதலியவற்றைத் தெரிவிக்கக் கல்லில் பொறித்
திருப்பார்கள்.

இறந்தவர்களைப்  புதைக்க முதுமக்கள் தாழி என்னும் பெரிய
மண்ணால் ஆன பானைகளப் பயன்படுத்தினார்கள்  என்று
அறிகின்றோம். புறநானூறு 256ஆம் பாடலில் ஒரு பெண் கலம்
செய் கோவிடம்  தானும் தன் காதலனும் பாலை நிலத்து வழியே
வந்த பொழுது தன் காதலன் இறந்துவிட்டதாகவும், அவனைப்
புதைக்க ஒரு ஈமத் தாழி தேவைப் படுவதாகவும்  கூறிவிட்டு,
தான் இனிமேல் உயிர்வாழப் போவதில்லை என்றும், தன்னையும்
சேர்த்துப் புதைக்க அகன்ற தாழியாகச் செய்யுமாறும் வேண்டிக்
கொண்டாள். அப்பாடல் பின்வருமாறு:
"கலம்செய் கோவே! கலம்சேய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு  ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி(து) ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!"

புறநானூறு 331உம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும்
புலவர் செங்கற்களை யறுத்துக் கட்டிய உப்புநீர்க் கிணற்றை
யுடைய ஊரைப் பற்றித் தெரிவிக்கின்றார்.
"கல்லறுத்(து) இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச் சீறூர்". உவர்க் கூவல்=உப்புநீர்க் கிணறு.

பட்டினப் பாலை என்னும் சங்க நூலில் புலவர் கடியலூர் உருத்திரங்
கண்ணனார் 75ஆவது வரியில்,
"பறழ்ப்பன்றிப் பல்கோழி உறைக்கிணற்றுப் புறச்சேரி"
என்று பூம்புகார்ப் புறச்சேரியைப் பற்றிப் பாடியுளார்.
உறைக் கிணறு= உறை செருகிய கிணறு.
 

மதுரைக்கு அருகில் உள்ள ஊர் என்ற காரணத்தால்
மதுரை நகர நாகரிகம் கீழடியில் நிலவியிருக்க
வாய்ப்புண்டு. அல்லது, சில ஆராய்ச்சி அறிஞர்கள்
கூறுவது போலக் கீழடி ஊரே சங்க கால மதுரையாக
இருக்கவும் வாய்ப்புள்ளது.

எது எப்படி இருப்பினும் தமிழ்நாட்டில் நகர நாகரிகம்
நிலவியதற்குச் சான்றில்லை என்று கூறிவந்த
வரலாற்று ஆய்வாளர்கள் திகைக்கும் வண்ணம்
மிகச் சிறந்த நகர நாகரிகம்  கீழடியில் நிலவியதற்குத்
தரவுகள் கிடைத்துவிட்டன. சங்க நூல்களிலும் இக்
கூற்றை உண்மையென வலியுறுத்தும் பாடல்கள்
காணக் கிடைக்கின்றன. எனவே, சங்கப் புலவர்கள்
மிகைப்படுத்திப் பாடவில்லை. உண்மையைத்தான்
பாடியுள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மதுரை குறைந்தது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில்
உருவானது. மதுரை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய
இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.77 ஆம் ஆண்டில்
கிரேக்க வரலாற்று ஆய்வாளரான பிளினி என்பவரும்
அவரைத் தொடர்ந்து  கி.பி.140ஆம் ஆண்டில் தாலமி ஏன்பவரும்
மதுரைக்கு வந்துள்ளனர். இதனைப் பற்றித் தமது பயண நூலில்
குறிப்பிட்டுள்ளனர். மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க நாட்டுத் தூதர்
தமது 'இண்டிகா' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கௌடில்யர்
என்ற சாணக்கியர் தமது 'அர்த்த சாஸ்திரம்' என்ற நூலில் மதுரை
யைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மகா
வமிசம் என்ற நூலில் விசயன் என்னும் இலங்கையின் முதல் மன்னன்
மதுரை இளவரசியைத் திருமணம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி நடத்
தினர். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டியர்கள்
தமிழறிஞர்கள் மூலமாகத் தமிழைப் பேணி வளர்த்தனர். இதனால் இம்
மதுரை மூதூர் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்கியது.

சங்க நூல்களில் பல நூல்கள் ஆங்காங்கே மதுரையைப் பற்றிக்
குறிப்பிட்டாலும் மதுரைக் காஞ்சியும் பரிபாடலும் மதுரையை
மிக விரிவாக விவரிக்கின்றன.பரிபாடலில் மதுரை, திருமாலின்
கொப்பூழிலுள்ள(தொப்புள் என்பது பேச்சு வழக்கு) தாமரை மலரைப்
போன்று இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. அந்தத் தாமரைப் பூவின்
இதழ்களைப் போலத் தெருக்கள் தோன்றுவதாகவும், இதழின் நடுவே
இருக்கும் பொகுட்டு போன்று சொக்கநாதர் கோவில் அமைந்துள்ள
தாகவும் கூறப்பட்டுள்ளது.  அங்கு வாழும் தமிழ்க் குடிமக்கள் அப்பூவி
லிருக்கும் மகரந்தத் தாது போன்றவர்கள் என்றும்,  மதுரைக்கு வந்து
பரிசில் பெற்றுச் செல்பவர்கள் அப்பூவிலுள்ள தேனை உண்ணும்
பறவைகள் போன்றவர்கள் என்றும் இயம்புகிறது. அத் தாமரைப்
பூவில் தோன்றியவன் பிரமன்; அவன் நாவில் தோன்றியவை நான்கு
வேதங்கள் என்றும்  இந்த வேதத்தை ஓதும் ஒலியைக் கேட்டு மதுரை
மக்கள் துயில் எழுவர் என்றும்  பகர்கிறது. மதுரை மக்கள் சேரனது
வஞ்சி நகரத்தில் வாழ்வோரைப் போலவும், சோழனது உறையூரில்
வாழ்வோரைப் போலவும் கோழியின் கூவுதல் ஒலி கேட்டுத் துயில்
எழமாட்டார்கள் என்று பறைசாற்றுகின்றது. பாடல் பின்வருமாறு:
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில்வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப,
ஏம இன்துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழா(து)எம் பேரூர் துயிலே".

இனி, மதுரைக் காஞ்சியில் மதுரையின் செழிப்பும், வளமும்
வலிமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் எவ்வாறு விவரிக்கப்
பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்:
ஆழமாகத் தோண்டப்பட்டுள்ள நீலமணி போன்ற நீரையுடைய
அகழியையும், விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படை
களையுடைய மதிலினையும் கொண்டது மதுரை நதரம். மேலும்,
பண்டைக் காலந் தொட்டு வல்லமை நிலைபெற்றதும் தெய்வத்
தால் பாதுகாக்கப்பட்டதும் ஆகிய நெடிய நிலையினையும், நெய்
பல முறை பூசப்பட்டதால் கருகிய நிறத்தையும் திண்மையையும்
கொண்ட கதவினையும் கொண்டது அந்தக் கோட்டை.. அதனுள்
மேகம் உலாவும் மாடங்களோடும் வைகை போன்ற இடையறாத
மக்கள் போக்கு வரத்துடைய வாயிலோடும் சில்லென வீசும்
காற்று ஒலிக்கும் சாளரங்களோடும் விளங்கிய நல்ல இல்லங்கள்
அமைந்த ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருக்களைக்
கொண்டது  மதுரை நகரம். பாடல் பின்வருமாறு:(வரி:351 --360):
"மண்ணுற ஆழ்ந்த  மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து  வானம் மூழ்கி
சில்காற்(று) இசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்
பல்வேறு குழாஅத் திசையெழுந்(து) ஒலிப்ப",

மேலும், வாணிபம் மற்றும் தொழில்கள் செவ்வனே நடைபெற்றன.
பல்வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னை
யும் வாங்கிக் கொண்டு சிறந்த அயல் நாட்டுப் பண்டங்களை
விற்போர் இருந்தனர். மழை தவறாமல் பெய்ததால் பொய்க்
காத விளைச்சலை யுடைய பழையன் என்னும் மன்னனின்
மோகூரில் அரசவை  நிகழுமாறு நான்மொழிக் கோசர் கம்பீர
மாய் வீற்றிருந்தாற் போன்று  நாற்பெருங் குழுவினர் தோர
ணையாக அமர்ந்திருந்தனர்.  சங்கினை யறுத்துக் கடைவா
ரும், அழகிய அணிகளைத் துளையிடுவாரும், கடுதலுள்ள
நல்ல பொன்னால் விளங்கும் அணிகலன் செய்வாரும், பொன்
னை உறைத்து அதன் மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்
பாரும், செம்பை நிறுத்துக் கொள்வாரும் அங்கே குழுமியிருந்த
னர். பாடல் வரிகள் பின்வருமாறு: (வரிகள்: 503 --514)
"பல்வேறு பண்டமோ(டு) ஊண்மலிந்து கவினி
மலையவும் நிலத்தவும். நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மழை யொழுக் கறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாம்மேல் தோன்றிய நாற்பெருங் குழுவும்
கோடுபோழ் கடைநரும் திருமணிக் குயினரும்
சூடுறு நற்பொன் சுடரிழை புனைவரும்
பொன்உறை காண்மரும் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை  கொண்மரும் வம்புநிரை முடிநரும்"
மதுரை அங்காடிகளில் வலம்வந்தனர். ஓவியம்
எழுதும் வித்தகர் கண்ணுள் வினைஞர் என அழைக்கப்
பட்டனர். பகலில் செயல்படும் கடைகள் நாளங்காடி என்றும்
இரவில் செயல்படும் கடைகள் அல்லங்காடி என்றும் அழைக்
கப் பட்டன. தெருக்களில் என்ன பொருள் விற்கப் படுகிறது
என அறிவிக்கும் கொடிகள் பறக்கவிடப் பட்டிருந்தன.

வைகை நதி வெகுவாகப் புகழப்பட்டுள்ளது. "வையை என்னும்
பொய்யாக் குலக்கொடி" என்றும் "ஆற்றுப் பெருக்கற்(று) அடி
சுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை"
என்றும் இலக்கியங்களில் வையை வெகுவாகப் புகழப்பட்டுள்ளது.
பரிபாடலில் வையையில் வெள்ளம் வருவதைப் பற்றி எவ்வாறு
விவரிக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம். காற்று சுழன்றடிப்பதாலும்
மின்னல் வெட்டிக் கண்ணைக் குருடாக்குவதாலும் வானமே இருளா
யிற்று. மேலை மலையில் சாரல் மழை பொழிந்தது. நாகம், அகரு
(அகில்), வழை, ஞெமை, ஆரம்(சந்தனம்), தகரம், ஞாழல் முதலான
தார வகைகளை(தரும் கொடைப் பொருட்களை)ச் சுமந்து கொண்டு
வெள்ளமானது வையை ஆற்றில் கடல்போல் பெருக்கு எடுத்து வந்தது.
வையை வெள்ளம் மதுரை மதிலைத் தாக்குகிறது என்று நகரிலுள்ளோர்
பேசுவதை அனைவரும் கேட்டனர். பாடல் பின்வருமாறு:(வரிகள் (1 --10):
"வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவின்று; கிளையடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்;
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்
அகரு, வழை ஞெமை, ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளிகடல் முன்னியது போலும் தீம்நீர்
வளிவரல் வையை வரவு;
வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர் தாஅய்
அந்தண் புனல்வையை யாறு".

இவ்வளவு  வளமான, வற்றாத வையை  இற்றை நாளில்  நீரின்றி
வறண்டு காணப்படுவது மனத்துக்கு வேதனையளிக்கிறது. வருச
நாட்டு மலையிலிருந்து உற்பத்தியாகும் வையை ஆறு தன்னோடு
கலக்கும் துணை அல்லது கிளை ஆறுகளின் தொடர்பைத் துண்டித்
திருக்கலாம். அல்லது துணை அல்லது கிளை ஆறுகள் காலப் போக்
கில் வழக்கமான பாதையை மாற்றிக் கொண்டிருக்கலாம். என்ன
சிக்கல் நேர்ந்தது என்று கண்டுபிடித்துச் சரிசெய்து விட்டால் வையை
பழைய வளத்தையும் சிறப்பையும் மீண்டும் பெற்றுவிடும். இதன்
மூலம் மதுரை பண்டைய சிறப்பை மீண்டும் அடையும் என்பதில் எள்
அளவும் ஐயமில்லை.

மதுரைக்கு மிக அருகில் வையை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள
கீழடி என்னும் ஊரில் நடத்தப்பட்ட அகழாய்வில் மதுரைக் காஞ்சியில்
விவரிக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்வது போலக்  கீழடியே சங்க கால
மதுரையாகத் திகழ்ந்திருக்கலாம்.

Thursday, 12 September 2019

சீதை நகைகளைக் கண்டெடுத்த குரங்கினம் போல

சீதையின் நகைகளைக் கண்டெடுத்த குரங்கினம்  போல.......

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் புறநானூற்றில் சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் வேந்தனின் கொடைக்
குணத்தைப் போற்றிப் பாடிய  பாடல் மிகவும் நல்ல இலக்கியச் சுவையும்,
நகைச்சுவையுணர்வும் ததும்பும் தரமான செய்யுளாகும். அதைப் பற்றி
விரிவாகப் பார்ப்போம்.
புறநானூறு  பாடல் எண: 378; திணை:பாடாண்; துறை:இயன்மொழி.
ஊன்பொதி பசுங்குடையார் வேந்தனைப் புகழ்ந்து பாடிப் பெரும் பரிசில்
பெற்றார். புலவர் இதற்குமுன் கண்ணாலும் பார்த்திராத நிறைய அணி
கலன்களை வேந்தன் புலவர்க்கு நல்கினான். புலவர் திணறிப் போனார்.
வேந்தனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பிய புலவர்
அந்நகைகளைத் தன் சுற்றத்தாரிடம் காண்பிக்க அவர்கள் பிரமித்துப்
போயினர். விரலில் அணிய வேண்டிய நகையைக் காதிலும், காதில் அணிய
வேண்டிய நகையை விரலிலும், இடையில் அணிய வேண்டிய நகையைக்
கழுத்திலும், கழுத்தில் ஆணிய வேண்டிய நகையை இடையிலும்  இடம்
மாற்றி அணிந்து அழகு பார்த்தனராம். சீதாப் பிராட்டியை இராவணன்
இலந்கைக்குப் புட்பக விமானத்தில் கடத்திச் சென்ற பொழுது அவர் தம் நகை
களக் கழற்றி ஒரு துணியில் சுற்றி அம்மூட்டையை எறிய, அது கிட்கிந்தை
நகரில் விழ, அதனைக் கண்ட குரங்கினம்  இனம் புரியாத ஆர்வத்தொடு
அம் மூட்டையைப் பிரித்து அதிலிருந்த நகைகளைத் தாறுமாறாக இடம்
மாற்றி அணிந்து கொண்டு அழகுபார்த்த நிகழ்வை  ஒத்திருந்தது தம் சுற்றத்
தார் செய்கை என்று புலவர் நகைச்சுவை ததும்பக் குறிப்பிடுகின்றார். இனி,
தொடர்புடைய பாடலைப் பார்ப்போம்:


"தென் பரதவர் மிடல் சாய,
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்(று)என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு,
இலம்பாடு உழந்தவென் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
மிடற்றமை மரபின அரைக்குயாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை  எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே!
பொருளுரை:
தெற்குத் திசையிலுள்ள பரதவரின் வலிமை அடங்கி ஒடுங்கவும்,
வடக்குத் திசையிலுள்ள வடுகரின்  வாள்வன்மையால் தமிழகத்
துக்கு நேர்ந்த கேடுகள் நீங்கவும் முனைப்புடன் வீரங்காட்டி அவற்றைத்
தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டவன் சோழன் செருப்பாழி
எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் வேந்தனாவான். இச் சோழனது
அரணமனையின் வெண்சுதை மாடத்திலே முற்றத்திலே நின்று
என்னுடைய கிணையை இயக்கிக் குறையாத வீர மரபையுடைய சோழ
னின் வஞ்சிச் சிறப்பை(பகைவர் நாட்டைக் கைக்கொள்ள வஞ்சிப் பூச்
சூடிச் செல்லுதல) வியந்து போற்றிப் பாடினேன்.

நான் பாடிய பாட்டைக் கேட்ட சோழ வேந்தன், எமக்காகச் செய்யப் படாத
அரசகுலத்தவர்க்கே உரிய நல்ல நல்ல அணிகலன்கள் பலவற்றையும்
ஏராளமாக எனக்கு நல்கினான். அவற்றை எடுத்துக் கொண்டு என் ஊர்க்
குத் திரும்பிய நான் அவற்றை என் கேளிரிடம் காட்டினேன். அவர்கள்
அவற்றைப் பார்த்துத் திகைப்பில் மூழ்கினர். இந் நகைகளை அவர்கள்
இதற்குமுன்னர் கண்டதேயில்லை. எனவே, விரலில் அணிய வேண்டிய
தைக் காதிலும், காதில் அணிய வேண்டியதை விரலிலும், இடுப்பில் அணிய
வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டியதை இடுப்பிலுமாக
இடம் மாற்றி அணிந்து பார்த்தனர். இக் காட்சி 'சீதையின் அணிகளைக்
கண்டெடுத்த குரங்கினம் அணிந்து பார்த்த' இராமாயணக் காட்சியினை
ஒத்திருந்தது. என் குடும்பத்தார் மற்றும் சுற்றத்தார் இதுகாறும் அனுபவித்த
கொடிய வறுமையும் தொலைந்து போனது; இதன் விளைவாக அவர்களது
முகங்களிலே இளநகை அரும்பியது.

அருஞ்சொற் பொருள்:
மிடல்: வலிமை
கிணை: ஒருவகைப் பறை
வெறுக்கை: செல்வம்
இலம்பாடு: துன்பம்
ஒக்கல்:சுற்றத்தார்
தெறல்: கோபித்தல்
மதர்:செருக்கு, மகிழ்ச்சி
எவ்வம்:துயரம்.